ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -4

ராமர் அகத்தியர் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி ஒரு கேள்வி கேட்டார். ராட்சசர்கள் இலங்கைக்கு எப்பொழுது வந்தார்கள்? ராவணன் வருவதற்கு முன்பே இலங்கை இருந்தது என்பது இப்பொழுது தாங்கள் சொல்லி தான் தெரியும். புலஸ்திய வம்சத்தில் தான் ராட்சசர்கள் தோன்றினார்கள் என்பது கேள்விப் பட்டிருக்கிறோம். பிரகலாதன் விகடன் ராவணன் கும்பகர்ணன் ராவண புத்திரர்களை விட இவர்களது முன்னோர் பலசாலிகளாக இருந்தார்களா? இவர்களுக்கு முன்னோர் யார்? அவர்கள் எப்படி தோன்றினார்கள்? விஷ்ணுவிற்கு பயந்து எதனால் இலங்கையை விட்டு ஓடினார்கள் விவரமாக சொல்லுங்கள் என்று கேட்டார். ராமரின் கேள்விக்கு அகஸ்தியர் தொடர்ந்து பதில் கூறினார்.

பிரம்மா உலகத்தை படைக்க ஆரம்பித்த பொழுது தண்ணீரைப் படைத்தார். தண்ணீரில் தோன்றி வாழும் உயிரினத்தையும் அதற்கு அனுசரணையாக மற்ற ஜீவராசிகளையும் படைத்தார். இந்த ஜீவ ராசிகள் தங்களை படைத்தவரை வணங்கி நின்றன. பசி தாகம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வோம் என்று அந்த ஜீவராசிகள் கேட்டன. பிரம்மா சிரித்துக் கொண்டே உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து என்ன செய்வீர்கள் என்று கேட்டார். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம் என்று சிலரும் யாகம் செய்வோம் என்று சிலரும் பதில் கூறினார்கள். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம் என்று சொன்னவர்கள் ராட்சசர்களாகவும் யாகம் செய்கிறோம் என்று சொன்னவர்கள் யட்சர்கள் ஆவீர்கள் என்றார் பிரம்மா. எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம் என்ற குழுவில் இருந்தவர்களில் ஹேதி ப்ரஹேதி என்ற இருவர் ராட்சசர்களின் தலைவர்கள் ஆனார்கள். ப்ரஹேதி என்பவன் வனம் சென்று தவம் செய்தான். ஹேதி என்பவன் மணந்து கொள்ள ஒரு பெண்ணைத் தேடி அலைந்தான். இறுதியில் காலனின் சகோதரி பயா என்பவளின் தோற்றம் மிகவும் பயங்கரமாக இருந்தது இருந்தாலும் அவளை மணந்து கொண்டான் ஹேதி.

இருவருக்கும் வித்யுத்கேசன் என்ற மகன் பிறந்தான். அவன் பெயரும் புகழும் பெற்று வளர்ந்தான். அவன் பகல் நேர வெயில் போல் மிகவும் பிரகாசமாக தேஜஸோடு இருந்தான். அவன் பெரியவன் ஆனதும் அவனுக்கு ராட்சசி பௌலோமி என்பவளை திருமணம் செய்து வைத்தார் அவனது தந்தை. சிறிது காலம் சென்றது. பௌலோமிக்கு அழகான குழந்தை பிறந்தது. அவனுக்கு சுகேசன் என்று பெயரிட்டார்கள். குழந்தையின் குரல் இடி இடிப்பது போல இருந்தது. ஒரு சமயம் குழந்தை அழுதது. குழந்தையை கவனிக்காமல் அந்த ராட்சசி தன் கணவனுடன் பேசிக் கொண்டிந்தாள். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த பார்வதி பரமேஸ்வன் இதனைக் கேட்டனர். பார்வதி கருணையுடன் குழந்தையை பார்க்கவும் அவன் உடனடியாக வளர்ந்து பெரியவனாகி விட்டான். பரமேஸெவரன் பார்வதியை வணங்கி நின்றான் அவன். பார்வதியின் வேண்டு கோளுக்கிணங்க பரமேஸ்வன் அவனை அமரனாக்கி அந்த ராட்சசனுக்கு ஒரு ஊரையும் கொடுத்தார். பரமேஸ்வரனின் அருளைப் பெற்ற அந்த குழந்தைக்கு பார்வதியும் ஒரு வரம் கொடுத்தாள். அவனது குலத்தினர் கர்ப்பமடைந்த உடனேயே பிரசவித்து குழந்தை பிறந்து சிறிது காலத்திலேயே வளர்ந்து பெரியவர்கள் ஆவார்கள் என்ற வரத்தை கொடுத்தாள். சுகேசன் என்ற அந்த ராட்சசன் தனக்கு கிடைத்த வரத்தினால் கர்வம் அடைந்தான். தன் விருப்பம் போல சுற்றித் திரிந்தான். செல்வமும் சேர இந்திரனை போல் வாழ்ந்தான். சுகேசன் என்ற ராட்சசன் பரமேஸ்வரன் பார்வதியால் வரங்கள் கிடைக்கப் பெற்று இந்திரனைப் போல் இருப்பதைக் கண்ட க்ராமணீ என்ற கந்தர்வன் தனது இரண்டாவது மகளான தேவவதியை மணம் செய்து கொடுக்க முன் வந்தான். அந்த பெண் ரூபத்தில் மற்றொரு லட்சுமி போல இருந்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.