ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -21

அயோத்தி அரசன் அனரண்யன் கை கால்கள் முறிய ரதத்திலிருந்து கீழே விழுந்து ராவணனிடம் பேச ஆரம்பித்தான். என்னை வெற்றி பெற்றதாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ளாதே ராவணா. உன்னிடம் நான் புற முதுகு காட்டி ஓடவில்லை. நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்து உன்னால் தோற்கடிக்கப் பட்டேன். இங்கிருந்து ஓடிப்போய் எனது உயிரை என்னால் இப்போதும் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு நான் விரும்பவில்லை. என் இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நிறுத்த விரும்புகிறேன். நான் செய்த தான தர்மங்கள் ஏதேனும் இருந்தால், பூஜைகள் யாகங்கள் செய்த பலன்கள் ஏதேனும் இருந்தால், என் மக்களை நான் நல்ல முறையில் பாதுகாத்து வந்தது உண்மையானால் என் குலத்தில் பிறந்து வரும் ஒருவன் உன்னை அழிப்பான் என்று சொல்லி அனரண்யன் தன் உடலை விட்டு சொர்கத்திற்கு சென்றான். அந்த சமயம் இடி இடிப்பது போல தேவ துந்துபிகள் முழங்கியது. ராவணன் இதனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அங்கிருந்து சென்றான்.

அயோத்தியில் இருந்து கிளம்பிய ராவணன் பூமியில் இருந்த அரசர்கள் அனைவரையும் தேடித் தேடி சென்று துன்புறுத்தினான். ஒரு இடத்திற்கு புஷ்பக விமானத்தில் செல்லும் போது மேகக் கூட்டத்திற்கு இடையில் நாரதரை சந்தித்தான். அவரை வணங்கி அவருக்கேற்ற மரியாதை செய்தான் ராவணன். மரியாதையை எற்றுக் கொண்ட நாரதர் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். ராவணா நீ செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றி பெற்று உன் சுற்றத்தாரையும் உற்றாரையும் நல்ல நிலைமையில் காத்து வருவதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி நான் உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். நீ அதனை கேட்க வேண்டும் என்று விரும்பினால் கவனமாக கேட்டுக்கொள் என்று பேச ஆரம்பித்தார்.

தேவர்கள் தானவர்கள் தைத்யர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் ராட்சசர்கள் ஆகிய இவர்களின் கையால் மரணம் அடையாமல் இருக்க வரம் பெற்றிருக்கிறாய். அதனால் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்து வதைக்கிறாய் துன்புறுத்துகிறாய். இப்போது அவர்கள் மரணத்தின் பிடியில் இருப்பது போல இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வருத்துகிறாய் உனது பார்வையில் சரி என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மனித குலம் அப்படி அல்ல எப்பொழுதும் செல்வத்தின் மீது பற்று வைத்து போகத்தில் கிடந்து பல கஷ்டங்களை தாங்களே வரழைத்து அனுபவித்து வருகிறார்கள். இது தவிர முதுமை மற்றும் உடலில் பல வியாதிகள் அவர்களை அரித்தெடுக்கின்றன. பசி மற்றும் தாகத்தால் வேறு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் செயல்களால் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு பல விதங்களில் வருந்தும் இந்த மனிதர்களை மேலும் ஏன் துன்புறுத்துகிறாய் ராவணா? மனிதனுக்கு மகிழ்ச்சி அதிகமாகி விட்டால் வாத்யங்கள் வாசித்தும் நடனமாடியும் பொழுதைக் கழிப்பார்கள். மற்றவர்கள் ஏதோ சொல்லி விட்டால் அதற்கு காரணம் காட்டி கண்ணீர் விட்டபடி வருந்தியபடி அழுத முகமாகவே காணப்படுகிறார்கள். தாய் தந்தை மகன் என்று பற்று வைத்து என் மனைவி என் மக்கள் என்று மோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். தாங்கள் அனுபவிப்பது வெறும் துக்கமே என்பதைக் கூட அறியாமல் இருக்கிறார்கள். ஏற்கனவே தாங்க முடியாத சோக பாரத்தை சுமப்பவர்களை நீ மேலும் வருத்தாதே என்று ராவணனிடம் நாரதர் கேட்டுக் கொண்டார். இந்த உலகை துன்புறுத்தியது போதும். மனித குலத்தை நீ வெற்றி பெற்றதாகவே வைத்துக் கொள். நீ எதுவும் செய்யாவிட்டால் கூட இவர்கள் ஒரு நாள் யமலோகம் சென்று விடுவார்கள். உன் புஜபலம் வலிமை எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். அதனை வலிமை இல்லாத மனிதர்களிடம் காண்பிக்காதே. வலிமையுள்ள எமனை நீ வெற்றி பெற்று விட்டால் மற்ற அனைவரும் அதனுள் அடங்கி விடுவார்கள். அதனால் எமனுடன் யுத்தம் செய்து உனது வலிமையைக் காண்பி என்று ராவணனிடம் நாரதர் சொல்லி முடித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.