ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -2

ராமரிடம் அகத்தியர் பேச ஆரம்பித்தார். இந்திரஜித் யாராலும் வெல்ல முடியாத பலம் அவனுக்கு எப்படி வளர்ந்தது என்பதை நான் சொல்கிறேன். அதற்கு முன் ராவணனின் பிறப்பு அவன் யாரிடம் எப்படி வரம் பெற்றான் என்பதை சொல்கிறேன் கேட்டுக் கொள் என்று ராவணனின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார் அகத்தியர். முன்பு க்ருத யுகத்தில் பிரம்மாவின் மானச புத்திரனாகத் தோன்றியவர் புலஸ்தியர். அவர் குணம் தர்மம் சீலம் இவைகளில் அதிக பலசாலியாக இருந்து பிரம்ம ரிஷி என்ற பட்டத்தை பெற்றார். தன் குணங்களால் எல்லோருக்கும் பிரியமானவராக இருந்தார். இமய மலைச் சாரலில் த்ருண பிந்து என்ற ராஜரிஷியின் ஆசிரமத்திற்கு சென்று சில நாட்கள் தங்கினார். அங்கு வசிக்கும் பொழுது தன் தவத்தை தொடர்ந்தும் வேதங்களில் படித்ததை மனனம் செய்யும் முறையையும் கவனமாக செய்து வந்தார். அச்சமயம் த்ருணபிந்து ராஜரிஷி மகளை சந்திக்க அவளது தோழிகளான சில தேவலோகத்துப் பெண்கள் அந்த ஆசிரமத்திற்கு வந்தனர். வந்தவர்கள் அதன் அழகில் கவரப்பட்டு ஆடிப்பாடி இன்பமாக இருந்தனர். தவம் செய்யும் முனிவருக்கு இது இடையூறாக இருந்தது. இதனை அப்பெண்கள் அறியாமல் தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். தனது தவத்திற்கு இடையூராக இருந்த பெண்களின் மீது கோபம் கொண்ட முனிவர் பெண்களில் யார் என் முன் வந்தாலும் அவள் கர்பிணி ஆவாள் என்று சபித்தார். இதைக் கேட்ட பெண்கள் ப்ரும்ம ரிஷியின் சாபம் என்பதால் பயந்து ஓடி விட்டனர்.

த்ருண பிந்துவின் மகள் இதனை அறியாமல் தனது தோழிகளின் வரவை எதிர்பார்த்து அங்கு நடமாடிக் கொண்டிருந்தாள். அதே சமயம் புலஸ்தியர் வேதங்களை சொல்லிக் கொண்ருந்தார். வேதங்கள் கேட்கும் சத்தம் வரும் இடத்தை நோக்கி அவள் சென்று புலஸ்தியரின் முன்பு அவள் நின்றதும் அவளின் உடல் வெளுக்க ஆரம்பித்தது. கர்பத்துடன் உடல் மாற்றம் அடைந்தாள். தன் சாபம் என்ன எதனால் இந்த உரு மாற்றம் என்பது புரியாமல் நடுங்கினாள். தந்தையிடம் சென்று அழுது கொண்டே தனக்கு என்னவோ ஆகி விட்டது என்றாள். த்ருண பிந்து மகளைப் பார்த்து திகைத்து எங்கு சென்றாய் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு அவள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை அப்பா. நான் புலஸ்தியர் இருக்கும் இடத்தின் அருகே எனது தோழிகளை தேடிக் கொண்டு சென்றேன் அங்கு தோழிகள் யாரையும் காணவில்லை. அங்கேயே சற்று நேரம் தேடிக் கொண்டு நின்றேன். புலத்தியர் அங்கு வேதங்களை ஓதிக் கொண்டிருந்தார். வேதங்களை கேட்டுக் கொண்டே அவரின் முன்பு போய் நின்றேன். திடீரென்று இது போல என் உடல் மாற்றமடைந்து விட்டது. உடனே பயந்து ஓடி வந்து விட்டேன் என்றாள். த்ருண பிந்து தன் தவ வலிமையால் நடந்ததை அறிந்து கொண்டார்.

த்ருண பிந்து தன் மகளை அழைத்துக் கொண்டு புலஸ்தியர் தவம் செய்யும் இடத்திற்கு வந்தார். புலஸ்தியரைப் பார்த்து பிரம்ம ரிஷியே இவள் எனது மகள். நல்ல குணங்களுடன் சீலமாக வளர்க்கப் பட்டவள். இவளை தங்களுக்கு தானமாக தருகிறேன். உங்களுடைய யாகத்திற்கும் தவத்திற்கும் உதவி செய்து பணிவிடை செய்வாள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நடந்ததை தனது தவ வலிமையில் தெரிந்து கொண்ட புலஸ்தியரும் த்ருண பிந்துவின் மகளே ஏற்றுக் கொண்டார். சில நாட்களில் அவளுடைய சீலமும் அவள் கவனத்துடன் நடந்து கொண்டதும் புலத்தியருக்கு திருப்தியை உண்டாக்கியது. இதனால் மகிழ்ந்த புலத்தியர் அவளது மனக் கவலையை போக்க எண்ணி அவளிடம் பேச ஆரம்பித்தார். உனது குணம் மற்றும் பணிவிடைகளால் நான் மிகவும் மகிழ்ந்தேன். உனக்கு பிறக்கப் போகும் குழந்தை பௌலஸ்த்யன் என்ற பெயருடன் எனக்கு சமமான ஆற்றலுடன் பெயர் பெற்று விளங்குவான். நான் வேதம் சொல்லி நீ கேட்டதால் விஸ்ரவஸ் (வேதங்களை நன்கு கேட்டவன்) என்ற பெயருடன் புகழ் பெற்று விளங்குவான் என்றார். இதைக் கேட்டவள் மன நிம்மதியடைந்து நாளடைவில் விஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றாள். விஸ்ரவஸ் கல்வியில் சிறந்தவனாகவும் எல்லா ஜீவன்களையும் சமமாக காணும் மனப் பான்மையுடனும் விரதங்களை கடைபிடித்தும் ஆசாரங்களுடன் தன் தந்தையைப் போலவே தவம் செய்து மூவுலகிலும் பெயரும் புகழும் பெற்று வளர்ந்து வந்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.