ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -38

ராமர் இல்லாமல் இனி நீங்கள் தனியா எப்படி இருக்கப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. தற்போது தாய்மை வேறு அடைந்திருக்கிறீர்கள் உங்களை பார்த்துக் கொள்ள யாரும் அருகில் இல்லையே என்று தலையை தரையில் மோதிக் கொண்டு அழுதான் லட்சுமணன். சீதையை வணக்கி விட்டு அவளைக் காண சக்தியற்றவனாக கங்கை கரையை தாண்டி தனது ரதத்தில் கிளம்பினான் லட்சுமணன். வெகு தூரம் வரை ரதத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதைக்கு ரதம் கண்ணில் இருந்து மறைந்ததும் தாங்க முடியாத துக்கம் அவளை ஆட்கொண்டது. மயில் கூட்டங்கள் அவளை வினோதமாகப் பார்த்தன. தனக்கு புகலிடம் எதுவுமே இல்லை என்ற உண்மை அவளை சுட்டது. பாரம் மனதை அழுத்தியது. செய்வதறியாது கதறி அழ ஆரம்பித்தாள். காட்டில் அழுதபடி நிற்கும் சீதையைக் கண்ட சில சிறுவர்கள் வால்மீகி முனிவரிடம் ஓடிப் போய் தெரிவித்தனர். சிறுவர்கள் சொன்னதைக் கேட்டதும் வால்மீகி முனிவர் தன் ஞானக் கண்களால் நடந்ததை உணர்ந்தார். காட்டில் நிற்பது சீதை என்பதை அறிந்ததும் விரைவாக சீதை இருக்குமிடம் வந்தார். வால்மீகி முனிவர் வேகமாக செல்வதைப் பார்த்ததும் அவரின் சீடர்களும் உடன் ஓடினார்கள்.

ராமனுக்கு பிரியமானவளான சீதை அனாதை போல நிற்பதைக் கண்டார். அவளிடம் இதமாக பேச ஆரம்பித்தார். தசரதனின் மருமகளும் ஜனகரின் மகளான உன் வரவு நல்வரவாகுக உனக்கு என் ஆசீர்வாதம். இக்காட்டில் ஒரு பெண் நிற்கின்றாள் என்ற செய்தி கேட்டதும் என் தவ வலிமையால் நடந்தவற்றையும் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டேன். என் தவப்பயனாக பெற்ற ஞானக் கண்கள் சொல்வது பொய்யாகாது. கவலையின்றி நீ என்னுடன் இருக்கலாம். நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறையும் வராது. ஆசிரமத்தில் தவம் செய்யும் தாபஸ்விகளும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் உன்னை மகளாக பாவித்து கவனித்துக் கொள்வார்கள். பயமின்றி இந்த ஆசிரமத்தில் நீ வசிக்கலாம். இந்த இடத்தை உன் வீடு போல எண்ணிக் கொள் என்றார். இதைக் கேட்ட சீதை வால்மீகி முனிவரை கை கூப்பி வணங்கி முனிவரின் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அவருடன் சென்றாள். சீதை ஆசிரமத்தினுள் நுழைவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணன் சிந்திக்க ஆரம்பித்தான். சீதையின் பிரிவைத் நம்மலே தாங்க முடியவில்லையே. ராமர் என்ன பாடு படப்போகிறாரோ. ரமருக்கு இதை விட வேறு என்ன துக்கம் வேண்டும் என்று எண்ணியவாறு அங்கிருந்து கிளம்பினான். வால்மீகி முனிவரிடம் முனிவர்கள் சிலர் வந்தார்கள். விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கே ஏன் இப்படி ஒரு சோதனை நடக்கிறது என்று கேட்டார்கள். வால்மீகி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ராமரின் தந்தை தசரதர் ஒரு முறை இங்கு வந்திருந்தார். அப்போது துர்வாச மகரிஷியும் இங்கு வந்திருந்தார். அவரிடம் தசரதர் தனது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் அதைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு துர்வாச மகரிஷி பதில் சொல்ல ஆரம்பித்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. அப்போது தேவர்களின் தாக்குதலைத் தாங்க முடியாத அசுரர்கள் பிருகு முனிவரின் மனைவியை சரணடைந்தார்கள். அவள் அவர்களுக்கு அபயம் அளித்தாள். இவர்களுக்கு அபயம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்ததைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டான். தன்னுடைய சக்ராயுதத்தால் பிருகு முனிவரின் மனைவியின் தலையைக் கொய்து விட்டான். தன் மனைவி சக்ராயுதத்தால் கொல்லப்பட்டதை அறிந்த முனிவர் யோசிக்காமல் சட்டென்று விஷ்ணுவை சபித்து விட்டார். உலகைக் காக்கும் நீ யார் என்பதை நீயே அறியாமல் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறப்பெடுப்பாய். நான் எனது மனைவியை பிரிந்து இருந்தது போல் நீயும் உன் மனைவியை பிரிந்து வாழ்வாய் அப்போது துக்கம் என்ன என்பதை நீ அறிவாய் என்று சபித்து விட்டார். பின்பு இந்திரனின் ஆயுதத்தால் தான் தன் மனைவி அழிந்தாள் என்பதை அறிந்த பிருகு முனிவரும் வருத்தப்பட்டு விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். உலக நன்மைக்காக இந்த சாபத்தை ஏற்றுக் கொள்வதாக விஷ்ணுவும் அறிவித்தார். இந்த சாபத்தின் விளைவாக விஷ்ணு தான் யாரேன்று தெரியாமல் இந்த பூலோகத்தில் பிறந்திருக்கிறார் அவரே உனது மகனான ராமர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.