ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 52

ராமர் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். உன் விருப்பப்படியே இந்த உலகத்தில் ராம கதை இருக்கும் வரை என் நாமம் உலகில் உள்ளவரை நீயும் இருப்பாய் மகிழ்ச்சியுடன் இரு என்று ஆசிர்வதித்தார். அதற்கு அனுமன் உங்கள் கட்டளைப்படியே உங்கள் நாமத்தை செபித்தபடி உலகில் இருப்பேன் என்றார். ராமர் அயோத்தியில் இருந்து கிளம்பி சரயூ நதியை நோக்கிக் கிளம்பினார். வேதியர்கள் மந்திரங்கள் சொல்ல அவர்களைப் பின் தொடர்ந்து ராமர் முன்னே சென்றார். அவரைப் பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள். பல பறவைகள் அவர்களுக்கு மேலே பறந்து பின் தொடர்ந்து வந்தது. பல வகையான விலங்குகளும் இந்த கூட்டத்தின் பின்னே வந்தது. சரயூ நதிக்கு ராமர் வந்து சேர்ந்தார். சரயூ நதியில் தண்ணீர் சுழல் சுழலாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பிரம்மா உட்பட பல தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இங்கு வந்து சேர்ந்தார்கள். ராமர் மேலுலகம் செல்லத் தயாராக வந்து நின்ற இடத்தில் தேவர்கள் வந்த திவ்ய விமானங்கள் கோடிக் கணக்கில் இருந்தன. ஆகாயமே திவ்ய ஜோதி பரவி பிரகாசமாக இருந்தது. தேவர்கள் வானத்தில் இருந்து பூமாரி பொழிந்தனர். ராமர் சரயூ நதியில் கால் வைத்தவுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும் தேவ கணங்களும் வாத்யங்களை முழங்கினர். பிரம்மா ராமரிடம் பேச ஆரம்பித்தார். விஷ்ணுவான ராம உனக்கு மங்களம். உனது காலம் இன்றுடன் முடிகிறது. தாங்கள் தான் உலகுக்கு கதி. இதனை உணர்ந்தவர்கள் பூலோகத்தில் இல்லை. நினைத்து பார்க்க முடியாத உங்களின் அவதாரங்களை யாரலும் அறிந்து கொள்ள முடியாது. நீ இந்த உடலை விட்டு உனது இருப்பிடமான வைகுண்டத்திற்கு வந்து உனது இயல்பான சாரீரத்தை எடுத்துக்கொள் என்றார்.

ராமர் சராயூ நதிக்குள் இறங்கி நின்றார். அவரைத் தொடர்ந்து பரதனும் சத்ருக்கனனும் மக்கள் வானரங்கள் கரடிகள் என மொத்தம் முப்பதாயிரம் பேர் நதிக்குள் இறங்கினார்கள். அப்போது தேவர்கள் ஆதித்யர்கள் மருத்கணங்கள் ரிஷிகள் தேவகணங்கள் கந்தர்வர்கள் நாகர்கள் யட்சர்கள் தைத்யர்கள் தானவர்கள் ராட்சசர்கள் அனைவரும் நினைத்ததை சாதித்த பூர்ணமானவரே என்று போற்றி புகழ்ந்து வணங்கி நின்றார்கள். அப்போது ராமர் பிரம்மாவிடம் பேச ஆரம்பித்தார். இங்கு இருக்கும் மக்களில் எனக்காக ஆசைகளை துறந்து நான் எனும் எண்ணத்தை விட்டு ராம நாமத்திலேயே எண்ணத்தை வைத்து என்னுடனே இருக்க வேண்டும் என்று என்னை நம்பி வந்திருக்கும் அனைவருக்கும் தேவலோகத்தில் இடம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பிரம்மா உன்னை நம்பி பின் தொடர்ந்து வருபவர்கள் உன் விருப்பப்படி அவரவர்களுக்கு உண்டான மேல் உலகை அடையட்டும் என்று ஆசிர்வதித்தார். உன்னை நினைத்து உன்னுடன் வந்த பறவைகள் உட்பட அனைத்து ஜீவன்களும் மற்றொரு பிரம்மலோகம் போன்ற மேல் உலகில் வசிக்கட்டும் என்று ஆசிர்வதித்தார். உனது அவதாரத்திற்காக இந்த பூமியில் பிறந்த வானரங்களும் கரடிகளும் எந்த தேவனின் அம்சமாக பூமியில் தோன்றினார்களோ அந்த தேவதைகளுடனே அவர்கள் சேருவார்கள் என்று ஆசிர்வதித்தார். உடனே சராயூ நதி பொங்கி ராமருடன் சராயூ நதியில் இறங்கியவர்கள் அனைவரையும் தனக்குள் கொண்டு சென்றது. ராமர் தனது வைகுண்டத்திற்கு சென்றார். ராமரின் இரண்டு பகுதிகளான பரதனும் சத்ருக்கனனும் வைகுண்டம் சென்று லட்சுமணனுடன் சேர்ந்து ராமருடன் சேர்ந்தார்கள். சுக்ரீவன் சூரிய மண்டலத்திற்கு சென்றான். மக்கள் அனைவரும் அவரவர்களுக்கு உரிய பித்ரு லோகத்திற்கு சென்றார்கள். வானரங்களும் கரடிகளும் தேவலோகத்தின் பிரகாசமான தேவ சரீரத்துடன் ஒளி மயமாகி நின்றார்கள்.

ராமாயணம் சரித்திரம் உத்தர காண்டம் இந்த பகுதியோடு இந்த மகா காவியம் நிறைவு பெறுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.