ராமாயணம் இறுதிப் பகுதி

ராமாயண காவியத்தின் இறுதியில் ராமாயணத்தை கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று வால்மீகி முனிவர் அருளியிருக்கிறார்.

ராமாயண கதையை தேவர்களும் சித்தர்களும் கந்தர்வர்களும் ரிஷிகளும் நித்தியம் கேட்கின்றனர். ராமாயணம் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் அதனை கேட்டபடி இருப்பார். சூரிய உதயத்தின் போது அல்லது சூரியன் மறையும் போது கட்டுப்பாட்டுடன் நியமத்துடன் ராமாயணத்தை படிக்க வேண்டும். அவ்வாறு தினந்தோறும் படிப்பவர்கள் புதல்வர்கள் மற்றும் உற்றார் உறவினரோடு மகிழ்ச்சியாக உலகில் வாழ்வார்கள். ஆரோக்கியமான ஆயுளையும் நல்ல சௌபாக்யத்தையும் அடைவார்கள். புத்திரன் இல்லாதவர்கள் நல் புத்திரனைப் பெறுவார்கள். தனம் இல்லாதவர்கள் நல்தனத்தை பெறுவார்கள். சிரார்த்த காலத்தில் அறிஞர்களைக் கொண்டு ராமாயணத்தை சொல்ல வைக்க வேண்டும். இதனால் இதனை கேட்பவர்களுக்கு தங்களின் பற்றுக்களும் ஆசைகள் நீங்கி சொர்க்கம் செல்வார்கள். தினந்தோறும் ஒரு ஸ்லோகமாவது படித்தால் அன்றாடம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடலாம். ஒரு அத்தியாயத்தை தினந்தோறும் பக்தியுடன் ராம சிந்தனையோடு படிப்பவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இருபதினாயிரம் வாஜபேய யாகம் (தலைமை குருவாக பதவி ஏற்றுக் கொள்ளும் போது செய்யப்படும் யாகம்) செய்த பலனை அடைவார்கள். இதைக் கேட்பவர்களும் அதே பலனை அடைவார்கள். பிரயாகம் தீர்த்தங்கள் புண்ணிய கங்கை நதி நைமிசம் போன்ற அடர்ந்த காடுகள் ஆகிய அனைத்திற்குத் சென்று கிடைக்கும் பலனை ராமாயணத்தைக் கேட்பதாலேயே பெறுவார்கள். கிரகண சமயத்தில் துலா பாரமாக தங்கம் தானம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் ராமாயணத்தை பக்தியுடன் கேட்பவர்களும் படிப்பவர்களும் பெற்று எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகம் செல்வார்கள். எந்த வித கெட்ட எண்ணமும் இல்லாமல் பக்தியுடன் ராமாயணத்தை நினைப்பவர்கள் தீர்காயுள் பெற்று ஆயுள் முடியும் தறுவாயில் விஷ்ணு லோகம் செல்வார்கள்.

ராமாயணத்தை கதாகலட்சேபமாக சொல்பவர்களுக்கு அல்லது கதைகளாக சொல்பவர்களுக்கு உடை உணவு இருப்பிடம் பசு போன்றவற்றை தாராளமாக கொடுக்க வேண்டும். இதை படித்து சொல்பவர்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருந்தால் சர்வ தேவதைகளும் மகிழ்ச்சியடைவார்கள். இதனால் தானம் கொடுப்பவர்களுக்கு நீண்ட ஆயுளோடு சொர்க்கத்தையும் அடைவார்கள். ராமாயணத்தை ஒரு காண்டத்தின் முழு பகுதியையோ அரை பகுதியை கேட்பவன் கூட பிரம்மலோத்திற்கு சென்று அங்கு பிரம்மாவினால் மரியாதையுடன் வரவேற்கப்படுவான். எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும். ராமாயணத்தை படித்து ராம நாமத்தை சொல்லி இறைவனின் திருவடியை அடைவோம். ராம ராம ராம ராம ராம.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.