ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -37

ராமர் சபையில் நகரத்தில் இருப்பவர்களைப் பற்றி விவாத்தித்துக் கொண்டிருந்த போது உங்களை பற்றிய செய்தி ஒன்று அவரின் காதில் விழுந்தது. இதனால் மனம் வருந்திய ராமன் நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். என்ன செய்தி என்று அதை என் வாயால் நான் சொல்ல மாட்டேன். அச்செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். இச்செய்தியால் எனக்கு மகாகோபம் வந்தாலும் ஏன் இத்தகைய முடிவை ராமர் எடுத்தார் என்றும் அவரின் மனதில் உள்ளவற்றையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. எந்த விதமான குறையோ குற்றமோ உங்களிடம் இல்லை. ஆனாலும் மாசற்ற உங்களை ராமர் தியாகம் செய்து விட்டார். இந்த ஆசிரமத்தில் உங்களை விட்டு வரும்படி எனக்கு உத்தரவிட்டார். நீங்களும் முனிவர்கள் இருக்கும் இந்த இடத்தில் வசிக்க விரும்பினீர்கள். உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் இருங்கள். எங்கள் தந்தைக்குப் பிரியமான முனிவர் வால்மீகி இங்கு தான் இருக்கிறார். அவரது பாதுகாப்பில் உங்களை விட்டுச் செல்கிறேன். உபவாசங்கள் விரதங்கள் தவங்களில் உங்களின் மனதைச் செலுத்தி அமைதியாக இருங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும் இப்போது இதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று சொல்லி முடித்தான் லட்சுமணன். இடி விழுந்தது போன்ற இந்த செய்தியைக் கேட்ட சீதை சுயநினைவின்றி பிரம்மை பிடித்தவள் போல் நின்றாள். காதில் விழுந்த செய்தியை கிரகித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

ராமரை நான் பிரிந்து இருக்க வேண்டுமா என்று கண்களில் நீர் பெருக கதறினாள். சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த சீதை லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். என்னை இப்படி சித்ரவதை செய்வதற்காகத் தான் பிரம்மா இந்த பூமியில் பிறப்பெடுக்கச் செய்திருக்கிறார். என் சரீரம் துக்கத்தை அனுபவிக்கவே படைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். முன் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. ராமர் என்னை கை விட்டுவிட்டார். முன்பு பல காலம் காடுகளில் உள்ள ஆசிரமத்தில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் அப்போது ராமர் என்னுடன் இருந்தார். அதனால் வனவாசத்திலும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். இப்பொழுது அவரில்லாமல் தனியாக ஆசிரமத்தில் எப்படி இருப்பேன். என் கஷ்டங்களை யாரிடம் சொல்லி அழுவேன். இப்போதே அக்னியில் இறங்கி என் உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணுகிறேன் ஆனால் அப்படி உயிரை விட்டால் இக்ஷ்வாகு குலம் பரிகாசத்துக்கு ஆளாகும். அதனால் உயிரையும் விடமுடியாமல் ராமரில்லாமல் வாழவும் முடியாமல் இனி வரும் காலம் முழுவதும் தவிக்கப் போகிறேன் என்றாள் சீதை.

ராமரின் இந்த நாட்டின் அரசர் எனது அண்ணன். அவர் இட்ட கட்டளையை இதுவரை நான் மீறியதில்லை என்றான் லட்சுமணன். அதற்கு சீதை உன் கடமையை நீ செய் லட்சுமணா உன் மீது எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. ராமர் உனக்க இட்ட கட்டளைப்படி இந்த காட்டுப் பிரதேசத்தில் என்னை தனியாக விட்டுவிட்டுத் திரும்பிச் செல். உங்களது தாயார் மூவரிடமும் என்னுடைய வணக்கத்தைச் சொல்லிவிடு. ஏனேய உறவினர்களின் நலத்தை விசாரித்ததாகச் சொல். தர்மம் தான் எனக்குப் பெரியது என்று சொல்லிக் கொள்ளும் ராமரிடம் நான் சொன்னதாக ஒரு செய்தியை மட்டும் சொல்லிவிடு. சீதை மாசற்றவள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களிடத்தில் நிறைந்த பக்தியும் அன்புமுடையவள். உங்கள் நன்மையில் அக்கறையுள்ளவள். யாரோ ஏதோ பேசிய பேச்சால் தர்மத்தைக் காப்பற்றுகிறேன் என்ற பெயரில் என்னைத் தியாகம் செய்கிறீர்கள். பெண்களுக்கு கணவன் தான் தெய்வம் அதனால் உங்களது உத்தரவிற்கு நான் மரியாதை கொடுக்கிறேன். ருது காலம் தாண்டி நான் ராமனது கர்ப்பத்தை தாங்கி இருக்கிறேன். அவை அனைத்தையும் அப்படியே சொல்லிவிடு உனக்கு விடை தருகிறேன் நீ செல்லமாம் என்று சீதை லட்சுமணனிடம் பேசி முடித்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.