ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 50

ராமனிடம் துர்வாச முனிவர் வந்திருப்பதாக உடனடியாகச் சென்று சொல். இல்லை என்றால் ராமருடன் சேர்த்து இந்த நாட்டையும் மக்களையும் உன்னையும் உங்களைச் சார்ந்த உறவினர்களையும் உங்களுடைய சந்ததிகளையும் சேர்த்து அனைத்தையும் என் தவ பலத்தால் பொசுக்கி விடுவேன் என்றார். அதி பயங்கரமாக துர்வாச முனிவரிடமிருந்த வந்த வார்த்தைகளை கேட்டதும் லட்சுமணன் திடுக்கிட்டு நின்றான். லட்சுமணன் சிறிது நேரம் யோசித்தான். ராமரின் கட்டளைப்படி என் ஒருவனுக்கு மரணம் வந்தால் பரவாயில்லை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட லட்சுமணன் ராமரின் அறைக்குள் சென்று செய்தியைத் தெரிவித்தான். லட்மணன் சொன்னதைக் கேட்டதும் ராமர் யமதர்மர் வேடத்தில் இருந்த முனிவரை அனுப்பி விட்டு துர்வாசரை வணங்கி வரவேற்று என்ன காரியம் சொல்லுங்கள் என்று கேட்டார். இன்றுடன் நான் ஆயிரம் வருடங்கள் உணவு அருந்தாமல் தவம் செய்து முடித்திருக்கிறேன். அதனால் இப்போது எனக்கு நல்ல உணவு வேண்டும். உன்னால் முடிந்தவரை எனக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய் என்றார். இதைக் கேட்ட ராமர் அவசரமாக முனிவரின் உணவிற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அமிர்தத்திற்கு இணையான அந்த உணவை உண்ட துர்வாச முனிவர் திருப்தி அடைந்தார். ராமரை வாழ்த்தி விட்டு தன் ஆசிரமத்திற்கு சென்றார். துர்வாச முனிவர் சென்றபின் யமதர்மரின் எச்சரிக்கை ராமருக்கு ஞாபகம் வந்தது. அதனை நினைத்து மிகவும் வேதனைக்குள்ளானார். தலை குனிந்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். யமதர்மரின் எச்சரிக்கை சொல் திரும்பத் திரும்ப ராமரின் மனதில் வந்து அலைக்கழித்தது.

ராமரின் மனநிலையை அறிந்து கொண்ட லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். கொடுத்த வாக்கை நிறை வேற்றாத அரசர்கள் நரகம் செல்வார்கள் என்பது நியதி. எனக்குத் தண்டனை கொடுங்கள். முனிவருக்கு கொடுத்த வாங்கின் படி மரண தண்டனையே எனக்கு கொடுத்து தர்மத்தை காப்பாற்றுங்கள். என்னைப் பற்றி வருந்தாதீர்கள். என்னுடைய மரணம் பிரம்மாவால் நான் பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை யமதர்மர் நிறைவேற்ற காத்திருக்கிறார். நான் இறந்த பிறகு சில நாட்கள் மனம் மிகவும் வருத்தமாகத் தான் இருக்கும். அதன் பிறகு அனைத்தும் சரியாகி விடும் என்றான். மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளான ராமர் குல குரு வசிஷ்டரை வரவழைத்து நடந்தவைகள் அனைத்தையும் கூறி ஆலோசனை கேட்டார். ராமரிடம் வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். அரசன் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆகவேண்டும். கொடுத்த வாக்கை மீறுவது தர்மத்திற்கு புறம்பானது. அரசன் ஒருவன் தர்மத்தை மீறினால் அந்த நாடும் நாட்டு மக்களுக்கும் பெரிய கேடுகள் வந்து சேரும். அதனால் லட்சுமணனை தியாகம் செய்து உன்னுடைய தர்மத்தை நிலைநிறுத்து என்றார்.

ராமர் தீவிரமாக யோசனை செய்து ஒரு முடிவு செய்து லட்சுமணனை வரவழைத்தார். முனிவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் இப்போது உன்னை எனது தம்பி என்ற நிலையில் இருந்து தியாகம் செய்கிறேன். உன்னை கொல்வதை விடவும் என்னை விட்டு நீ பிரிந்திருப்பது மரண தண்டனையை விடக் கொடுமையானது என்று எண்ணுகிறேன். அதனால் அதனை அனுபவிக்க நீ உடனே நாட்டை விட்டு வெளியேறு இனி என்னை பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றார். ராமர் சொன்னதைக் கேட்ட லட்சுமணன் மனம் வேதனை அடைந்து கண்களில் நீர் தழும்ப அங்கிருந்து வெளியேறினான். தன் வீட்டுப் பக்கம் செல்லாமல் நேராக சரயூ நதிக்கரை சென்று நீரில் மூழ்கி தன் சுவாசத்தை வெளி விடாமல் அடக்கிக் கொண்டான் லட்சுமணன். மூச்சை அடக்கி நீரினுள் கிடந்தவனைப் பார்த்து இந்திரனுடன் வந்த தேவ கணங்களும ரிஷிகளும் பூமாரி பொழிந்தனர். இந்திரன் லட்சுமணனைத் தூக்கி தேவலோகத்தில் சேர்ப்பித்தான். விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகம் வந்து சேர்ந்து விட்டது என்று தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.