ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -28

பிரம்மாவிடம் சென்ற தேவர்கள் இந்திரனை ராவணன் தூக்கிச் சென்று விட்டான். ராவணனிடமிருந்து இந்திரனை விடுவித்துக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிரம்மா ராவணனிடம் சென்று பேச ஆரம்பித்தார். நீயும் உன் மகனும் போரில் காட்டிய திறமையைக் கண்டு திருப்தி அடைந்தேன். உன் மகனின் ஆற்றல் உன்னை விடவும் பல மடங்கு உயர்வாக இருக்கிறது. உன் மகன் மேகநாதன் இந்திரனை வென்றதால் இன்று முதல் இந்திரஜித் என்று அழைக்கப்படுவான். உங்களது ஆற்றலால் மூவுலகையும் வெற்றி பெற்று விட்டாய். உனது ஆசை பூர்த்தியடைந்து விட்டது. அதனால் இந்திரனை விட்டு விடு என்றார். அதற்கு ராவணன் இந்திரனை வென்று தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் இந்திரஜித் அவனிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றான். பிரம்மா இந்திரஜித்திடம் இந்திரனை விட்டு விடு அதற்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். அதற்கு இந்திரஜித் எனக்கு இறப்பில்லா அமரத்துவம் வேண்டும். அதனை நீங்கள் வரமாக தந்தால் இந்திரனை விட்டு விடுவிக்கிறேன் என்றான். அதற்கு பிரம்மா அமரத்துவம் என்பது உயிரினங்களுக்கு கிடையாது. ஏதோ ஒரு விதத்தில் மரணம் நிச்சயமாக வந்தே தீரும். ஏதேனும் ஆற்றல் மிகுந்த பிராணியிடம் உன் மரணத்தை ஏற்றுக் கொள் என்றார். உடனே இந்திரஜித் தன் நிபந்தனையை பிரம்மாவிடம் கூறினான். நான் யாகம் வளர்த்து பூஜைகள் செய்து பின் யுத்தத்தில் இறங்கினால் என்னை யாராலும் வெற்றி முடியாது என்ற வரத்தை கொடுங்கள். யாகம் வளர்த்த அக்னியில் இருந்து எனக்கு குதிரையுடன் கூடிய ரதம் வர வேண்டும் அந்த வாகனத்தில் நான் இருக்கும் போது எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தையும் கொடுங்கள் இப்போதே இந்திரனை விட்டு விடுகிறேன். அந்த யாகத்தை நான் செய்து முடிக்கும் முன் யாராவது அந்த யாகத்தை தடுத்து என்னை வெற்றி பெற்றால் எனக்கு முடிவு வரட்டும் என்றான்.

பிரம்மா அப்படியே ஆகட்டும் என்று வரத்தை அளித்தார். இந்திரஜித் இந்திரனை விடுவித்தான். மூவுலகையும் வென்ற ராவணன் இலங்கைக்கு சென்று அங்கிருந்த படியே மூவுலகையும் ஆட்சி செய்தான். இந்திரன் தன் மதிப்பை இழந்ததால் பேசாமல் மௌனமாக இருந்தான். பிரம்மா இந்திரனின் மன நிலையை உணர்ந்து அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை பேசினார். நீ அகலிகையை அடைய முயற்சி செய்த போது கௌதம மகரிஷி உனக்கு பல சாபங்களை கொடுத்தார். (பாலகாண்டம் பகுதி 13 14 இல் உள்ளது) அதில் எதிரிகளிடம் சிக்கிக் கொள்வாய். இந்திர பதவி உனக்கு நிரந்தரமாக இருக்காது என்று சாபமிட்டிருந்தார். அந்த சாபத்தின்படி இப்போது ராவணனிடம் சிக்கினாய். உனது பதவியும் பறிபோனது. அவரது சாபமும் நிறைவேறி விட்டது. ஆகையால் கவலைப்படாதே நீ செய்த தவறான காரியத்தின் பலனாக இவற்றை எல்லாம் நீ அனுபவித்தாய். இனி வரும் காலத்தில் மனதை ஒருமுகப்படுத்தி யாகம் செய். அந்த யாகத்தின் பலனாக நீ தூயவனாகி இந்திர பதவியை மீண்டும் பெறுவாய் என்றார். பிரம்மாவின் பேச்சில் திருப்தி அடைந்த இந்திரனும் யாகங்கள் பல செய்ய ஆரம்பித்தான். பிரம்மா ராவணனுக்கும் இந்திரஜித்துக்கும் கொடுத்த வரத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் ராமனாகிய நீ ராவணனையும் இந்திரஜித்தையும் அழித்து மூன்று உலகத்தையும் ராட்சசர்களிடம் இருந்து விடுவித்து விட்டாய். இந்திரனும் தனது நிரந்தர பதவியை பெற்று விட்டான். இவ்வாறு அகத்தியர் ராமரிடம் ராவணன் மற்றும் இந்திரஜித்தின் வரலாற்றை சொல்லி முடித்தார்.

ராமர் அகத்தியரிடம் மேலும் சில கேள்விகளை கேட்டார். தேவர்கள் கந்தர்வர்கள் என்று மேலுலகத்தில் இருந்தவர்கள் யாராலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று பிரம்மாவிடம் ராவணன் வரம் வாங்கியிருந்தான். அதனால் அவனை யாராலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்த பூலோகத்தில் வாழும் மனிதர்களையும் மிருகங்களையும் ராவணன் ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. ஆகையால் வரம் கேட்கும் போது மனிதர்கள் மற்றும் மிருகங்களால் தனக்கு தனக்கு அழிவு வரக்கூடாது என்று அவன் வரம் கேட்கவில்லை. இந்த பூலோகத்தில் பல அரசர்கள் இருந்திருப்பார்கள். இவர்களில் ஒருவரால் கூட ராவணனை வெல்ல முடியவில்லையா என்று கேட்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.