ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -22

நாரதர் சொன்ன அனைத்தையும் கேட்ட ராவணன் தன் வலிமையின் மீது உள்ள கர்வத்தால் பெரிதாக சிரித்து அவரிடம் பேச ஆரம்பித்தான். மகரிஷியே அனைத்து லோகத்திற்கும் செல்லும் தாங்கள் சொல்வது சரியே. இதோ இப்போதே நான் கிளம்புகிறேன். யுத்தம் செய்து வெற்றியோடு வருவேன். மூவுலகையும் வெற்றி பெற்று தேவர்களையும் கந்தர்வர்களையும் நாகர்களையும் என் வசத்தில் கொண்டு வருகிறேன் என்றான். அதற்கு நாரதர் எம லோகம் செல்வது மிக கடினம். எமபுரி தகர்க்க முடியாத பாதுகாப்புகளை உடையது என்றார். இதைக் கேட்ட ராவணன் இடி இடிப்பது போல சிரித்து நான் எம புரியை வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போதே நான் எமனை வெற்றி பெற தென் திசை நோக்கி செல்கிறேன். எமபுரி சென்று ஜீவன்களை தன் பாசத்தால் கட்டி இழுத்து எமனுக்கும் எமனாகிறேன் என்று முழக்கமிட்ட ராவணன் நாரதரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு தன் படைகளுடன் மகிழ்ச்சியாக தென் திசை நோக்கிச் சென்றான்.

நாரதர் சிறிது யோசிக்க ஆரம்பித்தார். எமன் நற்காரியங்களுக்கும் தீய காரியங்களுக்கும் பயன் தரும் நீதிபதியாக இருக்கிறான். அவனிடம் மூவுலகும் சரணடைந்து இருக்கிறது. அந்த எமனிடம் ராவணன் எப்படி வெற்றி பெருவான். எமனும் ராட்சசர்களும் போர் புரிவதை நேரில் பார்க்க வேண்டும் என்று எமபுரிக்கு தெற்கு நோக்கி கிளம்பினார் நாரதர். அங்கு வந்த நாரதர் நடந்ததை எமனிடம் சொல்லி அவருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று எமன் இருக்குமிடம் வந்தார். நாரதர் வருவதைப் பார்த்த எமன் அவருக்கு தகுந்த மரியாதை செய்த பின்பு அவரின் பேச ஆரம்பித்தான். எங்கும் நலம் தானே மகரிஷியே. தாங்கள் இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தர்மத்திற்கு கெடுதல் எதுவும் வந்து விடவில்லையே இவ்வளவு தூரம் தாங்கள் வரக் காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு நாரதர் ராவணனை கண்டது முதல் நடந்தவற்றை முழுமையாகக் கூறினார். யுத்தம் செய்ய ராவணன் இங்கு விரைவில் வந்து விடுவான். அதனால் என்ன செய்ய வேண்டுமோ அதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள். இதைச் சொல்லத்தான் நான் ஓடி வந்தேன் என்றார்.

நாரதர் சொல்லி முடித்ததும் உதய சூரியன் போல பிரகாசமாக ராவணனின் புஷ்பக விமானம் எமபுரிக்குள் நுழைந்தது. ராவணன் எமபுரியை சுற்றிலும் பார்த்தான். நல்லவர்கள் தங்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கதியையும் தீமை செய்தவர்கள் தங்களுக்கு ஏற்ற துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தண்டனை அனுபவிக்கும் ஜீவன்கள் அலறுவதும் காது கொண்டு கேட்க முடியாத பயங்கரமான கதறலும் ராவணனை திடுக்கிடச் செய்தது. ஒரு சிலர் மட்டும் நல்ல வீடுகளில் பாட்டும் வாத்ய இசையும் கேட்க மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக இருப்பதை ராவணன் கண்டான். தங்களின் நற்செயல்களின் பலனாக இந்த உயர்வை இவர்கள் அடைந்ததாக தெரிந்து கொண்டான். தங்கள் தீய செயல்களின் பலனாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஜீவன்களை ராவணன் தன் பலத்தால் விடுவித்தான். ராவணனால் விடுவிக்கப் பட்டவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நினைத்துக் கூட பார்க்காத சுகத்தை அனுபவித்தார்கள். ராவணன் தன் பலத்தால் இவர்களை விடுவித்தவுடன் எம தூதர்களும் காவல் வீரர்களும் தங்கள் ஆயுதங்களால் ராட்சச வீரர்களை அடித்தனர். ராவணனின் படை வீரர்களும் பதிலுக்கு தங்கள் சக்திக்கு ஏற்ப ஆயுதங்களால் தாக்கினார்கள். ராவணன் தன் புஷ்பக விமானத்தை விட்டு இறங்கி கோபத்துடன் சிவன் கொடுத்த உயர்ந்த அஸ்திரத்தை பிரயோகம் செய்தான். புகையில்லாத நெருப்புடன் அந்த அஸ்திரம் வனத்தை அழிக்கும் காட்டுத் தீ போல பரவிச் சென்றது. இந்த அஸ்திரத்தின் பலத்தால் எமனின் வீரர்கள் காட்டுத் தீயில் மடிந்து விழுந்த யானைகள் போல எரிந்து சாம்பலானார்கள். இதைக் கண்ட ராவணன் தன் மந்திரிகளுடன் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.