ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -26

விபீஷணன் அரண்மனையில் இருந்த ராவணனைப் பார்த்துச் பேச ஆரம்பித்தான். நமது குலத்தை நாசம் செய்யும் பல காரியங்களை நீ செய்கிறாய். அதன் விளைவாக நீ இல்லாத நேரத்தில் மது என்பன் நமது குலத்தை சேர்ந்த கும்பீனஸி என்ற பெண்ணை தூக்கிச் சென்று விட்டான் என்றான். அதற்கு ராவணன் கும்பீனஸி என்பவள் யார் அவள் என்று கேட்டான். அதற்கு விபீஷணன் நம் தாய் வழி பட்டனார் சுமாலியின் மகனுடைய மகளின் மகள் கும்பீனஸி என்பவள். நம் அனைவருக்கும் சகோதரியே உன் மகன் யாகத்தில் அமர்ந்து விட்டான். நான் நீரில் மூழ்கி தவத்தில் இருந்தேன். கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான் நீயும் இல்லை. அந்த நேரம் அரண்மனைக்குள் நுழைந்த மது எனும் ராட்சசன் நமது காவலர்களை தோற்கடித்து பலாத்காரமாக அவளை தூக்கிச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து தான் இந்த செய்தி எனக்கு தெரியவந்தது. பெண்களை மணம் செய்து கொடுக்கும் கடமை சகோதரர்களுக்கு உண்டு. அதனால் நாங்கள் மதுவை எதுவும் செய்யவில்லை. இதேல்லாம் உன் பாப காரியங்களின் பலனே என்றான் விபீஷணன். இதைக் கேட்ட ராவணன் தன்னை விபீஷணன் குற்றம் சொல்வதை பொறுக்க மாட்டாதவனாக கோபத்துடன் பொங்கி எழுந்தான். என் ரதத்தை ஏற்பாடு செய்யுங்கள். நமது படைகள் தயாராகட்டும் பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மதுவை இன்றே அழித்து விடுகிறேன் என்று கிளம்பினான் ராவணன். மதுபுரத்தை நோக்கி படைகள் புறப்பட்டன. மதுபுரத்தில் ராவணனை கண்ட கும்பீனஸி கை கூப்பி வணங்கியபடி ராவணன் பாதங்களில் விழுந்தாள். அவளைத் தூக்கிய ராவணன் மதுவை என்ன செய்ய வேண்டும் சொல் என்றான். அதற்கு கும்பீனஸீ நான் அவரை கணவனாக ஏற்றுக் கொண்டேன் ஆகையால் அவரைக் கொல்லாதீர்கள் என்றாள். உன் மீது வந்த கருணையால் மதுவை வதம் செய்யாமல் விடுகிறேன் என்று அங்கிருந்து கிளம்பினான் ராவணன். இலங்கைக்கு செல்லும் முன்பு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தங்குவதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விபீஷணனிடம் உத்தரவிட்டான் ராவணன்.

விபீஷணன் சந்திரன் போல் பளபளத்த ஓர் மலைப் பிரதேசத்தை தேர்ந்தேடுத்தான். அங்கு அனைவரும் தங்கினார்கள். அந்த மலைப் பிரதேசத்தில் கின்னரர்களின் மதுரமான குரலில் பாடும் சங்கீதம் ராவணனுக்கு கேட்டது. அந்த சங்கீதத்தின் இனிமையில் ராவணனுக்கு மனம் நிறைந்தது. கின்னரர்கள் பாடிக் கொண்டும் பெண்களுடன் விளையாடிக் கொண்டும் இருந்தனர். சங்கீதத்தாலும் வாசனை நிறைந்த புஷ்பங்கள் நிறைந்து மனதை மயக்கியதாலும் குளிர்ந்த இதமான காற்றாலும் சந்திரனின் குளுமையான பிரகாசமும் சேர ராவணனின் மனம் கிளர்ச்சி அடைந்தது. இந்த சமயம் அங்கு திவ்யமான ஆபரணங்கள் அணிந்து லட்சுமி தேவியேப் போல் அழகுடன் ரம்பா என்ற பெண் சென்று கொண்டிருந்தாள். மனக் கிளர்ச்சியுடன் இருந்த ராவணனின் கண்களில் அவள் பட்டாள். அவளின் கைகளைப் பிடித்து இழுத்து பேச்சுக் கொடுத்தான் ராவணன். அழகியே யார் நீ எங்கு போகிறாய்? சொர்க்க லோகமே நீ தான் என்று எண்ணும் படி என் மனம் மயக்குகிறது. மூவுலகிலும் எனக்கு மிஞ்சிய தகுதியுடையர்கள் யாரும் இல்லை. மூவுலகிற்கும் அரசன் நான் எனது பெயர் ராவணன் என்னை ஏற்றுக் கொள் என்றான். இதைக் கேட்ட ரம்பா நடுங்கி நின்றாள்.

ரம்பா ராவணனிடம் கை கூப்பியபடி பேச ஆரம்பித்தாள். சத்யமாக சொல்லுகிறேன் உன் சகோதரன் குபேரனுடைய மகன் நளகூபரன் மனைவி நான். அவரைக்காண நகைகளால் அலங்கரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறேன். அவரைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைத்து பார்க்க மாட்டேன். நான் உனது மருமகள் ஸ்தானத்தில் இருக்கிறேன். நீ இது போல என்னிடம் பேசுவது சரியல்ல. வேறு யாராவது என்னிடம் தகாத வார்த்தைகள் பேசினால் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவன் நீ என்றாள். நான் வருவேன் என்று எனக்காக உனது மகன் ஸ்தானத்தில் இருப்பவன் காத்திருப்பான் என்னை தடுக்காதே என் கையை விடு என்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.