ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -31

அனுமன் குழந்தையாக இருக்கும் போதே அவனது வலிமை இப்படி இருக்குமானால் வளர்ந்து பெரியவன் ஆகும் போது எவ்வளவு பலவானாக இருப்பான் என்று அதிசயித்து தேவர்கள் பேசிக்கொண்டார்கள். தன் மகன் அனுமனை அணைத்தபடி வாயுவும் குளுமையாக வீசிக் கொண்டே சென்றான். பல யோசனை தூரம் ஆகாயத்தில் சென்ற பின்னும் குழந்தைக்கு திருப்தி ஏற்படவில்லை. குழந்தைத் தனமான குதூகலமும் தந்தையின் உதவியும் சேர ஆகாயத்தில் வெகு நேரம் வட்டமடித்துக் கொண்டு சூரியனை நோக்கிச் சென்றான். குழந்தை தானே என்று சூரியனும் தன் வெப்பத்தை கொடுக்காமல் விட்டான். அதே தினம் ராகுவிற்கு சூரியனை விழுங்கும் பருவ காலம் (சூரிய கிரகணம்) தொடங்கியது. பருவ காலம் ஆரம்பித்ததும் ராகுவும் சூரியனைப் பிடிக்க துரத்திக் கொண்டு வந்தான். வழியில் எதிர்பட்ட குழந்தை ராகுவிற்கு தடையாக இருந்தது. உடனே இந்திரனிடம் சென்ற ராகு இன்று சூரியனை விழுங்க எனக்கு விதிக்கப்பட்ட பருவ காலம். சூரியனைப் பிடிக்க வந்தேன். இன்னொரு ராகு சூரியனை பிடிக்க சென்று கொண்டிருக்கிறது என்றான். இதைக் கேட்டு பரபரப்படைந்த இந்திரன் தன் ஆசனத்தை விட்டு துள்ளி குதித்து எழுந்தான். தன் ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்ட இந்திரன் ராகு முன் செல்ல சூரியனும் அனுமானும் இருந்த இடம் வந்து சேர்ந்தார்கள். ராகு முகத்தை மட்டுமே உருவமாக கொண்டவன். முன்னால் வந்த ராகுவைக் கண்டதும் குழந்தையான அனுமன் விளையாட்டாக ராகுவை தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தான். பயந்த ராகு இந்திரா இந்திரா என்று கூப்பிட அழைத்தான். இந்திரன் ராகுவிடம் பயப்படாதே நான் இந்த குழந்தையை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி அனுமன் இருக்கும் இடத்தினருகில் சென்றான்.

அனுமனின் கவனம் இப்பொழுது யானையான ஐராவதத்தின் மேல் சென்றது. குதாகலத்துடன் அதனுடன் விளையாட யானையை நோக்கி விரைந்து சென்றான். குழந்தையை தடுத்தே ஆக வேண்டுமே என்ற நோக்கத்தில் தன்னுடைய வஞ்ராயுதத்தால் குழந்தையை மெதுவாக தட்டினான். இந்திரனின் ஆயுதத்தால் தாக்கப்பட்ட குழந்தை அனுமன் ஆகாயத்தில் இருந்து நிலை குலைந்து ஒரு பெரிய மலை மீது விழுந்தான். இதனால் குழந்தை அனுமனுக்கு உடலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. மயக்கமடைந்து விழுந்தான் குழந்தை அனுமன். தன் மகனை இந்திரன் வஞ்ராயுதத்தால் அடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த வாயு இந்திரனை எச்சரித்து விட்டு விழுந்த தன் குழந்தையை எடுத்துக் கொண்டு மலை குகைக்குள் சென்று விட்டான். இந்திரனின் மீது உள்ள கோபத்தில் உலகத்தில் தன் இயக்கத்தை நிறுத்தினான். வாயுவின் இயக்கம் இல்லாமல் உலகமே ஸ்தம்பித்து நின்றது. மூச்சு விடக் கூட முடியாமல் உயிரினங்கள் அனைத்தும் தவித்து அலறினார்கள். வாயுவின் இச்செயலால் மூவுலகும் அழிவின் எல்லையில் நின்றது.

தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் என மூவலகத்தவர்களும் பிரம்மாவிடம் சென்று உங்களை சரணடைகிறோம் இப்பிரச்சனையை தீர்த்து எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். அனைவருடன் பிரம்மா அனுமன் இருந்த இடம் வந்து சேர்ந்தார். அடிபட்ட மகனை மடியில் வைத்துக் கொண்டு வருந்திக் கொண்டிருந்த வாயுவைக் கண்டனர். சூரியன் உருக்கி எடுத்த தங்கம் போல் பிரகாசமாக இருந்த குழந்தையை பிரம்மா கருணையுடன் பார்த்தார். மிகவும் வருத்தத்துடன் இருந்த வாயு பகவான் தன் குழந்தை அனுமனை பிரம்மாவிடம் கொடுத்தார். பிரம்மாவின் கைகள் பட்டதும் குழந்தை அனுமன் எழுந்து விளையாட ஆரம்பித்து விட்டான். அனுமனை விளையாட ஆரம்பித்ததும் வாயு தன் இயக்கத்தை ஆரம்பித்தார். உலகத்தில் ஸ்தம்பித்துக் கிடந்த உயிரினங்கள் பிராணனைப் பெற்று நடமாட ஆரம்பித்து பழையபடி உலக இயக்கம் நடை பெற்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.