ஆவுடையார்

மாணிக்கவாசகரை ஆட்கொள்ள நரியை குதிரையாக்கி குதிரையை மீண்டும் நரியாக்கி காட்டுக்குள் ஓடச் செய்து ஊருக்குள் வெள்ளம் வரச் செய்து வெள்ளத்தை அடைக்க கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து கரையை அடைக்காமல் போக்கு காட்டி மன்னனால் முதுகில் பிரம்படிபட்டு அது அனைவர் முதுகிலும் வலி பெறச் செய்து கிழவி வந்தி அமைச்சன் மணிவாசகன்; மன்னன் அரிமர்த்தனன் என மூவருக்கும் முக்தி அளித்தார் சிவபெருமான். சிவனின் கையில் நரம்புகள் புடைத்ததுக் கொண்டு இருப்பதைக் காணலாம். இடம் ஆத்மநாத சுவாமி கோயில். திருப்பெருந்துறை. புதுக்கோட்டை மாவட்டம்.

சங்கு சக்கர முருகன்

அசுரர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூற முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும் தேவர்களும் முருகருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும் அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் இங்கு தரிசிக்கலாம். இடம் படிக்காசுநாதர்கோயில் அழகாபுத்தூர்.

சாஸ்தா

சைவம் மற்றும் வைணவத்தை சாஸ்தா தன்னுள் இணைத்து அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறார். இந்தச் சிற்பத்தில் சாஸ்தா பகவான் ஒரு பீடத்தில் அமர்ந்தபடி வலது காலை கீழே தொங்கவிட்ட நிலையில் இடது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இடம் திருவனந்தபுரம் நேபியர் மியூசியம். காலம் கிபி 15 ஆம் நூற்றாண்டு.

வராக அவதாரம்

திருமாலின் பத்து அவதாரர்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இந்த அவதாரத்தில் இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர் செய்து வென்றார். இடம் கம்போடியா. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.

காலசம்ஹாரர்

அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக காலசம்ஹாரர் வணங்கப்படுகிறார். காலன் என்று அழைக்கப்படும் யமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும் காலந்தகர் எனவும் அழைக்கப்படுகிறார். இடம்: திருப்பூதீஸ்வரர் கோவில் கொடும்பாளூர். புதுக்கோட்டை மாவட்டம்

தெய்வங்கள்

வராஹர் விநாயகர் திரிமூர்த்தி மகிஷாசுரமர்த்தினி நரசிம்மர். தனியாக மண்டபம் போல் அமைப்பில் சிவலிங்கம். அனைத்து தெய்வங்களும் ஒரே மலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடம் பாமினி குகைக்கோயில் கர்நாடகா.

நெல்லிக்காய் பசவண்ணன் நந்தி

நந்தி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில். யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது. ஆறு கல் தூண்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மையத்தில் ஒரு நந்தி அமர்ந்த நிலையில் உள்ளது. நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டது. கோவில் சோழர் பாணியில் உள்ளது. கோயிலின் முன்புறம் நெல்லி மரம் உள்ளது. ஆகவே இக்கோயில் நெல்லிக்காய் பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டுகிறது. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது. இடம் நந்தி மலை.