உக்ரநரசிம்மர்

இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்? என்று இரணியன் தனது கதையால் தூணை அடித்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் உக்ரநரசிம்மர். இடம் ஸ்ரீபிரஹலாதன் கோவில் அஹோபிலம்.

நரசிம்மர்

விஷ்ணு பகவானின் அவதாரமான யோக நரசிம்மரின் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. நரசிம்மர் நான்கு கைகளுடன் உட்குடியாசனத்தில் அமர்ந்துள்ளார். நரசிம்மருக்கு 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு உள்ளது. மீதமுள்ள 2 கைகளும் கால்களும் யோகப்பட்டையுடன் உட்குடிகாசனத்தில் உள்ளது. டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்டது. இடம் ஓடிசா மாநிலம். காலம் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைபட்டது.

கங்காதர மூர்த்தி

கங்காதர மூர்த்தியின் வலது மேல் கரம் ஜடா முடியைப் பிடித்துக் கொண்டு வெகு வேகமாக வரும் கங்கையைத் தாங்குகிறது. வலது கீழ் கரத்தால் நாகத்தைப் பிடித்துள்ளார். இடது மேல் கரம் ஜடா முடியை அவிழ்ப்பது போல் உள்ளது. மற்றொரு கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்திருக்கிறார். வலது காலைத் தூக்கி முயலகன் தலை மீது வைக்க அவன் பாரம் தாங்காமல் சற்றுச் சாய்வாகப் படுத்து இடக்கையாலும் பாதத்தைத் தாங்குகிறான். அருகில் பகீரதன் இருக்க இறைவனைச் சுற்றி தேவர்களும் இருக்கின்றனர். கிமு 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவனால் கட்டப்பட்ட குடைவரைச் சிற்பம் இது.

இடம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னிதி செல்லும் வழியில் இடப் புறம் லலிதங்குரா பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இடத்தில் ஒரு சிறிய அறை போல் காணப்படும் பகுதியில் உள்ளது.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்

ஏலவார்குழலியை கரம் பற்றி ஏகாம்பரேஸ்வரர்

சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.

கங்காவதரணம்

கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இது பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர். ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி உடலைப் பின்புறமாக வளைத்து கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோக கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

சிவனை மீன் வடிவில் வழிபட்ட திருமால்

சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று கடலுக்கடியில் ஒளிந்து கொண்டபோது திருமால் பெரிய மீனாக உருவம் தாங்கி கடலுக்கடியில் சென்று அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி பெரிய கொக்கு வடிவமெடுத்து மீனின் கண்களை பிடுங்கி மீனின் செருக்கை அடக்கினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

நடனமாடும் சிவபெருமான்

சிவபெருமான் தனது 20 கைகளில் பல ஆயுதங்கள் ஏந்தியபடி தாமரை பீடத்தில் நடனமாடும் தோரணையில் இந்த வெண்கலச் சிற்பம் உள்ளது. சிவபெருமானின் இரண்டு பக்கமும் பரிவார தேவதைகள் உள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.