சரஸ்வதி தேவி

பத்மாசனத்தில் தலையில் கிரீடத்துடன் காதில் வட்டமான குண்டலங்களுடன் கழுத்து மார்பு தோள்பட்டை கைகள் மற்றும் கால்களில் அலங்கார அணிகலன்களுடன் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறாள். இடம் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம்.

ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி

பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிக்கொண்டு அவரது தவத்தை விளையாட்டாக கலைத்தார். இதனால் உலகம் முழுவதும் இருளாக மாறியது மற்றும் உலகின் அனைத்து செயல்பாடுகளும் நின்றது. மிகவும் கோபமடைந்த சிவன் பார்வதிதேவியை பூமியில் பிறந்து மீண்டும் அடையும்படி சபித்தார். வேகவதி ஆற்றின் அருகே உள்ள ஒரு பழமையான மாமரத்தடியில் மணலில் ஒரு லிங்கம் அமைத்து சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி கடும் தவம் செய்து கொண்டிருந்தாள். அருகில் உள்ள வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவலிங்கத்தை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவனிடம் பக்தி கொண்ட பார்வதி தன் உயிரை விலையாகக் கொடுத்தும் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகத் தழுவினாள். பார்வதியின் இந்த சைகை சிவபெருமானைத் தொட்டது. அவர் நேரில் வந்து அவளை மணந்தார். இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

சிறிய சிவன் சன்னதி

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள கோயில் வளாகத்தின் வடக்குப் பகுதியில் நீரழி மண்டபம் போன்ற கிணறு போன்ற அமைப்பில் உள்ள சிறிய சிவன் சன்னதி. ரிஷபம் மீது சிவன் அமர்ந்திருக்கிறார். தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 அடிக்கு கீழே உள்ளது.

மகிஷாசுரமர்த்தினி

மேற்கு வங்காளத்தின் மன்பூம் என்ற இடத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டின் மகிஷாசுரமர்த்தினி சிலை தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் இந்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திரிபுராந்தகன்

அசுரன் தாரகனுக்கு தாரகாக்ஷா, கமலாக்ஷா மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இந்த அசுர இளவரசர்கள் பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் செய்து மகத்தான சக்தியின் வரத்தைப் பெற்றனர். பிரம்மா அவர்கள் மீது மகிழ்ச்சியடைந்து மாயாசுரனால் கட்டப்பட்ட தங்கம் வெள்ளி மற்றும் இரும்பு என ஒவ்வொன்றும் வானத்தில் சுழலும் ஒரு வான் கோட்டையை அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கினார். அவர்கள் ஒரு ஆயிரமாண்டுகள் ஆட்சி செய்வார்கள் என்றும், மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்து, அவற்றை எரியூட்டக்கூடிய ஒரு அம்பு மூலம் மட்டுமே அழிக்க முடியும் என்றும் அந்த வரம் வழங்கினார். இந்த வரம் பெற்ற அசுரர்கள் உலகத்தில் பேரழிவை ஏற்படுத்தினார்கள். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று காக்குமாறு வேண்டினர்கள்.

சிவபெருமான் ஆணைப்படி விஸ்வகர்மா தேரின் சக்கரங்கள் சூரியனையும் சந்திரனையும் வைத்து பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் மற்றும் கூறுகளுடன் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாக்கி பிரம்மா சாரதியாக இயக்க ஒரு ரதம் ஒன்றை தயாரித்தார். மேருமலையை வில்லாகவும் வாசுகி பாம்பை நாணாகவும் வைத்துக் கொண்டு திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன் வெள்ளி இரும்பு கோட்டைகள் ஒரே இடத்தில் வந்து நிற்க மூன்று அசுரர்களும் சிவபெருமானுடன் போர் புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும் தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான் சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த சிவபெருமான் லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை கவிழ்ந்தனர். திரிபுரத்தையும் எரித்ததால் சிவபெருமான் திரிபுராந்தகன் என்று அழைக்கப்பட்டார். இக்காட்சி எண் 16 எல்லோலா குகைக் கோயில்களில் கைலாசா கோயிலில் சிற்பமாக உள்ளது.

கஜலட்சுமி

தாமரை நிறைந்த குளத்தில் கஜலட்சுமி பெரிய தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள். தாமரைகளை ஏந்திய இரண்டு கைகளுடன் தலையில் ஒரு அழகான கிரீடம் உள்ளது. அவளுடைய இரண்டு பக்கங்களிலும் கீழே இரண்டு யானைகள் நின்று கொண்டு தும்பிக்கையால் பானைகளில் தண்ணீர் நிரப்பி பானைகளை மேலே நிற்கும் யானைகளிடம் கொடுக்கிறது. மேலே உள்ள இரண்டு யானைகள் அந்த நீரை வாங்கி கஜலட்சுமியின் தலையில் அபிஷேகம் செய்கின்றன. சுற்றிலும் தேவர் தேவதைகள் நின்று இந்த நிகழ்வை கண்கிறார்கள். இந்த கஜலட்சுமியின் சிற்பம் சுமார் எட்டடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்டது. சிதிலமடைந்த நிலையில் தற்போது உள்ளது. இடம் அஜந்தா எல்லோரா குகைகள் அவுரங்காபாத் மகாராஷ்டிரா.

ராவணன் அனுகிரஹமூர்த்தி

கைலாயத்தில் சிவன் பார்வதி அவர்களின் பரிவாரங்களுடன் உள்ளார்கள். இராவணன் தனது இருபது கரங்களின் வலிமையுடன் கைலாச மலையை அசைக்க முயற்சி செய்கிறார். இராவணனின் செயலினால் கைலாசம் லேசாக நடுங்க பார்வதி பதற்றத்துடன் சிவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். சுற்றி இருக்கும் சிவனின் பரிவாரங்கள் இராவணனின் செயலினால் கோபத்துடன் காட்சியளிக்கின்றனர். சிவன் ஒன்றும் அறியதவர் போல் பேரின்ப நிலையில் இருக்கிறார். சிதிலமடைந்த நிலையில் தற்போது இந்த சிற்பம் உள்ளது. இடம் கைலாச கோவில் குகை எண் 16. எல்லோரா குகைகள்.

அஷ்ட புஜ சரஸ்வதி

கல்விக்கு தெய்வமான சரஸ்வதி எட்டு ஆயுதம் கொண்டு அருள்பாலிக்கிறாள். பிரம்மா ஒரு அரக்கனுக்கு கொடுத்த வரத்தின் சக்தியினால் அரக்கன் இந்த உலகத்தை கட்டி வைத்தான். உலகம் இயங்காமல் நின்றது. உலகை மீட்டெடுக்க விருப்பப்பட்ட தெய்வங்கள் சக்தி வாய்ந்த எட்டு தெய்வீக ஆயுதங்களை சரஸ்வதிக்கு கொடுத்தார்கள். ஒரு புலி மீது சென்ற சரஸ்வதி அரக்கனை தோற்கடித்து உலகத்தின் மீதிருந்த கட்டை அவிழ்த்து அரக்கனை அழித்தாள். இடம் கட்சபேஸ்வரர் கோவில், பெரிய காஞ்சிபுரம்.