உயிரோட்டமுள்ள நந்தி

சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.

ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.

நரசிம்மர்

திருமால் தனது நரசிம்ம அவதாரத்தில் இரணியகசிபு அசுரனை அழித்தல். நடுவில் மட்டும் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் ஆழமும் கொண்டது. இடம் சென்னகேசவா கோயில் பேலூர் கர்நாடகா.

அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி பகவான், வருண பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவார்கள். வலது கை கீழேயும் இடது கை மேலேயும் வைத்து நடுவில் வாஸ்து புருஷன் இருக்கிறார். இடம் ஹளேபிடு ஹொய்சலேஸ்வரர் கோவில் கர்நாடகா.

1. கிழக்கு திசை அதிபதி இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் தனது வாகனமான ஐராவத யானை மீது அமர்ந்திருக்கிறார்.

2. தென்கிழக்கு திசை அதிபதி அக்னி தனது மனைவி சுவாஹா தேவியுடன் தனது வாகனமான ஆட்டுகிடா மீது அமர்ந்திருக்கிறார்.

3. தெற்கு திசை அதிபதி எமன் தனது மனைவி குபேரஜாயையுடன் தனது வாகனமான எருமை மீது அமர்ந்திருக்கிறார்.

4. தென்மேற்கு திசை அதிபதி நிருதி தனது மனைவி கட்கியுடன் தனது வாகனமான பிரேதம் வாகன மீது அமர்ந்திருக்கிறார்.

5. மேற்கு திசை அதிபதி வருணன் தனது மனைவி வருணியுடன் தனது வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார்.

6. வடமேற்கு திசை அதிபதி வாயு மனைவி வாயுஜாயையுடன் தனது வாகனமான மான் மீது அமர்ந்திருக்கிறார்.

7. வடக்கு திசை அதிபதி குபேரன் தனது மனைவி யட்சியுடன் தனது வாகனமான நரன் மீது அமர்ந்திருக்கிறார்.

8. வடகிழக்கு அதிபதி ஈசானம் மனைவி ஈசானஜாயையுடன் தனது வாகனமான காளை மீது அமர்ந்திருக்கிறார்.

சனிபகவான்

கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என்றும் திருப்பாண்டிக் கொடுமுடி கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற சிவன் கோயில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. இத்தல சிவன் மீது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மூவரும் பாடல்கள் பாடியுள்ளார்கள். இக்கோயிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் எழுந்தருளி அருள்கிறார்.

பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. இந்த ஆலயத்தில் ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இக்கோயிலும் ஒன்று.

பஞ்ச விருட்ச பஞ்ச முக விநாயகர்

மருதமலை முருகன் கோயில் அருகில் ஒரே இடத்தில் வளர்ந்துள்ள அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என பஞ்ச விருட்ச பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கின்றார். இவரது ஐந்து முகங்களும் ஒரே வரிசையில் உள்ளது.

சரஸ்வதி தேவி

பத்மாசனத்தில் தலையில் கிரீடத்துடன் காதில் வட்டமான குண்டலங்களுடன் கழுத்து மார்பு தோள்பட்டை கைகள் மற்றும் கால்களில் அலங்கார அணிகலன்களுடன் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறாள். இடம் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம்.