ஹரிஹரன் சங்கரநாராயணன்

ஹரி என்றால் திருமால் ஹரன் என்றால் சிவன். சிவனும் விஷ்ணுவும் வேறு வேறு அல்ல என்பதை குறிக்கும் சங்கர தாராயாண சொரூபம். பாதி திருமால் என்றழைக்கப்படும் விஷ்ணு. பாதி சிவனும் ஆக ஒரே உருவத்தில் ஒன்றிணைந்தத் தோற்றம் ஹரிஹரன் ஆகும். இடம் குன்றக்குடி முதல் குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

சங்கில் சிவலிங்கம் நந்தி

சங்கில் சிவலிங்கம் நந்தி மற்றும் கணபதி வடிவமைக்கப்பட்டது. நுணுக்கமாக பொறிக்கப்பட்டுள்ள யாளியும் உள்ளது. தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் மாநகரின் மிகப் பெரிய அருங்காட்சியகமான பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் (MET – The Metropolitan Museum Of Art) உள்ளது.

தசபுஜ துர்க்கை

தச புஜ துர்க்கை வெட்டப்பட்ட எருமையின் உடலில் இருந்து வெளிவரும் அரக்கனின் கழுத்தைப் பிடித்து சூலத்தினால் மார்பைப் பிளக்கும் காட்சி. வாள் கேடயம் அம்பு வில் வஜ்ரம் மணி ஆகிய ஆயுதங்களை வலது இடது கரங்களில் ஏந்தி வலது காலை மகிஷாசுரனின் மேல் வைத்து இடது காலை கீழே வைத்துள்ளார். மடிந்த மகிஷாசுரனின் எருமைத் தலை தனியே துண்டாக கீழே கிடக்க துர்கையின் சிம்ம வாகனமும் பின்னால் இருந்து கடித்து குதற சீறிப் பாய்ந்து வருகிறது. இடம் ஜோத்பூர் மாவட்டம். ராஜஸ்தான்

வீணாதரதட்சிணாமூர்த்தி

இந்தியாவின் தெற்கு கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்சத்தில் குகைக் கோயில் உள்ளது. கிபி 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இக்கோயில். குடைவரை கோவில் வீணாதர தட்சிணாமூர்த்தியின் சன்னதியை கொண்டுள்ளது. குகையின் வெளிப்புறச் சுவர் சிவனின் முடிக்கப்படாத சிற்பம் உள்ளது. தென்னிந்தியாவின் மிகச்சிறிய பாறை குடைவரை ஆலயமாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் இருபுறமும் சிவன் மற்றும் பார்வதியின் முடிக்கப்படாத சிற்பங்களும் உள்ளன. கேரளாவின் ஆரம்பகால குடைவரை குகைக் கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த குடைவரை குகைக் கோயில் 1965 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

வராஹ அவதாரம்

விஷ்ணுவின் வராஹ அவதார சிற்பம் விதிஷாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 11 மற்றும் 12 நூற்றாண்டு காலச் சிற்பம். இப்போது குவாலியரின் குஜாரி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தோமர் ராஜ்புத் ஆட்சியாளர் மான் சிங் தோமர் தனது மனைவி மிருக்னயனிக்காகக் கட்டப்பட்டது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

சிவன் பார்வதி

கயிலையில் சிவன் தனது துணைவி பார்வதி தேவியுடன் அமர்ந்திருக்கிறார். ஒடிசாவில் இருந்த சிற்பம் தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

சிவன் பார்வதி

சிவன் தனது துணைவி பார்வதி தேவியுடன் நந்தி பகவான் மீது அமர்ந்திருக்கிறார். 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட சிற்பம். இடம் கர்நாடக மாநிலம் லக்ஷ்மேஷ்வர் என்னும் ஊரிலுள்ள சோமேஷ்வரர் கோயில். காலம் 10 ஆம் நூற்றாண்டு.

வீர சுதர்சன ஆஞ்சநேயர்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது ஆதனூர். இங்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்ய தேசத்தில் 11 ஆவதாக இருக்கும் ஆண்டளக்கும் ஐயன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் 20 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் சனனதி உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. கருவறையில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயரத்தில் கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி கொடுகிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சுதர்சன சக்கரம் அமைந்திருக்கின்றது. அவரது தலையின் மேல் நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் ரக்கொடி எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.