ஆறுமுகன்

தமிழகத்தில் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் ஆறு தலையும் பன்னிரு கைகளும் மயிலும் முருகன் படிமத்தில் நுழைகின்றன. பின்னர் விஜயநகர நாயக்கர் காலத்தில் ஆறுமுகனை மயில் மீது அமர்ந்த கோலத்தில் காணமுடிகிறது. தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிலை சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

சேத்திரபாலர் – பைரவர்

பைரவரை சேத்ரபாலர் என்ற பெயரில் குறிப்பிட்டு ஒவ்வொரு ஊரையும் அங்கு திகழும் திருக்கோயிலையும் தீமைகளிலிருந்து காக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். எட்டுக் கரங்களுடன் திகழும் பைரவ வடிவமே சேத்திரபாலர் திருமேனிகளில் உத்தமமானதாகும். எரிசுடர்கள் (ஜ்வாலாமகுடம்) பிறைச்சந்திரன் ஆகியவை தலைமேல் திகழ எட்டுக் கரங்களுடன் சேத்திரபாலர் திகழ்கின்றார். திரிசூலம் வாள் வில் அம்பு டமருகம் மணி (காண்டா) கேடயம் ஆகியவற்றைத் தரித்திருக்கிறார். ஆடையின்றி இடுப்பிலும் கரங்களிலும் பாம்புகளை ஆபரணமாகப் பூண்டுள்ளார். தோளிலிருந்து நீண்ட மணிமாலை கணுக்கால் வரை உள்ளது. இந்த அற்புத திருமேனியின் முன் கரங்கள் உடைக்கப் பட்டுள்ளது. இடம் பெருவுடையார் கோவில் தஞ்சை.

லலிதை

பிள்ளையார் முருகனுடன் லலிதை சிதிலமடைந்த நிலையில் சிற்பம். தற்போது பிரித்ததானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 ஆம் நூற்றாண்டு ஒடிசா கோயிலில் இருந்த சிற்பம்.

அக்னிபகவான்

அக்னிதேவர் ஒரு கையில் அக்கமாலையும் மறு கையில் அமுத கலசமும் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். தலையில் தீ ஜ்வாலாவுடன் நீண்ட தாடியுடன் இருக்கிறார். இடம்: சுந்தரேஸ்வரர் கோவில். மேலப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.

வாசுகி பாம்பின் மத்தியில் பால கிருஷ்ணன்

இந்த பாம்பு 1800 ஆண்டுகள் பழமையான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய தூணில் செதுக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண முறையில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் மத்தியில் மிக சிறு உருவத்தில் பால கிருஷ்ணனை படுத்திருக்கிறார். இடம்: ஜம்புகேஸ்வரர் கோவில். திருவானைக்காவல் திருச்சி.

வள்ளிமலை வள்ளி

வள்ளி மலைக் கோவிலில் சுப்ரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்த ஜாம பூஜையில் தேனும் தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக் கோவிலில் குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில் கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன் வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. வள்ளி பாறைச் சிற்பமாக இங்கே அருள் பாலிக்கிறாள். இடம்: வேலூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள வள்ளிமலை.

முருகர் புராண சிற்பம்

முதல் இரண்டும் புவனேஸ்வரத்தில் வழிபடும் கோவில்களில் உள்ளவை. அடுத்த இரண்டும் ஒடிசா அருங்காட்சியகங்களில் உள்ளவை. காலகட்டம் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். கையில் வேல், கழுத்தில் புலிநகம் கோர்த்த சங்கிலி. வாகனமான மயிலின் அழகு கூடிக்கொண்டே செல்கிறது. இடக்கையிலோ வலக்கையிலோ வேல். தலையின் ஜடாமுடி அலங்காரம் மிகத் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. சன்னவீரம் இல்லை. மூன்றில் பூணூல் உள்ளது. ஒன்றில் இல்லை.

திரிபுர பைரவி

தசமஹாவித்யா என்ற 10 பெரும் தேவியரில் திரிபு ரபைரவி தேவியும் ஒரு சக்தி. ஆதி சக்தியான காளியே சம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். பைரவ சக்திக்கெல்லாம் மூலமானவள் திரிபுர பைரவி. சிவப்பரம்பொருள் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர்.

அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமானார் ஆட்கொண்ட பிறகு மலைகளில் உறைந்து சிவார்ச்சனை விதிகளையும் தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். அவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட எல்லாம் வல்ல பராசக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி அனைத்து பைரவ சக்திகளும் உண்டாயினர்ர்ந்த சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளை சிருஷ்டி செய்வதாலும் முன்னரே இருப்பதாலும் மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குவதாலும் உலகம் அழிந்த பின்னும் முன்போலவே உலகை பூர்த்தி செய்வதாலும் சரஸ்வதி லட்சுமி காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குவதாலும் ஸ்தூலசூட்சும காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை திரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர். இடம்: கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.