கண்ணனின் குரு தட்சணை

கண்ணனும் பலராமரும் சாந்தீபனி என்ற குருவிடம் கல்வி கற்றார்கள். இருவரும் அறுபத்து நான்கே நாட்களில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்று முடித்தார்கள். குருகுல வாசத்தைப் பூர்த்தி செய்து கொண்டு கிளம்பும்போது குருநாதரிடம் உங்களைக் குருவாக அடைந்ததை எங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். உங்களுக்கு நாங்கள் குரு தட்சணையாக என்ன தர வேண்டும்? என்று இருவரும் கேட்டார்கள். அதற்கு குரு கண்ணா உங்களைப் போன்ற ஒரு மாணவன் கிடைக்க நானல்லவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நீயும் பலராமனும் மாணவர்களாகக் கிடைத்ததே எனக்குப் பெரிய தட்சணை என்று சாந்தீபனி பதிலளித்துக் கொண்டிருக்கையில் அவரது மனைவி சுவாமி ஒரு நிமிடம் என்று அவரை உள்ளே அழைத்தாள். அறைக்குள் வந்த அவரிடம் சுவாமி கண்ணனிடம் குரு தட்சணைை வேண்டாம் என்று சொல்லாதீர்கள் இந்தப் பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றிருக்கிறார்கள். எனவே இவர்கள் அசாத்தியமான செயல்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர்கள். எனவே இறந்து போன நம் குழந்தையை மீட்டுத் தருமாறு அவர்களிடம் கேளுங்கள் என்றாள்.

கண்ணனால் இதனை செய்ய இயலுமோ இயலாதோ என்ற ஐயத்துடன் வெளியே வந்த சாந்தீபனி கண்ணா பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் என் குடும்பத்தோடு கடலில் குளிக்கச் சென்றிருந்த போது என்னுடைய ஒரே மகன் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். அவனை உன்னால் மீட்டுத்தர முடியுமா? என்று கேட்டார். மகா குருவே உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா? உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் கடலரசனைக் காண புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன் கேட்ட போது பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான் கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு. அவனது வயிற்றுக்குள் கண்ணன் தேடினான். ஆனால் சாந்தீபனியின் மகன் அவன் வயிற்றில் இல்லை. அடுத்து வருணனிடம் சென்ற கண்ணன் சாந்தீபனியின் மகனைக் குறித்து வினவ அந்தச் சிறுவன் யமலோகத்தில் இருக்கிறான் என்றார் வருண பகவான். யமலோகத்துக்குச் சென்றான் கண்ணபிரான். தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் யமன் கண்ணனின் திருவடிகளில் வந்து விழுந்தான். பரந்தாமா என்னைத் தேடி நீங்கள் வரவேண்டுமா? அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்றான். தன் குருவின் மகனைக் குறித்துக் கண்ணன் கேட்க இங்கு தான் இருக்கிறான் என்று சொன்ன யமன் அவனைக் கண்ணனிடம் ஒப்படைத்தான். அந்தச் சிறுவனைச் சாந்தீபனியிடம் அழைத்து வந்து குருதட்சணையாகச் சமர்ப்பித்தார் கண்ணன்.

இதை திருமங்கையாழ்வார் தன் திருவாய் மொழியில் பாடலாக பாடியுள்ளார்.

முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர்
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி
நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே

என கண்ணனின் புகழை பாடுகிறார்.