ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 20

அனுமனும் அங்கதனும் அங்கே ஒரு பெரிய குகையை கண்டார்கள். இந்த குகைக்குள் இருந்து பல வகைப் பறவைகள் சந்தோசமாக வெளிவந்து கொண்டிருந்தன. குகைக்குள் இருந்து நல்ல வாசனையோடு காற்று வீசுவதை பார்த்து இந்த குகையில் தண்ணீர் இருக்க வேண்டும். அனைவரும் உள்ளே செல்வோம் வாருங்கள் என்று கூறினார்கள். குகைக்குள் இருட்டாக இருந்தது ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தால் வருந்திய வானரங்கள் வெகுதூரம் இருட்டிலேயே சென்றார்கள். குகையின் இறுதியில் வெளிச்சத்துடன் மிக ரம்யமான வனத்தை கண்டார்கள். மிக அதிசயமான தங்கத்தால் ஆன மாளிகைகளும் எல்லாவித செல்வமும் நிறைந்த நகரத்தை கண்டார்கள். அங்கே ஓரிடத்தில் மரவுரி தரித்த ஒரு பெண் தவஸ்வியை கண்டார்கள். அவரின் முகத்தில் இருந்த தேஜஸை பார்த்து வானரங்கள் நடுங்கினார்கள்.

அனுமன் அவரிடம் சென்று வணங்கினான். தாயே நாங்கள் சோர்வினாலும் தண்ணீர் தகத்தினால் உள்ளே வந்தோம். தங்களைக் கண்டு எங்கள் கூட்டத்தினர் பயப்படுகின்றார்கள். தங்களைப் பற்றியும் இந்த விசித்திர குகையைப் பற்றியும் தாங்கள் சொல்லி எங்கள் வானர கூட்டத்தின் பயத்தை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த பெண் தவஸ்வி நீங்கள் அனைவரும் மிகவும் களைப்பாகவும் பசியுடனும் இருக்கின்றீர்கள். முதலில் உங்கள் பசி தாகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு பேசலாம் என்று அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தாள். அனைவரும் பசியாறி மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்பொது தவஸ்வி பேச ஆரம்பித்தாள். இந்த அழகிய அரண்மனை வானவர்களுடைய விஸ்வகர்மா மயன் கட்டியது. பிரம்மாவினால் சுக்ராச்சாரியாருக்கு உபதேசிக்கப்பட்ட சிற்பக் கலையை சுக்ராச்சாரியாரிடம் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து நன்கு கற்றவன். இந்த அரண்மனையை அவன் கட்டி வெகுகாலம் இங்கே வசித்து வந்தான். ஒரு முறை இந்திரன் மேல் ஏற்பட்ட பகையின் காரணமாக இந்திரன் அவனை வதம் செய்து விட்டான். அதன்பின் இந்த பொன்மயமான அரண்மனையை பிரம்மா ஹேமை என்பளுக்கு கொடுத்து விட்டார். இந்த இடத்திற்கு அவளே உரிமையாளர். இப்போது அவள் தேவலோகம் சென்று இருக்கிறாள். எனது பெயர் சுயம்பிரபா. இந்த இடத்தை காவல் காத்துக் கொண்டிருக்குக்கிறேன். இவ்வளவு பெரிய கூட்டமாக வந்திருக்கும் நீங்கள் யார் உங்கள் காரியம் என்ன ஏன் இந்த மாதிரி காடுகளில் திரிந்து களைத்து இருக்கின்றீர்கள் என்று கேட்டாள்.

அனுமன் பேச ஆரம்பித்தார். தசரத குமாரன் ராமர் இந்த உலகத்திற்கு அதிபதியானவர் தன் தம்பி மற்றும் மனைவியுடன் தன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக ராஜ்ய பதவியை விட்டு காட்டிற்குள் வனவாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராட்சசன் ஒருவன் ராமருடைய மனைவி சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். சீதையை தேடிக் கொண்டு ராமரும் லட்சுமணனும் வந்தார்கள். வன ராஜன் சுக்ரீவன் அவர்களுக்கு நண்பனானான். ராமருக்காக சீதையை தேடும்படி சுக்ரீவன் ஆணையிட்டு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தான். அவர் இட்ட ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைத்து காடுகளிலும் குகைகளிலும் தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது தாகத்தாலும் பசியாலும் சோர்வினாலும் நாங்கள் இந்த குகைக்குள் வந்து சேர்ந்தோம். குகைக்குள் நீண்ட நாட்களாக தண்ணீரை தேடிக்கொண்டு இருந்ததில் சுக்ரீவன் எங்களுக்கு விதித்த மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் நாங்கள் சீதையை கண்டு பிடிக்கவில்லை. சுக்ரீவன் மிகவும் கண்டிப்பானவர். அவர் இட்ட வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யாத காரணத்தினால் எங்களைக் கொன்று விடுவார் தயவு செய்து நாங்கள் விரைவாக வெளியில் செல்வதற்கான வழியை சொல்லுங்கள் என்று அனுமன் தவஸ்வியிடம் சொல்லி முடித்தார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 19

ராமர் சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். இந்த உலகம் முழுவதும் ஒவ்வொரு திசைகளில் இருக்கும் நாடுகளையும் அதன் வழிகளையும் நேரில் பார்த்தது போல் உன் வீரர்களுக்கு விளக்கிச் சொன்னதை பார்த்தேன். அத்தனை நாடுகளையும் அதன் வழிகளையும் நீ எப்படி அறிந்து வைத்திருக்கிறாய். எப்போது அந்த நாடுகளுக்கு சென்றாய் என்று கேட்டார். அதற்கு சுக்ரீவன் வாலியால் நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டதும் நான் செல்லும் இடங்கலெல்லாம் வாலி என்னை துரத்திக்கொண்டே வருவான். அவனுக்கு பயந்து உலகம் முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறேன். இதன் காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் நாடுகள் காடுகள் அனைத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. ஒரு நாள் மதங்க மகரிஷி ஆசிரமத்தைப் பற்றி அறிந்தேன். இந்த பிரதேசத்தில் வாலி நுழைந்தால் மகரிஷியின் சாபத்தால் அவன் தலை வெடித்துப் போகும் என்ற காரணத்தினால் இங்கு வர மாட்டான். மீறி வந்தாலும் எனக்கு அபாயம் ஒன்றுமில்லை என்று அங்கு பலகாலம் ஒளிந்திருந்தேன் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் சுக்ரீவன். சுக்ரீவன் வானரங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஒரு மாத காலம் செல்ல ஆரம்பித்தது.

ராமர் இருக்குமிடத்தில் இருந்து சீதையை தேடிச் சென்றவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். வடக்கு கிழக்கு மேற்கு பக்கம் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தார்கள். காடுகள் மலைகள் ஆறுகள் நகரங்களிலும் ஜாக்கிரதையாக தேடிப் பார்த்து விட்டோம். சீதையை எங்கும் காணவில்லை. எங்களுக்கு சீதையை கண்டு பிடிக்கும் பாக்கியம் இல்லை. ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு தென் திசை நோக்கியே சென்றிருக்கிறான். தென் திசை சென்ற அனுமனும் திரும்பி வரவில்லை. விரைவில் அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று எண்ணுகிறோம் என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தார்கள். வானரங்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராமர் அவர்களின் முயற்சியில் திருப்தி அடைந்தார்.

ராமர் தெற்குப் பக்கம் சென்ற அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று அனுமனின் வருகைக்காக காத்திருந்தார். தெற்குப் பக்கம் தேடிக் கொண்டு சென்றவர்கள் விந்தைய மலைக் குகைகளிலும் வனங்களிலும் புகுந்து எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார்கள் எங்கும் சீதையை காணவில்லை. ஒரு பெரிய பாலைவனத்தை கண்டார்கள். அங்கும் தேடிப் பார்த்துவிட்டு அதனை தாண்டி வேறு இடம் சென்றார்கள். அங்கு ஒரு அரக்கன் இருந்தான். அரக்கனை கண்ட வானரங்கள் அவன் தான் ராவணனாக இருக்க வேண்டும் ராவணன் இங்கிருப்பதால் சீதை இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும் என்று அரக்கனை நோக்கி சென்றார்கள். ஒரு பெரிய வானர கூட்டம் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அரக்கன் இன்று நல்ல உணவு கிடைத்தது என்று சந்தோசமாக அவர்களை பிடிக்க தாவினான். அங்கதன் அரக்கன் மேல் பாய்ந்து ஒர் அறை அறைந்தான். அந்த அடியை தாங்க முடியாமல் அரக்கன் கத்திக் கொண்டே கீழே விழுந்து இறந்தான். ராவணன் இறந்தான் என்ற மகிழ்ச்சி அடைந்த வானரங்கள் அந்த காடு முழுவதும் சீதையைத் தேடிப் பார்த்தார்கள். சீதை அங்கு இருப்பதற்காக ஒரு அறிகுறியும் அங்கு காணவில்லை. பிறகு வேறு இடத்தை தேடி சென்றார்கள். எவ்வளவு தேடியும் பயனில்லையே என்று உற்சாகம் இழந்து வருத்தப்பட்டு அமர்ந்து விட்டார்கள். அங்கதனும் அனுமனும் தைரியம் சொல்லி வானரங்களை உற்சாகப் படுத்தினார்கள். உற்சாகமடைந்த வானரங்கள் மறுபடியும் தேடி சென்றார்கள். இப்படியே பல நாட்கள் கழிந்தது. சீதையைக் காணவில்லை. சுக்ரீவன் கடுமையான தண்டனை விதித்து விடுவானே என்ற பயத்தில் தேடிக் கொண்டே சென்றவர்கள் பசியாலும் தாகத்தாலும் சோர்வடைந்தனர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 18

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். இந்த கோடிக்கணக்கான அபூர்வ பலம் கொண்ட வானர சேனைகள் அனைவரும் உங்களுடைய சேனைகளை. நீங்கள் இடும் ஆணையை குறைவில்லாமல் செய்யும் பலம் மிக்கவர்கள். இவர்கள் அனைவரையும் உங்களுடைய சேனைகளாக கருதி தற்போது தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை உத்தரவிடுங்கள் அவர்கள் செய்து முடிப்பார்கள் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன். அதைக் கேட்ட ராமர் மகிழ்ச்சியடைந்து சுக்ரீவனை அணைத்துக் கொண்டார். ராமர் பேச ஆரம்பித்தார். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சீதை எங்கே இருக்கின்றாள்? அவளை தூக்கிச் சென்ற ராவணன் எங்கே இருக்கின்றான்? என்பதே கண்டு பிடிக்க வேண்டும். இப்போது இங்கு உள்ள வானர படைகளுக்கு உத்தரவிட வேண்டியது வானரங்களின் அரசனான நீ தான் சுக்ரீவா. நானும் லட்சுமணனும் அல்ல. எல்லாம் அறிந்து செய்ய வேண்டியதைச் செய்ய தெரிந்தவன் நீ உன் திட்டப்படியே நடக்கட்டும் என்றார் ராமர்.

ராமரின் உத்தரவுப்படி சுக்ரீவன் தனது சேனாதிபதிகளுடன் ஆலோசித்து ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவனை நியமித்து எட்டு திசைகளுக்கும் சென்று சீதையை தேட ஆணையிட்டான். சுக்ரீவன் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். நீ சீதையை கண்டு பிடிக்கும் ஆற்றல் உடையவன். உன் தந்தையின் வேகமும் நல்ல பலத்தையும் நீ பெற்றிருக்கிறாய். பலம் அறிவு உபாயம் அனைத்தும் உன்னிடத்தில் நிறைவுடன் இருக்கின்றது. எனவே சீதையை தேடும் இந்த பொறுப்பை உன்னிடமும் ஒப்படைக்கிறேன். உன்னைத் நான் இந்தப் பெரும் காரியத்தில் நம்பியிருக்கிறேன். உனக்குச் சமமாக வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீ அங்கதனுடன் சென்று சீதை எங்கிருக்கிறாள் என்பதை அறிந்துவா என்று அனுமனுக்கு ஆணை பிறப்பித்தான் சுக்ரீவன். வடக்கே சதபலி என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். கிழக்கு பக்கமாக வினதன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். மேற்கே சுஷேணன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். தெற்கே அனுமன் அங்கதன் தலைமையில் சென்றார்கள். எப்படியாவது சீதையை கண்டுபிடிக்க வேண்டும். எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும் அதற்கான மன வலிமை உடல் வலிமை உங்களிடம் இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் கட்டாயம் திரும்பி வந்து என்னிடம் சொல்ல வேண்டும் என்று மிகக் கண்டிப்பாக ஆணையிட்டான் சுக்ரீவன். எட்டு திசைகளில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் எப்படி செல்ல வேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தெளிவாக வானர கூட்டங்களுக்கு விளக்கிச் சொல்லி அனுப்பினான். எட்டு திசைகளுக்கும் வானர கூட்டங்கள் புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் எட்டு திசைகளுக்கும் பிரிந்து சென்றனர்.

ராமர் சீதையை கண்டு பிடிக்கும் காரியத்தை அனுமன் சரியாக செய்து முடிப்பார் என்று எண்ணினார். எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் அதனை நீக்கி செய்து முடிப்பான் அனுமான் என்பதையும் உணர்ந்தார். அனுமனை தன்னருகே அழைத்தார் ராமார். தனது மோதிரத்தை அனுமனிடம் கொடுத்தார். உன்னால் சீதை கண்டு பிடிக்கப்பட்டால் இந்த மோதிரத்தை அவளிடம் நீ காட்டு இந்த மோதிரத்தை பார்த்தவுடன் நீ என்னுடைய தூதன் என்பதை அவள் அறிந்து கொள்வாள். விரைவில் அவளை மீட்பேன் என்ற செய்தியை அவளிடம் சொல்லி அவள் இருக்குமிடத்தை விரைவில் அறிந்துவா. நான் சீதையை மறுபடியும் அடையும்படி செய்வாயாக என்று ராமர் அனுமனிடம் கூறினார். விரைவில் சீதை இருக்குமிடம் அறிந்து கொண்டு தங்களை வந்து சந்திக்கிறேன் என்று ராமரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அனுமான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 17

ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது என்பதே அறிந்த சுக்ரீவன் ராமரே நினைத்து மிகவும் பயந்தான். லட்சுமணனை சகல மரியாதையுடன் உள்ளே அழைத்து வருமாறு தனது சேவகர்களுக்கு கட்டளையிட்டான். அந்தப்புரத்தின் உள்ளே வந்த லட்சுமணன் அங்கு ஆட்டம் பாட்டம் இசையுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்டு கோபம் கொண்டான். தனது வில்லின் நாணை இழுத்து சத்தம் எழுப்பி தனது கோபத்தை வெளிக் காட்டினான். அந்த சத்தம் கிஷ்கிந்தை நகரத்தையே நடுங்கச் செய்தது. நாணின் சத்தத்தை கேட்டதும் சுக்ரீவன் பயந்து எழுந்தான். லட்சுமணன் உண்மையில் மிகவும் கோபமாக வந்திருக்கிறான் என்ற அபாயத்தை உணர்ந்து தாரையிடம் உடனடியாக சென்று லட்சுமணனை சமாதானப்படுத்தும் படி கேட்டுக் கொண்டான். உலக அறிவிலும் சாமர்த்தியமான பேச்சிலும் தாரைக்கு நிகர் யாருமில்லை. அவள் லட்சுமணனிடம் சென்று மெதுவாக பேச ஆரம்பித்தாள். வெகு நாட்கள் பகைவன் தொந்தரவுடன் சுகங்கள் எதையும் அனுபவிக்காமல் துக்கத்துடனேயே வாழ்ந்து வந்த சுக்ரீவன் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த ராஜ்யத்தை பெற்றதும் அதில் உள்ள சுகங்களில் புத்தி மயங்கி அனுபவித்து வருகின்றான். அவன் மேல் கோபம் கொள்ள வேண்டாம். மயக்கத்தில் மூழ்கியிருக்கும் சுக்ரீவனை தெளிவுடன் இருக்கும் தாங்கள் மன்னிக்க வேண்டும். தங்களுக்கு கொடுத்த வாக்கை அவர் மறந்து விடவில்லை. பல இடங்களில் உள்ள வீரர்களை எல்லாம் இங்கு வந்து சேர சுக்ரீவன் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றான். அவர்கள் இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். பிறகு சீதையைத் தேடும் வேலையையும் ராவணனை எதிர்த்து வெற்றி வரும் வேலையும் நடைபெறும். சுக்ரீவனை சந்தேகப்பட வேண்டாம். இப்போது அரசனை பார்க்க தாங்கள் உள்ளே வரலாம் என்று லட்சுமணனை அழைத்துச் சென்றாள். தாரையின் பேச்சால் கோபம் குறைந்த லட்சுமணன் உள்ளே நுழைந்ததும் சுக்ரீவன் தனது ஆசனத்தில் இருந்து இறங்கி வந்தான். முதலில் நான் எந்த குற்றம் செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டு பேசத் துவங்கினான்.

ராமருடைய நட்பினாலும் வீரத்தாலும் நான் இந்த ராஜ பதவியை அடைந்தேன். ராமன் எனக்கு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். ராமருடைய பராக்கிரமத்தை அறிந்தவன் நான். என் துணை இல்லாமலேயே பகைவர்களை அழிக்கும் பலம் ராமருக்கு உண்டு என்று எனக்கு தெரியும். நான் என் சேனைகளுடன் அவரை பின்பற்றி செல்வேன். சீதையை தேடுவதற்கு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும். நான் செய்த தாமதத்தை மன்னித்து விடுங்கள் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டான். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த லட்சுமணன் ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து இந்த செய்தியை சொல்லி அவரின் துக்கத்தை போக்குங்கள் என்று லட்சுமணன் சுக்ரீவனிடத்தில் கேட்டுக் கொண்டான். சுக்ரீவனும் லட்சுமணனும் ராமர் இருக்குமிடம் சென்று அவரின் கால்களில் விழுந்து வணங்கி இந்த நல்ல செய்தியை சொல்லி அவரை திருத்திப் படுத்தினான்.

ராமர் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார். உன்னை போன்ற நண்பன் உலகத்தில் வேறொருவன் இல்லை. மேகங்கள் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது போல் என் உள்ளத்தை குளிரச் செய்துவிட்டாய். உன் நட்பை பெற்றது என் பாக்கியம். இனி ராவணன் அழிவது நிச்சயம் என்று ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுக்ரீவன் சொல்லி அனுப்பிய அனைத்து வானர கூட்டங்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். பல்வேறு நிறங்களும் வடிவங்களும் கொண்ட வானரங்கள் மொத்தமாக வந்ததில் எழுந்த தூசியானது வானத்தை மறைப்பது போல் இருந்தது.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 16

ராமர் தனது கோபத்தை வார்த்தைகளில் லட்சுமணனுக்கு புரிய வைத்தார். கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் அதன் காரணமாகவே விரைவில் அழிந்து போவான். எங்களுக்கு கொடுத்த வாக்கை மறந்து எங்களை ஏமாற்ற நீ விரும்பினால் உனக்கும் அதே கதி தான் உண்டாகும். வாலிக்காக காத்திருந்த மேலுலகம் உனக்காகவும் காத்திருக்கிறது தெரிந்துகொள். நீயும் மேலோகம் செல்ல விரும்புகிறாயா? ராமருடைய வில்லும் அம்பும் உனக்காக தயாராக இருக்கின்றது. நீயும் உன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக போகங்களை அனுபவித்து ராமருடைய கோபத்தை பெற்று விட்டீர்கள் என்ற செய்தியை கூறுவாய் என்று ராமர் லட்சுமணனை அனுப்பி வைத்தார். லட்சுமணன் தன் அண்ணனுடைய துயரத்தையும் கோபத்தையும் அப்படியே கேட்டுக்கொண்டு கிஷ்கிந்தைக்கு கிளம்ப முற்பட்டான். அப்போது ராமர் சில கணங்கள் லட்சுமணனின் பேசும் சுபாவத்தை யோசித்தார். லட்சுமணனை மீண்டும் அழைத்தார். சுக்ரீவனிடம் எனது கோபத்தை தெரியப்படுத்தும் போது கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டாம். நமது நண்பனாகி விட்டான். எனவே அவனது தவறை மட்டும் சுட்டிக்காட்டு என்று சொல்லி அனுப்பினார் ராமர். லட்சுமணனும் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி கோபத்துடன் கிளம்பினான்.

லட்சுமணனுடைய கோபத்தையும் அவனது தோற்றத்தையும் அவன் கையிலிருந்த ஆயுதங்களையும் பார்த்து வானர காவலாளிகள் பயந்து ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டார்கள். எனவே கோட்டையை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டுமென்று ஆயத்தமானார்கள். அவர்களுடைய இந்த நடவடிக்கையை பார்த்த லட்சுமணனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. சில வானரங்கள் ஓட்டமாக ஓடி அந்தப்புரத்தில் இருந்த சுக்ரீவனிடம் லஷ்மணன் கோபத்துடன் வில்லும் அம்புடன் வந்து கொண்டிருக்கிறான் யார் தடுத்தாலும் நிற்கவில்லை. யாராலும் அவனை தடுக்க இயலவில்லை என்றார்கள். சுக்ரீவன் அந்தப்புரத்தில் மயக்கத்தில் கிடந்ததால் வானரங்கள் சொன்னது அவன் காதில் விழவில்லை. ராஜ சேவகர்களுடைய உத்தரவின் பேரில் அரண்மனையை காவலாளிகள் பலமாக நின்று யாரும் உள்ளே நுழையாமல் காவல் காத்தார்கள். இக்காட்சியை கண்ட லட்சுமணனுக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது. தடையை மீறி லட்சுமணன் உள்ளே நுழைந்தான். லட்சுமணன் முதலில் அங்கதனை கண்டான். அவனை கண்டதும் லட்சுமணன் கோபம் ஓரளவு தணிந்தது. அங்கதனிடம் வானர ராஜவாகிய சுக்ரீவனிடம் நான் வந்திருக்கும் செய்தியை முதலில் சொல்வாய் என்று சொல்லி அனுப்பினார். அங்கதன் சுக்ரீவனிடம் விஷயத்தை தெளிவாக எடுத்து கூறினான். ஆனால் போக மயக்கத்தில் இருந்த சுக்ரீவனுக்கு எதுவும் புரியவில்லை. அங்கதன் மிகவும் வருத்தப்பட்டான். மந்திரிகளுடன் என்ன செய்வது என்று ஆலோசித்தான். அனுமன் உட்பட சில மந்திரிகள் உள்ளே சென்று சுக்ரீவனுக்கு விஷயங்களை நன்றாக எடுத்துக் காட்டி அவன் புத்தி தெளிவடையச் செய்தார்கள்

ராமனின் தம்பி லட்சுமணன் கோபத்துடன் வில் அம்புடன் வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டதும் சுக்ரீவன் நான் ஒரு தவறும் செய்யவில்லை. என் நண்பர்களாகிய ராம லட்சுமணர்களுக்கு என் மேல் ஏன் கோபம் வந்தது. யாரோ விரோதிகள் ஏதோ சொல்லி அவர்களுடைய மனதை கெடுத்திருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். அதற்கு அனுமன் அரசே ராமனுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தாமதம் செய்து விட்டோம். ராமருடைய துயரத்தை நாம் மறந்து விட்டோம். இது இப்போது சிறிது அபாயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. லட்சுமணனிடம் மன்னிப்பு கேட்டு இனி தாமதப்படுத்தாமல் ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றார் அனுமன்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 15

ராமரும் லட்சுமணனும் மழைக் காலத்தில் பாதுகாப்பாக குகைக்குள்ளே இருந்தார்கள். சீதையை தேடுவதற்கான காலம் விரைவில் வரும் என்று லட்சுமணன் வருத்தத்துடன் இருந்த ராமருக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான். நான்கு மாத மழைக்காலம் முடிவுக்கு வந்தது. பறவைகளும் மிருகங்களும் வெளியில் திரிந்து விளையாட ஆரம்பித்து விட்டன. கிஷ்கிந்தையில் வாலி இறந்த துக்கத்தை மறந்து சுக்ரீவன் தாரை உட்பட வானரங்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ராமருடைய காரியத்தை அனுமன் மட்டும் மறக்காமல் மிகவும் கவலைப்பட்டான். ராமருக்கு கொடுத்த வாக்கை பற்றி சுக்ரீவனிடம் மெதுவாக பேசுவதற்கு தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். ராஜ காரியங்கள் அனைத்தையும் மந்திரிகளுடன் ஒப்படைத்து விட்டு போகத்தில் மூழ்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று அனுமன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.

ராமர் உங்களுடைய எதிரியை அழித்ததை தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பெரிய அபாயத்தை கருதாமல் தங்களுக்கு வாக்களித்தபடி வாலியை உடனடியாக கொன்று விட்டார் ராமர். இதன் காரணமாக முன்னோர்கள் அனுபவித்த ராஜ்யத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள். பேரும் புகழும் பெற்று விட்டீர்கள். உங்களுடைய அதிகாரம் நிரந்தரமாகி விட்டது. இப்போது ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அவருடைய நட்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். இப்போது அதைச் செய்தால் உங்கள் புகழ் மேலும் பெருகும். ராஜ்யமும் பலப்படும். ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செய்து முடிப்பது சிறப்பானதாகும். கால தாமதம் செய்யாமலாவது செய்து முடிக்க வேண்டும். கால தாமதத்துடன் செய்யும் காரியமானது பயன் தராது. ராமர் நமக்கு செய்த உதவியை நாம் நினைத்து அவருக்கு செய்ய வேண்டியதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன். மழை காலம் முடிந்து விட்டது. இனி தாமதம் சொல்வதற்கு காரணமில்லை. சீதையை தேட வேண்டிய பெரும் காரியத்தை உடனே துவக்க வேண்டும். இவ்விசயத்தில் ராமர் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறார். அவருடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. அவரது கோபத்தை நம்மால் தாங்க இயலாது. இனி சிறிதும் கால தாமதம் வேண்டாம் என்று நீதி முறைகளை சுக்ரீவனுக்கு சொல்லி முடித்தார் அனுமன். அதற்கு சுக்ரீவன் பூமி முழுவதும் சுற்றி தேடிப் பார்த்து சீதையை கண்டுபிடிக்க வேண்டிய திறமை வாய்ந்த ஒற்றர் வானரங்களை உடனே இங்கு வந்து சேர வேண்டும் என்றும் வந்து சேராதவர்களுக்கு விசாரணை இன்றி தண்டனை வழங்கப்படும் இது அரசனுடைய உத்தரவு இவ்வாறு உத்தரவிடுவாய் என்று அனுமனிடம் சொல்லி விட்டு சுக்ரீவன் தன் அந்தப்புரத்திற்கு சென்று விட்டான்.

ராமரும் லட்சுமணனும் மழைக்காலம் முடிந்து விட்டது இனி சுக்ரீவன் விரைந்து வருவான் என்று காத்திருந்தார்கள். சுக்ரீவன் வரவில்லை. ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். இந்த மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் சென்று விட்டது. இந்த நான்கு மாதமும் எனக்கு நான்கு யுகம் போல் இருந்தது. இந்த உலகம் சௌந்தரியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீதை எங்கோ தவித்துக் கொண்டிருக்கிறாள் நான் இங்கே துக்கத்தில் வானர அரசனான சுக்ரீவன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றேன். கிஷ்கிந்தைக்கு அரசனானதும் சுக்ரீவன் கொடுத்த வாக்கை மறந்து அரச சுக போகங்களில் மூழ்கி கிடக்கின்றான். உடனடியாக கிஷ்கிந்தை சென்று சுக்கிரனை சந்தித்து நான் சொல்லும் செய்தியைச் சொல்லி விடு என்று சொல்ல ஆரம்பித்தார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 14

ராமர் தாரையிடம் பேச ஆரம்பித்தார். இறப்பு பற்றி இது போன்ற தவறான எண்ணத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். பிரம்மா தான் இவ்வுலகை படைத்து இங்குள்ள அனைத்து சுக துக்கங்களையும் கொடுக்கிறார். மூன்று உலகத்தில் உள்ளவர்களும் பிரம்மாவின் விதியை மீறிச் செயல்படுவதில்லை. ஏனென்றால் எல்லோரும் அவர் வசத்தில் உள்ளார்கள். இனி வரும் காலத்தில் உனது மகன் இளவரசனாக பட்டம் சூட்டப்படுவான். நீ முன்பு இருந்தது போல் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பாய். உனது விதி பிரம்மாவினால் இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்கிறது. மகாவீரனுடைய மனைவிகள் இவ்வாறு வேதனைப் படக்கூடாது வருந்தாதீர்கள் என்று தாரையிடம் ராமர் சொல்லி முடித்தார். நடப்பவற்றை முன்பே அறியும் திறன் கொண்ட தாரைக்கு வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை அறிந்து கொண்டு ராமரை வணங்கினாள். ராமரின் பேச்சு தாரைக்கு ஆறுதலை தந்தது. தனது அழுகையை விட்டு மௌனமானாள். வாலியின் மார்பில் இருந்த அம்பினை மந்திரி நீலன் பிடுங்கி எடுத்தான். அம்பு வெளியே வந்தவுடன் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அவன் உயிரும் அவனை விட்டு விடைபெற்றது. தாரை உயிரற்ற அவன் உடல் மீது விழுந்து புரண்டு அழுதாள். சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். நான் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் என்னைக் கொல்லாமல் ஓடிப்போ உயிர் பிழைத்துக்கொள் என்று என்னை என் அண்ணன் துரத்தினான். சாகும் தருவாயில் கூட ராஜ்யத்தை எடுத்துக்கொள் என்று எனக்கு தந்தானே. அவனை சதி செய்து கொன்று விட்டேன். என்னை போன்ற பாதகன் உலகத்தில் யாரும் இல்லை. நான் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லையே என்று தனது பெரும் குற்றத்தை எண்ணி அழுதான்.

ராமர் பேச ஆரம்பித்தார். சோகத்தில் அனைவரும் மூழ்கி இருப்பதால் இறந்தவருக்கு எந்த நன்மையும் ஏற்படாது. காலம் கடந்து செய்யும் எந்த செயல்களும் பயன் தராது. வாலிக்கு உடனடியாக செய்ய வேண்டிய கர்மங்களை செய்யுங்கள் என்றார். இதனைக் கேட்ட லட்சுமணன் சுக்ரீவனிடத்தில் அங்கதனுடன் கலந்தாலோசித்து விரைவில் வாலிக்கான ஈமச் சடங்குகளை செய்து முடியுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அனைவரும் தங்களுக்குள் உள்ள சோகத்தை தள்ளி வைத்தனர். அரசனுக்குரிய மரியாதையுடன் வாலியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராமர் இருக்குமிடம் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். அனுமன் ராமரிடன் பேச ஆரம்பித்தார். தங்கள் பேருதவியால் சுக்ரீவன் வானர பேரரசை பெற்றுள்ளார். இப்போது தாங்கள் கிஷ்கிந்தைக்கு வந்து சுக்ரீவன் அரசனாகவும் அங்கதன் இளவரசனாகவும் முடிசூட்ட வேண்டும். பின்பு எங்கள் அரசன் தங்களை கௌரவித்து தங்களுக்கு கொடுத்த வாக்குப்படி சீதையை தேடுவதற்கான உத்தரவை வானரங்களுக்கு பிறப்பிப்பார் என்று சொல்லி முடித்தார் அனுமன். ராமர் அனுமனை நோக்கி தந்தையின் சத்தியத்தை நான் காப்பாற்ற வேண்டும். அதனால் பதினான்கு ஆண்டு காலம் எந்த கிராமம் மற்றும் நகரத்திற்குள்ளும் வர மாட்டேன். நீங்கள் மட்டும் சென்று உங்கள் மரபுப்படி சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்யுங்கள் என்றார். சுரீவனுக்கும் அங்கதனுக்கும் வானரங்களின் மரபுப்படி பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. பட்டாபிஷேகம் முடிந்ததும் ராமரிடம் சென்ற சுக்ரீவன் தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். அப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. மழையால் வெள்ளம் காட்டிற்குள் பெருக்கெடுத்து ஓடியது. செல்லும் பாதைகள் எல்லாம் தடைபட்டுக் கிடந்தது. இதனால் சீதையே தேடும் பணி மேலும் சிறிது நாட்கள் தள்ளிச் சென்றது. ராமர் இதனால் சிறிது வருத்தப்பட்டார். மழைக் காலத்தில் இப்போது சீதையை தேட சென்றால் அனைவருக்கும் கடினமாக இருக்கும். எனவே மழைக்காலம் முடிந்ததும் தேட ஆரம்பிக்கலாம். அதுவரை நாங்கள் காட்டிலேயே இருக்கின்றோம் என்று சொல்லி சுக்ரீவனை ராமர் அனுப்பினார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 13

ராமரிடம் வாலி பேச ஆரம்பித்தான். தங்களிடம் 2 வரங்கள் கேட்கின்றேன் தாங்கள் கொடுக்க வேண்டும். முதலாவது என் தம்பி சுக்ரீவன் சில நேரங்களில் மதி மயக்கத்தில் மறந்து உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தவறக் கூடும். அதைப் பெரிதாகக் கொள்ளாமல் அவனை மன்னித்து விடுங்கள். கோபத்தில் என் மீது செலுத்திய அம்பை அவன் மீது செலுத்த வேண்டாம். அதைத் தாங்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை. சுக்கிரீவனை உங்கள் தம்பி லட்சுமணனைப் போல ஏற்றுக் கொண்டு பாசமும் பரிவும் காட்டுங்கள். இரண்டாவது என் மகன் அங்கதனை உங்களிடம் அடைக்கலம் வந்தவானாக ஏற்றுக்கொண்டு ஆதரவு அளியுங்கள். அனுமனை உங்கள் வில்லைப் போல வலிமையுள்ள துணைவனாய் ஏற்றுக்கொள்ளுங்கள். இவர்கள் துணையோடு சீதையைத் தேடி அடையுங்கள் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் வாலி. ராமனின் மதிப்பில் வாலி மிக உயர்ந்து நின்றான்.

ராமர் தனது உடைவாளை அங்கதனிடம் தந்து அவனை பெருமைப் படுத்தினார். வாலியிடம் நீ செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவித்து விட்டாய். தற்போது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விட்டாய் என்று ராமர் உறுதியளித்தார். அனுமன் அழுது கொண்டிருந்த தாரைக்கு அறுதல் சொன்னார். வாலி நிச்சயமாக நல்ல மேலுலகம் அடைவார். ஆகையால் வாலியைப்பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. வாலிக்கு சரியானபடி காரியங்களை செய்து விட்டு அங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்வோம். அதனை கண்டு மகிழ்வோம். அங்கதனுக்கு புத்திகூறி வளர்க்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. கவலையை விட்டு சிறிது சாந்தமாக இருங்கள் என்று கூறினார். அதற்கு தாரை இனி இவ்வுலகத்தில் எனக்கு வேண்டியது ஒன்றுமில்லை. சுக்ரீவன் தனது மகனைப் போலவே அங்கதனை பார்த்துக் கொள்வான். ஆயிரம் அங்கதன் வந்தாலும் அது வாலிக்கு சமமாக இருக்காது. நான் வாலியுடன் மேலுலகம் செல்கிறேன் என்றபடி அழுது கொண்டே இருந்தாள். வாலியைக் கொன்ற ராமரின் மேல் எந்த கோபத்திற்கான அறிகுறியும் தன் முகத்தில் இல்லாமல் ராமரை நோக்கி சென்றாள் தாரை.

ராமரிடம் தாரை பேச ஆரம்பித்தாள். தாங்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவர். முக்காலமும் அறிந்தவர். உயர்ந்த தர்மங்களை கடைபிடிப்பவர். பூமியை போல் பொறுமை மிக்கவர். மனித உடலுக்கான இயல்பான பண்புகளை ஒதிக்கி தள்ளி வைத்து விட்டு தெய்வீகமான பண்புகளுடன் இருக்கின்றீர்கள். மேலுலகம் சென்ற வாலி அங்கு என்னை தேடி அலைவார். நானில்லாமல் அவரால் இருக்க முடியாது. மனைவியை பிரிந்த ஒருவர் எவ்வளவு மன வேதனையுடன் இருப்பார் என்று தங்களுக்கு தெரியும். எந்த அம்பினால் வாலியை கொன்றீர்களோ அதை அம்பினால் என்னையும் கொன்று விடுங்கள். அவர் இருக்குமிடம் நானும் செல்கிறேன். நாங்கள் இருவரும் மேலுலகத்தில் மகிழ்ச்சியுடன் இருப்போம். உத்தமமான தாங்கள் எப்படி ஒரு பெண்ணை கொல்வது இது மாபெரும் பாவம் என்று எண்ணாதீர்கள். இங்கு பாவத்திற்கு இடமில்லை. என்னை கொன்றால் அதற்கான பாவம் தங்களை வந்து சேராது. உலகத்து ஞானிகளின் கருத்துப்படி கணவனிடம் மனைவியை கொடுக்கும் பெண் தானத்தை விட உயர்ந்த தானம் வேறு ஒன்றும் இல்லை. தாங்களும் அந்த அறநெறிப்படி மேலுலகம் செல்லும் என் கணவரிடம் என்னை கொடுத்து விடுங்கள். இப்படி தானம் செய்வதினால் தங்களுக்கு எந்த பாவமும் வராது. வாலி இல்லாமல் இந்த உலகத்தில் என்னால் உயிர் வாழ முடியாது. சில நாட்களில் நான் இறந்து விடுவேன். இப்போதே நீங்கள் என்னை கொன்று பெண் தானம் செய்த புண்ணியத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ராமரிடம் சொல்லி முடித்தாள் தாரை.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 12

ராமரால் வாலி கொல்லப்பட்டான் என்ற செய்தி கிஷ்கிந்தைக்கு தெரிந்தது. இச்செய்தியை கேட்டதும் தாரை நடுநடுங்கிப்போனாள். தன் மகன் அங்கதனுடன் தனது அறையிலிருந்து வெளியே வந்தாள். கிஷ்கிந்தையில் வானரங்கள் அங்குமிங்கும் பயந்து ஓடினார்கள். வானர சிங்கமான வாலி யுத்தத்திற்கு செல்லும் போது அவருக்கு முன்பாக செல்வீர்கள். இப்போது தனியாக இருக்கும் அவர் இருக்குமிடம் செல்லாமல் பயந்து ஓடுகின்றீர்கள். நில்லுங்கள் ஓடாதீர்கள் என்ற தாரை அவர்களிடம் பேச ஆரம்பித்தாள். சுக்ரீவனை அரசனாக்குவதற்காக வாலியைக் கொன்றான் ராமன். அவரால் உங்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. ராமரை கண்டு நீங்கள் அனாவசியமாக பயந்து ஓட வேண்டாம் என்று வானரங்களுக்கு தைரியம் கொடுத்த பிறகு அங்கிருந்து சண்டை நடந்த இடத்திற்கு செல்ல ஆயத்தமானாள். வானரங்கள் அவளை தடுத்தார்கள். வாலியின் மகன் அங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்து முதலில் அரசனாக்கி விட்டு கோட்டையை பத்திரப்படுத்துவோம். பிறகு சுக்ரீவனும் அவர்களுக்கு துணையாய் இருப்பவர்களும் நமது நாட்டை அவர்கள் கைப்பற்றாமல் காப்பாற்றுவோம் என்றார்கள். அதற்கு தாரை என் கணவர் வாலி இறந்த பிறகு அங்கதனால் எனக்கு ஒன்றும் ஆக வேண்டியதில்லை. அரசாட்சியால் என்ன பயன். நான் உயிரோடு இருந்து ஆகப்போவதென்ன? ராமனால் கொல்லப்பட்ட வாலியை காண்பதற்கான செல்கிறேன் என்று கதறி அழுதபடி நேராக சண்டை நடந்த இடத்திற்கு விரைந்து சென்றாள். தரையில் கிடந்த வாலியைப் பார்த்து துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதாள். வாலியின் குமாரன் அங்கதனும் தாரையுடன் கதறி அழுதான். இக்காட்சியைக் கண்ட சுக்ரீவனுடைய உள்ளத்தில் தவறு செய்து விட்டோமோ என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதற்குத் மரணத்தருவாயில் இருந்த வாலி கண்ணை திறந்து சுக்ரீவனைப் பார்த்து மெதுவாக பேச ஆரம்பித்தான்.

ராமருக்கு நீ வாக்களித்தபடி அவருக்கு தேவையானதை செய்து முடிக்க வேண்டும். அலட்சியமாக இருந்து விடாதே. நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனால் அதனால் உனக்கு பெரும் பாவம் வந்து சேரும் ராமரால் நீ கொல்லப்படுவாய் ஞாபகம் வைத்துக்கொள். சுக்ரீவா நாம் இருவரும் ஒன்றாக இருந்து சந்தோசமாக இந்த ராஜ்ஜியத்தை ஆண்டு அனுபவித்திருக்கலாம். ஒரே நேரத்தில் நாம் இருவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விதி நிர்ணயிக்கவில்லை என்று எண்ணுகிறேன். தீர விசாரிக்காமல் இருந்த என்னுடைய தவறை அதிகமாக இருக்கிறது. முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவாக இப்பிறவியில் பல செயல்களை செய்ய வைக்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்போது அதைப் பற்றி பேசிப்பயனில்லை. நான் மேலுலகம் செல்லப் போகிறேன். இந்த கிஷ்கிந்தைக்கு நீயே அரசனாகி இந்த ராஜ்யத்தை ஆழ்வாய். எனது உயிரை விட மேலான மகன் அங்கதனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அவன் உன்னை போன்ற வீரன். யுத்தம் என்று வந்தால் உனக்கு முன்பாக போர்க்களத்திற்கு வந்து நின்பான். எனக்கு பதிலாக நீ அவனுக்கு தந்தையாக இருந்து அவனை அன்புடன் பார்த்துக்கொள் என்று உன்னிடம் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து என் மனைவி தாரை மிகுந்த அறிவாளி சூட்சுமமான பல விஷயங்களை முன்பே அறியும் சக்தி பெற்றவள். அவள் இவ்விதம் நடக்கும் என்று ஒன்றைக் கூறினால் அது அப்படியே நடக்கும். இதில் சந்தேகம் இல்லை. எனவே அவளுடைய யோசனையே எந்த விஷயத்திலும் தட்டாதே என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தான். அங்கதனிடம் வாலி பேச ஆரம்பித்தான். இந்த நாட்டின் அரசனாகிய சுக்ரீவனிடத்தில் நீ மரியாதையாகவும் பணிவுடனும் உள்ளன்புடனும் நடந்து கொள் என்று அங்கதனிடம் மேலும் பல புத்திமதிகளை சொல்லி முடித்தான் வாலி.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 11

ராமர் வாலியின் கேள்விக்கு மேலும் பதில் கூறினார். இந்திரன் உனக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் இந்திரனின் வரத்தின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும் உன் மீது மறைந்திருந்து அம்பு எய்தேன். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் சத்திரியர்கள் வேட்டையாடும் போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால் மறைந்திருந்து முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்த தவறும் இல்லை. எனது மனைவியை தேடுவதற்கு ஒரு மன்னனின் உதவி தேவைப்பட்டது. தர்ம சாஸ்திரங்களின்படி ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றி கொள்வதற்கு மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி சுக்ரீவனை சந்தித்து நட்பு கொண்டேன். சுக்கிரீவன் முதலில் என்னைச் சரணடைந்து தனக்கு உதவுமாறு வேண்டினான். உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால் அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். உன்னை அழிக்க உனது முன்னால் வரும் போது நீயும் என்னை சரணடைந்து அடைக்கலம் கொடு என்று கேட்டால் அப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை மீறியவனாவேன். அதைத் தவிர்ப்பதற்காகவும் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காவும் மறைந்திருந்து அம்பு செலுத்த வேண்டி இருந்தது என்று சொல்லி முடித்தார் ராமர்.

ராமரிடம் மேலும் பேசினான் வாலி. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட வரைமுறைகள். நாங்கள் விலங்குகள் விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்று உரிமை கொண்டாட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுக்கு இங்கே இடம் இல்லை. நாங்கள் விரும்பியவாறு வாழலாம் என்பது எங்களுக்கு உள்ள உரிமை. வல்லவன் எதையும் செய்யலாம். நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்பவர்கள். மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவு கோல்களை வைத்து எங்களை அளப்பதில் நியாயம் இல்லை என்று வாலி கூறினான். அதற்கு ராமர் மிருகம் மனிதன் என்பது உடலைப் பற்றியது. ஆனால் சத்தியம் அனைவருக்கும் ஒன்றே. தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய். பிறர் மனைவியை விரும்பும் அற்பத்தனம் உன்னிடம் அமைந்துள்ளது நீ உயிர் வாழத்தகுதியானவன் அல்ல. விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது என்றார் ராமர்.

ராமரின் பதிலில் திருப்தி அடைந்த வாலி அடுத்த கேள்வியை கேட்டான். உனது மனைவியை தூக்கிச் சென்ற ராவணனைக் கொல்வதற்கு என் நட்பை நீ தேடி இருக்கலாம். ஒரு கனத்தில் ராவணனை கயிற்றால் கட்டி தூக்கி வந்திருப்பேன். சிங்கத்தைத் துணையாக வைத்துக் கொள்வதை விட்டு சிறுமுயலை நம்பி விட்டாய். உன்னிடம் முன் யோசனை இல்லை என்றான் வாலி. அதற்கு ராமர் பற்களைக் குத்தித் துய்மைப்படுத்த சிறு துரும்பு போதும் எனக்கு உலக்கை தேவை இல்லை. அதுபோல் ராவணனை அழிக்க எனக்கு நீ தேவை இல்லை உன் தம்பியே போதும் என்று கூறினார். அதற்குப் பின் ராமர் தவறு செய்திருக்க மாட்டார். தவறு தன்னுடையது தான் என்று உணர்ந்த வாலி மனம் மாறி ராமரிடம் நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

தொடரும்….

குறிப்பு: ராமர் வாலியை தாக்கியதற்கு வேறு சில பின்னணிக் காரணங்களும் உள்ளது. முதலில் வாலி யாராலும் எதிர்த்து வெற்றி கொள்ள முடியாத தன்னை விஷ்ணு அவதாரமெடுத்து அழிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தான். இரண்டாவதாக ராவணால் வாலியை எதிர்க்க முடியாமல் அவனை அழிக்க சில அரக்கர்களை அனுப்பி பல தந்திரங்களையும் செய்திருந்தான் ராவணன். அதன் காரணமாகவே வாலியும் சுக்ரீவனும் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரனிடம் வாலி வரம் பெற்றதும் ராகுவிற்கும் வாலிக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் தோற்ற ராகு வாலியிடம் உனது மரணத்திற்கு நானே காரணாமாக இருப்பேன் என்று சாபமிட்டிருந்தான். வாலியும் சுக்ரீவனும் சண்டையிட்டு பிரிந்த நேரத்தில் ராகு தான் விட்ட சாபத்தின்படி வாலியின் மனதில் சுக்ரீவனின் மனைவி மீது ஆசை ஏற்படும்படி தூண்டி விட்டான் அதன்படியே சுக்ரீவனின் மனைவி மீது ஆசை கொண்டு அறநெறி தவறி வாழத்தொடங்கினான். இந்த நிகழ்வினால் ராகுவின் சாபம் நிறைவேறியது. ராவணனின் தந்திரம் நிறைவேறியது. வாலியின் ஆசைப்படி விஷ்ணுவின் கையாலேயே மரணமடைந்தான்.