மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -7

அர்ஜூனன் கிருஷ்ணரின் செயலை கண்டு மனம் பதறினான். ஓடோடி கிருஷ்ணரின் காலைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும். நீங்கள் ஆயுதம் ஏந்தி போரிட மாட்டேன் என்று சொல்லியிருக்கின்றீர்கள். என்னை உற்சாகப்படுத்த இச்செயலை செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். என்னுடைய வல்லமை முழுவதையும் இப்போதே யுத்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று உறுதி கூறுகிறேன். சினம் வேண்டாம் என வேண்டினான். கிருஷ்ணரின் ஆவேசம் தணிந்தது. அர்ஜூனன் கிருஷ்ணரிடம் நீங்கள் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். என் கடமையை நான் செய்கிறேன் என்னை எதிர்ப்பவர்கள் இன்று மடிந்தார்கள் என்று கூறினான். கிருஷ்ணரும் தேரில் ஏறி மீண்டும் சாரதி உத்தியோகத்தை கையில் எடுத்துக்கொண்டார்.

அர்ஜூனன் கடுமையான போரை மேற்கொண்டான். அவனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. காலாட் படையினர் சரிந்தனர். ஆவேசத்தோடு அர்ஜூனன் போர் புரிந்தான். அவனை எதிர்த்து நின்ற பாட்டனாருக்கு அவன் செயல் பரம திருப்தியை உண்டு பண்ணியது. போர் வீரர்கள் அர்ஜுனனுடைய வீரத்தை பார்த்து திகைத்து நின்றனர். அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 16,000 தேர்ப் படை வீரர்கள் அர்ஜூனனால் துடைத்து தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு யானைகளும் குதிரைகளும் காலாட்படை களைந்து ஒழிக்கப்பட்டன. சூரிய அஸ்தமனமாயிற்று. மூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. அன்று இரவெல்லாம் இருகட்சிகாரர்களும் அர்ஜுனனுடைய வீரத்தை பற்றிய பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான்காவது நாள் பீஷ்மர் தம்முடைய சேனைகளை வியாளம் என்ற வியூகத்தில் அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் பீஷ்மர் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் அவ்வனுமானின் பேராற்றலுடன் அர்ஜுனன் போரிட்டான். பாண்டவர்கள் பக்கத்தில் அர்ஜுனனுடைய செல்வன் அபிமன்யுவுடன் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ஜூனனுக்கு ஏற்ற மகனாக அவன் போர் புரிந்ததை பார்த்த போர் வீரர்கள் பெரு வியப்படைந்தனர். பாண்டவர்களுக்கு சேனாதிபதியாக இருந்த திருஷ்டத்யும்னன் சால்வனுடைய மகனின் தலையை இரண்டாகப் பிளந்தான். அதை முன்னிட்டு எதிரியின் படைகளில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. பீஷ்மரும் அர்ஜுனனும் பராக்கிரத்துடன் போர் புரிந்தார்கள். மற்றோரிடத்தில் பீமனிடம் துரியோதனனும் அவனது தம்பிகளும் வீராவேசத்துடன் சண்டையிட்டனர். துரியோதனனுடைய தம்பிகள் 8 பேரை பீமன் கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனுடைய மைந்தனாகிய கடோத்கஜன் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகளின் படைகளை துடைந்நு தள்ளினான். அவன் புரிந்த பயங்கர போர் எதிரிகளை நடுங்கச் செய்தது. துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர். பலர் மாண்டனர். சூரிய அஸ்தமனமாயிற்று. நான்காம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.