
சிவனின் பாதுகை

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.
இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம். ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை அல்லது தனியுரிமை யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோவிலே. இதனை உணர்ந்து நம்முள் இருக்கும் சுயநலப்போக்கை தூக்கியெறிந்துவிட்டு எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
அர்ஜுனனும் கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். அர்ஜுனா அது புறா தானே என்று கேட்டார் கிருஷ்ணர். ஆமாம் கிருஷ்ணா அது புறா தான் என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு அர்ஜுனா எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே ஆமாம் ஆமாம் அது பருந்து தான் என்று சொன்னான் அர்ஜுனன். மேலும் சில விநாடிகள் கழித்து அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால் அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது என்று கிருஷ்ணர் சொல்ல கொஞ்சமும் தாமதிக்காமல் தாங்கள் சொல்வது சரிதான் அது கிளி தான் என பதிலளித்தான் அர்ஜுனன். இன்னும் கொஞ்சம் நேரமானதும் அர்ஜுனா முதலில் சொன்னது எல்லாம் தவறு. இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு காகம் என்று சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர். நிஜம் தான் கிருஷ்ணா அது காகமே தான் சந்தேகமே இல்லை பதிலளித்தான் அர்ஜுனன்.
அர்ஜுனா நான் சொல்வதை எல்லாம் நீயும் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே உனக்கென்று எதுவும் யோசிக்கத் தெரியாதா என்று கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார். கிருஷ்ணா என் கண்ணை விடவும் அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீ ஒன்றைச் சொன்னால் அது பருந்தோ காகமோ புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது. அதனால் நீ என்ன சொல்கிறாயோ அப்படித் தானே அது இருக்க முடியும். தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும் என்று அமைதியாகச் சொன்னான் அர்ஜுனன். இந்த நம்பிக்கை தான் கிருஷ்ணரை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.
ஒரு அரசன் ஞானியிடம் சென்று என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறேன் என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்து சிம்மாசனத்தில் அமர வைத்து நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும் இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்? விழித்தான் அரசன். ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. இந்த உயிர் எனதல்ல. வேலை செய்வதற்காக இந்த உடல் எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய் என்று கூறி விடைபெற்றார் ஞானி.
பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மகன்களான உப-பாண்டவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர். பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜூனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இந்த இருவர்களின் அஸ்திரப் பிரயோகத்தால் ஏற்படும் அழிவை வியாசமுனி தடுத்து ஏவிய அஸ்திரங்களைத் திரும்பப் பெறக் கோருகிறார். திரும்பப் பெறும் வித்தை அறிந்த அர்ஜூனன் தன் அஸ்திரத்தை திரும்பப் பெறுகிறான். அதனைத் திரும்பப்பெறத் தெரியாத அசுவத்தாமனிடம் இலக்கை மாற்றச்சொல்ல அவன் அதை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவின் மேல் ஏவுகிறான். உத்தரை கருவில் இறந்த குழந்தையைக் கரிக்கட்டை சாம்பலாக பிரசவித்தது கிருஷ்ணர் நீர் தெளித்து அந்த சாம்பலை உயிர்ப்பித்தார். அக்குழந்தைதான் பரீட்சித். கருவிலேயே பரீட்சிக்கப் பட்டதால் பரீட்சித் எனும் பெயர் வந்தது.
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான் கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற அழியாத பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள். நீயும் கடவுள் தான் என்றார். அதற்கு பக்தர் அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை என்று கேட்டான். அதற்கு அந்த மகான் உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார். ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை என்று பதிலளித்தார். இப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை புரிய வைக்க முயன்றார். அனால் அந்த பக்தரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். இறுதியாத அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது மனிதர்கள் போலவே பேசும் குரல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்றும் சொன்னார். உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார்.
அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த மீன் அங்கு வந்து எங்கிருந்து வந்திருக்காய் என்று கேட்டது. அதற்கு அந்த பக்தர் மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார் என்று கூறினார். அதற்கு அந்த மீன் எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று கேட்டது. அதற்கு பக்தர் பைத்தியக்கார மீனே உன்னுடைய வலது இடது மேலே கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே இருக்கிறது என்று பதிலளித்தார். உடனே மீன் கொஞ்சம் கடுமையாக நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார் என்று மிக அழகாகக கூறியது. அந்த பதிலைக் கேட்டுத் திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தான். அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன் என்று கேட்டான். அதற்கு அந்த மீன் இதே கேள்வி தான் எனக்கும் தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான். மீனின் வடிவமைப்பு குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்திதால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான். உடனே மீன் எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல கடவுளை உணர அதற்கு உண்டான வழியில் நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.
கடவுளை அடைய வேண்டும் என்றால் எண்ணங்களை அவர் மீது வைக்க வேண்டும். பார்க்கும் எல்லாப் படைப்புகளிலும் அவரை உணர வேண்டும்.
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர் ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது அவனது மனைவி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில் அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்தார்.
கண்ணாடியைப் பார்த்து கணவனும் மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று கேட்டார் கிருஷ்ணர். மாமா இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா பாமாவா மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன் என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன் கிருஷ்ணர் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான். இதென்ன விந்தை என அபிமன்யு கேட்டான். அபிமன்யு என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு என்றார். நோக்கம் எதுவானாலும் பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
வைணவ ஆலயங்களில் மகாவிஷ்ணுவை நின்ற இருந்த கிடந்த கோலங்களில் நாம் தரிசிக்கலாம். திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களில் 24 தலங்களில் 10 வகையான சயனக் கோலத்திலேயே மகாவிஷ்ணு சேவை சாதிக்கிறார். இத்தகைய சயனங்களில்
ஒடிஷா மாநிலத்தில் தென்கானல் மாவட்டத்தில் பிராமணி ஆற்றங்கரையில் சாரங்கா என்ற இடத்தில் 51 அடி நீளம், 23 அடி அகலம், இரண்டரை அடி கனமும் கொண்ட மிகப்பெரிய வடிவில் அனந்தசயனக் கோலத்தில் பெருமாள் ஆற்றைத் தொட்டவாறு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வகையில் அருள்பாலிக்கிறார். வெட்ட வெளியில் பாறையில் பிரமாண்டமாக அந்த மூர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளார். கோயில் அமைப்பு ஏதும் இன்றி வெட்ட வெளியில் சயனித்திருக்கும் இந்த மூர்த்தியின் பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் முன் இருகரங்களில் கதையும் தாமரை மலரும் காணப்படுகின்றன. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க அனந்தசயன மூர்த்தி சயனித்த நிலையில் முன் இடக்கையை இடது தொடை மீது வைத்து பின் இடக்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். வலக்கரங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. வலக்காலை இடக்காலின் மீது மடித்து வைத்திருக்கிறார். அனந்த சயனம் என்பது மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பாற்கடலில் பள்ளி கொண்ட காட்சியைக் காட்டுவதாகும். இவர் 8 முதல் 9 ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவராக இருக்கலாம் என்று ஆய்வலர்கள் கருதுகிறார்கள்.