உயர்ந்த எண்ணம்

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம். திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான். எல்லா வீட்டிலும் திருடியவன் அரண்மனையில் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரசனுடைய பொருளைத் திருடிக்கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான். திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை அருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக்கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.

அந்த அரசன் தெய்வபக்தியுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு சிவனடியார் பக்தி அதிகம். தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை அடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். அன்று இரவு தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள். அரசே நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டும் என்றாள் அரசி. நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும். நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வபக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன் என்றான் அரசன். தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள் அரசி. நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான் அரசன்.

அதற்குப் பிறகு அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு உறங்கி விட்டார்கள். வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டு ஒரு திட்டம் போட்டான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்துவிடலாம். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடலாம். அதனால் அரசருக்கு வாரிசும் ஆகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பிதந்திரமாய் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான்.

மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில் மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனை நோக்கித் தொழுதுகொண்டிருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். ஐயா தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்துவிட்டதைக் கவனித்த திருடன் தான் உடனே ஒப்புக்கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்து விட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுது ஒப்புக் கொள்ளலாமா இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.

அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். மன்னவா எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளக் கூடும் என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான். திருடன் அப்பொழுது சிந்தித்தான். சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால் உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்கு எல்லாம் கடவுளே என்று மனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகான் ஆகிவிட்டான்.

நீதி: உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும். உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்.

மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -1

வியாசர் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள் ஐவரும் உலகை விட்டு செல்லும் மனப்பான்மையில் ஒன்றுபட்டனர். தங்களுடைய வையக வாழ்வு பூர்த்தி ஆகி விட்டது எனவே இவ்வுலக வாழ்வில் இருந்து விலகிக் கொள்ளும் காலம் தங்களுக்கு வந்துவிட்டது என முடிவு செய்தனர். அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தின் மீது அபிமன்யுவின் மகன் பரீட்சித்துவை அரசனாக முடி சூட்டினர். அதே விதத்தில் துவாரகையின் அழிவிலிருந்து தப்பித்து கொண்ட வஜ்ரன் என்னும் ராஜகுமாரனை இந்திரப்பிரஸ்தத்துக்கு அரசனாக்கினார். இந்த இரண்டு இளம் ராஜகுமாரர்களை பாதுகாக்கும் பொறுப்பு உத்திரைக்கு வந்து அமைந்தது. குரு வம்சத்திலே எஞ்சியிருந்த யுயுத்ஸீ என்னும் ஒரு போர் வீரனை ராஜகுமாரர்கள் இவருக்கும் காப்பாளனாக நியமித்தனர். கிருபாச்சாரியார் இந்த இரண்டு ராஜா குமாரர்களுக்கும் ஆச்சாரியராக பொறுப்பேற்றார்.

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் தலைமை பட்டணத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கத்திற்குப் போக தீர்மானித்தார்கள். தபஸ்விகளுக்கு உண்டான ஆடைகளை அணிந்து கொண்டு வயதுக்கு ஏற்றவாறு யுதிஸ்திரன் முதலிலும் மற்றவர்கள் முறைப்படி பின் தொடர்ந்து சென்றார்கள். இறுதியாக துரோபதி அவர்களுக்கு பின்னால் சென்றாள். அவளின் பின் ஒரு நாய் பின் தொடர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு பகடை விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டு சென்றார்களோ அதே பாங்கில் அவர்கள் இப்போது புறப்பட்டுப் போனார்கள். இந்த இரண்டு தடவைகளிலும் நாட்டு மக்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள். பாண்டவர்களோ முன்பு துயரத்திலும் தற்போது பேரின்பத்திலும் சென்றர்கள். அர்ஜூனன் தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லையும் அம்பு இருக்கும் அம்பாரத்தூணிகளையும் தன்னுடனே கொண்டு சென்றான். அர்ஜுனன் அதன் மீது வைத்திருந்த பற்றே அதற்கு காரணமாக இருந்தது

பாண்டவர்கள் முதலில் கிழக்கு திசை நோக்கி சென்றார்கள். கிழக்கே கடற்கரையை காணும் வரை அவர்களின் பயணம் இருந்தது. கடற்கரையை எட்டிய பிறகு அவர்கள் முன்னிலையில் அக்னிதேவன் தோன்றினான். பல வருடங்களுக்கு முன்பு காண்டவ வனத்தை அழிப்பதற்கு அர்ஜூனனுக்கு தேவையான காண்டீப வில்லையும் அம்பு வைக்கும் அம்பாரத் தூணிகளையும் சமுத்திர தேவனிடம் பெற்று அர்ஜூனனுக்கு அளித்தேன். இந்த ஆயுதங்களை வைத்து அர்ஜூனன் பல அரிய சாதனைகளை செய்திருக்கின்றான். இனி இந்த ஆயுதங்கள் அருஜூனனுக்கு தேவையில்லை. ஆகவே அவற்றை திருப்பி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அக்னி தேவன் கூறியதை சகோதரர்கள் அனைவரும் ஆமோதித்தார்கள். உடனே அர்ஜூனன் அம்பையும் அம்பாரத்தூணிகளையும் கடலுக்குள் போட்டான். இச்செயலின் விளைவாக உலக பந்தபாசங்கள் அனைத்தும் அவனை விட்டு அகன்று போயிற்று.

பின்பு தென் திசையை நோக்கி சென்று பின் தென் மேற்கு திசையில் சென்று வடதிசையில் பயணிக்க ஆரம்பித்தார்கள். இதன் வாயிலாக இந்த புண்ணிய பூமியை அவர்கள் முறையாக வலம் வந்து இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இமயமலையின் சிகரங்கள் வானளாவி இருந்தது. அந்த பள்ளத்தாக்குகள் வழியாக நடந்து சென்று மலைத்தொடரின் வடக்கே இருந்த மணல்திட்டை அடைந்தார்கள்.

ஓதிமலைமுருகன்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. ஒதிமலையில் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த அமைப்புக்கு கவுஞ்சவேதமூர்த்தி என்று பெயர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. புராணபெயர் ஞானமலை. தீர்த்தம் சுனைதீர்த்தம். சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன் இந்த ஓதிமலை தலத்தில் வேதம் ஆகமங்களை உபதேசித்தார். சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை என்றும் சுவாமிக்கு ஓதிமலை முருகன் என்ற பெயரும் ஏற்பட்டது. முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இந்த மலைதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது. கைப்பிடி இல்லை. கோயம்புத்தூர் அருகே புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது.

சித்தர்களில் ஒருவரான போகர் முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன் போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால் ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும் இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருக்கின்றார். இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் போகர் பழனி முருகனை காணவேண்டி யாகம் நடத்தியிருக்கின்றார். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும். விபூதிக்காடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது.

படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன் பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கினார். படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன் முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி பிரம்மாவையும் விடுவித்தார்.

மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான் கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது.