மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -1

வியாசர் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள் ஐவரும் உலகை விட்டு செல்லும் மனப்பான்மையில் ஒன்றுபட்டனர். தங்களுடைய வையக வாழ்வு பூர்த்தி ஆகி விட்டது எனவே இவ்வுலக வாழ்வில் இருந்து விலகிக் கொள்ளும் காலம் தங்களுக்கு வந்துவிட்டது என முடிவு செய்தனர். அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தின் மீது அபிமன்யுவின் மகன் பரீட்சித்துவை அரசனாக முடி சூட்டினர். அதே விதத்தில் துவாரகையின் அழிவிலிருந்து தப்பித்து கொண்ட வஜ்ரன் என்னும் ராஜகுமாரனை இந்திரப்பிரஸ்தத்துக்கு அரசனாக்கினார். இந்த இரண்டு இளம் ராஜகுமாரர்களை பாதுகாக்கும் பொறுப்பு உத்திரைக்கு வந்து அமைந்தது. குரு வம்சத்திலே எஞ்சியிருந்த யுயுத்ஸீ என்னும் ஒரு போர் வீரனை ராஜகுமாரர்கள் இவருக்கும் காப்பாளனாக நியமித்தனர். கிருபாச்சாரியார் இந்த இரண்டு ராஜா குமாரர்களுக்கும் ஆச்சாரியராக பொறுப்பேற்றார்.

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் தலைமை பட்டணத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கத்திற்குப் போக தீர்மானித்தார்கள். தபஸ்விகளுக்கு உண்டான ஆடைகளை அணிந்து கொண்டு வயதுக்கு ஏற்றவாறு யுதிஸ்திரன் முதலிலும் மற்றவர்கள் முறைப்படி பின் தொடர்ந்து சென்றார்கள். இறுதியாக துரோபதி அவர்களுக்கு பின்னால் சென்றாள். அவளின் பின் ஒரு நாய் பின் தொடர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு பகடை விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டு சென்றார்களோ அதே பாங்கில் அவர்கள் இப்போது புறப்பட்டுப் போனார்கள். இந்த இரண்டு தடவைகளிலும் நாட்டு மக்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள். பாண்டவர்களோ முன்பு துயரத்திலும் தற்போது பேரின்பத்திலும் சென்றர்கள். அர்ஜூனன் தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லையும் அம்பு இருக்கும் அம்பாரத்தூணிகளையும் தன்னுடனே கொண்டு சென்றான். அர்ஜுனன் அதன் மீது வைத்திருந்த பற்றே அதற்கு காரணமாக இருந்தது

பாண்டவர்கள் முதலில் கிழக்கு திசை நோக்கி சென்றார்கள். கிழக்கே கடற்கரையை காணும் வரை அவர்களின் பயணம் இருந்தது. கடற்கரையை எட்டிய பிறகு அவர்கள் முன்னிலையில் அக்னிதேவன் தோன்றினான். பல வருடங்களுக்கு முன்பு காண்டவ வனத்தை அழிப்பதற்கு அர்ஜூனனுக்கு தேவையான காண்டீப வில்லையும் அம்பு வைக்கும் அம்பாரத் தூணிகளையும் சமுத்திர தேவனிடம் பெற்று அர்ஜூனனுக்கு அளித்தேன். இந்த ஆயுதங்களை வைத்து அர்ஜூனன் பல அரிய சாதனைகளை செய்திருக்கின்றான். இனி இந்த ஆயுதங்கள் அருஜூனனுக்கு தேவையில்லை. ஆகவே அவற்றை திருப்பி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அக்னி தேவன் கூறியதை சகோதரர்கள் அனைவரும் ஆமோதித்தார்கள். உடனே அர்ஜூனன் அம்பையும் அம்பாரத்தூணிகளையும் கடலுக்குள் போட்டான். இச்செயலின் விளைவாக உலக பந்தபாசங்கள் அனைத்தும் அவனை விட்டு அகன்று போயிற்று.

பின்பு தென் திசையை நோக்கி சென்று பின் தென் மேற்கு திசையில் சென்று வடதிசையில் பயணிக்க ஆரம்பித்தார்கள். இதன் வாயிலாக இந்த புண்ணிய பூமியை அவர்கள் முறையாக வலம் வந்து இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இமயமலையின் சிகரங்கள் வானளாவி இருந்தது. அந்த பள்ளத்தாக்குகள் வழியாக நடந்து சென்று மலைத்தொடரின் வடக்கே இருந்த மணல்திட்டை அடைந்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.