மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -2

பாண்டவர்கள் இருந்த மணல் திட்டு எல்லா பக்கங்களிலும் விரிவடைந்திருந்தது. அதற்கு வடக்கே பர்வதராஜன் என்று அழைக்கப்பட்ட மேருமலை இருந்தது. அந்த மேரு மலையிலிருந்து சொர்க்கத்திற்கு மேல் நோக்கிப் போவது அவர்கள் போட்டிருந்த திட்டம். அந்த மணல் திட்டை தாண்டியதும் துரௌபதி தரையில் வீழ்ந்து மடிந்து போனாள். இதனை கண்ட பீமன் யுதிஷ்டிரனிடம் துரோபதி வீழ்ந்து விட்டாள் அதற்கு காரணம் என்ன என்று கேட்டான். திரௌபதி அனைவரிடத்திலும் அன்பு வைத்திருந்தாள். எனினும் அவளுடைய ஆழ்ந்த அன்பு அலாதியாக அர்ஜுனன் மேல் வைத்திருந்தாள். இந்த பாரபட்சத்தை முன்னிட்டே அவள் வீழ்ந்து மடிந்தாள் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு சகாதேவன் வீழ்ந்து மடிந்து போனான். சகாதேவனின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். சாஸ்திர ஞானத்தில் தனக்கு நிகரானவர் யாருமில்லை என்ற கல்விச் செருக்கு சகாதேவனிடத்தில் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு நகுலன் வீழ்ந்து மடிந்து போனான். நகுலன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். தன் மேனி அழகை பற்றிய செருக்கு அவனிடத்தில் அதிகம் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு அர்ஜுனன் வீழ்ந்து மடிந்து போனான். அர்ஜுனன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். நிகழ்ந்த குருஷேத்திர போரில் போர் வீரர்கள் அனைவருக்கும் கடமைகள் இருந்தன. ஆனால் அர்ஜுனன் தன்னுடைய காண்டிபத்தின் மேல் இருந்த பற்றினாலும் நம்பிக்கையினாலும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு எதிரிகள் அனைவரையும் தானே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்திருந்தான். அந்த எண்ணத்தினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு பீமன் விழுந்தான். எனக்கு அழிவு காலம் வந்து விட்டது நான் என்ன குற்றம் செய்தேன் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். உன்னுடைய உடல் பலத்தை குறித்து நீ படைத்திருந்த செருக்கே உன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்று திரும்பி பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான். பீமனும் உயிர் நீத்தான். இப்பொழுது யுதிஷ்டிரன் மட்டும் தனியாக மேல் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இத்தனை நேரம் இவர்கள் பின்னே வந்து கொண்டிருந்த நாயும் யுதிஷ்டிரனை பின்தொடர்ந்து சென்றது

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.