பட்டினத்தார் வரலாறு

பட்டினத்தார் வரலாற்றை பார்ப்பதற்கு முன்னர் இவரது முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராவணனின் தம்பி முறை கொண்டவன் குபேரன். ராவணன் தன் தம்பிகளோடு சிவனை நோக்கி தவம்புரிய சிவபெருமானும் ராவணனின் கடும் தவத்தை மெச்சி வேண்டும் வரம் தருவதாக கூறினார். அதன்படி சிவனின் பக்தனான ராவணன் ஈஸ்வரர் பட்டம் பெற்று ராவணேஸ்வரன் என அழைக்கப்பட்டதோடு எப்படிபட்டவரையும் கொல்லும் இரண்டு நாகாஸ்திரத்தையும் சிவதனுசு என்ற வில்லையும் பெற்றான். கும்பகர்ணன் பிரம்மதேவன் சூழ்ச்சியால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வரம் பெற்றான். விபூஷ்ணனும் வரம் பெற்றான். கடைசியாக குபேரனுக்கு என்ன வரம் வேண்டுமென சிவன் கேட்டார். அதற்கு சிவனோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும் என குபேரன் கூறினான். சிவனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உன்னிடத்தில் என் சிவலோகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் காக்கும் பொருப்பில் அமர்த்துகிறேன் என கூறி செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.

குபேரன் ஒரு முறை பூமியை காண வலம் வந்தான். காவிரி வளம் கொழிக்கும் ஊரினை கண்டதும் குபேரனுக்கு நம் தேவலோகத்தில் இதுபோன்ற எழிலை காண முடியவில்லையே. குயில்களின் இசையும் மயில்களின் நடனமும் நதியின் இசையும் அழகிய மலர்களின் நறுமணமும் அழகிய வயலும் பொய்கையும் வாழை மா பலா என பழுத்த முக்கனிகள் அன்பான மக்கள் சிவனின் ஆலயம் இத்தனையும் அனுபவிக்க அப்பப்பா ஒரு பிறவி போதாதே என ஒருகணம் நினைத்தான் குபேரன். இதனை கண்ட சிவன் குபேரா நினைத்தது போலவே ஒரு பிறவி இப்பூமியில் பிறந்து உனது ஆசையை தீர்த்துகொண்டு வா என கூறிவிட்டார் சிவன். குபேரனும் பட்டினத்தாராக இப்பூமியில் அவதரித்தார். இதுவே பட்டினத்தாரின் முற்பிறப்பு வரலாறு.

காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். பிறந்த குழந்தைக்கு திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிட்டார்கள். பெரும் செல்வந்தர்களான வணிகக் குடும்பம் என்பதால் கடல் கடந்து வியாபாரம் செய்து பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க செல்வந்தராக இருந்தார் சுவேதாரண்யன். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் பட்டினத்தார் என்று அழைத்தார்கள். பட்டினத்தார் தனது 16 வது வயதில் சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார் பட்டினத்தார். அந்த ஊரில் இருந்த சிவசருமர் என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் குளக்கரையில் கண்டெடுத்த குழந்தை என்று கூறி பட்டினத்தாருக்கு குழந்தையை தத்து கொடுக்கும்படி கூறி மறைந்தார். சிவன் கூறியபடியே சிவசருமர் திருவெண்காடரிடம் குழந்தையை கொடுத்து விட்டார். மகிழ்ந்த பட்டினத்தார் இறைவன் அளித்த குழந்தையாக எண்ணி குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பட்டினத்தார் கடல் கடந்து நவரத்தினங்களை வாணிபம் செய்து வந்தார். மருதவாணருக்கு வாலிப வயது வந்ததும் தானும் வாணிபம் செய்ய கடல் கடந்து செல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்ய சென்றார்.

பட்டிணத்தார் குபேரன் அவதாரம் என்பதால் அவர் பிறக்கும் போதே மிகுந்த செல்வந்தர். அவரது வீட்டின் கதவும் வாயிற்காலும் வெள்ளியில் செய்யப்பட்டு இருக்கும். வாசலில் முத்துக்களால் ஆன பந்தல் அமைத்திருப்பார். அந்நாட்டு அரசர் நகர்வலம் வந்தபோது இதனை கண்டு திகைத்துபோய் பட்டினத்தாரை அழைத்து நாளை முதல் நீங்கள் வெள்ளிகதவை உபயோகிக்ககூடாது கழற்றிவிடவும் என கூறினார். மறுநாள் பட்டினத்தார் வெள்ளிகதவை கழற்றி தங்கத்தால் ஆன கதவை பொருத்தினார். மன்னர் நகர்வலம் வந்தபோது தங்ககதவை பார்த்து மேலும் அதிர்ந்துபோய் பட்டினத்தாரிடம் உங்களை வெள்ளிகதவை கழற்ற சொன்னேனே என கேட்டார். பட்டினத்தாரும் ஆம் மன்னா தங்கள் உத்தரவுப்படி வெள்ளி கதவை கழற்றி தங்ககதவை மாட்டியுள்ளேன் என கூறினார். இதனைக்கேட்ட மன்னர் பொறாமையால் முத்துப்பந்தலை எரிக்க காவலாளிகளுக்கு உத்தரவிட்டார். காவலாளிகள் முத்துப்பந்தலை எரித்துவிட்டனர். இதனைக்கண்ட பட்டினத்தார் அடுத்தநாள் வைரங்களால் ஆன பந்தலை போட்டுவைத்தார். இதனைக்கண்ட மன்னர் அதற்கு மேலும் பேச வழியின்றி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவ்வளவு பெரிய செல்வந்தராக வாழ்ந்திருந்தார் பட்டினத்தார்.

சில நாட்கள் கழித்து திரும்பிய மருதவாணர் வியாபாரம் செய்யும் இடத்தில் தந்தையிடம் பெட்டி பெட்டியாக கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மகன் சம்பாதித்து கொண்டு வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவரட்டி இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்பினால் தவிட்டு எருவைக்கொண்டு வந்திருக்கின்றானே என்று கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் வைரங்களும் வைடூரியங்களும் இருப்பதை பார்த்து அதிர்ந்த பட்டினத்தார் மகனைக்காண வீட்டிற்கு வந்தார். மருதவாணர் தனது தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து தந்தை வருவார் அவரிடம் இதனைக் கொடுத்துவிடுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். மருதவாணரை தேடி வீட்டுக்கு வந்த பட்டினத்தார் நடந்தவைகள் அனைத்தையும் கேள்விப்பட்டு மருதவாணர் கொடுத்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ஒர் ஓலைசுவடி இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்ததும் பட்டினத்தாருக்கு ஞானம் பிறந்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார்.

பட்டினத்தார் இல்லற வாழ்க்கையை துறந்து இடுப்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு ஆண்டி கோலம் பூண்டார். இதனைகண்ட அவரது தாய் எனக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது அக்கடமையை செய்யாமல் நீ செல்லவேண்டாம் என்று தடுத்தார். தாயாரிடம் தங்களுக்கான கடமை வரும் நேரம் நானே உங்களிடம் வந்து என் கடமையை செய்வேன் என்று உறுதியளித்துவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினார். பட்டினத்தாரின் செல்வத்தை காக்கும் பொருப்பில் இருந்தவர் சேந்தனார் என்பவர் பட்டினத்தாரிடம் வந்து உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்கு சொந்தம் இல்லை என்று எண்ணிவிட்டேன். எனக்கு சொந்தம் இல்லாத சொத்தை நான் எப்படி என்ன செய்யவேண்டும் என்று கூறமுடியும் என்று சொல்லி விட்டு ஊருக்கு வெளியே ஒரு கோவிலில் அமர்ந்துவிட்டார்.

அந்நாட்டின் மன்னர் பட்டினத்தாரின் செய்கையை கேள்விப்பட்டு அவரை தேடி சென்றார். மரத்தடியில் அமர்ந்தருந்த பட்டினத்தாரிடம் இந்நாட்டின் அரசன் நான் என்னுடைய சொத்துக்களால் வைத்து என்னால் கூட தங்களுடன் போட்டி போட முடியவில்லை. இவ்வளவு பெரிய செல்வந்தரான நீங்கள் சிறிய இடுப்பு வேட்டியுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் தங்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சி கிடைத்துவிட்டது. தாங்கள் மீண்டும் பழையபடி வீட்டுற்கு செல்லுங்கள் என்று சொன்னார். இதனைகேட்ட பட்டினத்தார் அன்று என்னுடைய வீட்டிற்கு தாங்கள் வந்தபோது நான் எழுந்துவந்து உங்கள் முன் நின்றுகொண்டு பேசினேன். நீங்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இன்று நான் அமர்ந்துகொண்டு இருக்கிறேன். மன்னராகிய தாங்கள் என்முன் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் இதுவே நான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி என்றார். இதனை கேட்ட மன்னன் தலைகுனிந்து அங்கிருந்து சென்றுவிட்டர்.

பெரும் செல்வந்தராய் இருந்த பட்டினத்தார் மாளிகையை இழந்து ஆடை அணிகலன் இழந்து ஒருவேலை உணவிற்கு அடுத்தவரிடம் யாசகம் பெற்று பரதேசி போன்று இருப்பதை கண்ட பட்டினத்தாரின் சகோதரி தனக்கு அவமானமாக இருப்பதால் அப்பம் செய்து அதில் கொடிய விஷத்தை கலந்து பட்டினத்தார் உண்பதற்காக கொடுத்தார். தன் ஞானத்தால் நஞ்சு கலந்திருப்பதை அறிந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை தன் சகோதரி வீட்டின் கூறைமீது வீசி எறிந்து தன் அப்பன் தன்னை சுட்டால் வீட்டப்பன் ஓட்டை சுடும் என கூறினார். சகோதரியின் வீட்டின் கூறையில் தீ பிடித்து மளமளவென எரியத்துவங்கியது. பட்டினத்தாரின் ஞானத்தை உணர்ந்த சகோதரி இவரிடம் மன்னிப்பு கேட்டார். மனம் அறிந்து திருந்தினால் நெருப்பு அணையும் என்று பட்டினத்தார் சொல்ல நெருப்பு உடனே அணைந்துவிட்டது. ஊரில் இருக்கும் அனைவரும் பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்து கொண்டார்கள். பட்டினத்தார் தான் வாழ்ந்த ஊரில் இருந்து கிளம்பி பல சிவ தலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது திருவெண்காடு என்னும் ஊரில் இருக்கும் திருவெண்காடரை தரிசித்து பாடல்கள் பாடினார். இத்தலத்தில் பட்டினத்தாருக்கு திருவெண்காட்டு நாதரே குருநாதராக வந்து சிவதீட்சை கொடுத்தார். இத்திருவிழா இகோவிலில் இப்போதும் நடைபெறுகிறது. திருவெண்காடர் என்ற பெயரை இக்கோவிலில் பட்டினத்தார் பெற்றார்.

மேலப்பெரும்பள்ளம் என்னும் ஊரில் வலம்புரநாதர் இறைவனை தரிசிக்க பட்டினத்தார் வந்திருந்தார். அவ்வூரில் இருந்த மன்னன் தனது தோசம் நிவர்த்திக்காக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்னதானம் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இங்கு வந்த பட்டினத்தார் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்டார். அன்னதானம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கிறது காத்திருங்கள் என்று அவர்கள் உணவு தர மறுத்தனர். உடனே பட்டினத்தார் மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்தார். கோவிலில் பல நாட்கள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்தது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பட்டினத்தார் அக்கோவிலில் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரை வணங்கி ஆசிபெற்றனர். மன்னனின் தோசமும் விலகியது.

உஜ்ஜனியின் மாகாளம் என்ற இடத்திற்கு வந்த பட்டினத்தார் அங்கு இருக்கும் ஒரு கோவிலில் அமர்ந்து தியானத் செய்து கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசனாக இருந்தவர் பத்ருஹரி சிவபக்தியில் சிறந்தவராக இருந்தார். அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். தங்கள் இருப்பிடம் செல்லும் வழியில் இருந்த கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை இறைவனுக்கு காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர். அந்த மாணிக்கமாலை இறைவன் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி அரசன் வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். அனைத்து இடங்களிலும் வீரர்கள் திருடர்களை தேடிச்சென்றனர்.

கோயிலில் தியானத்தில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து அவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்த வீரர்கள் அவரை அழைத்துச் சென்று அரசனின் முன்னிலையில் நிறுத்தினார்கள். மாணிக்கமாலை அவரின் கழுத்தில் இருந்ததை பார்த்த பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தானாக தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தன்னை மன்னித்து தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார். பத்ருஹரி அரசன் பட்டினத்தாரின் சீடராகி பத்திரகிரியார் என பெயர் பெற்றார்.

பட்டினத்தார் பத்ரகிரியாரிடம் திருவிடைமருதூர் கோவில் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் காலம் வரும் போது அங்கு வந்து சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பத்ரகிரியார் குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்து தினமும் பிச்சை ஏற்று மானசீகமாக குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்கு சிறிது உணவு கொடுத்தார். அன்று முதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. சில வருடங்கள் கழித்து பட்டினத்தார் திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்தார். பட்டினத்தார் வருவதை பார்த்த பத்ரகிரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். குரு தனக்கு இறைவனை அடையும் வழியை காண்பிக்க போகிறார். இறைவனிடம் செல்லப்போகின்றோம் என்று மகிழ்ச்சியில் பட்டினத்தாரை வணங்கி நின்றார்.

பத்ரகிரியாருக்கு ஆசி வழங்கிய பட்டினத்தார் மேற்கு வாசலில் அமர்ந்திருக்குமாறும் தான் கிழக்கு வாசலில் அமர்ந்திருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு கிழக்கு வாசலில் அமர்ந்துவிட்டார். சிலநாட்கள் சென்றபிறகு ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஓர் ஏழை வடிவத்தில் வந்து பட்டினத்தாரிடம் பசிக்கிறது உணவு இருந்தால் கொடுங்கள் கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே சென்று அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு உணவு கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை தங்களிடம் அனுப்பினார் உணவு ஏதேனும் இருந்தால் தாருங்கள் என்று கூறினார். பதறிப்போன பத்திரகிரியார் நாடு அரசபதவி சொத்துக்கள் என அனைத்தையும் துறந்த எனக்கு இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பிச்சை ஓடும் உடைந்து போனது. பத்ரகிரியாருக்கு இருந்த சிறிய பற்றும் போனது. மேலும் சில வருடங்கள் பட்டினத்தாரும் பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் கோவிலிலேயே ஆளுக்கொரு வாசலில் அமர்ந்திருந்தார்கள்.

ஞானியாகிய பத்திரகிரியாரிடம் உணவு சாப்பிட்டதன் விளைவாக இறந்த நாய் தனது அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்தது. தனது தந்தையிடம் அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவமுனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணை விசாரிக்க பெண் தான் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினாள். மேலும் பெண் பிறப்பதற்கு முன் தன் நாட்டில் நடந்த சம்பவங்களை சில கூறினாள். ஆச்சரியமடைந்த அரசரும் பெண் கூறுவதில் உண்மை இருப்பதாக நம்பினார். தவமுனிவரையே திருமணம் செய்து கொள்வேன் என்ற பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அரசர் தனது பெண்ணை அழைத்துச் சென்றார்.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் மேற்கு வாசலுக்கு வந்த இளவரசி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கினாள். தாங்கள் உணவு கொடுத்து பசி தீர்ந்த தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். நான் முதுமையில் இருக்கின்றேன். தங்களோ சிறு பிள்ளை. இறைவனை தேடி நாடு செல்வம் அரச சுகங்கள் அனைத்தையும் துறந்து சன்யாசியாகி இங்கு அமர்ந்திருக்கின்றேன். மீண்டும் உலக பந்த பாசத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை ஆகவே சென்றுவிடுங்கள் என்று கூறினார். இளவரசி பிடிவாதமாக இருந்தாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் வந்தார். குருவே எனக்கு என்ன சோதனை இது. எனக்கு முக்திநிலை கிடையாதா என்று கேட்டார்.

பட்டினத்தார் எல்லாம் மகாலிங்கன் செயல் அவரை தரிசியுங்கள் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் சென்றாள் அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் இளவரசியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முக்தி அளிக்காமல் தன்னுடைய சிஷ்யருக்கு முக்தி கொடுத்துவிட்டாய். தனக்கு எப்போது என்று முக்தி கிடைக்கும் என்று இறைவனை வேண்டினார். அப்போது அசிரிரியாய் இறைவன் குரல் கேட்டது. இறைவனை நம்புகிறவனை விட குருவை நம்பும் சீடன் மிகச்சிறந்தவர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி அளித்தோம் உமக்கு நுனிக்கரும்பு என்று இனிக்கிறதோ அன்று முக்தி கிடைக்கும் என்று இறைவன் கூறினார். மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருந்து கிளம்பினார். பத்திரகிரியார் பாடிய பாடல்கள் மெய்ஞானப் புலம்பல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

பட்டினத்தார் தனது தாயாரின் இறுதி காலம் வந்துவிட்டதை அறிந்து தாயார் இருக்கும் ஊருக்கு வந்தார். தாயின் இறுதி சடங்கின்போது மரத்திலான விறகில் தனது தாயார் உடலை வைக்க வேண்டாம் வாழை மர மட்டையில் வையுங்கள் என்றார். அவர் கூறியபடியே உறவினர்கள் பச்சை வாழை மட்டையில் வைத்து சிதை அடுக்கினார்கள். அப்போது அவர் தாயை எண்ணி பாடல்கள் பாடினார். உடனே பச்சை வாழை மட்டை எரியத்தொடங்கியது. தனது தாயாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது கடமையை நிறைவேற்றினார் பட்டினத்தார்.

சேந்தனார் என்பவர் பட்டினத்தார் செல்வந்தராக இருக்கும் போது அவருக்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர். ஊருக்குள் பட்டினத்தார் வந்திருக்கும் தகவல் அறிந்த சேந்தனாரின் மனைவியும் மகனும் பட்டினத்தாரிடம் வந்து அழுது தொழுது முறையிட்டனர். ஜயா தங்களிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த சேந்தனாரின் மனைவி நான். இவன் எங்கள் பிள்ளை. தங்களின் செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்த தங்களின் கணக்குபிள்ளை சேந்தனாரை மன்னர் சிறையில் அடைத்து விட்டார். தாங்கள்தான் சிறையில் இருந்து அவரை விடுவித்து அருள வேண்டும் என வேண்டினார்கள். அனைத்தையும் கேட்ட பட்டினத்தார் திருவெண்காடு சுவாமி சந்நிதிக்கு அனைவரையும் அழைத்துச் சென்று இறைவனை துதித்து பாடினார்.

பட்டினத்தாரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் வினாயகரை அழைத்து அரசனின் சிறையில் இருந்து சேந்தனாரை விடுதலை செய் என்றார். வினாயகர் துதிக்கையை நீட்டி சிறைச்சாலையில் இருந்த சேந்தனாரை விடுதலை செய்து பட்டினத்தார் முன் விட்டார். நடந்தது எதையுமே அறியாமல் தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல எழுந்த சேந்தனார் தன் எதிரில் பட்டினத்தார் இருப்பதைக் கண்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார். குருநாதா அரசர் வைத்த சிறையில் இருந்து விடுதலை அளித்ததைப் போல பிறவிப் பெருங்கடலில் இருந்தும் அடியேனை விடுவிக்க வேண்டும் என வேண்டினார். சேந்தனாரின் பக்குவ நிலையை அறிந்த பட்டினத்தார் சேந்தா குடும்பத்தோடு நீ தில்லைக்குப் போய் காட்டில் விறகு சேகரித்து வாழ்க்கை நடத்து. தினந்தோறும் ஒரு சிவனடியாருக்காவது உணவு அளித்து வா நீ நினைத்தது நடக்கும் என்று சொல்லி வழிகாட்டினார். குருநாதரையும் திருவெண்காட்டு ஈசனையும் வணங்கிய சேந்தனார் பட்டினத்தார் சொற்படி தில்லையை அடைந்து அதன்படியே வாழ்க்கை நடத்தி இறைவனடி சேர்ந்தார்.

சீடர் பத்திரகிரியார் முக்தி அடைந்த பிறகு பட்டினத்தார் சிதம்பரம் கனகசபையையில் நடராஜப் பெருமானின் நடனத்தை தரிசித்தார். அங்கிருந்து வெளிவந்ததும் பசி உண்டாயிற்று. பட்டினத்தாரின் பசியைப் போக்க அன்னை சிவகாமசுந்தரி பெண் வடிவில் வந்து உச்சிக்காலப் பிரசாதத்தை அவரிடம் தந்தாள். பட்டினத்தார் உண்டு பசியாறினார். பட்டினத்தார் பசியாறியதும் அம்பிகை அங்கிருந்து மறைந்தாள். அதன் பின்னரே அவருக்கு உண்மை தெரியவர உலகாளும் அன்னையே எதிரில் வந்து உணவு தந்தும் உணராமல் ஏமாந்து போனேனே என புலம்பி பாடல்கள் பாடினார்.

பட்டினத்தார் காஞ்சியை அடைந்து சுவாமி தரிசனம் செய்து கச்சித் திருவந்தாதி, திருவேகம்பமாலை, கச்சித் திருவகவல் முதலிய பாடல்களைப் பாடி சில நாட்கள் தங்கினார். ஒரு நாள் பசி தாங்காமல் இறைவனை நினைத்து பாடல்கள் பாட அம்பிகை காமாட்சி சுமங்கலி வடிவத்தில் வந்து அவருக்கு உணவளித்தாள்.

காளத்தி நாதனை தரிசிக்க காளாத்தி நோக்கி நடந்தார். இறைவனை தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் பகல் இரவு பாராமல் எப்போது உன்னைக் காணவல்லேன் காளத்தி ஈஸ்சுரனே என்றபடி காட்டிற்குள் நடந்து கொண்டிருந்த பட்டினத்தாருக்கு காட்டில் இருந்த கொடூரமான ஜீவன்கள் கூட உதவி செய்தன. காட்டு யானைகள் முன்னால் நடந்து போய் முள் சிறுகட்டைகள் முதலியவற்றை நீக்கி வழியை உண்டாக்கின. புலிகள் தங்கள் வால்களால் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தன. வாயில் புல் கொண்ட மான்கள் அணிவகுத்து நின்று வழி காட்டின. மயில்கள் தோகைகளாலும் பறவைகள் சிறகுகளாலும் விசிறியும் நிழல் தந்தும் உதவின. குரங்கு முதலான விலங்கினங்கள் உணவுக்கு காய் கனி கிழங்குகளைக் கொண்டு வந்து தந்தன. பட்டினத்தாரின் உள்ளம் நெகிழ்ந்தது. என்ன செயல் என்ன செயல் அனைத்து பெருமையும் காளத்தி ஈசனுக்கே உரியது என்று பாடல்கள் பாடி காளாத்திஸ்வரரை தரிசித்தார்.

கரும்பை காணும் போதேல்லாம் நுனிக்கரும்பு இனிக்கிறதா என்று சாப்பிட்டு பார்த்து ஊர் ஊராக சிவனை தரிசித்துக்கொண்டு வந்தார். சென்னையில் இருக்கும் திருவொற்றியூர் வந்த பொழுது அவருக்கு நுனிக்கரும்பு இனித்தது. முக்தி அடைய நேரம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருக்கும் கடற்கரைக்கு சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு தனது சித்துக்கள் மூலம் இனிப்புகள் கொடுத்து மகிழ்வித்தார்.
தன் அமர்ந்து கொள்கிறேன் என்னை ஒரு கூடை கொண்டு முடிவிடுங்கள் நான் வேறு இடத்தில் இருந்து வருகிறேன் இப்படியாக நாம் விளையாடலாம் என்றார். மகிழ்ந்த சிறுவர்கள் பட்டினத்தாரை ஒரு கூடையை வைத்து மூடிவிட்டு கூடையை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பட்டினத்தார் வேறு இடத்தில் இருந்து வந்தார். குழந்தைகள் வியப்போடு ஓடி வந்தார்கள். மறுபடியும் தன்னை மூடிவிட சொன்னார். வேறு இடத்தில் இருந்து வந்தார். பல தடவைகள் இவ்வாறு நடந்தது. சிறுவர்களுக்கு உற்சாகம் உண்டானது. ஒரு முறை மூடிய பொழுது வெளியில் எங்கும் இருந்து பட்டினத்தார் வராததால் கூடையை திறந்து பார்த்தார்கள் சிறுவர்கள். அதனுள் பட்டினத்தார் இல்லை. சிவலிங்கமாக காட்சியளித்தார்.

பட்டினத்தார் பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை

  1. கோயில் நான்மணிமாலை
  2. திருக்கழுமல மும்மணிக்கோவை
  3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி
  5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது

தண்டம்

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். தண்டம் என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து T அல்லது Y வடிவத்தில் இருக்கும். அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்தால் சுவாசம் திசை மாறும். வலது நாசி சுவாசத்தை நிறுத்த வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள். சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வேண்டும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?

மூச்சுக்காற்று நாசியின் வலது புறம் ஓடுவது சூரிய கலை என்றும் இடது புறம் ஓடுவது சந்திரகலை என்றும் பெயர். சூரியகலையில் மூச்சுக்காற்று ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்றும் சந்திரகலையில் ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்த யோகியர்கள் முனிவர்கள் தங்களது சாதகங்கள் அல்லது யோக முறைகளை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் தண்டத்தை உபயோகித்து மூச்சுக்காற்றை மாற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்வார்கள்.

சாதகங்கள் அல்லது யோக காரியங்களை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். உடனே தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில் மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும். துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. இதனை செய்ய சூரியகலை சந்திரகலைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -32

லட்சுமணன் பெரிய மரத்தில் ஏறிப்பார்த்தான். பெரிய படை ஒன்று சித்ரகூட மலையை நோக்கி வந்துகொண்டிருப்பதை பார்த்தான். மரத்தில் இருந்து ராமருக்கு எச்சரிக்கை செய்தான். அண்ணா தேர்ப்படை யானைப்படை குதிரைப்படை காலாட்படை என்று ஒரு பெரிய படை பட்டாளம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நாம் மூட்டிய நெருப்பு புகையை வைத்துக்கொண்டு நம்மை நோக்கி வந்து கொண்டிருகின்றார்கள். உடனே நெருப்பை அணைத்து விட்டு சீதையை மலைக்குகையில் பத்திரமாக வைத்துவிட்டு கவசம் உடுத்திக்கொண்டு வில்லும் அம்பு கத்தி எடுத்துக்கொண்டு யுத்தத்திற்கு தயாராவோம் என்றான்.

ராமர் லட்சுமணனிடம் வந்து கொண்டிருக்கும் படையில் முதலாவதாக வரும் தேரில் எந்த நாட்டுக்கொடி இருக்கின்றது கவனித்துப் பார் என்றார். கொடியை பார்த்த லட்சுமணன் கோபமடைந்தான். அண்ணா தேரில் இருப்பது திருவாத்திக்கொடி நம்முடைய அயோத்தி நாட்டுக்கொடி. சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றதோடு மட்டும் இல்லமால் எதிர்காலத்தில் நம்முடைய தொந்தரவு ஏதும் இருக்கக்கூடாது என்று நம்மை எதிர்த்து கொல்லவும் வருகின்றான் பரதன். இன்று கைகேயியின் மகன் பரதன் என் கையில் அகப்படுவான். அவனை நான் விடப்போவது இல்லை. அறநெறியில் இருந்து விலகிய அவனை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. நம்மை கொல்ல வரும் பகைவனை நாம் கொல்வது பாவமாகாது. இங்கிருந்தே பரதனை எதிர்ப்போமா இல்லை மலை மீது நின்று கொண்டு எதிர்ப்போமா நீங்கள் சொல்லுங்கள். இவன் நமக்கு செய்த கொடுமைக்கு இன்று பழி வாங்கி விடலாம். பரதனை வென்று கைகேயியின் எண்ணத்தை முற்றிலும் அழித்துவிடலாம். இந்த வனத்தில் ரத்த வெள்ளத்தை ஓடச் செய்யப் போகின்றேன். வரும் படைகளை நீர்மூலமாக்குவேன். இந்த காட்டில் உள்ள மிருகங்களுக்கு இன்று நிறைய உணவு கிடைக்கப் போகின்றது எனக்கு உத்தரவு தாருங்கள் அனைத்து படைகளையும் அழித்து விடுகின்றேன் என்று தன்னையும் மறந்து கோபத்தில் பேசிக்கொண்டே இருந்தான் லட்சுமணன்.

லட்சுமணன் சொன்ன அனைத்தையும் கேட்ட ராமர் புன்சிரிப்புடன் அமைதியாக பேச ஆரம்பித்தார். லட்சுமணா நீ ஒரு வெற்றி வீரனாவாய். பரதனுடைய பெரும் படைகளையும் நிர்மூலமாக்குவாய் இதில் எந்த சந்தேகமும் இல்லை. முதலில் கோபத்தை விட்டு அமைதியாக சிறிது யோசனை செய்து பார். பரதனே நேரில் வருகின்றான் என்கிறாய். பரதனை எதிர்த்து வில்லுக்கும் அம்புக்கும் கத்திக்கும் வேலை ஒன்றும் இல்லை. தந்தையின் ஆணையை அழித்தும் பரதனை கொன்றும் ராஜ்யம் சம்பாதித்து நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது. உடன் பிறந்தவர்களை அழித்துவிட்டு கிடைக்கும் சொத்தானது விஷம் கலந்த உணவைப் போன்றது யாருக்கும் உபயோகப்படாது. யாரை சந்தோசப் படுத்துவதற்காக ராஜ்யத்தை சம்பாதித்து நாமும் சந்தோசமாக இருக்கின்றோமோ அவர்களையே அழித்துவிட்டு அந்த ராஜ்யத்தை அடைவதில் பயன் ஒன்றும் இல்லை. அதர்ம வழியில் கிடைக்கும் ராஜ்யம் நமக்கு வேண்டாம். நீயும் பரதனும் சத்ருக்கணனும் என்னுடன் சேர்ந்து அனுபவிக்க முடியாத சுகம் எனக்கு வேண்டாம் என்றார்.

விநாயகர்

நமது மூளை வலப்பகுதி இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது. மூளையின் இடது வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனை இன்றைய விஞ்ஞானம் ஆமோதிக்கின்றது. இதையே நம் சாஸ்திரம் பிங்கலை இடங்கலை நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. வலது பக்க மூளை இயங்கும் பொழுது இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும் இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் பெயர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. வலது நாசிக் காற்று (சூரிய கலை) உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்றது. வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். உடல் சுறுசுறுப்படையும் சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும். இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும் வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை) உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும். இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து உடல் குளிர்ச்சியடையும். பரபரப்புத் தன்மை குறைந்து மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து நிதானமான மனநிலை நிலவும். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் அவரை முதலில் வணங்க வேண்டும்.

கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனித்து விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் வலது நாசியிலும் இடம்புரி விநாயகராக இருந்தால் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் அளிக்கும் செய்தி இது. விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய ரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளலாம். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

ஞானப்பழம்

இறைத்தேடலில் ஞானத்தை தேடி இருந்த இடத்திலேயே பிரம்மச்சரியம் கடைபிடித்து யோக வழியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது பிள்ளையார் வழி.

இறைத்தேடலில் ஞானத்தை தேடி உலகத்தை சுற்றி பலரிடம் கிடைக்கும் என்று அலைந்து அலைந்து யாரிடமும் கிடைக்காமல் கோபத்தில் நானே தேடிக்கொள்கிறேன் என்று இறுதியில் தனக்குள்ளேயே இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து தனியாக அமர்ந்து இறுதியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது முருகர் வழி.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -31

அதிகாலை விடிந்ததும் பரத்வாஜ முனிவரின் குடிலை நோக்கி சென்றான் பரதன். தனது நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த பரத்வாஜ முனிவரை பார்த்து வணங்கினான் பரதன். இரவு அளித்த விருந்து உபசாரங்கள் திருப்தியாக இருந்தனவா என்று கேட்டார் பரத்வாஜ முனிவர். படை பரிவாரங்கள முதல் மந்திரிகள் வரை அனைவரும் தாங்கள் அளித்த விருந்தை சாப்பிட்டு சுகமாக தங்கினோம். அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவலோக நந்தவனத்தில் தங்கியது போன்று உணர்ந்தோம். ராமரின் இருப்பிடம் செல்ல வழியும் நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதியும் கேட்டு வந்திருக்கின்றேன் என்று வணங்கினான் பரதன்.

பரத்வாஜ முனிவர் பரதனுடன் வந்திருந்த மூன்று பெண்களை தனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். சுமத்திரை கைகேயி என மூவரையும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்து வைத்து ஆசிபெறச்செய்தான். முதலில் கௌசலையை வரச்செய்து துக்கப்பட்டு பட்டினியால் வாடிய முகத்துடன் நிற்பவர் பட்டத்து ராணி பெயர் கௌசலை இவரே ராமரை பெற்றெடுத்த புண்யவதி என்று அறிமுகம் செய்தான். கௌசலையின் வலது புறத்தில் இருப்பவர் சுமத்திரை இரண்டாவது பட்டத்து ராணி லட்சுமணன் சத்ருக்கணனை பெற்றடுத்த பாக்கியவதி. இடது புறத்தில் நிற்பவர் அரசி வடிவத்தில் இருக்கும் அரக்கி. எங்களுடைய துக்கங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவள் என்று கைகேயியை அறிமுகம் செய்தான். மூவரும் பரத்வாஜ முனிவரை சுற்றி வந்து வணங்கி நின்றனர். கைகேயி கவலையுடன் முகத்தை மறைத்துக்கொண்டு வணங்கி நின்றாள். பரத்வாஜ முனிவர் பரதனிடம் உலகத்தின் நன்மைக்காகவே அனைத்தும் நடந்தது உனது தாயை அப்படி சொல்லாதே என்று கேட்டுக் கொண்டு ராமர் இருக்கும் இடத்திற்கு செல்ல வழியை கூற தொடங்கினார். இங்கிருந்து இரண்டரை யோசனை தூரத்தில் மந்தாகினி நதி ஓடுகின்றது. நதியை தாண்டினால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காடு இருக்கின்றது. அதன் தெற்கு பகுதியில் சித்ரகூட மலை இருக்கின்றது. மலை அடிவாரத்தில் ஒரு குடில் அமைத்து மூவரும் வசித்து வருகின்றார்கள் என்று செல்வதற்கான வழிமுறைகளை பரதனிடம் சொல்லி வாழ்த்துக்களை கூறி விடை கொடுத்தார்.

பரதன் தன் படை பரிவாரங்களுடன் பரத்வாஜ முனிவர் காட்டிய பாதையில் சென்றான். தூரத்தில் சித்ரகூட மலையும் மலை அடிவாரத்தில் லேசான புகையும் தெரிந்தது. ராமர் இருக்கும் இடம் அது தான் என்று அனைவரும் உற்சாகமடைந்து விரைவாக செல்ல ஆரம்பித்தனர்.

சித்ரகூட மலையின் கம்பீரமும் வனத்தின் அழகும் பறவைகளின் சத்தமும் விலங்குகளின் விளையாட்டும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஊரையும் உறவினர்களையும் பிரிந்த துக்கம் ஏதும் இல்லாமல் ராமர் சீதை லட்சுமணன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தார்கள். பெரும் தூசி புகை கிளம்பியதையும் கண்டார் ராமர். லட்சுமணனிடம் தம்பி ஏதோ தூரத்தில் ஏதோ பெரும் சத்தம் தூசி படலத்துடன் கிளம்புகின்றது. விலங்குகள் அனைத்தும் நாலாபக்கமும் ஒடுகின்றது. அரச குலத்தவர்கள் யாரேனும் வேட்டையாட வந்திர்க்கின்றார்களா பார் என்றார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -30

பரத்வாஜ முனிவர் சிரித்தார். பரதா உன் உள்ளம் எனக்கு தெரியும். ரகு வம்சத்தில் பிறந்த உன்னை நான் அறிவேன். ராமரிடத்தில் நீ வைத்துள்ள பக்தி அன்பு இன்று போல் என்றும் உறுதியாக உன் உள்ளத்தில் இருந்து உன் புகழ் வளர்ந்து ஓங்குவதற்காகவும் உன்னுடைய குணத்தை உலகிற்கு காட்டி உன் பெருமையை உலகம் அறிந்து கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டேன் வருத்தப்பட வேண்டாம். ராமர் சித்திரக்கூட மலையில் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செல்வதற்கான வழியை சொல்கின்றேன். இன்று இரவு இங்கு தங்கியிருந்து உன் களைப்பை தீர்த்துக்கொள். நாளை காலை இங்கிருந்து கிளம்பி ராமரை சந்திக்க செல் என்றார். அதற்கு பரதன் முனிவரே தாங்கள் எனக்கு இப்போது அளித்த வரவேற்பு விருந்தில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிட்டேன். மேலும் தங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை ஆகவே கிளம்புகின்றேன் என்றார்.

பரதா உன் பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரம் செய்ய கடமைபட்டிருக்கின்றேன். நீ இன்று இரவு இங்கேயே தங்க வேண்டும். நீ இன்று தங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். உன்னுடைய படை பரிவாரங்கள் ஏன் தூரத்திலேயே இருக்கின்றது. அவர்களை ஏன் உள்ளே அழைத்துவரவில்லை என்று கேட்டார். படைபரிவாரங்கள் ரிஷிகளின் ஆசிரமத்திற்கு அருகில் செல்லக்கூடாது என்ற நியமப்படி இங்கே அழைத்து வரவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இங்கு அழைத்து வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன் என்றான். அதற்கு பரத்வாஜ முனிவர் அனைவரையும் இங்கே அழைத்துவா என்று கேட்டுக்கொண்டார். பரதனும் அவ்வாறே உத்தரவிட்டான். அனைத்து படைகளும் ஆசிரமத்திற்குள் நுழைந்தது. பரத்வாஜ முனிவர் மந்திரங்களை சொல்லி மயன் வருணன் குபேரன் அக்னி முதலிய தேவர்களை வரவழைத்து பரதனின் படைகளுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வீர்களாக என்று கேட்டுக்கொண்டார்.

காட்டிற்குள் உடனடியாக அற்புதங்கள் நிகழ்ந்தது. எண்ணிலடங்காத செல்வத்தை வைத்திருக்கும் ஒரு மன்னன் மற்றோரு மன்னருக்கு விருந்தளிப்பது போல் காட்டிற்குள் ஒரு கணத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின. சந்தனம் புஷ்பம் வாசனை திரவியங்களுடன் அவரவர்களுக்கு தகுந்தார் போல் வீடுகள் அமைந்தது. அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் வந்தது. தெய்விக ரீதியில் சங்கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படை பரிவாரங்கள் தங்களை மறந்து அனைத்தையும் அனுபவித்தார்கள். இதற்கு மேல் நாம் காட்டிற்குள் செல்ல வேண்டாம். அயோத்திக்கும் செல்ல வேண்டாம். இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணினார்கள். தேவலோக நந்தவனத்தில் இருப்பதைப்பொன்று உணர்ந்தார்கள். எல்லைமீறி அனுபவித்தும் மெய்மறந்தும் தூங்கிவிட்டார்கள். காலை விடிந்ததும் இரவில் நடந்தது கனவு போல் அங்கிருந்த அனைத்தும் மறைந்து விட்டது.

மகான் சூர்தாஸர்

தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர். ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை. ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான். காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது. கிருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. கிருஷ்ண நாமத்தின் பெருமை அறியாமல் சொன்னபோதும் நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.

ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்ததும் விழுந்து வணங்கினர். யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால் கிருஷ்ணா என்றார். சுவாமி எங்களைக் காப்பாத்துங்க என்றனர். என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாற்றுவது என்று கேட்டார். சுவாமி நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில்‌ இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை. நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. இன்று காலை அந்தக் குதிரை காணாமல் போய்விட்டது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு அரசர் உத்தரவு போட்டிருக்கார். நாங்களும் காலையில் இருந்து தேடிக்கொண்டிருக்கின்றோம். குதிரையைக் கண்டுபிடிக்க‌முடியவில்லை. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னால் எங்கள் உயிர் தப்பிக்கும் நீங்கதான் எங்களை காப்பாத்தனும் என்றனர்.

சுவாமி சிரித்தார். எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு நான் எங்க போவேன் என்றார். இருவரும் விடுவதாய் இல்லை. நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாவது சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரிகிறது என்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று முடிவு செய்தார். இங்கேயிருந்து நேரா கிழக்குப்பக்கம் போங்க அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அங்கிருந்து திரும்பி வடக்கே போனால் ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா உங்க குதிரை கிடைக்கும்‌ என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார். அவர்களும் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.

அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது. மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள். குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன். எப்படிக் கிடைத்தது குதிரை என்று கேட்டார் அரசர். ஒருவரை ஒருவர் பார்த்தனர் காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள். அரசனுக்கு மிகவும் ஆச்சரியம். நம்‌ எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும். நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன். மறுநாள் காலை வீரர்களோடு அரசரும் பெரிய பரிவாரத்துடனும் வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்து நின்றனர். அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று. அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.

கூனிக் குறுகிப்போனார் கண் தெரியாதவர். வாயில் வந்ததையெல்லாம்‌ சொன்னதே பலித்துவிட்டது இத்தகைய வாக்குசித்தி நமக்கு எப்படி வந்தது வயிற்றுப் பிழைப்பிற்காகவும் பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா? நிஜமாக உணர்ந்து சொன்னால்?அழுதார் கண் தெரியாதவர். சிலநாட்கள் அரண்மனையில் இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி கிருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு கிருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்தார். அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு உத்சவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார். கண் தெரியாத அந்த மகான் சூர்தாஸர் ஆவார். அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -29

குகன் கேள்வி கேட்ட பாவனையில் இருந்து அவன் ராமரின் மேல் வைத்திருக்கும் அன்பை உணர்ந்தான் பரதன். கைகேயி செய்த சூழ்ச்சியால் ராமருக்கு தான் விரோதி போல் அனைவராலும் பார்க்கப்படுவதை தெரிந்து கொண்டான். பரதனுடைய உடம்பெல்லாம் வியர்த்தது. தந்தை இறந்த துக்கத்துடனும் ராமர் பிரிந்த துக்கத்துடனும் இருந்த பரதன் குகனின் வார்த்தையால் மேலும் வேதனைப்பட்டு உடலெல்லாம் எரிவதை போன்று உணர்ந்தான். குகனே நீங்கள் சந்தேகப்படவேண்டாம். தந்தையை இழந்த எனக்கு மூத்தவரான ராமர் தந்தையாவார். அவரை எப்படியாவது அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றேன். தெய்வத்தின் மீது ஆணையாக சொல்கிறேன். என் உள்ளத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லை என்றான். ராமர் மேலிருந்த அன்பும் ராமரை பிரிந்த துக்கமும் பரதனின் முகத்திலும் பேச்சிலும் கண்ட குகன் உள்ளம் பூரித்தான். தானாக வந்த ராஜ்யத்தை வேண்டாம் என்று துறந்த தங்களை போன்ற மகானை பார்ப்பதில் பெருமை கொள்கிறேன். உங்களை சிரமம் இல்லாமல் அழைத்துச் செல்கிறேன் என்று கங்கை கரையை பரதனின் பெரும் படைகள் கடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான் குகன்.

கங்கை கரையை பெரும் படைகள் கடந்தது பெரிய படகுத் திருவிழாவைப் போல் இருந்தது. கரையை கடக்கும் போது ராமர் எங்கு சாப்பிட்டார். எங்கு தங்கினார் என்ன சொன்னார் என்று குகனிடம் கேட்டுக்கொண்டே பரதன் பயணித்தான். குகனும் ராமர் அமர்ந்த இடம் உணவருந்திய இடம். இரவு களைப்பாறிய இடம் என்று அனைத்தையும் காட்டிக்கொண்டே சென்றான். லட்சுமணனை பற்றி கேட்டான் பரதன். இரவு முழுவதும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலிருந்து லட்சுமணனும் தானும் பேசிக்கொண்டிருந்ததை விவரித்தான் குகன்.

காட்டின் நடுவே ரம்யமான சோலையும் மத்தியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் இருந்ததை கண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் என்பதை உறுதி செய்து கொண்டு தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு பரதன் வசிஷ்டர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்றனர். பரத்வாஜ முனிவரை பரதன் வணங்கினான். வந்தவர்கள் யார் என்பதை அறிந்த பரத்வாஜ முனிவர் வசிஷ்டருக்கும் பரதனுக்கும் செய்ய வேண்டிய வரவேற்பு உபசாரத்தை முறைப்படி செய்து முடித்து அவர்கள் ராமரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டார்.

பரத்வாஜ முனிவர் பரதனிடம் உன் பொறுப்பு அயோத்தியில் இருக்கின்றது அதை விட்டுவிட்டு நீ ஏன் இங்கு வந்திருக்கின்றாய். உனது தாயின் வரத்தின் படி தசரதர் ராமரை காட்டிற்கு அனுப்பிவிட்டார். அவருடன் சீதையும் லட்சுமணனும் இப்போது காட்டில் வசித்து வருகின்றார்கள். ராமரால் உன்னுடைய ராஜ்யத்திற்கு மேலும் ஏதாவது இடையூறு இருக்கின்றதா அதனை தீர்த்துக் கொள்ள அவரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றாயா என்று கேட்டார். இதனைக் கேட்ட பரதன் தாங்களும் என்னை சந்தேகப்பட்டு விட்டீர்களா? என்னைப் பெற்றவள் நான் இல்லாத போது என் சம்மதம் இல்லாமல் இக்காரியத்தை செய்துவிட்டாள். எப்படியாவது ராமரை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவரை அரசராக்கி என் ஆயுளுக்கும் அவருக்கு அடிமையாக இருந்து என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கிக் கொள்ளவே தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன் என் மீது குற்றம் சொல்லாதீர்கள் என்று கதறி அழுதான் பரதன்.