விநாயகர்

நமது மூளை வலப்பகுதி இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது. மூளையின் இடது வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனை இன்றைய விஞ்ஞானம் ஆமோதிக்கின்றது. இதையே நம் சாஸ்திரம் பிங்கலை இடங்கலை நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. வலது பக்க மூளை இயங்கும் பொழுது இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும் இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் பெயர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. வலது நாசிக் காற்று (சூரிய கலை) உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்றது. வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். உடல் சுறுசுறுப்படையும் சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும். இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும் வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை) உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும். இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து உடல் குளிர்ச்சியடையும். பரபரப்புத் தன்மை குறைந்து மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து நிதானமான மனநிலை நிலவும். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் அவரை முதலில் வணங்க வேண்டும்.

கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனித்து விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் வலது நாசியிலும் இடம்புரி விநாயகராக இருந்தால் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் அளிக்கும் செய்தி இது. விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய ரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளலாம். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.