வினாயகரின் எலி வாகனம்

கந்தர்வர்களில் ஒருவனான கிரவுஞ்சன் விநாயகப் பெருமானின் தீவிர பக்தன். அவன் தினமும் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தனது பணிகளைத் தொடங்குவான். ஒருநாள் அவன் இமயமலைப் பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடி வான் வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அழகிய பூந்தோட்டம் ஒன்றும் அதில் பூப்பறித்துக் கொண்டிருந்த அழகியப் பெண் ஒருத்தி அவன் கண்ணில் பட்டாள். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கய அவன் அவளை எப்படியாவது திருமணம் செய்து தன்னுடன் தேவலோகத்துக்கு அழைத்துச் சென்று விட வேண்டுமென்று எண்ணினான். வானிலிருந்து கீழிறங்கி வந்த அவன் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி பெண்ணே தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வனான நான் வான் வழியாகச் சென்று கொண்டிருந்த போது உன் அழகைக் கண்டு மயங்கிக் கீழிறங்கி வந்தேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். அந்தப் பெண் கந்தர்வனே நான் இங்குள்ள ஆசிரமத்தில் இருக்கும் சவுபரி முனிவரின் மனைவி மனோரமை. என் மேல் நீ கொண்ட தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டு இங்கிருந்து சென்றுவிடு என்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் அழகு கந்தர்வனை மதிமயங்கச் செய்தது. நீ ஒரு முனிவரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பணிப் பெண்ணைப் போல் வாழ்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். என்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றான். அதைக் கேட்டுக் கோபமடைந்த அவள் நான் இன்னொருவரின் மனைவி என்று சொல்லியும் அதைக் கேட்காமல் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா? என்றாள். முனிவருடன் இருப்பதை விட என்னைப் போன்ற கந்தர்வனுடன் இருப்பதில் தான் இன்பம் அதிகம். இந்த முனிவரைக் கைவிட்டு என்னுடன் வந்தால் உன்னைத் தேவலோகம் அழைத்துச் செல்கிறேன். அங்கு நாம் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினான் கந்தர்வன்.

முனிவரின் மனைவி சற்றும் தடுமாற்றம் இல்லாமல் கந்தர்வனே முனிவரின் மனைவியாக நான் இன்பமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னிடம் தேவையில்லாமல் பேசி உன் நேரத்தை வீணடிக்காமல் இங்கிருந்து செல். இல்லையென்றால் பெருந்துன்பமடைய நேரிடும் என்றாள். இதனால் கோபமடைந்த கந்தர்வன் அவளைக் கவர்ந்து போய் விடுவது என்று முடிவு செய்து மனோரமையை நெருங்கினான். அவன் எண்ணத்தை அறிந்த அவள் அவனிடமிருந்து தப்பிக்க ஆசிரமம் நோக்கி ஓடினாள். பின் தொடர்ந்து வந்த கந்தர்வன் ஆசிரமத்துக்குள் நுழைந்த மனோரமையின் கையைப் பிடித்து நிறுத்தினான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அவள் சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டாள். மனைவியின் சத்தத்தைக் கேட்டு ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்தார் சவுபரி முனிவர். நிலைமயை உடனடியாக புரிந்து கொண்ட முனிவர் கந்தர்வனே என் மனைவியை விட்டு இங்கிருந்து போய்விடு. இல்லையெனில் என் கோபத்துக்கு ஆளாவாய் என்றார். மோக மயக்கத்தில் இருந்த கந்தர்வனுக்கு அவரது குரல் காதில் விழவில்லை. அவன் மனோரமையை கவர்ந்து செல்வதிலேயே குறியாக இருந்தான். இதனால் கோபமடைந்த முனிவர் கந்தர்வனே என் மனைவியை கவர்ந்து செல்ல நினைத்த நீ மண்ணைத் தோண்டி வளையில் ஒளிந்து வாழும் எலியாக மாறி துன்பப்படுவாய் என்று சாபமிட்டார்.

முனிவரின் சாபத்தைக் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பிய கந்தர்வன் தன்னுடைய செயலுக்காக வருந்தினான். முனிவரே அடுத்தவரின் மனைவியை அடைய நினைத்த எனக்கு தாங்கள் கொடுத்த சாபம் சரியானது தான். நான் நீங்கள் கொடுத்த சாபத்தை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் எனது தவறைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும் என்றான். இதனால் மனமிரங்கிய முனிவர் கந்தர்வனே தவறு செய்வது அனைவரின் இயல்பாக இருக்கலாம். ஆனால் தேவலோகத்தைச் சேர்ந்த உனக்கு இப்படியொரு எண்ணம் வந்திருக்கவே கூடாது. நீ தவறை உணர்ந்து நான் கொடுத்த சாபத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நான் உன்னை மன்னிக்கிறேன். பிற்காலத்தில் உனக்கு இந்த எலி உருவத்திலேயே மிகப்பெரிய சிறப்பு கிடைக்கும் என்றார்.

கந்தர்வன் மிகப்பெரிய எலியாக மாறினான். அந்த எலி காட்டிற்குள் சென்று பல இடங்களையும் தோண்டி நாசப் படுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இடமாக மாறி மாறிச் சென்ற எலி காட்டிற்குள் இருந்த பராசர முனிவரின் ஆசிரமப் பகுதிக்குள் சென்றது. அந்த இடம் எலிக்கு பிடித்துப் போனதால் அங்கேயே ஒரு வளை தோண்டித் தங்கிக் கொண்டது. அந்த எலி ஆசிரமப் பகுதிக்குள் இருந்த மரங்களின் வேர்களைக் கடித்து மரங்களைக் கீழே விழச் செய்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மேலும் ஆசிரமத்தின் பல பகுதிகளிலும் வளை தோண்டி சேதப்படுத்தியது.

அபினந்தன் எனும் அரசன் இந்த நேரத்தில் நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று உலக நன்மைக்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்த முடிவு செய்து முனிவர்களிடம் இந்த பணியை ஒப்படைத்தான். வேள்விக்கான பணிகளையும் அவனே முன்னின்று செய்து வந்தான். காலநேமி என்ற அசுரன் அபினந்தன் செய்து வந்த வேள்விகளை எல்லாம் அழித்தான். அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அவனை அழித்து உதவும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களிடம் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். என் மகன் விநாயகன் அவனை அழிப்பதற்காகப் பூலோகத்தில் தோன்ற இருக்கிறான். அவன் அரக்கன் காலநேமியை அழித்து வேள்விப் பணிகள் தொடர உதவி செய்வான் என்று அருளினார். சில காலத்தில் யானை முகமும் மனித உருவமுமாக விநாயகப் பெருமான் அந்நாட்டில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு அரசன் அச்சமடைந்தான். இருப்பினும் குழந்தையைக் கொல்ல மனமில்லாமல் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தன்னுடைய படை வீரர்களுக்கு கட்டளையிட்டான். அவர்களும் ஒரு குளக்கரையில் விட்டு வந்தனர். காட்டிற்குள் இருந்த அந்த குளத்தில் நீராட வந்த பராசர முனிவர் குழந்தையை கண்டெடுத்து தன் ஆசிர மத்தில் வைத்து வளர்க்கத் தொடங்கினார்.

விநாயகர் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த போது அங்கிருக்கும் மரங்களில் ஏறி விளையாடுவார். அதேபோல் ஒரு மரத்தில் ஏறி விநாயகர் விளையாடிய போது மரத்தின் அடியில் இருந்த எலியானது வேர்களைக் கடித்து மரத்தைச் சரித்தது. மரத்தின் அடியில் வளை தோண்டி வசித்த பெரிய எலிதான் மரம் கீழே விழுவதற்கு காரணம் என்று விநாயகருக்கு தெரிய வந்தது. அந்த எலியைக் கொல்வதற்காக, தன்னிடம் இருந்த பரசு ஆயுதத்தை எடுத்து எலியை நோக்கி வீசினார் விநாயகர். ஆயுதத்தைப் பார்த்ததும் எலி வளைக்குள் புகுந்து ஓடியது. பரசு ஆயுதம் எலியை விடாமல் துரத்தியது. வளை தோண்டியபடி பாதாளம் வரைச் சென்ற எலி சோர்வடைந்தது. அதற்குமேல் செல்ல முடியாமல் பூமியின் மேற்புறத்தை நோக்கி ஓடி வந்தது. பரசு ஆயுதம் எலியை விநாயகரின் முன்பாக கொண்டு போய் நிறுத்தியது. விநாயகப் பெருமான் உருவத்தை நேருக்கு நேராகப் பார்த்ததும் அந்த எலிக்கு தான் கந்தர்வனாக இருந்ததும் சவுபரி முனிவரிடம் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்தது .தன் தவறை மன்னிக்கும்படி வினாயகரிடம் வேண்டியது. மனமிரங்கிய விநாயகர் கவலைப்படாதே உனக்குச் சாபம் கொடுத்த முனிவரிடம் நீ சாபத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டபடியால் உனக்கு என்னால் சாப விமோசனம் வழங்க முடியாது. நீ கந்தர்வனாக இருந்த போது என் மேல் அதிக பக்தி கொண்டிருந்தாய். எனவே நான் உன்னை என் வாகனமாகக் கொள்கிறேன். இதன் மூலம் நான் இருக்கும் இடங்களிலெல்லாம் உனக்கும் மரியாதை கிடைக்கும் என்று அருளினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த எலி விநாயகரை வணங்கி நின்றது. விநாயகப் பெருமானும் மூசிகனை வாகனமாகக் கொண்டு ஆயுதங்களுடன் சென்று அசுரன் காலநேமியை அழித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.