சொர்ணத்து மனை

சொர்ணத்து மனை

ஆதிசங்கரர் சிறுவயதில் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். ஒரு நாள் அவர் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு. பவதி பிட்சாந்தேஹி என குரல் கொடுத்த ஆதிசங்கரருக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண் தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லி மரம் ஒன்று இருந்தது.) ஒரு ஏழைப் பெண் அளித்த பிட்சையை ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரர் இந்த வீட்டில் ஒரு சன்யாசிக்கு கொடுப்பதற்கு கூட ஒரு நெல் மணி இல்லாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டார். உடனே அவரது காதில் உதவி செய்வதாக இருந்தால் பரிதாபப்பட வேண்டும் உதவி செய்ய இயலாத போது பரிதாபப்படக்கூடாது என்று ஒரு அசிரீரீ கேட்டது. இதனை கேட்ட ஆதிசங்கரர் அவளுக்கு உதவ விரும்பினார். மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். ஆதிசங்கரர் தனது பாடலில் சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை காலம் மாதிரி இவர்களைத் தகிக்கிறது. ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாட்ச மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா என்கிறார் இந்தச் சுலோகத்தில். அவர் பாடிய பாடல் கனகதாரா தோத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் பாடல் பாடி முடித்த உடனே அவள் வீட்டு வாசலின் முன்பாக தங்க நெல்லி மழை போல் பெய்தது. வீடு முழுவதும் தங்கக் கனிகள் குவிந்தன.

காலடி என்ற இடத்தில் இருக்கும் அந்த தங்க மழை பெய்த வீடு சொர்ணத்து மனை என இன்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. ஆதிசங்கரரின் அருள் பெற்ற இந்த ஏழை தம்பதியர்களின் பரம்பரையினர் இன்றும் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டிக்கு நாலுகெட்டு என்று பெயர். தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த சொர்ணத்து மனை முதலில் ஒரு சாதாரண ஓட்டு வீடாகத் தான் இருந்தது. இந்த வீடானது சொர்ணத்து மனை பரம்பரையில் வந்தவர்களால் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இந்த வீடானது 250 ஆண்டுகள் பழமையானது. மகாலட்சுமி அன்னையின் அருளுக்கும் பால சன்னியாசியான சங்கரரின் கருணைக்கும் சாட்சியாக இன்றும் உள்ளது இந்த வீடு. இந்த சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32 ஆம் வயதில். எனவே அன்றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள் வெள்ளி நெல்லிக்கனிகள் ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள். இந்த வீட்டிற்கு யார் வந்தாலும் வெளியே திண்ணையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படித்துவிட்டு அமைதியாக செல்லலாம். மற்றபடி வீட்டுக்குள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.