ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 30

ராமர் லட்சுமணனிடம் பேசிக்கொண்டே நடந்தார். மாரீசன் போட்ட சத்தத்தை என்னுடைய சத்தம் என்று நம்பி விட்டீர்களே. நான் இப்போது என்ன செய்வேன். உன்னை நம்பி சீதையை ஒப்படைத்து விட்டு வந்தேன். நீ ஏன் அவளை தனியாக விட்டு வந்தாய். ராட்சசர்கள் நம் மீது வைத்திருந்த பகையை சீதை மீது காண்பித்து அவளை கொன்றிருப்பார்கள். சீதை குடிலில் இல்லையென்றால் லட்சுமணா என் உடலில் உயிர் இருக்காது. லட்சுமணா நீ அயோத்திக்கு சென்று செய்தியை சொல்லிவிடு. இந்த துக்கத்தை கௌசலையால் பொறுக்க முடியாது. கைகையி தான் விரும்பியதை அடைவாள். நான் என்ன செய்வேன் என்று சொல்லிக் கொண்டே குடிலுக்கு ஓடு லட்சுமணா ஓடு என்று ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.

லட்சுமணன் கண்ணீர் மல்க ராமரிடம் பேச ஆரம்பித்தான். அண்ணா நான் என்ன செய்வேன். உங்கள் குரலைப் போன்ற சத்தம் வந்ததும் சீதைக்கு பெரும் பயம் வந்து விட்டது. நடுங்கிப் போனார். ஓடு லட்சுமணா ஓடு போ போ என்று என்னை துரத்தினாள். வந்தது உங்கள் குரல் அல்ல அது ராட்சசனின் ஏமாற்று வேலை உங்களை எந்த ராட்சசனும் எதிர்த்து வெற்றி பெற முடியாது என்று எவ்வளவு சொல்லியும் சீதை கேட்கவில்லை. மனம் வருந்தும் படியான வார்த்தைகளை சொல்லி நீ செல்லவில்லை என்றால் இப்போதே இறந்து விடுவேன் என்று சொல்லி ஆற்றில் விழுந்து போவதற்கும் துணிந்து விட்டார்கள். பேசக்கூடாத வார்த்தைகளை சொல்லி என்னை மிகவும் துன்புறுத்தி துரத்தினார்கள். நான் வேறு வழி இல்லாமல் வந்தேன் என்று லட்சுமணன் சொல்லி முடித்தான். ராமர் பேச ஆரம்பித்தார். நீ சொல்லும் சமாதானத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்ணாய் பிறந்தவள் பயத்தால் சில நேரம் ஏதேதோ பேசுவாள். அது போல் பெண்ணான சீதையும் பயத்தால் வந்த அஞ்ஞானத்தால் பேசியிருக்கிறாள். அதனை நீ பொறுத்திருக்க வேண்டும். அவளை தனியாக விட்டு நீ எப்படி வரலாம். நீ செய்தது தவறு. சீதையை இனி நான் காணப்போவதில்லை என்று லட்சுமனணிடம் கோபத்தில் பேசிக்கொண்டே ஓடினார். வரும் வழி எங்கும் அபசகுனங்கள் தென்பட்டன. குடிலுக்கு இருவரும் வந்து விட்டார்கள்.

சீதை இல்லாத குடில் சூன்யமாக தென்பட்டது. சீதையை காணாமல் ராமரின் இதயம் உடைந்து அங்கேயே விழுந்தார். மான் தோலும் தர்ப்பையும் சிதறிக்கிடந்தது. தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு போயிருப்பாளோ என்று ஆற்றுக்கு அருகில் ஓடினார். தோட்டம் செடி கொடிகள் என்று குடிலை சுற்றி சீதையை தேடி ஓடினார். சீதை எங்கும் காணவில்லை. சீதையை எங்கு கொண்டு போனார்களோ? என்ன செய்தார்களோ? எவ்வளவு பயந்து போயிருப்பாள். என்று கண்ணில் நீர் வழிய தன் சுய சிந்தனையை இழந்து சீதை சீதை என்று காட்டில் அங்கும் இங்கும் தேடி பிதற்றிக்கொண்டே ஓடினார் ராமர். எங்கும் சீதையை காணவில்லை. லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். இனி என் உடலில் உயிர் இருக்காது. தந்தை ஜனகர் இருக்குமிடம் நான் சென்று விடுவேன். நான் இட்ட ஆணையை நிறைவேற்றாமல் இங்கு வந்துவிட்டாயே என்று தந்தை என்னிடம் கோபம் கொள்வார் என்று அழ ஆரம்பித்தார் ராமர். அண்ணா தங்களின் மேன்மைக்கு நீங்கள் இப்படி அழுவது தகாது. இருவரும் காடு முழுவதும் தேடிப்பார்ப்போம். குகைகளிலும் காட்டிற்குள் செல்வதும் ஆற்றில் குளிப்பதும் விளையாடுவதும் தோட்டத்தில் பூக்களுடன் இருப்பதும் சீதைக்கு பிடித்தமான செயல். எங்காவது அருகில் விளையாடிக் கொண்டிருப்பார். நம்மை சோதிக்க இப்படி விளையாடுகிறாள் என்று எண்ணுகிறேன். வாருங்கள் இருவரும் சென்று தேடுவோம் என்றான். இருவரும் காடு மலை ஆறு என்று காடு முழுவதும் தேடினார்கள். சீதை எங்கும் காணவில்லை.

பிள்ளை உறங்கா வில்லிதாசர்

வில்லிதாசர் என்பவர் அவருடைய மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் தனுர்தாசர். அவருடைய மனைவியின் கண்கள் மிகவும் பிரகாசமாக அழகுடன் இருந்தது. இதனால் தன் மனைவியிடம் மிகவும் அன்புடன் இருந்தார். பெரிய செல்வந்தரான இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராகவும் இருந்தார். அந்த ராஜ்யத்தில் வீரம் பொருந்தியவராக இருந்ததால் நாட்டில் நன்மதிப்புடன் விளங்கினார். ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களுடன் நடந்து சென்ற பொழுது வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சிக்கு வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு கையால் குடை பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் அவள் நடக்கும் பொழுது அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார். வில்லிதாசருடைய அன்யோன்யமான இச்செயலைக் கண்டு வியப்படைந்த ராமானுஜர் வில்லிதாசரை அழைத்து அந்த பெண்மணிக்கு சேவை செய்வதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு வில்லிதாசர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன். மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான் எதையும் செய்யத் தயார் என்றும் கூறினார்.

இதனைக் கேட்ட ராமானுஜர் அழியப்போகும் அழகின் மேல் இவ்வளவு ஆசையாய் இருக்கிறாரே என்று வில்லிதாசரிடம் உங்கள் மனைவியின் கண்களை விட வேறு ஒரு அழகான கண்களைக் காண்பித்தால் அதற்கு அடிமையாகி விடுவீர்களா என்று கேட்டார். வில்லிதாசரும் அத்தகைய கண்களை காண்பித்தால் அந்த கண்களுக்கு தான் அடியாமையாவதாக ஒப்புக்கொண்டார். ராமானுஜர் வில்லிதாசரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துச் சென்று திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் காட்டியருளிய அழகிய கண்களை வில்லிதாசருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார். ரங்கநாதரும் தம்முடைய அழகிய கண்களை வில்லிதாசருக்கு காட்டியருளினார். வில்லிதாசரும் அக்கண்களின் உண்மையான அழகை உணர்ந்து உடனே ராமானுஜரிடம் சரணடைந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார். வில்லிதாசருடைய மனைவியும் ராமானுஜருடைய பெருமையை உணர்ந்து ரங்கநாதரிடம் சரணடைந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டினாள். தம்பதிகள் இருவரும் தங்களுடைய உடைமைகளைத் துறந்து ரங்கநாதர் மற்றும் ராமனுஜருடைய திருவடித் தாமரைகளுக்குத் தொண்டு செய்வதற்காக ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். தன் சீடரான வில்லிதாசருக்கு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கருவறை மற்றும் கோயில் நகைகளை காக்கும் பணியை ராமானுஜர் ஒப்படைத்தார்.

ஸ்ரீரங்கநாதர் வில்லி தாசரை முழுமையாக ஆட்கொண்டார். ஸ்ரீ ராமரின் வனவாசத்தின் பொழுது லட்சுமணன் உறங்காமல் ராமருக்கு காவல் காத்தது போல் வில்லி தாசரும் ரங்கநாதரை இடைவிடாமல் துதித்துக் கொண்டிருந்தார். இதனால் அவருக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் என்ற திருநாமம் ஏற்பட்டது. வில்லிதாசரும் அவர் மனைவியும் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் ஆனர்கள். ராமானுஜருக்கு பணிவிடை செய்து தங்களுடைய எளிமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை ரங்கநாதரின் கடைசி நாள் உற்சவம் தீர்த்தவாரியன்று ராமானுஜர் வில்லிதாசரின் கரங்களை பிடித்தபடி கோயிலின் குளத்திலிருந்து ஏறி வந்தார். இதனை கண்ட சீடர்கள் சன்யாசியாகிய ராமானுஜர் பிறப்பால் தாழ்ந்த வில்லிதாசரின் கரங்களை பிடிப்பது முறையில்லை என்று நினைத்தார்கள். சீடர்கள் தாங்கள் நினைத்ததை ராமனுஜரிடம் கூறினார்கள்.

ராமானுஜர் வில்லிதாசர் மற்றும் அவரது மனைவி பொன்னாச்சியாரின் மகிமையை சீடர்கள் அனைவரும் புரிந்து கொள்வதற்காக சீடர்களிடம் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்று அங்கேயுள்ள நகைகள் பொருட்கள் அனைத்தையும் முடிந்தவரை களவாடிக் கொண்டு வரச்சொன்னார். சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்ற பொழுது பொன்னாச்சியார் உறங்கிக் கொண்டிருந்தார். மிகவும் நிசப்தமாக அவரிடம் சென்று அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்ற முற்பட்டனர். பொன்னாச்சியாரும் இந்த இவர்கள் வறுமையின் காரணமாக களவாடுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் நகைகளை எளிதில் கழற்றுவதற்கு இடம் கொடுத்தார். அந்த சீடர்கள் அவருடைய ஒரு பக்கத்தின் நகைகளை கழற்றிய பின் அடுத்த பக்கத்தின் நகைகளை எளிதில் கழற்றுவதற்காக தான் இயல்பாக தூக்கத்தில் திரும்புவது போல பாசாங்கு செய்தார். ஆனால் அவர் திரும்புவதைக் கண்டு அச்சமடைந்த சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திலிருந்து ராமானுஜரிடம் ஓடினர். நடந்த சம்பவங்களைக் கேட்டபின் ராமானுஜர் சீடர்களை மறுபடியும் வில்லிதாசரின் இல்லத்திற்கு சென்று அங்கு நடப்பவைகளை கவனிக்கச் சொன்னார்.

ராமானுஜரின் உத்தரவுப்படி மீண்டும் வந்த சீடர்கள் வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சியாரிடம் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். வில்லிதாசர் பொன்னாச்சியாரின் ஒரு பக்க நகைகளை மட்டும் காணவில்லை எங்கே என கேட்டார். அதற்கு பொன்னாச்சியார் சிலர் தான் அணிந்திருந்த நகைகளை களவாட வந்த பொழுது நான் உறங்குவது போல் பாவனை செய்து அவர்கள் எளிதில் களவாடும்படி செய்தேன். பிறகு அவர்கள் அடுத்த பக்கம் களவாடுவதற்கு ஏதுவாக நான் திரும்பிப் படுக்கும் பொழுது அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட வில்லிதாசர் மன வருத்தமுற்று நீ கல்லை போல கிடந்து அவர்கள் விருப்பம் போல நகைகளை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் இருவரும் களவாட வந்தவர்களுக்குக் கூட உதவும் மனப்பான்மை உடையவர்களாக இருந்தனர். வில்லிதாஸர் தம்பதிகளுடைய உரையாடலைக் கேட்ட சீடர்கள் ராமானுஜரிடம் திரும்பச் சென்று நடந்தவைகளை விவரித்து அந்த சிறந்த தம்பதிகளின் பெருந்தன்மையை ஒப்புக் கொண்டனர். அதற்கு மறுநாள் ராமானுஜர் வில்லிதாசரிடம் நடந்தவற்றை விவரித்து நகைகளை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.

வில்லிதாசர் தனது இறுதி நாட்களின் பொழுது வைஷ்ணவர்கள் அனைவரையும் தனது இல்லத்திற்கு அழைத்துத் பாதபூஜைகள் செய்தார். அப்பொழுது பொன்னாச்சியாரிடம் தாம் பரமபதத்தை அடையப் போவதாகவும் நீ தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராமானுஜரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டே தனது திருமேனியை நீத்தார் வில்லிதாசர். வைணவர்களுக்கு உண்டான முறைப்படி அவருக்கு இறுதிக்கடன்களை செய்தார்கள் வைணவர்கள். வில்லிதாசரின் திருமேனியை பல்லக்கில் வைத்து தெருக்கோடி வரை சென்றவுடன் வில்லிதாசரின் பிரிவை தாங்கமுடியாமல் பொன்னாச்சியார் வாய்விட்டு கதறி அழுது தன் உயிரை அப்பொழுதே நீத்தார். அதைக்கண்டு திகைத்த வைணவர்கள் பொன்னாச்சியாரையும் வில்லிதாசருக்கு பக்கத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர். மணவாள மாமுனிகள் இயல் சாற்றுமுறையை (உற்சவகாலங்களின் முடிவில் ஓதப்படுவது) பல்வேறு ஆசார்யர்களின் பாசுரங்களின் அடிப்படையாக கொண்டு தொகுக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசர் இயற்றிய பாசுரம் முதலில் இடம்பெற்றுள்ளது. பிள்ளை லோகாச்சார்யர் தனது தலை சிறந்த க்ரந்தமான ஸ்ரீவசன பூஷணத்தில் எம்பெருமானின் மங்களாசாஸனத்தை விவரிக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசரைக் கொண்டாடியுள்ளார்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 29

சீதை எந்த பயமும் இல்லாமல் ராவணனிடம் தைரியமாக பேச ஆரம்பித்தாள். ராட்சசர்கள் இருக்கும் தண்டகாருண்ய காட்டில் ராமருடன் தனியாக வசித்தேன். எங்களை எதிர்த்து வந்த உன்னுடைய ராட்சச படைகளை ஒற்றை ஆளாய் கன நேரத்தில் அழித்தவர் என் கணவர். தேவ அசுரர்களால் கொல்லப்பட கூடாது என்று நீ வரம் வாங்கியதினால் யாராலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் என்னை தந்திரமாக தூக்கி வந்து விட்டாய். இதனால் ராமரின் பகையை பெற்றுவிட்டாய். நீ எத்ததை பெரிய சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தாலும் நீ பெற்ற உன்னுடைய வரம் இனி உன்னை காப்பாற்றாது. எத்தனை யோசனை தூரத்தில் நீ என்னை கடல் தாண்டி தூக்கி வந்தாலும் கடலை வற்றச் செய்து என்னை தேடி வருவார் என் ராமர். நீ செய்த தீ வினையால் நீயும் அழிந்து உன் குலமும் அழிந்து உன் லங்காபுரி நகரமே அழிந்து போகப்போகிறது. என் உயிரையும் உடலையும் காப்பாற்றிக்கொள்ள உன் வசமாவேன் என்று எண்ணாதே. உலகத்தாரால் இகழப்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை என்று ராவணனிடம் கர்ஜனையுடன் சீதை பேசி முடித்தாள்.

சீதை பேசிய அனைத்தையும் கேட்ட ராவணன் உனக்கு பன்னிரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் என் சொல்படி நடந்துகொள். இல்லையென்றால் அவகாச காலம் முடிந்ததும் உன்னை என் சமையல்காரர்கள் எனது காலை உணவிற்கு உன்னை சமைத்து விடுவார்கள் எச்சரிக்கிறேன் என்று சொல்லி விட்டு காவல் காக்கும் ராட்சசிகளை தனியாக அழைத்தான். இவளை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள். அங்கு இவளுடைய பிடிவாதத்தையும் கர்வத்தையும் எப்படியாவது நீங்கள் அழிக்க வேண்டும். பயத்தாலும் நயத்தாலும் தந்திரமாகவும் பேசி இவளை என் சொல்படி நடந்து கொள்ள வையுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டு தன் அரண்மனைக்கு சென்றான். ராட்சசிகள் சீதையை அசோகவனம் கொண்டு சென்றார்கள். ரம்யமாக வடிவமைக்கப்பட்ட பூந்தோட்டத்தில் அகோரமான ராட்சசிகளுக்கு மத்தியில் சீதை துயரத்துடன் இருந்தாள். ராவணன் நம்மை தூக்கி வந்த செய்தியை ராமரும் லட்சுமணனும் எப்படியாவது தெரிந்து நாம் இருக்கும் இடத்தை வந்தடைந்து ராட்சசர்களை கொன்று நம்மை காப்பாற்றுவார். அதுவரை இந்த ராட்சசிகளுக்கு பயப்படாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

ராமர் தான் வாழ்ந்து வந்த குடிலில் இருந்து மிகவும் தூரத்தில் இருந்தார். குடிலில் சீதை என்ன மனநிலையில் இருப்பாள் என்று கற்பனை செய்த வண்ணம் குடிலுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தார். இந்நேரம் லட்சுமணனை காட்டிற்குள் செல்ல வற்புறுத்தி இருப்பாள். லட்சுமணன் என் உத்தரவை மீறி நடக்க மாட்டான். அதனால் சீதை கோபமடைந்து சொல்லக்கூடாத வார்த்தைகளை சொல்லியிருப்பாள். வட்சுமணன் என்ன முடிவெடுப்பான் என்று தெரியவில்லை. லட்சுமணன் குடிலில் சீதையை தனியாக விட்டு கிளம்புவதற்குள் எப்படியாவது குடிலுக்கு விரைந்து சென்றுவிட வேண்டும் என்று எண்ணிய ராமர் விரைவாக நடக்க ஆரம்பித்தார். எதிரே லட்சுமணன் வருவதை கண்டு அதிர்ந்தார். தாம் நினைத்த படியே நடந்து விட்டதே என்று லட்சுமணா என்று கத்தினார். காட்டின் நடுவே சீதையை தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டாய். அவளை ராட்சசர்கள் கொன்று தின்று விடுவார்களே ராட்சசர்களிடம் அவள் தப்ப முடியாதே தவறான காரியத்தை செய்துவிட்டாயே என்று லட்சுமணனிடம் பேசியவாறு குடிலுக்கு மிகவும் விரைவாக நடக்க ஆரம்பித்தார் ராமர்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 28

ராமருடன் வாழ்ந்த காட்டில் இருந்து வெகு தூரத்தில் கடலால் சூழப்பட்ட நாட்டில் பெரிய அரண்மணையில் தாம் இருப்பது சீதைக்கு தெரியவில்லை. ராமருடைய வீரத்தையும் சாமர்த்தியத்தையும் அறிந்த சீதை ராமர் விரைவில் வந்து ராவணனை கொன்று விட்டு தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள். ராட்சசனான ராவணன் தன்னிடம் மிருகத்தனமாக ஏதும் நடந்து கொள்ளவில்லை என்று ஆறுதலுடன் இருந்தாள்.

சீதை தனது அரண்மனையை சுற்றிப் பார்த்தால் அங்கிருக்கும் ராஜபோகங்களை கண்டு தனக்கு அடிபணிவாள் என்று எண்ணிய ராவணன் சீதையை பார்த்துக் கொள்ளும் ராட்சஷிகளை அழைத்து அரண்மனையை சுற்றிக் காட்டுமாறு உத்தரவிட்டான். உலகத்தில் எந்த அரசனிடமும் இல்லாத செல்வங்களுடன் ராஜபோகத்துக்கு உரிய பொருட்களுடன் ராவணனின் செல்வம் நிறம்பிய அரண்மனையை சுற்றிக் காண்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நவரத்தினங்களும் பொன்னும் மணியும் பட்டும் குவிந்திருந்தன. கண்ணைக் கவரும் படியான விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்கள் மேடைகள் என ராஜ்ய அதிகாரத்தினால் பெற்ற அத்தனை செல்வங்களையும் அந்த அரண்மனையில் சீதை கண்டாள். அவளுடைய மனதில் ராமர் எப்பொது வருவார்? எப்படி வருவார்? எப்போது காண்போம்? என்ற எண்ணத்தை தவிர சீதையின் மனதில் வேறு ஒன்றும் ஓடவில்லை.

சீதையை மீண்டும் காண அவள் இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்தான் ராவணன். ராட்சஷிகள் சரியாக காவல் இருக்கின்றார்களா என்பதை சரி பார்த்துக் கொண்டான். சீதை சோகத்தில் கண்ணீர் நிறைந்த கண்களோடு இருப்பதைக் கண்டான். எப்படியாவது சீதையை அடைந்து விட வேண்டும் என்று எண்ணி ஏற்கனவே பேசியதை போலவே சீதையிடம் தன் வீரப்பிராதபங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தான் ராவணன். நீங்கள் வாழ்ந்த காட்டில் இருந்து 100 யோசனை தூரத்தில் இருக்கும் கடல் சூழ்ந்த எனது லங்காபுரி நாட்டில் நீ இப்போது இருக்கிறாய். இந்த நாட்டை சுற்றி இரவு பகலாக பல மகா ராட்சசர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். என் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. நாட்டில் இருந்த விரட்டப்பட்ட ஒரு மனிதனை எண்ணி கவலையோடு இருக்கிறாய்.

ராமனால் இங்கு வர முடியாது. உன் ஆயுட்காலம் முழுக்க நிச்சயம் நீ ராமனை பார்க்க முடியாது. என் பதவியையும் மறந்து உன்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரது தலையும் என் காலடியில் இருக்க என் தலையை உன் பதங்களில் வைத்து கேட்டுக் கொள்கிறேன். நான் உன் அடிமையாக இருப்பேன். எனக்கு அடிமையாக இருக்கும் அனைத்து தேவர்களும் உனக்கும் அடிமைகள் ஆவார்கள். என் வாழ்நாளில் இவ்வாறு நான் யாரையும் கெஞ்சியது இல்லை. நான் சொல்வதை கேள். வேறு யோசனை செய்யாதே. குபேரனை வெற்றி பெற்ற லங்கேசன் மனைவியாகி விடு. நீ இதற்கு ஒப்புக்கொள்வதில் பாவம் ஒன்றும் இல்லை. இந்த ராஜ்யம் முழுவதும் உன்னுடையதாக எண்ணிக்கொள். இந்த ஆயுட்காலம் முழுவதும் நாம் சந்தோசமாக வாழலாம். உன்னுடைய அழகிய முகத்தில் துக்கம் இருக்கக்கூடாது மகிழ்ச்சியுடன் இரு என்று சீதையிடம் சொல்லி முடித்தான் ராவணன்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 27

சீதை ஆகாயத்தில் சென்று கொண்டிருக்கும் போது தைரியமாக ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். உன் குலத்தின் பெருமைகளையும் உன்னுடைய வீரப்பரதாபங்களையும் கம்பீரமாக என்னிடம் சொல்லி பெரிய சூரனைப் போல் நடந்து கொண்டாய். ஆனால் ராமருடன் யுத்தம் செய்ய தைரியம் இல்லாமல் ஒரு கோழையைப் போல் தன் துணைவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணை மாறுவேடம் தரித்து ஏமாற்றி தூக்கிச் செல்கிறாய். இது தான் உனது வீரமா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்னை காப்பாற்ற வந்த வயதான ஒரு பறவையை கொன்ற கோழை நீ. உன்னுடைய இந்த கீழ்தரமான செயலினால் உன் குலத்திற்கே நீ அவமானத்தை தேடிக் கொடுத்திருக்கிறாய். என்னை தூக்கிச் சென்று உன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறாயா? உன்னுடைய பதினான்காயிரம் ராட்சசர் படைகளையும் என் ராமர் ஒருவராக நின்று அனைவரையும் அழித்திருக்கிறார் ஞாபகம் வைத்துக்கொள். என் ராமரின் கண்ணில் பட்ட அடுத்த கனம் அவருடைய வில்லில் இருந்து வரும் அம்புகள் உன்னை கொன்று விடும். தந்திரங்கள் மூலமாகவும் மாயா ஜாலங்கள் மூலமாகவும் தப்பிப் பிழைப்போம் என்று கனவு காணாதே. நிச்சயமாக நீ அழிந்து போவாய் என்று ராவணனை திட்டிக்கொண்டே இருந்தாள்.

சீதை பேசிய எதையும் ராவணன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சீதையை அடைந்து விட்டோம் என்று தன் நினைத்து வந்த செயலை நிறைவெற்றி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் ராவணன். ரதம் வில்லில் இருந்து சென்ற அம்பு போல் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் கீழே மலை மீது வேடர்கள் சிலரையும் வானரங்கள் சிலரைக் கண்டாள் சீதை. ராமர் தன்னை தேடி வந்தால் அவருக்கு வழி தெரிய வேண்டும் என்று தன்னுடைய ஆபரம் ஒன்றை எடுத்து வானரங்கள் இருக்கும் மலையை நோக்கி வீசினாள் சீதை. வானத்தில் ராட்சசன் பிடியில் இருக்கும் பெண் தங்களை நோக்கி எதோ ஒன்றை தூக்கி எறிவதை வானரங்கள் பார்த்து அதனை எடுக்க ஓடினார்கள்.

ரதம் பல காடுகளையும் மலைகளையும் கடலையும் தாண்டி இலங்கையை சென்றடைந்தது. துயரத்தில் இருந்த சீதையுடன் தன் அந்தப்புரத்தை அடைந்தான் ராவணன். அங்கிருக்கும் ராட்சச பணிப்பெண்களை அழைத்தான். இவளிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவுடனும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இவளை மிகவும் ஜாக்கிரதையாகவும் ஆண்கள் யாரும் இவளிடம் பேசாமலும் இவள் அருகில் நெருங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவள் கேட்கும் வைர வைடூரியங்கள் முத்து என்று எது கேட்டாலும் கொடுத்து அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். இவள் வருத்தப்படும்படி யாரேனும் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் அனைத்து மரியாதைகளும் இவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சீதை கிடைத்து விட்ட பெருமிதத்தில் அங்கிருந்து கிளம்பினான். அரண்மனைக்கு வந்த ராவணன் சாமர்த்தியமான இரண்டு ஒற்றர்களை அழைத்தான். நீங்கள் இருவரும் ராமர் வாழும் காட்டிற்கு செல்லுங்கள். ராமர் எனக்கு எதிரி எப்படியாவது அவன் அழிய வேண்டும். ராமன் இருக்கும் வரையில் எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. ராமன் என்ன செய்கிறான் என்று மறைந்திருந்து பார்த்து தினந்தோறும் தகவல் தெரிவிக்கவேண்டும். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது தைரியமாக செல்லுங்கள் என்று உத்திரவிட்டான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 26

சீதையின் குரலைக் கேட்ட கழுகு அரசனான ஜடாயு சீதையை யாரோ தூக்கிச் செல்கின்றார்கள் என்று உணர்ந்து கொண்டான். வேகமாக பறந்து சென்று ரதத்தின் முன்பாக நின்று ராவணனை தடுத்தான் ஜாடாயு. இதனை கண்ட சீதை ஜடாயுவை பார்த்து இவன் ராட்சசர்களுக்கு தலைவன் இலங்கை அரசன் ராவணன் ஆயுதங்கள் பல வைத்திருக்கின்றான். நீங்கள் எதிர்த்தால் உங்களை கொன்று விடுவான். உங்களால் என்னை மீட்க முடியாது. ராமர் இங்கு வந்ததும் அவரிடம் இந்த செய்தியை சொல்லி விடுங்கள் என்று கதறியபடியே கூறினாள். ராவணன் ஜடாயுவை பார்த்து யார் நீ சிறிய பறவையான நீ என்னை தடுக்கின்றாய் தூரமாக விலகிப்போ என்று விரட்டினான்.

ஜடாயு ராவணனிடம் எனது பெயர் ஜடாயு கழுகு ராஜன். நீண்ட நாள் உன்னைப் போல் ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்தவன். பெண்களை காப்பது அரசனுடைய கடமை. அதற்கு மாறாக அரசனாகிய நீ இத்தகைய கீழ்தரமான காரியங்களை செய்யக்கூடாது. சீதை யார் உன்று உனக்கு தெரியுமா? ஒரு ராஜ குமாரியை அவளது துணைவன் இல்லாத போது இப்படி தூக்கிச் செல்லக்கூடாது. உடனே அவளை விட்டுவிட்டுப் போ இல்லை என்றால் அழிந்து போவாய். ராமர் மீது உனக்கு பகை இருந்தால் அவருடன் யுத்தம் செய். அதை விட்டு ராமர் இல்லாத சமயத்தில் வந்து சீதையை தூக்கிச் செல்கிறாய். இது தான் உன்னுடைய வீரமா? ராமருடன் யுத்தம் செய்ய உனக்கு தைரியம் இல்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. ராமருடன் நீ யுத்தம் செய்தால் ஏற்கனவே ராமரின் கைகளால் அழிந்த உனது சேனைப் படைகளாக இருந்த ராட்சசர்களுக்கு நிகழ்ந்த கொடுரமான மரணம் தான் உனக்கு நிகழும். யமனுடைய பாசக்கயிறு உன் கழுத்தின் மேல் விழுந்து உன்னை இழுத்துச் செல்ல தயாராக இருப்பதை நீ அறியாமல் இருக்கிறாய். நான் மிகவும் வயதான முதியவன். ஆயுதம் எதும் இன்றி இருக்கிறேன். நீயோ சிறுவன் கவசம் பூண்டு வில் அம்பு ஆயுதங்களுடன் இருக்கிறாய். சீதையுடன் நீ இங்கிருந்து செல்ல நான் உன்னை விட மாட்டேன். என்னை மீறி சீதையை தூக்கிச் செல்ல உன்னால் முடியாது. கோழையே இதோ உன் முன் நிற்கின்றேன். தைரியம் இருந்தால் என்னுடன் யுத்தம் செய். நான் உயிரோடு இருக்கும் வரையில் உன்னால் சீதையை தூக்கிச்செல்ல முடியாது. எனக்கு பயந்து ஓடாதே நில் என்று கர்ஜித்தான் ஜடாயு.

ஜடாயுவின் பேச்சைக் கேட்ட ராவணன் கோபத்தில் ஜடாயுவை தாக்க ஆரம்பித்தான். கூரிய அஸ்திரங்களை ஜடாயு மீது விடுத்தான் ராவணன். சிறகால் செய்யப்பட்ட மலை போல் நின்ற ஜடாயு தனது கூரிய நகங்களால் அனைத்தையும் தடுத்து ராவணனின் வில்லை உடைத்து ராவணனை தாக்க ஆரம்பித்தான். மிகவும் முதியவனான ஜடாயு ராவணனின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விரைவில் சோர்ந்து போனான். அழுத முகத்துடன் இருந்த சீதையை கண்டதும் மீண்டும் புத்துயிர் பெற்றது போல் எழுந்த ஜடாயு மீண்டும் ராவணனை ஆக்ரோசமாக தாக்க ஆரம்பித்தான். ராவணனின் கைகளை ஒவ்வொன்றாக தனது அழகால் கொத்தி துண்டாக்கி வீசி எறிந்தான் ஜடாயு. ராவணனுக்கு புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தது. வெகு நேரம் நடந்த யுத்தத்தில் ராவணனின் கை ஓங்கியது. மிகவும் சோர்வடைந்திருந்த ஜடாயுவின் இறகுகளையும் கால்களையும் வெட்டி எறிந்தான் ராவணன். இறகுகளும் கால்களும் இழந்த ஜடாயு ராவணனை எதிர்க்க இயலாமல் கீழே விழுந்தான். ஜடாயுவை கண்ட சீதை என் கணவருக்கு இன்னோரு தந்தையாக வந்தீர்களே. தசரதர் மீண்டும் உயிர் பெற்று வந்ததை போல் யுத்தம் செய்து இப்போது எனக்காக உயிரை விடப் போகின்றீர்களே ராமா எங்கிருக்கின்றார்கள். லட்சுமணா எங்கிருக்கிறாய் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே இருந்தாள். ஜடாயு பறவை நிற்க கூட முடியாமல் விழுந்து கிடப்பதை கண்டு திருப்தி அடைந்த ராவணன் சீதையுடன் ஆகாய மார்க்கமாக சென்றான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 25

ராமர் லட்சுமணனுடன் வந்து விடுவார் என்று காத்திருந்த சீதை தனது குடிலில் முன் வந்திருக்கும் தபஸ்வி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்துடன் யோசித்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை என்றால் கோபத்தில் அவர் சாபம் ஏதும் விட்டு விடுவாரோ என்ற பயத்தில் அழுத முகத்தை துடைத்துக்கொண்டு முறைப்படி வரவேற்று உபசாரம் செய்தாள். ராவணன் கேட்ட கேள்விகளுக்கு நடந்தவற்றை பதிலாக சொல்லிக்கொண்டே ராமர் வந்து விட்டாரா என்று வாசலை பார்த்துக் கொண்டே இருந்தாள். ராவணன் ராட்சச குலத்தின் பெருமைகளை சொல்லியும் ராமனை இகழ்ந்தும் பேசினான். இலங்கையின் பெருமைகளை சொல்லியும் தனது அரண்மனையின் பெருமைகளையும் சொன்னான். நான் ஆகாயத்தில் நின்று இந்த மண்ணுலகை இரு கைகளாலும் தூக்குவேன். யமனுடன் யுத்தம் செய்து யமனையும் கொல்வேன். கூரிய அம்புகளை விட்டு சூரியனின் கதிர்கள் இங்கு வருவதையும் தடுப்பேன். விருப்பப்படி எனது உருவத்தை என்னால் மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவன் நான். காட்டில் சுற்றி திரியும் ராமனை விட்டு என்னுடன் வந்து விடு. உன்னை என்னுடைய அரண்மனைக்கு பட்டத்து அரசியாக்கி விடுகிறேன். தேவலோகத்தில் உள்ள தேவர்களும் தேவதைகளும் உனக்கு அடிமையாக இருப்பார்கள். ஈரேழு பதினான்கு உலகத்திற்கும் நீ அரசியாக இருப்பாய் என்று ஆசை காட்டினான் ராவணன்.

சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள். மாமலையைப் போல அசைக்க முடியாதவர் என் கணவர். அனைவராலும் விரும்பப்படும் சத்தியம் தவறாதவர். ஐந்து புலன்களையும் வென்ற கருணை உள்ளம் கொண்டவர். ஆண் சிங்கம் போன்ற அவரிடம் பெண் சிங்கம் போன்று இருக்கும் என்னை அடைய முயலும் குள்ள நரியே சூரியனின் கதிர்களை எவராலும் தொட முடியாது. அது போல் உன்னால் என்னை தொட கூட முடியாது. உனது ஆயுளை சீக்கிரமாக முடித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டாய் என்று நினைக்கிறேன். எனது கணவர் இங்கு வருவதற்குள் ஓடிவிடு. இல்லையேல் அவரின் அம்புக்கு நீ இரையாவாய். இந்த குடிலை விட்டு வெளியே போ என்று கத்தினாள்.

சீதையின் பேச்சைக் கேட்ட ராவணன் தனது ராட்சச உருவத்தை அடைந்தான். எனது பெருமைகளையும் வீரப்பிராதபங்களை கூறினேன். அனைத்தையும் கேட்ட நீ நான் சொல்வதற்கு உடன் படவில்லை என்றால் நீ மிகவும் கர்வம் கொண்டவள் என்று நினைக்கிறேன். உன்னை நான் இங்கிருந்து தூக்கிச் செல்கிறேன். உன் ராமன் உன்னை எப்படி வந்து காப்பாற்றுகிறான் என்று நான் பார்க்கிறேன் என்றான். சீதை இருக்கும் குடிலை சுற்றி லட்சுமணன் வரைந்த கோடு மீறி சீதை வெளியே வந்தால் தான் அவளை தூக்கிசெல்ல முடியும். விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் தன் தலை வெடித்து விடும் என்ற தன் முன்வினையால் பெற்ற சாபத்தினால் சீதையை தொடாமல் தூக்க வேண்டும் என்பதால் அந்த குடில் இருக்கும் பூமியை அப்படியே தன் மந்திர சக்தியால் தூக்கி தனது ரதத்தில் வைத்து ரதத்தை செலுத்த கட்டளையிட்டான் ராவணன்.

சீதை கதற ஆரம்பித்தாள். ராமா எங்கு சென்றீர்கள்? என்னை காப்பாற்ற வாருங்கள். லட்சுமணா அண்ணனின் தலை சிறந்த பக்தனே உன்னை தகாத வார்த்தைகளின் திட்டி உன் பேச்சை கேட்காமல் உன்னை துரத்தினேனே. மரங்களே செடிகளே என்னை இந்த ராட்சசன் தூக்கிச் செல்வதை ராமர் வந்ததும் சொல்லுங்கள் என்று சத்தமாக கதறிக்கொண்டே இருந்தாள்.

கபீர்தாஸர்

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் முன்பு சுகப்பிரம்மர் வணங்கி நின்றிருந்தார். பாரத பூமியில் பக்தி குறைந்திருந்த அந்த சமயத்தில் நாராயணன் சுகப்பிரம்மரை பூமியில் அவதரிக்க ஆணையிட்டார். மறுபடியும் ஒரு கருவறைக்குள் புக விரும்பாத சுகப்பிரம்மர் சுயம்புவாக பூமியில் காசியில் உள்ள கங்கை கரையில் தோன்றினார்.

புண்ய சேத்ரங்களிலேயே சிறந்த காசி மாநகரில் தமால் எனும் பெரியார் ஒருவர் தன் மனைவியுடன் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். இருவரும் நாள் தோறும் ஒருவருக்காவது அன்னதானம் செய்தும் தான் நெய்த துணிகளை தானமாக வழங்கி விட்டு தான் உணவு அருந்துவார்கள். இருவருமே தங்களுக்கென ஒரு குழந்தை இல்லை என பெரிதும் வருந்தினார்கள். ஒருநாள் விருந்தினராக வந்த பெரியவர் ஒருவர் அவர்களது சேவையை கண்டு வியந்து நீங்கள் செய்யும் இந்த விருந்தோம்பல் உங்களோடு நின்று விட இறைவன் விடமாட்டார். இந்த மாபெரும் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களுக்கு ஒரு மகனை அளிப்பார் என்று வாழ்த்திவிட்டு சென்றார். தமால் ஒரு நாள் குழந்தை இல்லையே என மனம் நொந்தவராக துணி நெய்வதற்கான நூல் சுருள்களை அலசுவதற்காக கங்கைக்கு கரைக்கு சென்றார். அங்கும் பலர் பகட்டான வழிபாடுகளைச் செய்வதைக் கண்டு காசிக்கு வந்தும் உலக ஆசைகளில் உழல்கிறார்களே என வருந்தி நினைக்கையில் அவரின் கையில் இருந்த நூல் சுருள் கங்கை நதியோடு சென்றது. இந்த நூல் இருந்தால் துணி நெய்து ஐம்பது பேருக்கு கொடுக்கலாமே என வருந்தியவராக அதைத் தொடர்ந்து கரை ஓரமாகவே ஓடினார். அந்த நூல் சுருள் கங்கையின் வேகத்தில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று மறைந்தது. அவர் நின்ற இடத்துக்கு அருகே ஒரு பர்ணசாலை இருந்தது. வருத்ததுடன் இருந்த தமால் இறைவனை தியானிப்போம் என்று அங்கே அமர்ந்தார்.

கங்கைக் கரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் தமால். நாராயணனின் ஆணைக்கினங்க சுயம்புவாக தோன்றிய சுகப்பிரம்மர் குழந்தையாக அழும் குரல் கேட்டுக் கண் விழித்தார் தியானத்தில் இருந்த தமால். வேறு யாரும் அருகில் இல்லாத நிலையில் தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அவரால் எடுத்துவரப்பட்ட குழந்தையைக் கண்டு அவரது மனைவியும் மனம் மகிழ்ந்தார். அக்குழந்தைக்கு கபீர் எனப் பெயரிட்டனர். கபீர் என்றால் பெரிய என்று பொருள். குழந்தை கபீரின் விளையாட்டுகள் கூட தெய்விக மணம் கமழ்ந்த வண்ணம் இருந்தன. தளர்நடை போட்ட பருவத்திலேயே தந்தையிடம் நெசவும் கற்றான். எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சிறுவன் தெய்வத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டே செய்தான். நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்து வந்தார். சிறுவயதிலேயே கபீருக்கு அவனது பெற்றோர் மணமுடிக்க விரும்பினர்.

முன்பொரு காலத்தில் சுகப்பிரம்மரை மணக்க முயன்று தோற்ற ரம்பை அவர் பூவுலகில் பிறந்திருப்பது அறிந்து அவரைப் பின்பற்றி அவரது உறவினருக்கே சீந்தரா எனும் மகளாகப் பிறந்திருந்தாள். அவளின் அழகைக் கண்டு கபீரின் பெற்றோர் அவளை கபீருக்கு திருமணம் பேசி முடித்தனர். திருமணத்துக்கு முன் தங்களது மத வழக்கப்படி சுன்னத்து செய்ய அவரது உறவினர்கள் முயன்றனர். சுன்னத் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர்களுடன் வாதிட்டுக் கபீர் வென்றார். இதனால் கோபமடைந்த உறவினர்கள் மதச்சடங்குகளை அவமதிக்கும் கபீரை வீட்டை விட்டுத் துரத்த வேண்டுமெனக் கூறினர். கபீரும் வீட்டைத் துறந்து ஓட முயன்றார். கபீரை இழக்க மனமின்றி அவரது பெற்றோர் அவரைத் தடுத்து வீட்டிலேயே தங்கித் தறி நெய்யும்படி கூறினார்கள்.

நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்ற கபீர்தாஸர் ராமரின் வரலாற்றுப் பெருமையை பஜனை வடிவமாக பாடலாக பாடி வளர்ந்து வந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால் நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால் இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் போனது. ஆனாலும் ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. திருமணப் பேச்சு மீண்டும் ஆரம்பித்தது. சுன்னத்து செய்து கொள்ளாதவனுக்கு பெண் கொடுக்கமாட்டோம் எனப் பெண் வீட்டார் கூறிவிட்டார்கள். கபீரின் தாய் தந்தையர் மனம் வெதும்பினர். சீந்தராவின் தந்தையின் கனவில் தோன்றிய இறைவன் உன் மகளைக் கபீருக்கே மணம்முடி எனக்கூறினார். இதனால் தந்தை குழப்பமடைந்த நிலையில் இருந்தார். சீந்தராவும் கபீரையே மணப்பேன் இல்லை என்றால் வேறு ஒருவரை மனதாலும் நினைக்க மாட்டேன் எனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தாள். இறுதியில் இறைவனே ஒரு முதியவர் வேடத்தில் வந்து ஒவ்வொருவரிடமும் சமாதானமாகப் பேசி திருமணத்தை செய்து வைத்தார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் இவருடைய மனம் ஆன்ம ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர் இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது. இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தாலும் ராமரின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். தமாலின் வீட்டில் இரவும் பகலும் தறியின் இசையும் கபீரது இசையும் இறைவனது புகழைப் பாடியபடி இருந்தன. ஒருநாள் மெய்மறந்து கபீர் பாடும் போது அவரது கை நெசவு செய்வதை நிறுத்தி விட்டது. பக்தனின் பணியில் இறைவனே அமர்ந்து தறியை இழுத்தார். தறி தானாகவே நகர்ந்து துணிகளை நெய்தது. ஒரு முழம் துணி நெய்து விட்டு பின்பு கபீர் தியானத்தில் அமர இறைவன் இன்னொரு முழம் நெய்தார். காலையில் வந்து கண்ட அவரது தாயார் சோம்பேறி இரவெல்லாம் நெய்தது இரண்டே முழம்தானா இதை விற்றுப் பணம் வந்தால் தான் உனக்கு இன்று உணவு எனக் கடிந்தார்.

கபீரும் தறியிலிருந்து துணியை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். அந்த அழகிய துண்டை எவரும் வாங்கவில்லை. மனம் தளர்ந்த கபீர் வீட்டிற்கு திரும்பி வரும் போது ஓர் அந்தணர் அந்தத் துணியைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார். கபீர் ஓடி அவரை வழி மறித்துத் துணியைப் பிடித்து இழுத்தார். அந்த இழுபறியில் துணி இரண்டாகக் கிழிந்து விட்டது. தான் கிழித்த துணியைத் தானே எடுத்துக் கொள்வதாகக் கூறிய அந்தணர் சில சோழிகளை அதற்கு விலையாகத் தந்தார். கோபம் கொண்ட கபீர் அந்த சோழிகளை வீசி எறிந்தார். அந்தணரோ என்னிடம் வேறு ஒன்றுமில்லை. அந்தத் துண்டை இலவசமாக தந்தால் நான் பிருந்தாவனம் செல்வதால் அதைக் கண்ணனுக்கு சாத்தி மகிழ்வேன் என்றார். அதை விற்றுப் பணம் எடுத்துச் செல்லாவிட்டால் தான் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதால் கபீர் தர மறுத்தார். ஆனால் அந்தணரோ ராமரின் திருநாமத்தின் பெருமையையும் அதை காசி விஸ்வநாதரே காசியில் இறப்பவர்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசித்து முக்தியளிக்கிறார் என்பதையும் கூறி தானத்தின் பயனைப் பற்றி எடுத்துக்கூறி நீண்டதொரு பிரசங்கம் செய்து அவரது தயக்கத்தைப் போக்கினார். இடைவிடாது ராம நாமத்தை ஜபித்து பக்தி மார்க்கத்தின் வழியாக இறைவனை அடைந்து கொள். அதற்கு சற்குரு ஒருவரைத் தேடி அடைந்து கொள் என்று சொல்லி ஒரு துண்டுத் துணியுடன் மறைந்து விட்டார்.

கபீர் அந்தணர் கூறியபடி ராம நாமத்தினையே துணையாகக் வைத்துக் கொள்வோம் என எண்ணியவராக மீதியிருந்த ஒரு முழத்துண்டை மடித்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தார். கபீரின் எதிரே ஒரு முஸ்லீம் முதியவர் வந்தார். கபீரை நெருங்கி ஐயா குளிர் அதிகமாக இருக்கிறது. நீங்கள் சாதுக்களுக்கு தான தருமங்கள் அளிப்பவர் என்று கேள்விப்பட்டேன். இந்த ஒரு முழம் துணியைத் தந்தால் தலையில் கட்டிக் கொண்டு பனியிலிருந்து காத்துக் கொள்வேன் என்றார். சற்று முன் அந்தணர் கூறியவற்றை மனத்தில் நினைத்தவராக கபீர் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி அந்தத் துண்டை முதியவரிடம் தந்தார். அதற்கு அந்த முதியவர் அல்லாவின் பெயரை சொல்லாமல் ஏதோ ஒரு மனிதனின் பெயரைச் சொல்கிறாயே. உன்னிடம் வாங்க மாட்டேன் எனக்கூறி கபீரின் பெற்றோரிடம் இதனை சொல்வதற்கு கபீரின் வீட்டிற்கு விரைந்தார். தாய் அடிப்பாள் என்று பயந்த கபீர் ஒரு பாழடைந்த வீட்டில் ஒளிந்து கொண்டார். உன் மகன் குலத்தைக் கெடுக்க வந்திருக்கிறான். இன்று காலையில் யாரோ ஓர் அந்தணருக்கு ஓர் அழகான துணியை கொடுத்தான். நான் எனக்குக் கொடுக்கச் சொன்னேன். இரண்டாகக் கிழித்து ஆளுக்குப் பாதி என்கிறான். நான் இத்தனை சின்னத் துண்டு வேண்டாம் என்றேன். என் தாயாரிடம் போய்க் கேள் பெரிய துணியாகக் கிடைக்கும். ஆனால் நான் தானம் செய்ததைச் சொல்லாதே என்று பாழடைந்த இந்த வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கபீரை பற்றி குற்றம் சொல்லி விட்டு சென்றார்.

துணியை விற்ற பணத்துடன் கபீரை எதிர்பார்த்த அவரது தாயார் இதனை கேட்டதும் கபீரை பிரம்பினால் இரண்டு அடி அடித்தார். கபீர் ஹரே ராம் ஹரே ராம் எனக் கதறினார். அந்த அடிகள் இறைவனது முதுகிலும் பட்டன. இருவருக்கும் காட்சி கொடுத்த இறைவன் அம்மா நீ பாக்யவதி கபீர் பரம ஞானி எனது மெய்த்தொண்டன். நீ அவனை அடித்தது எனது முதுகிலும் பட்டிருக்கிறது பார் என்று காட்டினார். இறைவனைக் கண்டு மூர்ச்சையுற்ற தாயாரை தெளிவித்து விட்டு தகுந்த குருவை அடைந்து பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும்படி கூறிவிட்டு மறைந்தார்.

வாரணாசியில் ராமானந்தர் என்ற பெரும் ஞானி பலரைப் பக்திமார்க்கத்தில் வழி நடத்தி வந்தார். கபீர் அவரிடம் உபதேசம் பெற சென்றார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரென அவரை ராமானந்தரின் சீடர்கள் மடத்துக்குள்ளேயே விடாமல் கபீரை தடிகளால் அடித்துத் துரத்தினார்கள். அடிகளையும் பொறுத்துக் கொண்டு கபீர் அங்கேயே உட்கார்ந்து விட்டார். ராமானந்தரை சந்திக்க விடாமல் கபீர் ஒரு திருடன் எனக் கூறி அங்கிருந்து அடித்து விரட்டி விட்டனர். ராமானந்தரிடம் தீட்சை பெற கபீருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. ராமானந்தரோ விடியற்காலையில் கங்கையில் நீராட வருகிறார். அந்தப் படியிலே நாம் படுத்திருந்தால் இருளிலே மிதித்து விடுவார். பெரியோர்கள் தவறு செய்தாலும் நன்மை செய்தாலும் இறைவனுடைய திரு நாமத்தையே சொல்லுவார்கள். அதையே நாம் உபதேசமாகவும் திருவடி தீட்சையாகவும் கொள்வோம் என்று திட்டமிட்டு அன்று இரவே கங்கை படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார். அன்றிரவு ஸ்ரீராம லட்சுமணர்கள் அந்த மடத்தை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறுவதைப் போல ராமானந்தர் கனவு கண்டார். உடனே அலறிக்கொண்டு எழுந்து கங்கைக்கரை நோக்கி சென்றார். கபீரை இருட்டில் மிதித்துவிட்ட ராமானந்தர் வழக்கப்படி ராம் ராம் என உச்சரித்த வண்ணம் கங்கையில் இறங்கி நீராட சென்று விட்டார். அப்போது ராமனந்தர் செபித்த ராம ராம என்ற திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது.

ராம மந்திரத்தை தனது குருவின் பாத தீட்சையாக ஏற்றுக் கொண்ட கபீர் வீட்டுக்குத் திரும்பி நெற்றித் திலகமிட்டு துளசி மாலையணிந்து ராம நாமத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தார். சிறு வயதிலேயே பகவானைப் பற்றி உரையாடல்கள் நிகழ்த்தினார். இதனால் ஊரில் இருக்கும் தன் குல மக்களால் தண்டிக்கப்பட்டார். இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கபீரின் ராமநாம ஜபம் செய்வதினால் அவருக்கு எதிராக முஸ்லீம்கள் நமது மதத்திற்கு எதிரானது என்று அவருடன் வாதிட்டனர். அவர்களுடன் வாதிட்ட கபீர் அவர்களை ராமனும் ரஹீமும் ஒன்றே என்பதையும் இறைவன் ஒருவனே என்றும் வாதிட்டு ஒப்புக்கொள்ள வைத்தார்.

அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற ஒரு மகான் இருந்தார். அவருடைய சீடர் கோரக்நாதர் என்பவர் சில சித்திகள் கைவரப்பெற்றார். அதனாலேயே கர்வம் கொண்டவராக ஊர் ஊராகச் சென்று அனைவரையும் வாதத்தில் வென்றார். ராமானந்தரையும் வெல்ல விரும்பி காசி மாநகரில் அவரது மடத்துக்கு வந்து அவரை வாதத்தற்கு அழைத்தார். ராமானந்தரின் சீடர்கள் கோரக்நாதரை கண்டு ஓடி ஒளிந்தனர். சாந்த சீலரான ராமானந்தர் செய்வதறியாது திகைத்தவராகத் தியானத்தில் ஆழ்ந்தார். இவை யாவற்றையும் கேள்வியுற்ற கபீர் கோரக்கருடன் வாதம் புரிய ராமானந்தரின் அனுமதியைக் கோரினார். ஆனால் ராமானந்தர் இது சிறுபிள்ளைத்தனம் எனக் கருதி கபீர் வாதத்தில் தோற்றால் அது தன்னைப் பாதிக்கும் என அனுமதி கொடுக்கவில்லை. கபீரோ குருவின் ஆசிகள் மட்டுமே போதும் கோரக்நாதர் உடனான வாதில் நிச்சயம் வெற்றி பேறுவேன் எனக்கூறி ராமானந்தரின் அனுமதியை பெற்றார்.

கோரக்நாதரின் எதிரில் சென்ற கபீர் என் குருவின் வல்லமை தெரியாமல் இருக்கின்றீர்கள். வாதிலும் பிரம்ம ஞானத்திலும் அவர் முன் நிற்கக்கூட உங்களுக்குத் தகுதி இல்லை. மரியாதையாகச் சென்று விடுங்கள் என்று கர்ஜித்தார். சிறுவனே உன்னை என்ன செய்கிறேன் பார் என கோரக்நாதர் எழுந்தார். தனக்கு உதவ வந்த ராமானந்தரை தடுத்த கபீர் தன் கையிலிருந்த பட்டுநூல் கண்டை ஆகாயத்தில் வீசினார். அது பூமியிலிருந்து ஆகாயம் வரை ஒரு மரம் போல் வளர்ந்து நின்றது. அதன் மேலேறி உச்சியில் அமர்ந்த கபீர் கோரக்நாதரை வானவெளியில் அமர்ந்து வாதம் புரிய அழைத்தார். கோரக்ராதர் திகைத்தார் எனினும் நொடியில் ராமானந்தரின் உருவத்திற்கு மாறி அவரைக் கீழே அழைத்தார். உண்மையான ராமானந்தர் தன் சீடனைக் காப்பாற்ற இறைவனை வேண்ட கபீர் உற்சாகமடைந்தவராக கோரக்நாதரின் குருவான மச்சேந்திரரின் உருவை அடைந்து நின்றார். உடனே கோரக்கர் மஹாவிஷ்ணு உருவத்திற்கு மாறினார். கபீரும் சரபமூர்த்தியானார். கோரக்நாதர் மாறும் உருவத்திற்கு ஏற்ப ஒருபடி மேலாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கபீரது திறமை கண்டு தனது கர்வத்தை விட்டார் கோரக்நாதர். ராமானந்தரிடன் சென்ற கோரக்நாதர் சிறந்த சீடனை அடைந்த நீங்கள் மிகவும் பாக்யசாலி எனக்கூறி வணங்கி அங்கிருந்து சென்றார். தனது பாதத்தில் பணிந்த கபீரைக் கண்டு மகிழ்ந்த ராமானந்தர் இந்த இளம் வயதிலேயே இறைவனை அடையும் பிரம்ம ஞானத்தை அடைந்து விட்ட நீ நீடூழி வாழ வேண்டும் என ஆசி கூறினார். காசி நகர் முழுவதும் ராமானந்தரையும் கபீர்தாசரையும் புகழ்ந்தது. குருநாதர் மெச்சும் சீடனாக கபீர் விளங்கினார்.

ஒருநாள் நூறு சாதுக்கள் படைசூழ இறைவன் கபீர்தாசரின் இல்லத்துக்குப் பசியாற வந்தார். வீட்டில் ஒரு மணி அரிசி கூட இல்லை. கபீரும் அவர் மனைவியுமே பட்டினி. இந்நிலையில் அடகு வைக்கவும் ஏதுமில்லாத நிலையில் சீந்தரா ஒரு யோசனை கூறினாள். கடைத்தெருவில் ஒரு சௌகார் நெடுநாளாக என்மேல் கண் வைத்திருக்கிறான். ஒருமுறை அவனது விருப்பத்துக்கு நான் இணங்கினால் பணத்தை கொட்டித் தருவதாகக் கூறுகிறான். இந்த சாதுக்களின் பசி தீர்க்க உதவுமானால் அப்படிச் செய்தால் என்ன என்றாள். கபீரும் அவளுடன் கிளம்பி சௌகாரின் வீட்டுக்குச் சென்று நூறு சாதுக்களுக்கு உணவளிக்கப் பொருள் வேண்டும். விருந்தோம்பல் முடிந்த பின் பொருளுக்கு விலையாக இவளை இங்கு விட்டுச் செல்கிறேன் என்றார். மதிமயங்கி அவனும் பொருள் அளித்தான். சாதுக்களுக்கு வயிறார விருந்து சாப்பிட்டனர். பிறகு கபீர்தாசர் வாக்களித்தபடி சீந்தராவை வியாபாரியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சேறுபடாமல் சுமந்து சென்று சௌகாரின் வீட்டில் விட்டார். அப்போது அந்த ஊர் அரசு அதிகாரி வீட்டினுள் புகுந்து திருட்டுச் சொத்து அங்கிருப்பதாகக் கூறி வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார். உள்ளே சீந்தராவைக் கண்டு இவள் கபீரின் மனைவி. இந்த உத்தமியையா கடத்தி வந்தாய் எனக்கூறி சீந்தராவை அழைத்துச் சென்று அவளது வீட்டிலேயே விட்டுச் சென்றார்.

வீட்டுக்குத் திரும்பிய அவள் கூறியதைக் கேட்டு வெகுண்ட கபீர் என் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என அரசு அதிகாரியின் வீட்டுக்குச் சென்று திட்டி அடிக்க கை ஓங்கினார். அப்போது அங்கே அந்த அதிகாரி காணவில்லை. மாறாக ஶ்ரீராமர் காட்சி அளித்து அதிகாரியாக சென்று உன் மனைவியை மீட்டது நான்தான் உனக்கு அடிக்க வேண்டுமென்று தோன்றினால் என்னை அடி என்றார். இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப் போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார். இது போல் கபீரின் வாழ்வில் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இறையருளால் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. இதனால் பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கினார் கபீர்தாசர்.

கபீர்தாசருக்கு இரண்டு குழந்தைகள் தோன்றினர். மகன் பெயர் கமால். மகனாக மட்டுமல்லாமல் கமால் மகானாகவும் விளங்கினான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான். அவனைப் பிரிய மனமின்றி கபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் அனுமதி அளித்தார். செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினான். கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை கிருஷ்ணரின் உருவமாகவே கண்டனர். அந்த ஊரில் இருந்த ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தீராத வயிற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த வியாபாரி இந்த நோயை கமால் தீர்த்தால் அவரை ஒரு மகான் என நம்பலாம் என்றார். மறுநாள் காலையில் வலியினால் துடித்த போது முன் தினம் கமாலைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. உடனே கமாலை நினைத்து வணங்கினார். உடனே அவரது வயிற்றுவலி மறைந்தது.

ரத்ன வியாபாரி கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளித்தார். கமால் இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை என ஏற்க மறுத்தார். வியாபாரி கமாலுக்கு தெரியாமல் அவரது துணியில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்து வைத்தார். வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும் போது மரகதகல் அவர்கள் கண்ணில் பட்டது. அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய இறைவன் ஓர் அந்தணராக அங்கு தோன்றி கமால் அந்தப் மரகதக் கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூறினார். கபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார். அதே சமயத்தில் நடக்க விருப்பதை முன்பே அறிந்து அங்கு வந்து சேர்ந்தா ராமானந்தர். இறைவன் சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, அனும சமேதராக அங்கு தோன்றி அனைவருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.

ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த கபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர். வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர். சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை கபீரிடம் தந்து விட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறி விடுவது என திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுவதற்கு முன் கடைக்காரன் வந்துவிட்டான். பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.

சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது என வற்புறுத்தினான். தயக்கத்துடன் கபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் காவலர்களிடம் ஒப்படைத்தான். மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்க விடப்பட்டது. விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழியாக வந்தார்கள். தலையற்ற அந்த உடல் இரு கைகளையும் கூப்பி அவர்களை வணங்கியது. இதனைக் கண்ட சாதுக்களும் ஊர்மக்களும் திகைக்க இறைவன் அசரீரியாக கபீர் உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம் தான் வெல்ல முடியாதது. அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது. அன்பனே கமால் எழுந்திரு எனக்கூற அடுத்த கனம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண நாமத்தை சொல்லி சாதுக்களையும் பெற்றோரையும் வணங்கினார்.

சீரடி சாயிபாபா மகா பக்த விஜயத்திலே கபீர்தாஸரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ராமனை தன்னுள் உணர்ந்த கபீர்தாஸர் இந்து முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கபீர்தாஸரின் குரு ராமாநந்தரின் தாக்கம் இவரிடம் அதிகம் காணப்பட்டது. கபீர் தன்னுடைய குருவான ராமானந்துக்கு சிலை எழுப்பினார். இந்து சமயம் இசுலாம் ஆகிய இரு சமயங்களிலும் தவறு இருந்தால் அதனை கபீர் கடுமையாக விமர்சித்தார். வேதங்களை தவறான முறையில் மொழி பெயர்த்து சொல்லிக் கொடுக்கப்பட்டு இந்து சமயம் தவறான வழியில் செல்லப் படுவதாகவும் உபநயனம் போன்ற சடங்குகள் அர்த்தமற்றவை எனவும் கூறினர். அவரது கருத்துகளுக்காக இந்து மற்றும் இசுலாமியர் இருவரின் கோபத்துக்கும் ஆளானார். எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான். அவன் எந்த ஆலயத்திலும் இல்லை என்று உபதேசித்தார். கபீர் படிக்காதவராக இருந்தாலும் பல நூல்களை இயற்றினார். ஆதிகிரந்தம், பிரம்ம நிருபன், ஷப்தாவளி போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.

ஜபமாலையை உருட்டுகிறாய் நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறாய் கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறாய் என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை அன்பு இல்லை நீ எப்படி இறைவனை அடைவாய்.

என்று போலியான மதவாதிகளைக் கண்டித்து பாடினார். எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது. வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டார்கள். அதுவே பின்னாளில் நூலாக வெளிவர உதவியது. 500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக் கூறிய கபீர்தாசர் ராமர் சீதாவின் திவ்ய தரிசனத்தைப் பலமுறை கண்டார். கபீரின் போதனைகள் இந்து இசுலாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப் பில் கபீரின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவரின் பிரபலமான பாடல் ஒன்று

நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.

இதற்கு அர்த்தம் உலகம் இறைவனின் படைப்பு என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர்களின் உள்ளத்துக்குள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறிய மாட்டார்கள் என்று பாடுகிறார். 1518 ஆம் ஆண்டில் காசியில் கபீர் இறைவனைத் துதித்தவாறே மோட்ச பிராப்தி அடைந்தார். அவர் இறந்த பொழுது அவரால் ஈர்க்கப்பட்ட இந்து முஸ்லீம் சமயத்தை சேர்ந்தவர்களால் அவரவர் சமயத்தைச் சேர்ந்தவர் என உரிமை கொண்டாடப்பட்டார். கபீரின் இறந்த உடல் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். அவரது உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பெரியவர் ஏன் வீணாகச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தலா ஒரு போர்வையைக் கொண்டு உடலைப் போர்த்தி விட்டு செல்லுங்கள். நாளை இறுதி ஊர்வலத்தின் போது முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்படி இரு தரப்பினரும் உடலின் வலப் பகுதியையும் இடப் பகுதியையும் போர்வை கொண்டு போர்த்தி விட்டுச் சென்றனர். அடுத்த நாள் அவரது திருவுடலை எடுத்துச் செல்ல வந்தனர். போர்வையை எடுத்ததும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். கபீரின் உடல் மறைந்து அங்கே புத்தம் புது மலர்கள் இருந்தன. இறைவனுக்காகப் பாமாலைகள் பாடிப் பாடிப் பரவசமடைந்த அவரது திருமேனி பூக்களாக உருமாறி இருந்தன. இரு தரப்பினரும் சச்சரவு இல்லாமல் சரிபாதியாக பூக்களைக் கொண்டு சென்று இந்துக்கள் ஒரு பாதி பூக்களை காசியில் சாஸ்திரங்கள் முறைப்படி ஈமக்கடன்களைச் செய்தார்கள். அதுபோல முஸ்லிம்கள் பாதி பூக்களைப் புதைத்தார்கள்.