தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 271 திருஇந்திரநீலப்பருப்பதம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 271 வது தேவாரத்தலம் திருஇந்திரநீலப்பருப்பதம். மூலவர் நீலாசலநாதர். இங்கு இறைவன் சுயம்பு மலையாக அருளுகிறார். அம்பாள் நீலாம்பிகை. இறைவன் சன்னதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை. தீர்த்தம் இந்திரதீர்த்தம். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 18000 அடி உயரமுள்ளது. பத்ரிநாத் அடிவாரத்தில் இரவு தங்கி விடியற்காலை 4 மணி அளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீல பருப்பதத்தை தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திரநீல நிறத்தில் தரிசனம் தருகிறது. இந்திரன் வழிபட்டுள்ளார். அர்ஜூனன் தவம் புரிந்த இடம். பனி பிரதேசமாகையால் பத்ரிநாத் ஆலயம் 6 மாத காலம் மூடியிருக்கும். மேலும் மழை இல்லாத காலமாகிய மே முதல் செப்டம்பர் வரை தரிசனம் செய்யலாம். இந்திரன் பூசித்த காரணத்தால் இந்திரநீலப்பருப்பதம் என பெயர் பெற்றது. இந்திரன் வழிபட்டுள்ளான் என்ற செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தின் திருக்கடைக்காப்பிலுள்ள இந்திரன் தொழு நீல பர்ப்பதம் என்னும் பகுதியால் அறியலாம். நீலகண்ட சிகரம் எனவும் அழைக்கப்படுகிறது. காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே திருஞானசம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 270 மன்னார் மாவட்டம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 270 வது தேவாரத்தலம் இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம். புராணபெயர் மகாதுவட்டாபுரம். மூலவர் திருக்கேதீச்வரர். இங்கு இறைவன் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் கவுரி. தெற்கு நோக்கியபடி அருள்கிறாள். தீர்த்தம் பாலாவி. தலமரம் வன்னிமரம். கருவறைக்கு வெளியே இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் சூரியன், சம்பந்தர், கேது, சேக்கிழார், நால்வர், சுந்தரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். பின்புறம் பழைய மகாலிங்கம் உள்ளது. இங்கு பூஜை செய்து முடித்த பின்னரே கருவறை தீபாராதனை நடைபெருகிறது. கோவிலுக்கு வரும் அடியவர்களுக்காக ஆலயத்துக்கு வெளிப்புறமாக திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம்,. நாவலர் மடம் என்று பற்பல மடங்கள் அமைந்துள்ளன.

உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்த கோயிலும் 1600 இல் போர்ச்சுக்கிசியர்களால் அழிக்கப்பட்டது. மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் ஐந்து திருத்தேர்கள் உள்ளன. அதில் முதல் தேரில் உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் சிலை வைப்பார்கள். சிவராத்திரி இரவு முழுக்க இங்கு பூஜை நடைபெறும். அன்று காலையில் பாலாவியில் நீராடி விரதத்துடன் நீர் எடுத்து வந்து பக்தர்கள் தம் கையாலேயே பஞ்சாட்சரம் கூறியபடியே அபிஷேகம் செய்யலாம். கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தார். இதனால்தான் திருகேது ஈஸ்வரம் என்று பெயர் பெற்று பின்பு திருக்கேதீஸ்வரமாக மாறியது. சூரபத்மனின் பேரனான துவட்டா என்பவன் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவருடைய திருவருளால் பிள்ளைப்பேற்றைப் பெற்றான். பின்னர் இங்கேயே தங்கியிருந்து இவ்விடத்தை பெருநகரமாக்கியதால் மாதுவட்டா என்ற பெயரும் ஏற்பட்டது. பின்னாளில் மருவி மாதோட்டம் என்றும் மாத்தை என்றும் ஆனது. ராமபிரான் சிவபெருமானிடமிருந்து பெற்ற மூன்று லிங்கங்களுள் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அகத்திய மாமுனிவர் தென்திசைப் பயணம் வரும்போது தட்சிணக் கயிலாயமான கோணேஸ்வரத்தைத் தரிசிக்கும் முன்பு திருக்கேதீச்சரம் வந்து சிவ வழிபாடு செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி அவள் தந்தை மயன் முதலானோர் இத்தலத்தில் பூஜித்துள்ளனர். இங்கு பழங்குடியினரான நாகர்கள் வழிபட்டுள்ளதால் நாகநாதர் என்றும் இத்தல இறைவனுக்குப் பெயருண்டு.

கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இத்தலம் மகாதீர்த்தம் என அழைக்கப்பட்டுள்ளதைக் கதிர்காமக் கல்வெட்டின் மூலம் அறியலாம். 10, 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது. சுந்தர பாண்டியனும் பல திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அதன்பின்னர் போர்த்துகீசியர் படையெடுப்பில் இக்கோயிலிலிருந்து தூண் மற்றும் பெரிய கற்களை உடைத்து எடுத்து மன்னார் கோட்டையைக் கட்டியதாக வரலாறு. பின்னர் ஆங்கிலேயர் கையில் சிக்கிய இக்கோட்டை வெள்ளத்தில் புயலில் சிதைந்து மண்மேடாகியது. விடிவெள்ளியாக அவதரித்த யாழ்ப்பாணத்து சைவப் பெருவள்ளல் ஆறுமுக நாவலர் கனவில் இந்த திருக்கேதீச்சரத்தில் ஒரு தேன் பொந்து மறைந்துள்ளது அதனைச் சென்றடையுங்கள் என்று இறைவன் சுட்டிக் காட்டினார். உடனே அவர் அங்கு சென்று 1893-ல் கோவில் உள்ள காட்டுப்பகுதி 43 ஏக்கர் நிலப்பரப்பினை வாங்கி கோயிலுக்கு அளித்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

திருக்கேதீச்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்யும் போது மண்ணில் சிதையுண்ட நந்தி, சோமாஸ்கந்தர், கணேசர், பலிபீடம், துவஜஸ்தம்பம், அர்த்த மண்டபம் ஆகியவை வெளிப்பட்டன. இறையருளால் பழைய கருவறை மகாலிங்கமும் மண்ணிலிருந்து வெளிப்பட லிங்கத் திருமேனியை வெளியே எடுக்கையில் சிறிது பழுதுபட்டதால் அவரை மேற்கு பிராகாரத்தில் எழுந்தருளச் செய்து இறைவனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. மீண்டும் திருப்பணிகளுடன் 1910-ல் சிறுகோயில் கட்டப்பட்டது. பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சில அகழ்வாராய்ச்சிக்கு பின்னர் இத் திருக்கோயிலில் மீண்டும் 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருவறைக்கு காசியிலிருந்து புதிய லிங்கம் தருவிக்கப்பட்டு பிரசிஷ்டை செய்யப்பட்டது. இதன் வரலாறு ராமேஸ்வர புராணத்தில் உள்ளது.

திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் பிருகு மகாமுனிவர் சிவபெருமானை வழிபட்டதை மகா முனிவர்கள் வரலாறு எடுத்துரைக்கின்றது. நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுத் தமது சாபம் நீங்கப்பெற்றார் என்று தக்ஷிண கைலாச மான்மியம் என்ற பண்டைய வரலாற்று நூல் எடுத்துரைக்கின்றது. மிகப் பெரிய புராண நூலான ஸ்கந்த புராண’த்தில் மூன்று அத்தியாயங்களில் இலங்கையைப் பற்றியும் அத்தீவின் அழகைப் பற்றியும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி விளக்கிவிட்டு இலங்கையின் முக்கியமான இரண்டு புராதனமான சிவன் திருக்கோயில்களான திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. அப்புராணத்தின்படி முன்னொரு காலத்தில் வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் யுத்தம் மூண்டபோது ஆதிசேடனைத் தாக்குவதற்காக வாயுதேவன் மகா மேரு மலையின் சிகரங்களில் மூன்றை எடுத்து வீசினார். அந்தச் சிகரங்களில் இரண்டு இலங்கைத் தீவில் வீழ்ந்தன. ஒன்று திருக்கேதீஸ்வரம். மற்றொன்று திருக்கோணேஸ்வரம். சிவபெருமான் இத் திருத்தலங்களையும் தமது உறைவிடங்களாக்கிக் கொண்டார்.

சோழர்கள் இலங்கையை பலமுறை ஆட்சி செய்துள்ளனர். கி.பி 1028 ல் ரஜேந்திர சோழனால் ஈழம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் ஆட்சியில் ஊரின் பெயர்களும் ஆலயங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டன. திருக்கேதீச்சரம் ஆலயத்தை ராஜராஜேஸ்வரம் என்றும் மாதோட்ட நகரினை ராஜராஜபுரம் என்றும் வழங்கியுள்ளனர். கோவில் பாதுகாப்பிற்க்காக திருக்கேதீச்சரம் ஆலயத்தைச்சுற்றி நன்னீர் கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டது. ரஜேந்திரசோழன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் இவ்வாலயத்தின் ஆண்டுதோறும். ஏழுநாள் விழாவெடுத்து வைகாசிவிசாகத்தன்று தீர்த்தவிழா நடத்தியதாக ரஜேந்திரசோழன் கல்வெட்டுக் கூறுகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன் இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான். இலங்கையை ஆட்சிசெய்த 4வது மகிந்தனின் அநுராதபுரக் கல்வெட்டில் கோவில் ஒரு புண்ணியதலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் கூறப்பட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

லட்சுமி நரசிம்மர்

பெட்டன்னா ஹெகடே சோமன்னா மற்றும் கேஷன்னா ஆகிய மூன்று சகோதரர்கள் பூர்வீகவாசிகளிடமிருந்து ஒரு இலவச இடத்தைப் பெற்று கி.பி 1234 இல் கோவிலைக் கட்டினர் என்று கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 269 திருக்கோணமலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 269 வது தேவாரத்தலம் இலங்கையில் உள்ள திருக்கோணமலை. மூலவர் கோணேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். பிரம்மா வடிவமைத்து வாயு பகவானால் எடுத்து வந்து வைக்கப்பட்டவர் தக்ஷிண கைலாய மலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆவார். அம்பாள் மாதுமையாள். தீர்த்தம் பாவநாசம். தலமரம் கல்லாலமரம். முதலில் கல்லால மரத்துக்கு பூஜை செய்துவிட்டு பின்னரே மூலவர் மற்றும் கோயில் சன்னதிகளில் பூஜை நடைபெறுகிறது. 33 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது. இக்கோவில் பதினெட்டு மகாசக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமானின் ஆதி இருப்பிடங்களில் திபெத்திலுள்ள திருக்கயிலாய மலையினையும் சிதம்பரம் கோயிலையும் திருகோணமலையையும் கந்த புராணத்தில் மிக முக்கிய மூன்றினுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருந்தன. இங்கு மகாவலி கங்கை அருகிலுள்ள கடலுடன் கலப்பதால் இப்பகுதி முழுவதும் நீர்வளம், நிலவளம் பெற்று செழிப்பாக இருந்தது. மேலும் குறிஞ்சியும், நெய்தலும், முல்லையும் ஒன்று சேருமிடத்தில் இத்தலம் அமைந்திருந்தது.

சமுத்திரக்கரை ஓரமாக மலை அடிவாரத்தின் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. பிறகு கி.மு 306 ல் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் கடலில் மூழ்கி விட்டதாகவும் இன்னும் மலையின் அடியில் கடலுக்கு மிக அருகில் மலைக்குகை போன்ற பண்டைய கால கோயிலை நினைவுபடுத்தும் பகுதிகள் காணப்படுகின்றன. இத்தலத்திற்கு திருக்குணமலை, திருமலை, தட்சிண கயிலாயம், கோகர்ணம், திரிகூடம், மச்சேஸ்வரம் எனப் பல பெயர்கள் உண்டு. அக்காலத்தில் தாமரைத்தண்டு நூலினால் திரி செய்து விளக்கேற்றி இக்கோயிலில் வழிபட்டு வந்தனர். இதன் காரணமாக திரிதாய் என்ற பெயரும் உண்டு. 1624 ல் ஏற்பட்ட போர்த்துக்கீசிய படையெடுப்பில் இத்தீர்த்தக் கேணியையும் சுனையையும் தூர்த்து விட்டனர். தற்போதுள்ள கேணிதீர்த்தம் ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளது. இக்கோயிலை பல்லவர்கள் சோழர்கள் பாண்டியர்கள் மற்றும் பல அரசர்கள் திருப்பணிகள் செய்து மிக நல்ல நிலையில் வைத்திருந்தனர். ஏராளமான தங்க நகைகளும் நவரத்தினங்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக இருந்தன. 1624 வருடம் சித்திரை புத்தாண்டு தினத்தில் சுவாமி மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் நகர்வலம் வந்த வேளையில் போர்ச்சுகீசியத் தளபதி வீரர்களுடன் பக்தர்கள் போல வேடமிட்டு கோயிலினுள் நுழைந்து அங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்று விட்டு கோயிலிலிருந்த தங்க நகைகள் நவரத்தினங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். ஆசியாவிலேயே மிகச் செழிப்பான செல்வவளம் கொண்ட இக்கோயில் முற்றிலும் சூறையாடப்பட்டது.

இதனை கேள்வியுற்ற பக்தர்களும் அர்ச்சகர்களும் சில முக்கிய விக்கிரகங்களை உடனடியாக அகற்றி குளங்களிலும் கிணறுகளிலும் மறைத்து வைத்தனர். சில விக்கிரகங்களை அருகிலுள்ள தம்பலகாமம் என்ற இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து ரகசியமாக பூஜை செய்து வந்தனர். அந்த இடத்தில் தற்போது ஆதிகோணநாதர் என்ற பெயரில் இறைவன் திருவருள் பாலிக்கிறார். பின்னாளில் திருக்கோணமலை கோயிலுக்குச் சொந்தமான மானியங்களில் பெரும்பகுதி இக்கோயிலுக்கும் சொந்தமாயிற்று. பராந்தக சோழனுக்குப் பயந்து பாண்டிய மன்னன் இலங்கையில் பாதுகாப்பாக மறைந்திருந்த காலத்தில் ஆதிகோணேச்சுவரருக்கு பல திருப்பணிகள் செய்து வழிபட்டதாக தலபுராணம் தெரிவிக்கிறது.

இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரிய தீர்த்தக் கேணியும் மற்றும் பிற மண்டபங்களும் இருந்தன என்பதை விஸ்பன் நகரில் உள்ள வரலாற்றுச் சான்றான படத்தின் மூலம் அறிய முடிகிறது. 16-ம் நூற்றாண்டில் வந்த குளக்கோட்டன் என்ற மன்னன் இக்கோயிலை மீண்டும் புதுப்பித்தான் மன்னனின் திருப்பணி மட்டுமின்றி சோதிட ரீதியில் குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தை போர்த்துகீசியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று கோயிலின் எதிர்காலம் பற்றிய 16ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டும் உள்ளது. 1000 தூண்கள் என்றழைக்கப்பட்ட இக்கோயிலின் தூண்களையும் கற்களையும் பெயர்த்து எடுத்த பின்பே கோயிலை பறங்கியர்கள் தரைமட்டமாக்கினார்கள். அத்தூண்களையும் கற்களையும் கொண்டு புகழ்பெற்ற பிரட்ரிக் கோட்டையை பலப்படுத்திக் கட்டியதாக வரலாறு உள்ளது. பறங்கியர் தளபதி இக்கோவில் கோபுரத்தை பார்த்து உருகி தன் படையில் ஓவியம் வரைபவனைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான். அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது.

மிகப் பழைய காலத்திய இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இங்கே உள்ளன. போர்ச்சுக்கீசிய படையினால் சிதைவிடைந்த இக்கோயிலின் ஒரே ஒரு தூண் மட்டும் பின்னர் 1870 ல் சுவாமி பாறைக்கு அருகில் நினைவுச்சின்னமாக பக்தர்களின் துணையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதும் எவ்வித பூஜைகளும் இங்கு நடைபெற அனுமதிக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாலுமிகள், பக்தர்கள், சுவாமி பாதைக்குச் சென்று பூ, பழம், தேங்காய் உடைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர். பின்னர் 1944 ஆம் ஆண்டில் திருகோணமலை கோட்டையினுள் நீர்த்தேக்கம் அமைக்க அகழாய்வு செய்தபோது சில விக்கிரகங்கள் கிடைத்தன. பின்னர் 1950 ஆண்டில் கடற்கரை அருகில் பொதுக்கிணறு தோண்டியபோது மேலும் சில விக்கிரகங்கள் கிடைத்தன. இறையருளால் அனைவரும் வியக்க மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவை அனைத்தும் 1952 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு மீண்டும் இக்கோயில் புத்துயிர் பெற்றது. பழைய கோயிலுடன் ஒப்பிடுகையில் இது சிறிய கோயில். இருப்பினும் எம்பெருமான் திருவருளினால் மீண்டும் அனைத்து விக்கிரகங்களும் வெளிப்பட்டது.

கோவிலில் பாண்டியனின் கயல் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது. இக்கோயிலின் தொன்மையை உணர்த்துகிறது. ராவணன் தனது தாயாரின் சிவபூஜைக்காக தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாக தட்சிண கயிலாய புராணத்தில் உள்ளது. இதற்குச் சான்றாக ராவணன் வெட்டு என்ற மலைப்பிளவு இன்னும் இப்பகுதியில் காணப்படுகிறது. கடல் சீற்றத்திற்குப் பிறகு கோயில் அருகிலுள்ள சுவாமிலை எனப்படும் குன்றின் உச்சியில் கோயில் மீண்டும் அமைக்கப்பட்டது. திரேதா யுகத்தில் ராவணன் இந்த ஆலயப் பகுதியில் வந்திருந்தபோது மரணம் அடைந்துவிட்ட அவனுடைய தாயாருக்கு கர்மாக்களை அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவின் மூலம் செய்தான். அப்போது விஷ்ணு பகவான் அவனுக்கு அந்தத் தலத்தின் பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டு இருந்தபோது அங்கு ஏழு இடங்களில் தனது தடியினால் தட்டி ஏழு சுனைகளை எழுப்பினார். அதைக் கண்ட ராவணன் வந்துள்ளவர் விஷ்ணு என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு அந்தணருக்கு அத்தனை மகிமை உள்ளதா என வியந்திருக்கிறான். பாதாளத்தில் இருந்து எழுந்திருந்த அந்த ஏழு சுனைகள் விஷ்ணு பகவான் உருவாக்கிய கன்னித் தீர்த்தம் ஆகும். இந்த ஆலயப் பகுதிகள், அனைத்துக் கட்டிடங்கள், குளங்கள், மண்டபங்கள் எனக் கட்டி முடிக்கப்பட்ட அனைத்துமே தேவ கணங்களுடன் மனிதர்கள் சேர்ந்து செய்தவை.

முன்னொரு காலத்தில் இந்தியாவின் சோழ மண்டலத்தில் மனு நீதியைச் சேர்ந்த வரராமதேவர் என்னும் அரசர் நல்லாட்சி செய்து வந்திருந்தார். அவர் பெரும் சிவபக்தர். அடிக்கடி அனைத்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருபவர். மனுநீதி கண்ட சோழன் பரம்பரையில் வந்திருந்த வரராமதேவர் ஒருமுறை மச்சேந்திரபுராணத்தில் கூறப்பட்டு இருந்த கோணேசர் ஆலயத்தின் பெருமை பற்றிப் படித்து அறிந்தார். ஆகவே அந்த ஆலயத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இலங்கைக்கு வந்து திருகோணேசரை தரிசனம் செய்து விட்டுச் சென்றார். திறந்த வெளியில் மேற்கூரை இல்லாமல் கட்டிடங்கள் இல்லாமல் இருக்கும் திருக்கோணேஸ்வரரை வழிபட்டவர் அதன் மீது அதிக பக்தி கொண்டு அடிக்கடி அங்கு வரலானார். ஒவ்வொரு முறையும் இங்கு அவர் வந்தபோது அவர் பெரும் செல்வத்தை கொண்டு வந்து அந்த ஆலயத்தில் இருந்த கிணறு ஒன்றில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் சென்றார். இதற்குக் காரணம் எந்தக் காலத்திலாவது அந்த செல்வத்தைக் கண்டெடுப்பவர்கள் அந்த நிதி உதவியைக் கொண்டு அங்கு ஒரு ஆலயம் அமைக்கட்டும் என்ற ஆசையினால் அவர் அப்படிச் செய்தார். அவர் ஆலயத்தை அமைக்க முடியாமல் இருந்ததின் காரணம் அவர் அங்கு வந்து வழிபட்ட நேரத்தில் அவருக்கு வாரிசு எதுவும் இருக்கவில்லை. தான் ஒரு ஆலயத்தை அமைக்கத் துவங்கி தனக்கு இறுதிக் காலம் வந்து விட்டால் இந்த ஆலயப் பணிகள் அப்படியே நின்று விடக் கூடும் மேலும் அந்நிய நாட்டில் இருந்த இந்த இடத்தில் ஆலயத்தை அமைக்க அந்த நாட்டில் இருந்த மன்னர்களின் ஆதரவும் இல்லை. ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே தனக்குப் பிறகு சோழ நாட்டை ஆளத் தகுதியானவர் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அந்நிய நாட்டில் வந்து ஒரு ஆலயத்தை அமைக்க முடியும் என்று எண்ணி செல்வத்தை கிணற்றில் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்தார்.

மனுநீதி கண்டசோழ வரராமதேவர் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்து விட்டுச் சென்று இருந்த அந்தச் செல்வங்கள் அனைத்தையும் அங்கிருந்த பூத கணங்கள் பாதுகாத்து வந்தன. இப்படி இருந்த காலத்தில் சோழ மண்டலத்தில் அரசாண்டு வந்த வரராமதேவருக்கு சிவபெருமானின் அருளினால் குளக்கோட்டான் பிறந்தார். குளக்கோட்டான் பிறந்ததின் காரணம் சிவபெருமானின் அருளே என முழுமையாக நம்பிய வரராமதேவர் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை அவர் ஏற்றார். அவருடைய மகனான குளக்கோட்டான. ஒருமுறை பூத கணங்கள் மூலம் அவரது தந்தை சேமித்து வைத்திருந்த செல்வத்தைப் பற்றியும் திருக்கோணேஸ்வர சிவலிங்கத்தின் மகிமையும் தெரிந்து கொண்டார். இங்கு வந்து திருக்கோணேஸ்வரரை வணங்கலானார். அப்போது அவர் தனது தந்தையார் கிணற்றில் பதுக்கி வைத்து விட்டுச் சென்று இருந்த செல்வத்தை பூத கணங்களின் உதவியுடன் கண்டு பிடித்தார். பின் அந்த செல்வத்தைக் கொண்டே தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு பிரம்ம லோகத்தில் உள்ளதைப் போன்ற அழகான ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஏற்பாடு செய்தார்.

ஆலயம் ஸ்தாபிக்க முடிவு செய்த உடன் இதற்கென சோழ நாட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட அமைப்பு தொழிலாளர் குடும்பங்களையும் வரவழைத்தார். அவர்களை இங்கு குடி அமர்த்தினார். தான் ஆலயம் அமைக்க இருந்தது அந்நிய தேசத்தில் என்ற பயமும் இல்லை. அந்த எண்ணமும் அவருக்கு ஏற்படவில்லை. பொற்குவியல் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு பல மாத காலம் பாடுபட்டு கோணேசர் ஆலயத்தில் மஹா மண்டபம், நுழைவு மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்னதான சத்திரம், மறைகளை ஓதுவார் மடம் என ஆகியவற்றைப் பெரிய அளவில் அமைத்தார். இத்துடன் அங்கேயே அன்னை உமாதேவிக்கு ஒரு தனி ஆலயத்தையும் உருவாக்கி அதன் பாதுகாப்புக்காக அதைச் சுற்றி மதிலையும் கட்டினார். மானிடப் பிறவியில் பெறும் பாவங்களை நீக்கிக் கொண்டு இறையருள் பெறப் பாவநாசம் எனும் ஒரு புனித தடாகத்தை அங்கேயே உருவாக்கினார். சிவபெருமான் நீராடுவதற்கு என ஒரு தனியான மண்டபத்தையும் அமைத்தார். அத்தனை பக்தி ஈசன் மீது அவருக்கு இருந்தது. கோணேசர் ஆலயத்தைத் தரிசிக்க வருகை தரும் முனிவர்கள், துறவிகள், அடியார்கள் போன்றோர்கள் தங்குவதற்கும் பெரும் மண்டபங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கினார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிறிய சிக்கல் ஒன்றும் ஏற்பட்டது.

ஆலயம் வடிவமைக்கப்பட்டு வந்திருந்த நேரத்தில் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னனின் வாரிசாகப் பிறந்திருந்த ஆடகசௌந்தரி என்ற பெண் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்று இருந்தாள். அவள் அதிகாரத்தில்தான் திரிகோணமலைப் பகுதியும் இருந்து வந்தது. அவள் அதிகாரத்தில் இருந்த பகுதியில் அவள் கட்டளையைப் பெறாமல் அந்நிய தேசத்து மன்னன் ஒருவன் வந்து பெரிய ஆலயம் அமைக்கின்றான் என்கிற செய்தி அவளுக்குச் செல்கிறது. செய்தி கிடைத்து அதைக் கேள்விப்பட்டதும் அவள் உடனே தனது அமைச்சரை பெரும் படையுடன் அனுப்பி அந்த ஆலயத்தை இடித்துத் தள்ளி விட்டு வருமாறு அனுப்பினாள். ஆனால் திரிகோண மலைக்கு வந்த அவளது அமைச்சரோ தேவலோகத்தைப் போலவே ஜொலித்துக் கொண்டிருந்த அங்கிருந்த ஆலய நிலையைப் பார்த்து பிரமித்துப் போயினர். தனது அரசி செய்ய இருந்த தவற்றை உணர்ந்தார். அந்தத் தேவலோக ஆலயத்தை இடிப்பதை விட அந்த மன்னனையே தனது அரசிக்கும் கணவராக ஏற்பாடு செய்து விட்டால் நல்லது நடக்கும் என எண்ணம் கொண்டனர். நாடும் வளம் பெருகும் அல்லவா என நினைத்தார்கள். இதை மனதில் கொண்டு இரு நாட்டு அரசர் அரசியிடமும் தூது போய் நல்லவற்றை எடுத்துக் கூறி நியாயத்தை எடுத்துரைத்தனர். தேவ காரியத்தை மனதில் கொண்டே எதுவும் செய்ய வேண்டும் எனப் பக்குவமாக எடுத்துரைத்து அவர்களுடைய திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தார்கள். இப்படியாக குளக்கோட்டான் மற்றும் ஆடகசௌந்தரி இருவரின் திருமணமும் நல்ல முறையில் நடைபெற்று இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவும் வளர்ந்தது.

குளக்கோட்டனைப் பற்றி குறிப்பு கைலாச புராணம் எனும் நூலில் உள்ளது. இதைத் தவிர இங்குக் கிடைத்துள்ள பல்வேறு கல்வெட்டுக்களும் அவனது பெருமையைப் பறை சாற்றுகின்றன. இப்படியாக குளக்கோட்டான் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைத்த பின் ஆலய மேற்பார்வைக்காகவும் பூஜை புனஸ்காரங்கள் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பாதுகாப்புக்காக பல இனப்பிரிவினரை பல்வேறு இடங்களிலும் அழைத்து வந்து ஆலயப் பகுதியில் குடி அமர்த்தினார். தானும் தனது மனைவியான ஆடகசௌந்தரியுடன் அடிக்கடி இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி வழிபட்டுச் சென்றார். மகிழ்ச்சியாக இவ்விதம் வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஆடகசௌந்தரி கர்பமுற்று ஒரு நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்த பின் சில காலத்தில் அவள் மரணம் அடைந்து விட்டாள். இதனால் குளக்கோட்டான் வருத்தம் அடைந்தாலும் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ராஜ்யத்தில் உள்ள ஆலயத்தை தன் காலத்துக்குப் பிறகும் நன்கு பராமரிக்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தனக்குக் கீழ் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒரு இளவரசரை இங்கு வரவழைத்து அவருக்கு பூபாலவன்னிபம் என்ற சிறப்புப் பட்டதைத் தந்தான். அவரையும் தன் மகனுடன் சேர்த்து தன் ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்ய ஆட்சியில் அமர்த்திய பின் தான் உலக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

ஆன்மீக வாழ்வில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில காலம் வாழ்ந்திருந்தார். பெரும் சிவபக்தரான அவர் ஒருநாள் ஆலயத்துக்குள் சென்று கருவறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டார். இதற்கு முன்னர் இதுபோன்று அவர் பல முறை செய்திருக்கின்றார். கருவறையை மூடிக் கொண்டு பூஜை செய்த பின் வெளியே வருவார். ஒருநாள் அப்படிப்பட்ட நிலையிலேயே கருவறைக்கு உள்ளே சென்றவர் வெகு நேரம் ஆகியும் குளக்கோட்டான் வெளியில் வரவில்லையே எந்த விதமான பூஜை செய்யும் ஓசையும் வரவில்லையே என கவலை கொண்டவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு குளக்கோட்டான் காணப்படவில்லை. மாறாக ஈசனார் பாதத்தின் கீழ் புத்தம் புதிய தாமரை மலர் மலர்ந்து இருந்ததைக் கண்டிருக்கிறார்கள். இவரை ஆலயத்திலுள்ளேயும் வெளியெங்கேயும் காணவில்லை. மூடிய கருவறைக்குள் புத்தம் புதிய தாமரை மலரும் திடீர் எனத் தோன்றிய அதிசயத்தையும் கண்டு யாருக்கும் விளங்கவில்லை. மூத்த பண்டிதர்கள் மூலமே நடந்த உண்மையை அறிந்து கொண்டார்கள். குளக்கோட்டான் தேவர்களில் ஒருவராகவே இருந்து மானிட உடலை எடுத்து இந்த ஆலயத்தை நிர்மாணிக்க வந்திருந்தார் என்றும் வந்த காரியம் முடிந்த பின் தேவலோகத்துக்கே சிவன் பாதம் மூலம் சென்று விட்டார் என்றும் அதனால்தான் அவர் உடலை அங்குக் காணவில்லை என்றும் பண்டிதர்கள் கூறினார்கள். மேலும் சோதிட ரீதியில் குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தை வேற்று அரசர்கள் உடைப்பார்கள் என்றும் பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்றும் கூறினார்கள். இவை அனைத்தும் அங்கு உள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயிலின் அழகினைக் கேள்விப்பட்ட திருஞான சம்பத்தர் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து தனது தேவாரப் பதிகத்தில் பாடல் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 268 ஸ்ரீசைலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 268 வது தேவாரத்தலம் ஸ்ரீசைலம். புராணபெயர் திருப்பருப்பதம். மூலவர் மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் ஸ்ரீ ப்ரம்மராம்பிகை தேவி, ப்ரமராம்பாள், பருப்பநாயகி. தீர்த்தம் பாலாநதி. தலமரம் மருத மரம், திரிபலா மரம். காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சைல சக்தி பீடம் ஆகும். நந்திதேவர் அவதரித்த தலம். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம். மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும் அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜுனர் எனப்படுகிறார். சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால் மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ சைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த கோவில் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் ஆந்திரா கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் இக்கோயில் மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்சுணன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்களைக் கோண்டதாக உள்ளன. நான்கு பக்கமும் கோபுர வாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. தெற்கு வாயில் கோபுரம் ரங்க மண்டபம் என அழைக்கப்படுகிறது. கிழக்குப்புறமுள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப்புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677 ல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப்புற கோபுரம் கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. கருவறை மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டது.

ஆலய முகப்பில் சித்தி விநாயகர் உள்ளார். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் உள்ளது. இம்மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன. ஸ்ரீசைலம் மலையிலிருந்து 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹாவிஷ்ணு விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள் யார் இல்லாதவர்கள் என ஸ்ரீ சைலத்தில் உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவருக்கு சாட்சி கணபதி என பெயர்.

சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால் நந்தி அவதரித்த இந்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும் கங்கையில் 2000 முறை குளிப்பதாலும் நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும் காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. ஸ்ரீசைல சிகரத்தை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறது தலபுராணம். இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என தலவரலாறு உள்ளது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார். நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

வேதாந்திகள், பரமயோகிகள், சித்தர்கள், மகாதவசிகள் இருக்கும் இக்கோவிலுக்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள காடுகளில் ஹனுமந்தபீரம் என்றவகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் இலையின் இரு பகுதிகளிலும் ஆஞ்சநேயர் உருவம் காணப்படுகிறது. மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். ஸ்ரீமல்லிகார்ஜுனேசுவரரை தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி சிவாஜிக்கு காட்சி தந்தருளி பெரிய வாள் அளித்து கடமை உணர்வை போதித்து பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும் தியான மண்டபத்தையும் உருவாக்கினார். இந்த கோபுரம் சிவாஜி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார். சிவாஜியால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது இங்குள்ள கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள் நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி தந்தையே கலங்காதீர்கள் நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன் நந்தியை தன் வாகனமாக்கியதுடன் அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த நந்தியால் என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். அதன்படி பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்று பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இம்மலை தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். பர்வதமலை ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று.

சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி கௌசிக அரசனை வீரசைவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு அவனை சந்திக்கச் சென்றாள். அரசனின் தவறான செய்கையால் மனம் நொந்து தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள் அக்கமஹா தேவி. ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்கமஹா தேவியின் திருவுருவச் சிலை உள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குல குருவான ரேவணசித்தர் ஒரு நாரத்தம் பழத்தைக் கொடுத்து சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச்சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித் தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாக கூறவே ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி இவரே மல்லையா என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்த போது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம் அளித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விட்டார்கள். சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி அஞ்சாதே உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக என்று அருளினார். வீட்டிற்குள் சென்ற கேசப்பா பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு திருவருளை வியந்தவனாக அடியார்களுக்கு அன்னம் அளித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம் அடிகேச்வரம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன் ஒரு கயிற்றைக் கொடுத்து அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் அருகில் கயிற்றைக் கண்ட சிற்பி அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் துரியோதனனின் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும் அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை கூறினார். கிருஷ்ணர் ஆலோசனைப்படி அர்ஜூனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ஜூனன் தபம் செய்யும் இடத்திற்கு வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ஜூனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ஜூனன் கண்விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது யார் என்பது பற்றி சண்டை வந்துவிட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். சிவபெருமானை வில்லால் அடிக்க அர்ஜூனன் வில் ஒடிந்தது. பின்பு சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார். அர்ஜூனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டு தமக்குப் பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டார். அர்ஜூனனின் தம்முடன் போர் செய்து வில்லாற்றல் அபிவிருத்தி அடைவதற்காகவும் தனுர் வேதத்தை அர்ச்சுனனுக்கு போதிப்பதற்காகவும் வேடனாக வந்ததாக சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸதிரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அர்ஜூனன் தவம் செய்த இடம் இங்கே உள்ளது.

படிக்கட்டுப்பக்கம் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ச்சுனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர். கிருதாயுகத்தில் இரணியனும் திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும் ஆதிசங்கரரும் பூஜைகள் செய்துள்ளனர். ஆதிசங்கரர் இங்கு தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதினார்.

ஸ்ரீசைலத்தைப் பல நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம் இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி ஆகியவை இத்தலத்தின் மகிமையைக் கூறும் நூல்களாகும். ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான சிகரத்தைத் தரிசித்தபடியே மல்லிகார்ஜுனரைத் தியானிப்பார்கள். இங்கிருந்தபடியே ராமபிரான் மல்லிகார்ஜுனரைத் தரிசித்துள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருப்பதிகங்களில் இத்தலம் திருப்பருப்பதம் என்றும் சுந்தரர் திருப்பதிகத்தில் சீபர்ப்பதம் என்றும் குறிக்கப்படுகிறது. தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 267 திருக்கோகர்ணம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 267 வது தேவாரத்தலம் திருக்கோகர்ணம். மூலவர் மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர். இங்கு இறைவன் கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கமாக சுயம்பு லிங்கமாக கொட்டை பாக்கு அளவு பாணமாக அருளுகிறார். இங்குள்ள கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். அகத்தியர் இவருக்கு பூஜை செய்துள்ளார். அம்பாள் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். தீர்த்தம் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. இந்த மூன்று தீர்த்தம் போக 30 தீர்த்தங்கள் உள்ளது. தலமரம் சரக்கொன்றை. இங்கு உள்ள ஆத்ம லிங்கத்திற்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு பூஜை செய்வார்கள். இந்த லிங்கத்தை இராவணனிடமிருந்து விநாயகர் மீட்டுத் தந்தார். ஓரடி உயரமுள்ள சாளக்கிரம ஆவுடையார் மீது சொர்ண ரேகையுடன் நடுவில் குழியோடு இந்த ஆத்ம லிங்கம் காட்சி தருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பீடத்தை அகற்றி பூஜித்து பக்தர்கள் தரிசனத்திற்கும் வைக்கிறார்கள். இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது.

தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் உள்ளார். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம்ம காபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதற்கு சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் என பெயர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் சிவலிங்கபாணம் உள்ளது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் துவிபுஜ விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பது போல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்று புராண வரலாறு கூறுகிறது. கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும் அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும் அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்பாளே இங்கு நதியாக இருக்கின்றார்.

இக்கோயிலின் முன்புறம் நதியும் அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில் கிரிவலம் செல்வார்கள் ஆனால் இங்கே நதி இருப்பதால் கிரிவலம் செல்ல முடியாது. இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தரும் என்கிறது தலபுராணம். முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார். இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால் அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி இறைவா தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள் என கூறினாள்.

பூமாதேவியின் வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து பூமாதேவியே நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் ருத்ரயோனி என்றும் அதற்கு காரணமான நீ கோ (பசு) என்றும் உனது காது கர்ணம் என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் கோகர்ணம் ஆனது. எனவே இத்தலத்தை காது துவார தலம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதாள உலகில் இருந்து வெளியில் வந்த ருத்ரன் பிரம்மனின் படைப்பில் அதிருப்தியடைந்து பிரம்மாவின் படைப்புக்களை அழிக்க பூதகணங்களை தோற்றுவித்தார். இதையறிந்த விஷ்ணு ருத்ரனே பிரம்மனை மன்னித்தருள வேண்டும். அவரது படைப்புக்களை பிரளய காலத்தில் மட்டும் அழித்து அருள்புரிய வேண்டும். அத்துடன் நீங்கள் இத்தலத்தில் இருந்து வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தந்தருள வேண்டும் என்றார். ருத்ரனும் அதை ஏற்றார். அன்றிலிருந்து இத்தலம் ருத்ரபூமி ஆனது.

ஒருமுறை பிரம்மா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி கவுரி என்ற பெயரில் நதியாக ஓடிக்கொண்டிருந்த பார்வதி அவரது வலக்கையில் தோன்றினாள். பிரம்மா அவளிடம் நீ விரைவில் ருத்ரனின் மனைவி ஆவாய் என்றார். அவரை அடைவதற்காக பக்தியுடன் தாமிர பர்வத மலையில் நதிவடிவில் தவமிருந்தாள். இவளது பக்திக்கு மகிழ்ந்த ருத்ரன் அவளை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு அந்த இடம் வைவாஷிக பர்வதம் (கல்யாண கிரி) என்று அழைக்கப்பட்டது. அம்பிகை தாமிர கவுரி ஆனாள். இந்த நதி கோயிலுக்கு எதிரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக கயிலை மலை வந்து சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம் ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால் தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த லிங்கத்தை ராவணனிடம் கொடுக்கும் முன் ராவணா நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது என கூறி அனுப்பியிருந்தார்.

இரவணனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு ராவணன் சந்தியா வந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து கணபதியை அழைத்து நீ பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம் லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல் என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் சூழ்ந்தது ராவணன் சந்தியா வந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர்.

சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன் லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு மகாபலம் உடையவர் இந்த இறைவர் எனக் கூறி அந்த சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டி பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனினர். பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் தலையில் இப்போதும் இரவணன் குட்டிய பள்ளம் அடையாளமாக உள்ளது. பிரம்ம தேவர், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், வசிஷ்டர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த கோவிலை மயூரசர்மா என்ற அரசன் கட்டி உள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 266 திருஅஞ்சைக்களம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 266 வது தேவாரத்தலம் திருஅஞ்சைக்களம். புராணபெயர் திருவஞ்சைக்குளம், கொடுங்கலூர். மூலவர் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர். இங்கு இறைவன் மிகச்சிறிய சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இறைவன் தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். அம்பாள் உமையம்மை. தீர்த்தம் சிவகங்கை. தலமரம் சரக்கொன்றை. தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். கேரள பாணியில் கோயில் அமைந்துள்ளது. கோயில் வாசல் மேற்கு நோக்கி உள்ளது. துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன. உள்ளே குளம் உள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடிவெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுள்ளது. கோஷ்டமூர்த்த அமைப்பு இல்லை. விமானத்தில் யோக நரசிம்மர் உக்கிரரூபத்தில் உள்ளார். இங்குள்ள நடராஜர் சேரமான் பெருமாள் பூசித்தது. பஞ்சலோகச்சிலை. இதன் கீழ் திருவஞ்சைக் களத்து சபாபதி என்றெழுதப்பட்டுள்ளது.

கிழக்கு ராஜகோபுர முன்புறத்தில் நுழையும்போது பக்கக்கற்சுவரில் யானை உருவங்கள் வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும் எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்குச் செல்லும் போது வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடைக்கு யானை வந்த மேடை என்று பெயர். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்ற மேடை ஆகையால் இந்த பெயர் வந்தது. கேரள வழிபட்டு தந்திரமுறையில் இத்திருக்கோயிலில் வழிபாடுகள் நடந்தாலும் வருடத்தில் ஒருநாள் சுந்தரர் கயிலை சென்ற ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை நடைபெறுகின்றது. ஏகாதசருத்ரம் சங்காபிஷேகம், ம்ருத்யுஞ்சஹோமம் இக்கோயிலில் நடைபெறுகிறது. சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒரு நாள் மன்னன் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி கேட்கவில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிர சேரமான் முன்பு ஈசன் தோன்றி வருந்தாதே மன்னா என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய் மறந்து விட்டேன். எனவே தான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகி விட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய மன்னன் தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பை ஏற்று திருவஞ்சிக்குளம் சென்று சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர். பின் சேரமன்னனுடன் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார்.

சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. அங்குள்ள இறைவனிடம் இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். சேரமன்னன் தன் உள்ளுணர்வால் சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே இந்த தலத்தில் இருந்து தன் குதிரையில் ஏறியமர்ந்து அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத குதிரை விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது. சுந்தரர் சென்று கொண்டிருக்கும் போதே பாடல்கள் பாடினார். இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். சேரமன்னனும் கயிலாயம் சென்றடைந்தார் இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார். இத்தலம் கழறிற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலமாகும். இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வம். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.