ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 103

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

யார் யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கடுமையான விதியிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மைப் பொருத்தவரை தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் இது ஒன்றுதான். அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல் எந்த சூது வாது இல்லாமல் சிறு குழந்தை போல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலருக்கும் வெறும் லோகாய விஷயங்களைக் கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ சினப்படவோ இல்லை. அது மனிதனின் தேவை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே? என்று யாரும் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. எனவே இன்று இங்கு எம்முன்னே அமர்ந்து வாக்கைக் கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை நூற்றுக்கு நூறு சரியாகப் புரிந்து கொண்டு சரியான தர்ம வழியில் எவன் ஒருவன் நடக்கிறானோ கட்டாயம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம் செய்து கொண்டிருக்கிறோம் இனியும் செய்வோம். அப்படியெல்லாம் ஏதுமில்லை. பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் எதுவும் தீரவில்லை. மாறாக கஷ்டங்கள் அதிகமாகி இருக்கிறது என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும். ஒன்று பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கே குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்தில் இளமை காலத்திலிருந்து அவன் நடந்து கொண்ட விதத்தை சிந்தித்து பார்த்தால் எங்கே குற்றம்? எங்கே குறைகள்? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 102

கேள்வி: ஜீவாத்மாவை எப்பொழுது பாவம் பற்றத் தொடங்குகிறது?

எப்பொழுது பரமாத்வாவை ஜீவாத்மா பிரிந்ததாக நம்பப்படுகிறதோ கூறப்படுகிறதோ எப்பொழுது பிறவி என்று இந்த மாய லோகத்திற்கு ஒரு உயிர் வருகிறதோ அப்பொழுது பாவம் பற்றி விடுகிறது.

கேள்வி: விதியைத் தாண்டி கேள்விகளை கேட்க சிந்திக்க செயல்பட எங்களுக்கு அருள்புரிய வேண்டும்

இறைவன் அருளால் விதி தாண்டி எத்தனையோ நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதனை ஏற்கத்தான் மனிதனின் மனம் இடம் தருவதில்லை. ஒருவன் ஒரு மிகவும் அழகான இல்லம் வைத்திருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது இங்கு ஆணையிடுகிறோம். அந்த இல்லத்தை விற்றுவிட்டு தர்மம் செய் என்றால் அதை செய்ய ஆயத்தமாக இருக்கிறானா? இங்கு யாராவது இப்படி இருக்கிறார்களா? இருந்தால் விதி தாண்டி எப்படி வாழ்வது? விதி தாண்டி எதையெல்லாம் செய்யலாம். எப்படி செய்யலாம் என்று நாங்கள் கூறுவோம்.

கேள்வி: ஒருவனுக்கு பாவம் பார்க்கப் போனால் அவர்களின் பாவம் நம்மை பற்றிக் கொள்ளும் என்ற சொல் வழக்கில் இருக்கிறது அது குறித்து

இறைவன் அருளால் பிறரை பார்த்து இரக்கப்பட்டு உதவி செய்து நாம் சங்கடத்தில் மாட்டிக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் உன் வினா அமைந்திருக்கிறது என்று யாம் எண்ணுகிறோம். கட்டாயம் பிறருக்கு உதவ வேண்டும். அப்படி உதவும் பொழுது உதவுகின்ற மனிதனுக்கு தொடர்ந்து இன்னல்கள் வருமேயானால் நாகரீகமாக ஒதுங்கிக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இது மனித ரீதியான சிந்தனை. ஆனால் எத்தனை கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் தர்மத்தை கைவிடாமல் பிறருக்கு உதவுவதை நிறுத்தாமல் இருப்பதுதான் மகான்களின் போதனை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 101

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஜபத்தைவிட உள்ளன்போடு ஆத்மார்த்தமாக பரிசுத்த இதயத்தோடு ஒரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் இறை தரிசனம் வேண்டும் என்கிற அந்த எண்ணம் தீவிரமடைந்து லோகாயம் எல்லாம் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெபித்தால் கட்டாயம் இறை துவாபர யுகத்தில் மட்டுமல்ல திரேதா யுகத்தில் மட்டுமல்ல இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் லகரம் (லட்சம்) ககரம் (கோடி) மந்திரங்களை ஜெபி என்று கூறுவதன் காரணமே மனித மனம் ஒரு ஒழுங்குக்கு கட்டுப்படாததால் (அப்படி) கூறிக்கொண்டே இருந்தால் என்றாவது ஒருநாள் அவனையும் அறியாமல் மனம் லயித்து ஒரு முறை ஒரு முறை அந்த திருவின் நாமத்தை மனம் வாக்கு காயம் (உடல்) 72000 நாடி நரம்புகள் பரவ கூறுவான் என்று தானப்பா நாங்களும் கூறுகிறோம். எனவே கூறிக்கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நிலையில் சித்திக்கும்.

நாகபூசணி அம்மன் கோவில்

நாகபூசணி அம்மன் கோவில்

நாகபூசணி அம்மன் கோவில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிட்டத்தட்ட 14000 வருங்கள் பழமையானது ஆகும். இந்த கோவில் நாகர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் கட்டும் போது நாகலோகத்து நாகர்களும் தங்களால் இயன்ற வரை உதவி செய்திருக்கிறார்கள் என்று கோவிலின் புராண வரலாற்றில் உள்ளது. நாகபூசணி அம்மன் ஆலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் பரப்பவன் சல்லி என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்பு உருவங்களாகவே உள்ளன. நீள் உருளை வடிவத் திருமேனியில் அம்மன் எழிலாக காட்சி தருகின்றாள். சீறும் ஐந்துத் தலை நாகச்சிலை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்றும் காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள் பக்கம் அமைக்கப்பட்டுள்ளன. ஆலய பூஜைகள் கயிலாசநாத குருக்கள் என்பவரது பரம்பரையால் சுமார் 250 ஆண்டுளாக நடத்தப்படுகின்றன. தல மரம் வன்னி தல தீர்த்தம் தீர்த்தக்கேணி ஆகும். இத்திருத்தலத்தில் 4 கோபுரங்களும் வசந்த மண்டபம் வாகன மண்டபம் கல்யாண மண்டபம் அன்னபூரணனேஸ்வரி அன்னதான மண்டபம் அமுதசுரபி அன்னதான மண்டபம் ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்க மண்டபம் முதலான 6 மண்டபங்களும் அமைந்துள்ளன.

நாகபூசணி அம்மனை நாகபாம்பு பூக்களைக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும் வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் கி.பி 1620 ம் ஆண்டு ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணப்படுகிறது. போர்ச்சுக்கீசியர் போர் தொடுக்கும் முன்பாக ஆலயத்தின் முக்கிய மூர்த்திகள் பொருட்களை பக்தர்கள் மறைத்து வைத்தனர். அம்மனை ஆலய மரப் பொந்தில் வைத்து வழிபட்டனர். டச்சுக்காரர்கள் ஆட்சிக்குப் பின்பு ராமலிங்கம் ராமச்சந்திரர் என்பவர்களால் 1788 இல் கல்லுக் கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச ராஜ கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

நாகபூசணி அம்மன் கோயில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர் நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்துத்தலை நாகச்சிலை பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்துள்ளார் அதற்கான சான்றுகள் உள்ளது.

நாகபூசணி அம்மனை வழிபட நயினா தீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு வரும் போது அம்மனுக்கு அர்ச்சனை செய்ய புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம் கடலின் நடுவில் இருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும் நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்ற கருடனிடம் பேசினார். நாகம் அம்மனை வழிபடுவதற்காச் செல்கிறது எனவே அதனை தடுக்க வேண்டாம் என்று வேண்டினான். அதற்கு கருடன் ஐயா அம்மன் மீது உங்களுக்கு பக்தி இருக்குமானால் கப்பலில் உள்ள உங்கள் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர ஒப்புக்கொண்டால் நானும் உங்களுக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன் என்றது. கருடன் கூறியதற்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும் சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது. நயினா தீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும் கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம்.

நாகபூசணி அம்மனை இந்திரன் சில காலம் பூஜித்து தனது சாபத்தை போக்கிக் கொண்டான். அதன் பின் அம்மனுக்கு சிறிய ஆலயம் கட்டினான். மகாபாரதத்தில் அர்ஜூனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர இங்கு வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றான். இதற்கு சான்றாக அர்ஜூனனின் மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்ற பெயர் உள்ளது. மணிமேகலை காவியத்தில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான் இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டை மண்டலத் தேசத்தவரும் ஆவர்கள். நாகபூசணி அம்மன் கோவிலுக்கு பல பரம்பரைக் கதைகளோடும் பல புராண இதிகாசங்களோடும் பல ஆயிரம் வருடங்களுக்கான வரலாறுகள் இருப்பதை அறியலாம். நாகர்கோயில் நாகதேவன்துறை நாகதீவு போன்ற பெயர்களும் இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் நாக வழிபாட்டு முறையும் இக்கூற்றை உறுதி செய்கின்றது.

இவ்வாலயத்திற்கு 1951 1963 1983 1998 2012 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. இப்போதும் அடிக்கடி பல நாகங்கள் கோவிலுக்கு வந்து செய்கிறது. நாகங்கள் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்துவது இல்லை. கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தூரத்திலும் உள்ள நயினா தீவில் இக்கோவில் அமைந்துள்ளது.

நாகபூசணி அம்மன் கோவில் தேர்:

நாகபூசணி கோவிலின் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வுகள் கிருஷ்ணர் அஷ்டலட்சுமி நாகம் புளியந்தீவில் பூப்பறித்து வரும் போது கருடன் சண்டையிட்டது மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் தேரில் நாகபூசணி பவனிவர தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில் எட்டுத் திசைகளிலும் மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது.

இலக்கியங்கள்:

யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய மனோன்மணி மாலை மற்றும் அமரசிங்கப்புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திரு ஊஞ்சல் மற்றும் வரகவி முத்துக்குமாருப் புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திருவிருத்தம் மற்றும் வரகவி நாகமணிப்புலவர் எழுதிய நயினை மான்மியம் மற்றும் வேலனை தம்பு உபாத்தியார் இயற்றிய திருநாக தீபப் பதிகம் மற்றும் க.ராமச்சந்திரன் இயற்றிய தேவி பஞ்சகம் மற்றுப் நயினைத் தீவு சுவாமிகள் கவிஞர் செல்வராஜன் இயற்றிய பாடல்கள் என எண்ணற்ற இலக்கியங்கள் நாகபூசணி அம்மனைப் புகழ்கின்றன.

தொன்மைச் சிறப்பு:

ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் நயினா தீவை மணிபல்லவம் என்று குறிப்பிடுகிறது. குலோதர மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே மணியாசனம் காரணமாக எழுந்த பெரும் போரை விலக்கி வைக்க புத்தர் இங்கு எழுந்தருளியதாக பவுத்த நூல்கள் கூறுகின்றன. இத்தீவில் பழமையான பவுத்த கோவில்கள் இருந்ததற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. அம்மன் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பவுத்த ஆலயம் ஒன்றும் படித்துறையும் உள்ளது. இந்து சமயத்தவருக்கும் பவுத்த சமயத்தவருக்கும் புனித தலமாக நயினா தீவு விளங்குகின்றது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 100

அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பொது வாக்கு:

இறைவன் அருளால் எப்பொழுது மனித குலம் தாங்கொண்ணா துயரை நுகர்கிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்தில் தர்மம் குறைந்திருக்கிறது என்று. தர்மம் குறைவதுகூட பாதகமில்லை. பாவத்தில் கொடிய பாவம் எது தெரியுமா? ஒருவன் தர்மம் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம். அது அவனின் கர்மவினையைப் பொறுத்தது. அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நல்லவர்களை இனம் காண முடியாமல் நல்லவர்களையெல்லாம் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு தீயவர்களையும் ஆளுமை கொண்டு கர்வத்தோடு இருக்கக்கூடிய மனிதர்களை வெறும் பதவிக்காகவும் தனத்திற்காகவும் அவன் பின்னால் ஒரு கூட்டம் சென்று கொண்டேயிருக்கிறது. ஒருவன் நான் பாவம் செய்யவில்லை என்று மார் தட்டலாம். ஆனால் பாவம் செய்து கொண்டிருக்கும் மனிதனை அண்டிப் பிழைக்கிறானே? அதுதான் மாபெரும் பாவம். இப்பேற்ப்பட்ட சமுதாயக் கூட்டம் இருக்கும் வரையில் எங்கெல்லாம் நல்லவை நடக்கிறதோ அதை புரிந்து கொள்ளாத அறியாமை இருள் இருக்கும் வரையிலும் எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் குதர்க்கவாதம் பேசி விமர்சனம் செய்துவிட்டு வெறும் வெற்று ஆர்பாட்டத்திற்கும் வெற்று வேடிக்கைக்கும் கூட்டத்திற்கும் செவி கொடுத்து பார்வை கொடுத்து அதை நோக்கி ஒரு மனித சமுதாயம் செல்லும் வரையிலும் நதி வரண்டுதான் இருக்கும். வருணன் பொய்த்துதான் போவான். முதலில் ஒருவன் தான் நல்லது செய்வது என்பது அடுத்த நிலை. ஏற்கனவே அவனை சுற்றி நடக்கக்கூடிய உண்மையான நல்ல விஷயங்களையெல்லாம் செவி கொடுத்து கேட்க வேண்டும். கண் கொண்டு பார்க்க வேண்டும். எதைப் பார்த்தாலும் அதில் குற்றம் கண்டு கொண்டே இருப்பதைவிட இது தக்கது இது தகாதது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயங்களை முதலில் கேட்க பழக வேண்டும். கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கேட்டு மனதிலே பதிய வைத்து வைத்து வைத்து பிறகு அதனையே விவாதம் செய்து செய்து செய்து செய்து பிறகு அதனை நடைமுறைப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை எண்ணி நல்லதை உரைத்து நல்லதை செய்ய அப்படி செய்யக்கூடிய மனிதர்கள் எல்லாம் சத்சங்கமாக கூட கூட வருணன் பொழிவான். நதி கரைபுரண்டோடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 99

கேள்வி: ஐயனே சம்பளத்தில் ஒரு 10% தானத்திற்கு கொடுத்தால் போதுமா?

பதில்: அப்படி என்றால் கர்மவினையும் 10% தான் குறையும் போதுமா?

சுலோகம் -72

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #25

ஆத்மா புலன்கள் மூலம் அறியப்பட இயலாதவன். மனதால் சிந்தித்து அறிய இயலாதவன். எந்த விதமான மாறுதல்களும் இல்லாதவனாக உள்ளான். ஆகவே அர்ஜூனா இப்படி ஆத்மாவை அறிந்து கொண்ட பின்னர் ஆத்மாவைக் குறித்த வருத்தத்தை நீ அடையக் கூடாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் என்ற ஐந்து புலன்களால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. இப்படித்தான் இருப்பான் என்று மனதால் சிந்தித்துப் பார்த்து ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவானது இறைவனிடம் இருந்து பிரிந்து வந்தபோது எப்படி இருந்ததோ அதேபோல் இறைவனிடம் சென்று சேரும் வரை எப்போதும் மாறாமல் உள்ளது. ஆகவே அர்ஜூனா புலன்களால் சிந்தனையால் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இந்த ஆத்மாவைப் பற்றி நீ வருத்தப்படக் கூடாது என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 98

அகத்திய மாமுனிவர் (குருநாதர்) பொதுவாக்கு

இறைவன் அருளைக் கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுக்கு நூறு எம்மை நம்பி எம் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் (சித்தர்கள்) இறைவனருளால் நல்ல வழி காட்டுவோம். உலகியல் ரீதியாக முன்னேற்றம் காட்டினால்தான் ஒருவனுக்கு நாங்கள் அனுக்ரஹம் செய்கிறோம் என்பது மிகவும் குழந்தைத்தனமான எண்ணம். நன்றாக எமது வார்த்தையை கவனித்து பொருள் கொள்ள வேண்டும். எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு (ஜீவநாடி) இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து விதவிதமான வாக்குகளைக் கூறி விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும் குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும் குணத்திலும் மனிதனைவிட மேம்பட்ட மாமனிதனாக இருக்கலாம் புனிதனாக இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்ற வேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கிட்ட (சித்தர்கள்)கட்டளை. ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்ற வேண்டும் என்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கமாக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி அவனை மாமனிதனாக்கி அந்த மாமனித நிலையிலிருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையிலே சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ லோகாய (உலகியல் ரீதியாக) கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து எம் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தனாக்கி விடுவோம். சித்தனாக்கி விட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும்? அவன் இறையைகூட நாட தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்து போக வேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

சுலோகம் -70 # 71

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #23

ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை. நெருப்பு எரிப்பதில்லை. தண்ணீர் நனைப்பதில்லை. காற்று உலர வைப்பதில்லை.

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #24

ஆத்மாவை ஆயுதங்கள் மூலம் வெட்டிப் பிளந்து அழிக்க முடியாது. எரித்து அழிக்க முடியாது. நீரினால் கரைத்து அழிக்க முடியாது. காற்றின் மூலம் உலர்த்தி அழிக்க முடியாது. நித்தியமானவன் உறுதியுடையவன் அசையாமல் என்றும் இருப்பவன்.

இந்த இரண்டு சுலோகத்தின் கருத்து என்ன?

ஒரு பொருளை அழிக்க வேண்டுமென்றால் அந்த பொருளுக்குள் ஏதேனும் ஒன்றை புகுத்தி அழிக்க வேண்டும். ஆத்மா எதனாலும் புக இயலாதபடி நுண்ணியதாகவும் அசையாததாகவும் அழிக்க இயாலாதபடி உறுதியாகவும் எப்போதும் இருக்கும் நித்தியமானாதாகவும் உள்ளது. ஆகையால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த பொருள்களாலும் எந்த தன்மையாலும் ஆத்மாவை அழிக்க முடியாது. துவைதம் என்ற சித்தாந்த தத்துவத்தை உலகில் நிலைநாட்டிய மத்வர் தனது விளக்கத்தில் பரம்பொருளை எப்படி யாராலும் எதனாலும் எப்போதும் அழிக்க முடியாதோ அதே போல் பரம்பொருளின் பிரதிபிம்பமாகவும் அதன் அம்சமாகவும் இந்த ஆத்மா இருப்பதால் ஆத்மாவை அழிக்க முடியாது என்று கூறிப்பிடுகிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 97

கேள்வி: அரச மரம் பற்றி

பல அரசர்களே மரம் போல் இருக்கிறார்களப்பா. இறைவனின் அருளாலே அரச மரத்திலே பலவிதமான ஆற்றல்கள் போதிந்திருப்பதை மனிதர்கள் மெல்ல மெல்லதான் புரிந்து கொள்கிறார்கள். மனித சிந்தனையிலே பெரும்பங்கு வகிப்பது மனிதன் கூறுவது போல மூளையாகும். அந்த மூளை நன்றாக வேலை செய்வதற்கு அயர்வுராமல்(சோர்வுராமல்) இருப்பதற்கு வேண்டிய வேதிப்பொருள்களை எல்லாம் தூண்டிவிடக்கூடிய நிலை அந்த அரச மரத்தை சுற்றியுள்ள காற்றிலே இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்திலே அடிக்கடி அரச மரத்தடியிலே உள்ள விநாயகப் பெருமானையும் நாக தெய்வங்களையும் வணங்கி பலமுறை சுற்றி வந்தால் சில நாழிகை அங்கு அமர்ந்தால் கட்டாயம் அங்குள்ள விநாயகர் காப்பாற்றுகிறாரோ இல்லையோ அந்த அரச மரத்தின் மூலிகைத் தன்மை கட்டாயம் தேகத்தைக் காப்பாற்றும். எனவே இது போன்ற ஒவ்வொரு விருக்ஷத்திடமிருந்தும் அற்புதமான மூலிகைப் பயன்கள் காற்றின் மூலம் மனித சுவாசத்தின் மூலம் உள்ளே செல்கிறது. இதனை மனிதன் நன்றாக புரிந்து கொண்டு அந்த இடத்திலே இருக்கும் பொழுது இறை சிந்தனையோடும் வேறு தேவையற்ற சிந்தனைகளும் இல்லாமல் இருந்து அமைதியாக வாய் வழியாக இல்லாமல் ஆழ்ந்த பெருமூச்சை நாசியின் வழியாக விட்டு இழுத்தால் கட்டாயம் நல்ல பலனை பெறலாம்.

ஒவ்வொரு மரத்தினாலும் நல்ல பலன் உண்டு. சில மரங்கள் தீய பலனைத் தருவதாக மனிதன் எண்ணலாம். அதை நேரடியாக தீய பலன் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது யாருக்கு உகந்ததோ அவர்கள் அந்த மரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கூறுங்கால் புளிய விருக்ஷம் எனப்படுவது அதிக அனல் உஷ்ணம் அங்கு தங்குவது கூடாது என்று கூறப்படுவது உண்மைதான். ஆனால் அதிக அளவு குளிர் தேகம் கொண்டவர்கள் சீதளக் குற்றம் உள்ளவர்கள் அங்கு தாராளமாக தங்கலாம்.

கேள்வி: அம்மையப்பன் தான் உலகம் என்பதன் பொருள்

இறைவனையும் இறைவியையும் தாய் தந்தையாக பாவிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர்களை இறைவனுக்கு சமமாக மதிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு.