தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை அழைக்கின்றார்கள். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானை முகமுடைய கஜமுகா அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சி இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட யானையின் தோலையே தனது மாலையாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும் யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன. சிவனின் ரௌத்ரப்பார்வை நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள் இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும் இன்னொன்று ஊன்றிய நிலையிலும் உள்ளது. சிவனின் உள்ளங்கால் தரிசனம் காணலாம்.
ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர அதை அழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் எழுந்து வெளிப்படவே முருகப் பெருமான் தன் தாய்க்கு இதோ தந்தையார் என்று சுட்டிக் காட்டினார். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது இச்சிலை அற்புதமான உலோக வேலைப்பாடுகள் சோழ சிற்பிகளின் அதீத கற்பனை திறனை வெளிப்படுத்துகிறது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பத்தாவது கிமீ தூரத்தில் வழுவூர் உள்ளது.
கேள்வி: வியாபாரம் சிறக்க எந்த ஸ்தலம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
இறைவனின் கருணையைக் கொண்டு நல்ல முறையில் வியாபாரம் தொழில் அமைந்து அதனை அலட்சியம் செய்தவர்க்குதான் மறுபிறவியிலே சரியான தொழிலும் வியாபாரமும் அமைவதில்லை. அடுத்ததாக வியாபாரத்தில் பொய் சொல்லலாம் தவறொன்றுமில்லை. பொய் சொல்லாமல் இருந்தால் வியாபாரத்தில் தோற்றுவிடுவோம் என்ற சித்தாந்தம் மனிதரிடம் இன்றுவரை நிலவி வருகிறது. இதுவும் தொழில் தோஷம் ஏற்பட காரணமாக இருக்கிறது. எத்தனை நஷ்டங்கள் கஷ்டங்கள் வந்தாலும் ஒருவன் வியாபாரத்தை நேர்மையாகத்தான் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதர்களால் வெறும் ஏட்டளவில் மட்டும்தான் ஏற்க முடிகிறது. நடைமுறையில் யாரும் அப்படி இருப்பதில்லை. அப்படியிருந்தால் உடனடியாக நஷ்டம் வருகிறது என்று பயந்து வியாபாரத்தில் பொய் சொல்ல மனிதன் துவங்கி விடுகிறான். இப்படி செய்யாவிட்டால் வியாபாரத்தில் ஜெயிக்க முடியாது என்று சமாதானம் கூறுகிறான். அதனால்தான் வியாபார ஸ்தானத்திலே தோஷத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். இருந்தாலும்கூட திருவெண்காடு ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் புதன்கிழமை தோறும் புதனுக்கும் பெருமாளுக்கும் தச வதன நெய் தீபம் ஏற்றுவதும் இன்ன பிற வழிபாடுகள் செய்வதும் தச தோஷ நிவர்த்தி யாகம் செய்வதும் தச லாப அபிவிருத்தி யாகம் செய்வதும் தக்க வியாபாரமோ தொழிலோ அறிந்த ஏழைக்கு தொழிலைத் துவங்க உதவி செய்வதும் இந்த தோஷத்தை நீக்கி வியாபாரத்தில் வெற்றியைத் தரும்.
திருவெண்காடு கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
அழிவற்ற விளக்க முடியாத நித்தியமான ஜீவாத்மாவினுடைய நீ பார்க்கும் அனைத்து உடல்களும் அழியக்கூடியது. ஆகவே பரதகுலத் தோன்றலே அர்ஜூனா நீ போர் புரிவாயாக.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
நாம் காணும் இந்த அழியக்கூடிய உடல்கள் அனைத்திலும் காணமுடியாததும் அழிவற்றதும் அறிய இயலாததுமாகிய ஆத்மா தன் கர்மாவை தீர்த்துக் கொள்வதற்காக சில காலம் மட்டுமே தங்குகிறது. நீ தர்மப்படி யுத்தம் செய்து இந்த உடலை மட்டுமே அழிக்கிறாய். ஜீவாத்மாவை அல்ல ஆகவே யுத்தம் செய் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?
அர்ஜூனனை பரதகுலத் தோன்றலே என்று கிருஷ்ணர் ஏன் அழைக்கிறார்?
பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல்படுத்தினார்கள். அந்த குலத்தில் வந்த நீயும் அது போல் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து யுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்வதற்காக அர்ஜூனனை கிருஷ்ணர் பரதகுலத் தோன்றலே என்று அழைக்கிறார்.
கேள்வி: நமக்கு முன் பின் தெரியாத நமது முன்னோர்கள் செய்த பாவத்திற்கு நாங்கள் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?
பிறகு நீ பாவம் செய்தாய் அதனால் அனுபவிக்கிறாய் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கிறது. ஜோதிடம் இதையெல்லாம் நாகரீகமாக கூறுகிறது என்பதை புரிந்துகொள். முன்னோர்கள் பாவம் ஒருவனை படுத்துகிறது என்றால்? இவன் என்ன புண்ணியவானா? ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முன் செய்த பாவம். அதுதான் இவனுக்கு முன்னோர்கள் வழியாக வருகிறது. இதில் இன்னொன்றையும் எடுத்துக் கொள்ளலாம். அந்த முன்னோர்கள் யார்? இவனே அந்த முன்னோர்களாக இருந்து பாவங்கள் செய்து இருக்கலாம். இன்னொன்று. முன்னோர்கள் பாவம் செய்து ஒரு சொத்தை சேர்க்க அந்த சொத்தினால் வரும் லாபத்தை அந்த குடும்பம் அனுபவிக்க அதனால் உணவு உண்ண அதனால் இரத்தம் ஏற்பட அந்த இரத்தத்தினால் வாரிசுகள் ஏற்பட கட்டாயம் அந்த வாரிசுகளுக்கு அந்தப் பாவங்கள் வரத்தான் செய்யும். முன்னொர்கள் கொடுக்கின்ற சொத்துக்களை ஆசையோடு ஏற்று கொள்ளுகின்ற மனிதன் பாவத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முன்னோர்கள் பாவங்கள் மட்டுமல்ல புண்ணியங்களும் வருகிறது. அதை மனிதன் மறந்து விடுகிறான். எனவே பாவமும் புண்ணியமும் ஒரு மனிதனோடு மட்டும் போய்விடுவதில்லை. அவன் வாரிசுகளையும் தாக்குகிறது என்பதை நினைவிலே கொண்டு கூடுமானவரை பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
கேள்வி: ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையில் ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் அதிலும் இரத்த சம்பந்தமில்லாதவர்கள் 7 பேர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூற்று உண்மையா?
7 மட்டுமல்ல அதற்கு மேற்பட்டவர்கள் உண்டு. இதற்கும் பல்வேறு தெய்வீக சூட்சும காரணங்கள் இருக்கிறது. இதற்கு பிறிதொரு சந்தர்பத்தில் விளக்கம் தருவோம்.
ஹொய்சாளேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டு வந்த காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. ஹொய்சாளேஸ்வரர் கோயிலில் காணப்படும் சிவா பார்வதி சிலை அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹொய்சாளேஸ்வரர் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக்கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும் இக்கோயில் மன்னனால் மட்டுமின்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலும் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கேதமல்லன் கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக்குளம் ஹொய்சாளேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.
கோவில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹொய்சாளேஸ்வரருக்கும் மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. கருவறைகளில் சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப் போலவும் நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக் கோயில் இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது.
கோவில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். மேல் உள்ள இரண்டு கைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் மாலிக்காபூர் படையெடுப்பில் உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம் மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும் யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் உள்ளது. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார். கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது. வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார். இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயண மகாபாரத கதை தொடர்பான சிற்பங்கள் உள்ளன. ஆதிநாதர் சாந்திநாதர் பார்சவநாதர் ஆகிய சமணக் கோயில்களும் இக்கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ளன.
கோவிலில் இரண்டு பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. முதல் சன்னதியில் ஹொய்சாளேஸ்வரர் என்னும் திருநாமத்தில் இருக்கிறார். சிவலிங்க பாணத்தின் மேல் நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகாக உள்ளது. இச்சன்னதியின் முன் நவரங்க மண்டபம் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உள்ளது. விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சாள மன்னனின் மனைவி சாந்தளாதேவி. ராணியின் பெயரால் இவர் சாந்தளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டு பாணியில் சாந்தளேஸ்வரர் மீது தாராபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இரு சன்னதிக்கும் நேரே கிழக்கு வாசல்கள் உள்ளன. வடக்கு தெற்கு வாசல்களும் உண்டு. வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சியாக உள்ளது. சுவாமி தரிசனத்தின் போது தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்சவர் சிலைகள் உள்ளன. ஹொய்சாளேஸ்வரருக்கும் சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும் மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல்லினால் நந்தி வடிக்கப்பட்டுள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. தமிழ்நாட்டுப் பாணியில் நாக்கை வெளியில் நீட்டாமல் உள்ளது. சிவாம்சத்துடன் நந்தி மகாகாளர் என்னும் துவாரபாலகர்கள் சன்னதிகளில் காவலாக நிற்கின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள் கையில் திரிசூலமும் டமருகம் என்னும் உடுக்கையும் ஏந்தி சிவாம்சத்துடன் உள்ளனர். கைகளை லாவகமாக வளைத்தும் கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யார பாவனையில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் அருகில் சாமரம் வீசும் சேடிப்பெண்களின் சிலைகள் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார பாலகர்களின் பாதத்தில் காவல் வீரர்கள் நிற்கின்றனர்.
கோவில் பிரகார சுவர் முழுவதும் சித்திர வேலைப்பாடுகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. யானை சிங்கம் குதிரைவீரர்கள் பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும் அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஹொய்சாள மன்னர்கள் தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும் இவர்கள் கிருஷ்ணனை வணங்காமல் சமண சமயத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு இவர்கள் மீண்டும் தங்கள் வேதசமயத்தைப் பின்பற்ற தொடங்கினர். அதன்பின் சிறியதும் பெரியதுமாக சிவபெருமான் மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது இங்கு ஒரு சிவாலயம் கட்டி மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் ஹொய்சாளேஸ்வரர் என்று பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டும்பணி 1207ல் நிறைவு பெற்றது. விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான கெட்டுமல்லா இக்கோயிலைக் கட்டினார்.
14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தான் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது இக்கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அன்னியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் தொல்லியல் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. மைசூரில் இருந்து 149 கிமீ தூரத்தில் இக்கோவில் உள்ளது.
இந்த உலகில் உள்ள அனைத்தும் ஆத்மாவினால் நிறைந்துள்ளன. இந்த ஆத்மா என்பது அழியாமல் உள்ளது என்பதை நீ அறிந்து கொள்வாயாக. அழிவே இல்லாத இந்த ஆத்மாவிற்கு அழிவு என்பதை யாராலும் எற்படுத்த முடியாது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட புல் முதல் அனைத்து உயிர்களும் ஆத்மாவினால் நிறைந்துள்ளது. இந்த ஆத்மா அனைத்தும் பரமாத்மாவிடம் சென்று சேரும் வரையில் தனது உடலை மாற்றிக் கொண்டே இருக்குமே தவிர எப்போதும் அழியாமல் இருக்கும். இந்த ஆத்மாவை அழிக்கும் வல்லமை இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை. இதனை தெரிந்து கொள்வாயாக என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.
கேள்வி: பல உன்னதமான ஆத்மாக்கள் விண்மீன்களாக மாறும் என்று கூறியிருந்தீர்கள். அவர்களின் நிலை என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?
சதா சர்வ காலம் இறை தியானத்தில் இருப்பார்கள். தன் ஆக்கப் பூர்வமான கதிர்களை பூமிக்கும் மற்ற லோகங்களுக்கும் (உலகங்களுக்கும்) அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவையெல்லாம் (ஆத்மாக்கள்) இறைவனை நோக்கி வர வேண்டும் என்று துடிக்கிறதோ அவற்றை மேலும் நல்ல பாதையில் தூண்டி விடுவதற்குமான முயற்சியில் அது போன்ற ஆத்மாக்கள் இறங்கி செயலாற்றிக் கொண்டே இருக்கும்.
கேள்வி : திருஷ்டி கழிப்பது என்றால் என்ன? அரைஞாண் கயிறு கட்ட வேண்டுமா?
அரை என்றால் இடுப்பு என்ற ஒரு பொருள் இருக்கிறது. இன்னொன்று ஒட்டு மொத்த மனிதனின் அரைப்பகுதி பாதிப்பகுதியை ஒட்டிதான் குண்டலினி சக்தி இருக்கிறது. கனகம் எனப்படும் தங்கத்திலும் வெள்ளியிலும் பஞ்சு நூலிலும் கயிறுக் கட்டிக் கொள்வதும் குறிப்பாக காளையினத்தவர் (ஆண்கள்) கட்டிக் கொள்வதும் சிலவகையான சூட்சுமமான சக்திகளை பெற உதவும். ஆனால் ஏதோ அங்காடியில் (கடையில்) விற்கிறது வாங்கிக் கட்டிக் கொள்வது போல அல்ல. எப்படி முப்புரி நூல் எனப்படும் பூணுலை முறையாக ஜெபித்து அணிகிறார்களோ இதையும் இப்படிதான் அணிய வேண்டும். இதை மட்டுமல்ல. உடலிலே பிற்சேர்க்கையான ஒரு அணிகலனை ஒருவன் அணிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏதோ அங்காடியில்(கடை) வாங்கி அணிவதில் நன்மை ஏதுமில்லை. அதை முறையாக எடுத்து வந்து இல்லத்திலாவது அமர்ந்து குறைந்தபட்சம் ஒரு சப்த (07 நாட்கள்) தினங்களாவது பூஜை செய்து மந்திர உருவேற்றி அணிய வேண்டும். அது உடலுக்கு ஒரு கவசம் போல் ஒரு பாதுகாப்பைத் தரும். இதை ஆண்கள்தான் அணிய வேண்டும். பெண்கள் அணியக்கூடாது என்பதெல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் அணியலாம். பஞ்சு நூலாலும் அணியலாம். தவறொன்றுமில்லை. இது போன்ற பல்வேறு விதமான சடங்குகளெல்லாம் இறை நம்பிக்கையையும் பிராத்தனையையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.
நிலையாக இல்லாத ஒன்று எப்போதும் உள்ளது என்று கூறுவது பொருந்தாது. நிலையாக இருக்கும் ஒன்று இல்லை என்று கூறுவதும் பொருந்தாது. இந்த இரண்டைப் பற்றியும் ஞானம் உள்ளவர்கள் உள்ளது உள்ளபடியே அறிந்து கொள்கிறார்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
நம்மால் பார்க்கக் கூடிய உணரக்கூடிய மற்றும் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய நிலையில்லாத இந்த உடம்பு மற்றும் ஐந்து புலன்களினால் வரக்கூடிய இன்ப துன்பங்கள் எப்போதும் இருக்கும் இதுவே உண்மை என்று நம்புவது தவறானது. ஏனேனில் இது முன்பு இல்லை. தற்போது அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே உள்ளது. அனுபவம் முடிந்த பின்பு இருக்காது. மறைந்து விடும் தேடினாலும் கிடைக்காது அழிந்துவிடும். இல்லாத ஒன்றிற்காக வருத்தப்படுகிறாய்.
அடுத்தபடியாக மனித ரீதியில் பார்க்க முடியாத உணர முடியாத எப்போதும் அழியாமல் இருக்கும் இறைவன் மற்றும் இறைவனின் பகுதியான இந்த ஜூவாத்மா இல்லை என்று சொல்வதும் தவறானது. ஞானிகள் தங்கள் தவத்தின் வழியாக இந்த ஜூவாத்மாவை அறிந்து கொண்டு பரமாத்மாவிடம் செல்லும் வழியை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் கண்ட உண்மை என்னவெனில் பரமாத்மாவும் அதன் பகுதியான ஜூவாத்மாவும் நிலையாக இருக்கும் எப்போதும் அழியாத ஒன்று. இதனை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். எனவே நிலையானதை ஆராய்ந்து தெரிந்து கொண்டு உனது வருத்தத்தை விட்டுவிடு. ஐந்து புலன்களால் பார்க்கப்படும் உணரப்படும் நிலையில்லாதவைகளின் மேல் வருத்தம் கொள்ளாதே என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.
கேள்வி: ஒரு ஆன்மா எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறதோ அந்த உடலுடன் வளர்கிறது. சில உடல்கள் பார்ப்பதற்கு அழகாகவும் ஆரோக்யமாகவும் இருக்கிறது. அதே சமயம் அழகற்றதாகவும் ஆரோக்யமில்லாமலும் இருந்தாலும் ஒரு ஆன்மா ஆன்ம பலத்தைப் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் உடலை உகுந்த பிறகு எப்படி இருக்கும்?
உடலின் ஏற்ற மாற்றங்கள் ஆன்மாவை பாதிப்பதில்லை. ஆனாலும் கூட இந்த உலகிலே ஆன்மாவைப் பார்க்கின்றவர்கள் யாருமில்லை. உடலைப் பார்த்துதான் எடைப் போடுவார்கள் மதிப்பீடு தருவார்கள். அப்படி ஆன்மா உயர்வாகவும் உடல் பிறரால் மதிக்கப்படாமல் இருக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஒரு ஆன்மா தள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு ஏற்றாற்போல் பாவ புண்ணியங்கள் இருக்க வேண்டும். சில மகான்களும் ஞானிகளும் விரும்பியே பிறர் தன்னை மதிக்கக்கூடாது என்பதற்காக அழகற்ற தேகத்தை பெறுவதும் உண்டு. அஷ்டாவக்ரர் அப்படித்தான். அஷ்ட வக்ரம் எனப்படும் எட்டு விதமான கோணல்களோடு கூடிய உடம்பைப் பெற்று பிறவியெடுத்தார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனம் செய்தார்கள். அது குறித்து அவர் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆன்மா பயணம் செய்வதற்கு ஏதோ ஒரு உடல் என்ற அளவில் மட்டும்தான் அதை நினைத்தார். தேகம் (உடல்) அழகாக இருக்க வேண்டும் என்பதைவிட ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதில்தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும். தேகத்தை விட ஆன்மா அழகாக இருப்பதே மனிதனுக்கு ஏற்புடையது. ஆன்மாவிற்கு அழகு எது? என்றால் தர்மமும் சத்தியமும் தான். அதை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் போதும். ஒரு நிலையிலே இந்த தேகத்திற்கு ஏற்படக்கூடிய வயோதிகம் இளமை அழகு அனைத்துமே தேகத்தோடு முடிந்து விடுகிறது. ஆன்மாவை அணுவளவும் பாதிப்பதில்லை.
திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவஞானி சடையாச்சியம்மாள். இவரின் சடை பதினாறு அடி நீளமும் ஒரு அடி அகலமும் இருந்தததால் சடையாச்சி அம்மையார் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் சடை சாமியார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். சடையாச்சி அம்மாளின் இயற்பெயர் சண்முகத்தம்மாள். இவரது சொந்த ஊர் ராஜபாளையம் தனது நாற்பதாம் வயதில் தனது சொந்த ஊரில் இருந்து திருவண்ணாமலை வந்த இவர் இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவு பூண்டவர். திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம் பலாமரத்தடி குகை ஆகியவற்றில் வாழ்ந்து வந்தார். அண்ணாமலையாருக்குத் தும்பைப் பூவால் கட்டிய மாலையை தினமும் சாற்றி வந்தார். ஈசனை எண்ணிப் பல மணி நேரம் தியானம் செய்யும் வழக்கம் கொண்டவர். தும்பைப் பூ போட்டால் துன்பம் தீரும் இது சிவனுக்குப் பிரியமானது என்று பக்தர்களுக்கு எடுத்துரைப்பார் சடையாச்சி அம்மாள். வெயில் மழை புயல் காற்று என்று எந்த இயற்கைச் சீற்றத்திற்கும் அஞ்சாமல் தினந்தோறும் கோயிலுக்கு வந்த சடையாச்சி அம்மாள் நடுவில் ஒரு வார காலம் தரிசனம் செய்யக் கோயிலுக்கு வரவில்லை. அம்மைக்கு என்ன ஆனதோ என்று அர்ச்சகர் கவலையுற்றார். அன்று அர்ச்சகர் கனவில் தோன்றிய சிவன் குளத்தில் நீருக்குள் அவர் அமிழ்ந்திருப்பதாக எடுத்துக் கூறினார். குளத்தில் உள்ள படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ள இடைவெளியில் படுத்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் சடையாச்சி அம்மையார். ஐந்து நாட்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தபொழுதும் அவர் உயிருடன் மீட்க்கப்பட்டார். அதன் பிறகு பல ஆண்டுகள் வாழ்ந்த இவர் திருவண்ணாமலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.