ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 337

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள் செயல்கள் ஒரு ஆரோக்யமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல நல்லாரை கண்டவுடன் சந்தோஷமும் மீண்டும் மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப்பழக காந்தமற்ற இரும்பு காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவது போல அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும். ஒரு மிகப்பெரிய தனவானிடம் எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்துவிடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் எத்தனை ஆண்டு பழகினாலும் அந்த அழகு இவனை வந்தடையாது. ஆனால் நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால் அவை மெல்ல மெல்ல இவனிடமும் வந்தடையும். எனவே சதாசர்வ காலமும் மனதிலே சினமும் வாயிலே தகாத வார்த்தைகளும் பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால் பிறகு அதுவே இயல்பாகி சமாதானமாகி பிறகு அதுதான் சரி என்றாகி பிறகு மனமும் புத்தியும் வாக்கும் எண்ணமும் செயலும் அமைந்துவிடும் என்பதால் சதாசர்வகாலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும்.

இதுபோல் நிலையை உயர்த்த உயர்த்த உயர்த்த உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு அறிவை என்ற நிலை தாண்டி சித் என்ற உன்னத நிலை அறிவு அவனுள் மலரிடத் துவங்கும். சித் எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி வாக்கு யாம் எதை ஏன் எந்த காலகட்டம் உரைக்கிறோம்? என்பது புலப்படத் துவங்கும். எனவே பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கும் போராட வேண்டும். எனவே நீக்கமற நிலைத்திருகின்ற பரம் பொருளை எல்லாம் இறைவா பாவம் போக்கத்தான் அருள வேண்டும். உனது திருவடியை பற்றிக் கொண்டு இந்த சிறிய ஆன்மா இந்த கூட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறது. இந்த கூட்டையே தான் என்று எண்ணுகிறது. இந்த கூடு வேறு இந்த கூட்டுக்கு மேல் மனிதன் ஆடையை அணிந்து கொள்கிறான் மானம் காக்க என்று என்றாவது ஆடை சேதம் அடைந்து விட்டால் நான் சேதம் அடைந்து விட்டேன் என்று கூறுவானா? என் ஆடை தான் சேதம் அடைந்து விட்டது. இனி புதிய ஆடையை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தான் கூறுவான். ஏனென்றால் தன்னுடைய தேகம் வேறு தன்னுடைய தேகத்தை மறைத்திருக்க கூடிய ஆடை வேறு என்பது அவனுக்கு வெளிப்படையாக தெரிகிறது. தேகத்தை சேதப்படுத்தினால் அவனுக்கு உணரக்கூடிய தன்மையாக இருக்கிறது. ஆனால் அவன் ஆடைக்கு சேதம் ஏற்பட்டால் அதனால் என் உடலுக்கு ஒன்றும் இல்லையே என்பான். ஆனால் ஆன்மாவின் மேல் படிந்து உள்ள இந்த தேகம் என்னும் ஆடை அது விலங்கு ஆடையோ பட்சி ஆடையோ விருக்ஷ ஆடையோ எல்லாவற்றுக்குள்ளும் ஒரு உயிர் ஒளிந்து கொண்டு இருக்கிறது. சிறைபட்டு இருக்கிறது.

இந்த தேகத்தை வருத்தினால் ஏதாவது ஆபத்துக்கு ஆளாக்கினால் சட்டை பழுதடைந்தால் தானே பழுடைந்து விட்டதை போல புலம்புவதை போல மனிதன் புலம்புகிறான். அது எப்படி சட்டையை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கவில்லை. ஆனால் தேகத்தை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கிறதே காரணம் என்ன? விளாம் கனி இன்னும் பழுக்கவில்லை. பழுத்து விட்டால் ஓட்டை விட்டு விலகி அது உள்ளே தனியாக ஆட துவங்கும். எனவே அஞ்ஞானம் எங்கிருந்து வந்தாலும் அதனை தவிர்க்க வேண்டும். கூறுவது அன்புள்ள தாயே ஆகினும் மனைவியே ஆகினும் தந்தையே ஆகினும் சகோதரன் ஆகினும் பிரிய நண்பன் ஆகினும் அல்லது பிள்ளைகள் ஆகினும் கூறுவது மெய்யான மெய்யான மெய்யான மெய் ஞான வாழ்வுக்கு ஆதரவான கருத்தா அல்லது வெறும் உலகியல் கருத்தா என்று பார்த்து அப்படி இல்லை என்றால் அந்த கருத்தை புறக்கணித்து நான் இவ்வழி வரமாட்டேன் எவ்வழி மெய் வழியோ அவ்வழியே வருவேன் என்று திடம்பட மனதிற்கு கூறி வர வேண்டும். இதுபோல் கருத்தினை மனதிலே அசை போட அசை போட வாழ்வியல் துன்பங்கள் என்பது மனிதனை என்றுமே வாட்டிக்கொண்டே இராது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 336

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

யாம் அடிக்கடி கூறுவது போல ஒரு மகான்களுக்கோ ஞானிகளுக்கோ இறைவனுக்கோ உடன்பாடில்லாத ஒரு பழக்கம் வேறு வகையில் கூறப் போனால் தீய தவறான பழக்கம் முதலில் புன்னகை பூக்கின்ற புதிய மனிதனைப்போல் உள்ளே வருகிறது. பிறகு ஒரு சிறு நட்பைப் போல் வளருகிறது. பிறகு ஒரு சுற்றுலாப் பயணி போல் அவ்வப்போது வந்து போகிறது. பிறகு உறவு போல் எட்டிப் பார்க்கிறது. பிறகு நெருங்கிய உறவுபோல் அடிக்கடி வந்து போகிறது. பிறகு கட்டிய மனைவி போல கைபிடித்த கணவன் போல தாய் தந்தை போல பெற்ற பிள்ளை போல ஒரு குடும்பத்தில் நிரந்தர உறுப்பினர் ஆகிவிடுகிறது ஒரு தீய பழக்கம். அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு மனிதன் அதைத் தவறு என்று ஒத்துக் கொள்ளாமல் அந்தத் தவறை நான் ஏன் செய்ய நேரிடுகிறது என்று வாத பிரதிவாதங்களில் மட்டுமே ஈடுபடுகிறான். தவறு என்றால் தவறுதான். தீமை என்றால் தீமைதான். விலக்க வேண்டியதை விலக்க வேண்டியதுதான். அது குறித்து விளக்க வேண்டியதில்லை. எனவே முற்றிலும் விலக்க வேண்டியதை நியாய அநியாயம் வாத பிரதிவாதம் செய்து விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கருத்தை ஒரு மனிதன் சரியாக மனதிலே பதிய வைத்துக் கொண்டால் வாழ்வு மிக நன்றாக செல்லும்.

பொதுவாக மனிதர்கள் தாங்கள் நல்லவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி எண்ணுவதை நாங்கள் குற்றம் ஒன்றும் கூறவில்லை. மனிதர்கள் என்ன எண்ணுகிறார்கள் நாங்கள் என்ன கொலைக் குற்றமா புரிந்து விட்டோம் உயிரையா எடுத்து விட்டோம் அல்லது பிறர் சொத்தை எல்லாம் அபகரித்து விட்டோமா அல்லது ஒரு ஊரையே வாழ விடாமல் செய்து விட்டோமா என்ன குற்றம் செய்து விட்டோம்? குற்றம் என்பது மேற்கூறிய விஷயங்கள் மட்டும் அல்ல ஒரு தனி மனிதனை வாழவும் விடாமல் அந்த வாழ்கையில் இருந்து வெளியே செல்லவும் விடாமல் நேரிடையாக பாதிக்காமல் மறைமுகமாக அந்த மனிதனை சுற்றி ஒரு வேலி போன்ற சூழலை ஏற்படுத்துவது கூட ஒரு வகையான பாவம் தான்.

ஒருவன் தான் சொல்வதை எல்லாம் மற்றவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக தன்னுடைய இயலாமையையும் வேதனையையும் வறுமையையும் கூட ஒரு வலிமையான மனிதனை பார்த்து அடிக்கடி பேசி அவனுக்கு வேதனையை உண்டாக்கினாலும் அதுவும் பாவம் தான். அதே சமயம் வறுமையின் காரணமாக இப்படி இவன் புலம்புகிறானே இவனை இப்படி புலம்ப விடலாமா? இவன் இப்படி புலம்பும் முன்னரே நம்முடைய பொருள் ஆதாரத்தை பயன்படுத்தி இவன் வறுமையை நீக்கி விட வேண்டாமா? என்று எண்ணி செயல்பட வேண்டும். அப்படி செயல் படாவிட்டால் அவனுக்கும் அந்த பாவம் வரும். பாவம் இங்கே இரண்டு வகையாக பார்க்கப் படுகிறது. ஒன்று தன்னுடைய வேதனையை வறுமையை இந்த செல்வந்தனிடம் அடிக்கடி கூறினால் இவன் ஏதாவது உதவி செய்வான் என்றோ அல்லது மன வேதனை குறையும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த விதமான தீய எண்ணங்களோ இல்லாமலோ கூட கூறினாலும் இப்படி திரும்ப திரும்ப கூறுவதால் அந்த செல்வந்தன் மன உளைச்சலுக்கு ஆளாகி இவனை வர வேண்டாம் என்று கூறவும் இயலாமல் தவிர்க்கவும் இயலாமல் தவிக்கும் அந்த நிலையால் வரக்கூடிய பாவம் அந்த எளியவனுக்கு உண்டாகும். இன்னொன்று அப்படி அந்த எளியவனை தொடர்ந்து புலம்ப வைத்து அவன் தனக்கு பாவத்தை சேர்த்துக் கொள்ள வைத்த பாவம் அந்த செல்வந்தனுக்கு உண்டாகும். இப்படியெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்தால் தான் வினைப்பயன்களின் தன்மை என்ன என்பது விளங்கும். இப்படி கோடிக்கணக்கான பிறவிகள் கோடிக்கணக்கான உயிர்கள் பாவங்களை செய்து செய்து எதாவது ஒரு பிறவியிலே பாவங்கள் அற்ற நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்று இறைவனால் அருள் ஆசி வழங்கப் பெற்று அந்த எண்ணம் உதிக்கும் வண்ணம் கிரக நிலை இருக்கும் வண்ணம் ஒரு பிறவி கொடுக்கப்படும் தருணம் அதே விதி அந்த மனிதனை மேலும் குழப்ப துவங்குகிறது.

வாழ்க்கை முறை மாற மாற அவன் எண்ணங்களும் அதை ஒட்டி செயல்படும். எண்ணங்கள் அப்படி செயல்பட செயல்பட அதன் விளைவுகள் பெரும்பாலும் அவனுக்கு எதிராக தான் இருக்கும். அதன் அடிப்படையில் ஆசைகள் பல கிளை விட்டு பரவிக் கொண்டே இருக்கும். அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள் என்று மனம் துடிக்கும் அப்படி துடித்து அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள செயல்படும் தருணம் அதற்கு எதிராக வரும் தடைகள் அனைத்தையும் மனம் வெறுக்கும் தடைகள் ஏற்படுத்துகின்ற மனிதர்களை வெறுக்கும் அதனாலும் பாவம் சேரும். இறைவனின் கருணையால் தொடர்ந்து தர்மங்கள் செய்து பல்வேறு பிரார்த்தனைகள் செய்து ஒவ்வொரு ஆத்மாவும் நல்கர்மாக்களை கூட்டி வாழ நல் ஆசிகளை கூறுகிறோம். ஒவ்வொரு கணமும் நாழிகையும் சதா சர்வ காலமும் இறை சிந்தனையில் இருப்பது என்பது ஏதோ சோம்பி எந்தவிதமான வேலையும் செய்யாமல் இருப்பதற்காக கூறப்பட்ட ஒருவிதமான மூடப்பழக்கம் என்று பலர் எண்ணலாம். இறைவா இறைவா இறைவா இறைவா என்று கூறிக்கொண்டே இருந்தால் ஒருவனின் வயிறு நிரம்புமா? அவன் இந்த உடல் எடுத்ததற்கு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டாமா? என்று எல்லாம் கூட அறிவானது வினாக்களை கேட்டுக் கொண்டே போகும். சித்தர்கள் ஆகிய நாங்கள் உடலுக்காக மட்டும் வாழாதே என்றுதான் கூறிக்கொண்டே இருக்கிறோம். உடல் சார்ந்த சார்ந்த வாழ்வு முழுமையான வாழ்வாக இராது. உடல் வாழ்வுக்காகத்தான் மனிதன் எல்லாப் பாவங்களையும் சேர்த்து கொள்கிறான். மனைவி பிள்ளைக்காக செய்தேன் என்று காரணம் கூறி ஒரு தனி நியாய விவாதத்தை இவன் கூறலாம். ஆனால் யாருக்காக செய்தாலும் பாவம் பாவம்தான். தாய்க்காக தந்தைக்காக செய்தேன் என்று கூறினாலும் யாருக்கும் பாவ மன்னிப்பு கிட்டிவிடாது. மறந்தும் ஒரு மனிதன் பாவத்தை நினையாமலும் நினையாமலும் செய்யாமலும் விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொண்டாலே மனிதனுக்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் அப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 335

ஆலய கோபுரம் பற்றி

இறைவன் அருளால் ஆலயம் ஆகமங்கள் என்பது மகான்களாலும் ஞானிகளாலும் வகுக்கப்பட்டு மயன் மற்றும் விஸ்வகர்மாக்களால் அவை படி எடுக்கப்பட்டு பின்னாளில் மனிதர்களுக்கு உரைக்கப்பட்டது. எனவே மனிதன் குடி இருக்கின்ற மனை சாஸ்திரம் என்பது வேறு இறையருள் நிரம்பி இருப்பதாக கருதப்படுகின்ற ஆலய சாஸ்திரம் வேறு. சில விஷயங்களில் ஒத்து வந்தாலும் பல விஷயங்களில் ஆலய விதிகள் வேறு. ஆனால் கலிகாலத்தில் மனிதனிடம் நல் தன்மை விட தீய தன்மை அதிகரித்து கொண்டே வருவதால் ஆலய விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டு மறக்கப்பட்டு வருவதால் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆற்றல்கள் கிடைக்காமல் போகிறது. தோஷங்கள் அதிகம் ஆகிறது. பொதுவாக பொது விதி மனிதன் நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் சாலையானது அகலமாகவும் நல்ல முறையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த சாலையை விட பல மடங்கு தான் ஆலயமும் மனிதன் குடி இருக்கும் இல்லமும் உயரமாக இருக்க வேண்டும். எங்காவது அந்த சாலை உயரமாகவும் ஆலயம் அந்த சாலையின் உயரத்தை விட பள்ளமாகவும் இருந்தால் கட்டாயம் அப்பகுதியில் இறையின் அருளாட்சி என்பது குறைவு என்று புரிந்து கொண்டு இதை தக்க முறையில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

பிரகாரங்கள் முறையாக வகுக்கப்பட்டு 1 3 5 7 9 என்று பிரதானமாக ஒற்றை படையில் வைப்பது ஒரு வகையான ஆகமம். அதை போல் அஷ்ட திக்கு பாலகர்களையும் அந்தந்த திசைகளில் முறையாக பிரதிஷ்டை செய்து அங்கு பரிபாலனம் செய்யும் வண்ணம் வைக்கப்பட வேண்டும். இவை பல ஆலயங்களில் பின்பற்றபடுவதில்லை. ஆலயம் என்பது முன்புறம் சென்று விட்டு அதே புறம் தான் வர வேண்டும் என்பது ஒரு விதி. நான்கு புறம் மட்டுமல்ல அஷ்ட திக்குகளும் பாதை வைக்கலாம் தவறொன்றுமில்லை. ஆனால் காலப் போக்கில் இந்த முறை மறைந்து பின்னர் பாண்டியர் காலத்தில் நான்கு முறையும் சோழர் காலத்தில் பிரதானமாக ஒரு வாயில் மட்டுமே திறக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த விதி எதனால் மீறப்பட்டது என்றால் பாதுகாப்பு கருதி எல்லா புறத்திலும் பாதை இருந்தால் அங்கே பாதுகாப்பு பணிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பிற்காலத்தில் அந்தந்த வாயில்களெல்லாம் மூடப்பட்டு பிரதான வாயில் மட்டும் மூலஸ்தானத்தை நோக்கி உள்ள வாயில் மட்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மனிதர்களாக தன் ஆட்சிக்காக சொந்த நலனுக்காக மீறப்பட்ட விஷயங்கள். உண்மையான ஆகமம் என்றால் ஒரு ஆலயத்திற்கு குறைந்தபட்சம் நான்கு புற வாயில்கள் இருக்க வேண்டும் கட்டாயம். ஆலயத்தை சுற்றி நெருக்கமாக வீடுகளோ அங்காடிகளோ கட்டாயம் இருக்கவே கூடாது.

ஆலயத்தை சுற்றி பிரதானமாக சோலைகளும் கட்டாயம் பசு மடமும் அதுபோல் ஆலயத்தை சுற்றி அகலமான வீதிகளும் அந்த வீதிகளில் தேரோட்டம் வருவதற்கு உண்டான அந்த சூழல் இருக்க வேண்டும். இதுபோல் ஆலயத்தில் உள்ள ராஜகோபுரம் உயர்ந்தும் மூலஸ்தான கோபுரம் சற்றே சார்ந்து இருப்பதும் ஒரு பொதுவான விதி. இன்னொன்று இதுபோல் நிலை மாறி சில ஆலயங்களில் மூலஸ்தான கோபுரம் உயர்வாகவும் பிரதானமான ராஜ கோபுரம் சற்றே உயரம் குறைவாகவும் கட்டப்படுகிறது. இது வேறு விதமான விதி முறைகளில் உட்பட்டதாகும். இருந்தாலும் இது போன்ற பிரதான ராஜகோபுரத்தை தொடர்ந்து அடுத்தடுத்து செல்லும் பொழுது ஒற்றைபடை முறையே பின்பற்றப் படுவதுண்டு. 1 3 5 7 என்று எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இறுதியாக மூலஸ்தான கோபுரம் அமைக்கப்படலாம். எனவே இதுபோல் நிலையோடு நீ கூறியபடி பிரகாரங்களும் அமைக்கப்பட்டு ஒரு ராஜகோபுரமோ அல்லது அடுத்து உள்ள கோபுரத்திலோ உள்ள சாளரங்கள் அடுக்குகள் இதே போல் ஒற்றை எண்ணிக்கை முறையில் அமைக்கப்பட்டு அது எந்த அளவு ஆகமத்தை பின்பற்றப்பட்டு இருக்கிறது. எத்தனை அடுக்குகள் கொண்ட கோபுரம் என்பதை மேலே உள்ள கலசம் அந்த எண்ணிக்கையில் இருந்து அது குறிப்பாக உணர்த்தும் ஆனால் பல இடங்களில் அந்த விதியும் மீறப்பட்டு இருக்கிறது. உதாரணமாக ஒரு பிரதான ராஜகோபுரத்திலே ஒன்பது அடுக்குகள் கொண்ட சாளரங்கள் துணை கோபுரங்களாக இருக்கும் பட்சத்திலே மேலே ஒன்பது கலசங்கள் வைக்கப்பட வேண்டும். அடுத்த கோபுரத்தில் மூன்று சாளரங்கள் துணை கோபுரங்களாக இருந்தால் மூன்று கலசங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிஎல்லாம் பல இடங்களில் இன்று பின்பற்றப் படுவதில்லை.

எப்படி விஞ்ஞானப்படி ஒரு அலையை கிரகிக்க முறையான அளவுகளில் அந்த அலை உறிஞ்சி குழலை (Antenna) அமைக்கிறார்களோ அப்படி முறைமீறி எல்லாமே உலோகம் தானே என்று எப்படி வைத்தால் என்ன என்று வைத்தால் முழுமையான முறையில் அதாவது முழுமையாக அந்த அலையை உள்வாங்க முடியாது. அதே போல பிரபஞ்ச ஆற்றலை விதி முறைகள் மீறி கட்டப்படும் ஆலயங்களால் முழுமையாக உள்ளே வாங்க இயலாது. அங்கே வருகின்ற நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களால் இறை அருள் பரவுமே தவிர அங்கு உள்ள ஆகம விதிகள் மீறப்படுவதால் அங்கு எந்த நோக்கத்திலே அது கட்டப்பட்டதோ அந்த நோக்கம் காலப்போக்கிலே சிதறுண்டு போகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 334

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இப்பொழுது அடுத்ததாக எதிர்காலத்தைக் கூறு என்று பலரும் ஆசைப்பட்டு நாங்களும் ஆவேசம் கொண்டது போல இப்படிதான் கேட்கிறானே? கூறி விட்டுப் போவோம் என்று கூறினால் அடுத்ததாக மனக்கிலேசமும் சோகமும்தான் கொள்கிறார்கள். எனவே ஒரு மனிதன் வருகிறான். என் பெண்ணிற்குத் திருமணம் நடக்கவில்லை என்று கேட்கிறான். நாங்கள் பார்க்கிறோம் திருமணம் நடந்தாலும் சிறப்பான வாழ்க்கை இல்லை எனும்போது என்ன கூறுவோம்? சில மாதங்கள் கழித்து வா என்றோ சில பரிகாரங்களை செய்து விட்டு வா என்றோ கூறுவோம். ஏன்? அப்படியாவது அந்தப் பாவங்கள் குறையட்டுமே? என்றுதான். ஆனால் அவன் என்ன எண்ணுகிறான் அறியாமையால்? எங்கெங்கோ சென்று ஜாதகத்தை ஆய்ந்தோம். திருமண காலம் வந்துவிட்டது. திருமணத்தை முடிக்கலாம் என்று கூறுகிறார்கள். அகவையும் அதிகமாகி விட்டது. இங்கு என்னடா என்றால் சில மாதங்கள் ஏன்? சில வருடங்கள் ஆகட்டும் என்று கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாது என்று சென்று விடுகிறான். பிறகு திருமணம் செய்கிறான். திருமணம் வழக்கம்போல் தோல்வியில் முடிகிறது. மீண்டும் வந்து எம்முன்னே அமர்கிறான். இவற்றையெல்லாம் வெளிப்படையாகக் கூறினால் என்ன நடக்கும்? வெறும் எதிர் மறையான எண்ணங்களையும் கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படிக் கூறி கூறி அந்த விதியை ஏன்? எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்றுதான் பரிகாரங்களைக் கூறிக் கொண்டு இருக்கிறோம். எனவே இங்கு வருகின்ற 100 க்கு 99 விழுக்காடு மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதி அம்சம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு சென்றால் எதிர்காலம் அனைவருக்குமே சுபீக்ஷமாக இருக்கும். எனவே வாக்கு இல்லை எனும் பொழுதே இந்த இதழ் ஓதும் மூடனுக்கு ஏற்கனவே சில கட்டளைகளை இட்டு இருக்கிறோம். எடுத்த எடுப்பிலேயே வாக்கை உரைக்கலாம் என்றால் போதும். உடனடியாக அலைபேசியில் பேசுகின்ற அனைவரையும் அழைத்து வரலாம் வரலாம் என்று அனைவரையுமே வரவேற்று விடுவான். அப்படி வருகின்ற மனிதர்கள் பலருக்கு ஆர்வம் இருக்கும் அளவிற்கு பக்குவம் இராது. பக்குவமின்மையால் வந்து விதவிதமான மனக்கிலேசமான வார்த்தைகளைக் கூறும்பொழுது தேவையில்லாத மன அழுத்தம் இங்கு அனைவருக்கும் ஏற்படும். எனவேதான் கூறி இருக்கிறோம் வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து இறைவனின் கட்டளையையும் அனுசரித்துதான் நாங்கள் வாக்கைக் கூறுவோம் என்று. இது போன்ற இந்த ஓலையில் கூறப்படுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை. நம்பக்கூடியதாக இல்லை என்பது கூட ஒரு மனிதனின் முழு சுதந்திரம். அவற்றில் குறுக்கிட இங்கு உள்ளவர்களுக்கோ இந்த சுவடியை நம்புபவர்களுக்கோ ஏன்? இந்த இதழை ஒதுபவனுக்கோ கூட உரிமையில்லை.

நம்புவது எப்படி ஒருவனின் உரிமையோ நம்பாததும் அவனின் உரிமை. இரண்டிலும் நாம் சந்தோஷமும் கொள்ளத் தேவையில்லை. துக்கமும் கொள்ளத் தேவையில்லை. இது போல் நிலையிலே மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் அறம் சத்யம் பரிபூரண சரணாகதி தத்துவம் இவற்றைக் கடைபிடித்தால் கடுமையான விதி மெல்ல மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறை வழியில் அற வழியில் சத்திய வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 333

ஐயனே தச மகா வித்யா யாகம் என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது?

இறைவனின் கருணையை கொண்டு ஒரு மனிதன் பல ஜென்மங்கள் பல பிறவிகளில் பிறந்து பிறந்து பாவ புண்ணியங்களை செய்தே வாழ்கிறான். இதில் பெரும்பாலும் அதிக விழுக்காடு பாவங்களை பெறுகிறான் செய்கிறான். அதன் மூலம் சாபங்களை பெறுகிறான். புண்ணியங்களை சிறிய அளவில் தான் செய்கிறான். இந்தப்பாவங்களின் விளைவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பிறவிகள் தோறும் பாவங்களின் விளைவுகளும் புண்ணியங்களின் விளைவுகளும் வரும். ஆனால் மனிதனுக்கு புண்ணியங்களின் விளைவாக கிடைக்கக் கூடிய நன்மைகள் அத்தனை எளிதாக மனதிலே திருப்தியை தராது. உதாரணமாக பிறக்கும் போதே உடல் உறுப்புகள் எந்த பழுதும் இன்றி பிறந்தால் அந்த குழந்தை அதை ஆச்சரியமாக பார்க்காது. அதே குழந்தை வளர்ந்த பிறகு இளைஞனான பிறகு சில மாதங்கள் உடலில் உள்ள ஏதோ ஒரு கையோ காலோ இயங்காமல் இருந்து பிறகு இயங்கினால் அவன் சந்தோசப்படுவான். இதைப் போல இயல்பாகவே ஒரு மனிதனுக்கு தாய் தந்தையர் இருக்கிறார்கள். ஓரளவு மூன்று வேளை அன்னம் கிடைக்கிறது. மானத்தை காக்க ஆடை கிடைக்கிறது. கல்வி வசதி கிடைக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும் ஒரு இல்லம் இருக்கிறது என்றால் இவைகள் எல்லாம் பெரிதாக தெரியாது. இவைகளே இல்லாத மனிதர்களை பார்க்கும் போது அடடா கடவுள் இறைவன் நம்மை நன்றாக வைத்திருக்கிறார் என கடவுளுக்கும் இறைவனுக்கும் நன்றி கூற வேண்டும். ஆனால் அப்படி மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?

ஒரு மனிதனுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது அவனுக்கு நிறைவை திருப்தியை சந்தோசத்தை தருவதில்லை. எது கொடுக்கப் படவில்லையோ அல்லது எது அவன் எதிர்கால லட்சியமாக அவன் கொண்டிருக்கிறானோ அது அடையும் வரை அவன் மனம் நிம்மதி அடையாமல் சஞ்சலத்தோடு வாழ்கிறது. அல்லது இயல்பாகவே இருக்கக் கூடிய ஒன்று அவனுக்கு இல்லாமல் போய் விடுமோ என்கிற அச்சம் வரும் பொழுதும் அவன் நிம்மதியை இழக்கிறான். ஒன்றே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இறைவன் அருளை தக்க வைத்துக் கொள்வது ஒன்று தான் நிரந்தர செல்வம் நிரந்தர பதவி அது ஒன்று தான் நிரந்தரம் ஏனைய உறவுகளோ நட்புகளோ பதவிகளோ வேறு எந்த விஷயமும் சிறப்பல்ல. இந்த ஞானம் கைவர வேண்டுமென்றால் இது புரிந்துக் கொள்வது மட்டுமல்ல புரிந்து கொண்டு அறிந்துகொண்டு தெரிந்து கொண்டு தன் மனைதிலே அது குறித்து சிந்தித்து சிந்தித்து பற்றற்ற நிலை ஆசையற்ற நிலை சினமற்ற நிலை எந்த தீய குணங்களும் இல்லாத நிலையிலே மனதை அமைதியாக வைத்து எத்தனை கொடுமையான சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்தாலும் இறைவா சிறு வயது முதல் உன்னை வணங்கி வருகிறேனே நான் கடினப்பட்டு ஈட்டிய தனத்தை எல்லாம் ஏழை எளியோர்களுக்கு வாரி வாரி வழங்கினேனே. எனக்கு இப்படி ஒரு துன்பத்தை தரலாமா? என்னை கைவிட்டாயே என்று ஒருவன் ஏக்கத்துடன் கூறினாலும் கூட அவன் செய்த புண்ணியத்தின் பலன் குறைந்து விடுகிறது.

இறைவா ஏதோ சில நற்காரியங்களை செய்ய என்னை கருவியாக தேர்ந்தெடுத்திருக்கிறாய் தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்பை கொடு. ஆனால் அந்த நல்ல காரியம் செய்கிறேன் என்பதற்காக எனக்கு ஒரு துன்பம் கூட வரக்கூடாது என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது வேறு நிலை. நீ துன்பம் தருகிறாய் என்றாலே என்னை சுத்தி படுத்துகிறாய் என்பது பொருள். தீயவனுக்கு வருகின்ற துன்பம் அவன் திருந்த வேண்டுமென்றும் மனித மொழியிலே கூறுவதென்றால் தண்டனை என்று வைத்துக் கொள்ளலாம் நல்லவனுக்கு வருகின்ற துன்பம் ஒரு ஆடையிலே போகாத கரையை அழுக்கை கடினப்பட்டு ஒரு மனிதன் நீக்குவது போல அந்த நல்லவர்களிடம் இருக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச பாவங்களையும் சாபங்களையும் நீக்கிக் கொள்ள இறைவன் தருவது. எனவே அந்த வகையில் சிந்தித்து நான் உன்னுடைய அருளானையால் சில நல்ல காரியங்களை செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கிறாய். தொடர்ந்து தந்து கொண்டே இரு. ஆனால் அதற்காக துன்பங்களே வரக்கூடாது என்று நான் வேண்டவில்லை. துன்பங்கள் வரட்டும். ஆனால் நான் மனம் தளர்ந்து மனம் சோர்ந்து உன்னை விட்டு விலகி விடக்கூடாது. நற்காரியங்களை நிறுத்தி விடக்கூடாது. அந்த திடமானதை கொடு என வேண்டி கொள்ள வேண்டும். அந்த பக்குவம் அத்தனை எளிதாக வந்து விடாது. இது பல பிறவிகளின் பாவங்களும் சாபங்களும் குறைந்தால் தான் வரும். இவற்றை தர்மத்தின் மூலம் குறைக்கலாம். ஏமாற்றங்களின் மூலம் சில பாவங்கள் குறையும். நம்பிக்கை துரோகத்தால் சில பாவங்கள் குறையும். உடல் நோயால் பல பாவங்கள் குறையும். வழக்கு போன்ற விஷயங்களால் பல பாவங்களும் சாபங்களும் குறையும். உடலிலே எல்லாம் சரியாக இருந்தும் என்ன நோய் என்று பிடிபடாமல் மனம் வேதனை அடைந்து அடைந்து அதனால் பாவங்கள் குறையும். எந்தத் தவறும் செய்யாமல் பலர் முன்னால் அவமானப்படுவதும் ஏளனப் படுவதுமாக இருந்து அதன் மூலம் பாவங்கள் குறையும். இப்படி பல்வேறு இந்த உலகில் நடக்கின்ற செயலால் பாவங்கள் குறையும்.

அதைப் போல நற்காரியங்கள் செய்வதன் மூலம் பாவங்களும் குறையும் புதிதாக புண்ணியங்களும் சேரும். அந்த நற்காரியங்களில் தனம் இருப்பவர்கள் பொருள் இருப்பவர்கள் நியாயமான உதவிகளை அள்ளி அள்ளி தருவது கணக்கு பார்க்காமல் தருவது. இவ்வளவு செய்திருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் தொடர்ந்து செய்வது. என்னைப் போல் யார் தர்மம் செய்வார் என்று பலர் முன்னால் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் அமைதியாக செய்வது. இவைகள் எல்லாம் புண்ணியங்களை சேர்க்கின்ற வழிகளாகும். அதைப் போல் பூஜைகள் அபிஷேகங்கள் யாகங்கள் அனைத்துமே பாவங்களை குறைப்பதோடு புண்ணியங்களையும் சேர்க்கும். இந்த வகையிலே பலர் முன்னால் படுகின்ற அவமானங்கள் தொழிலில் ஏற்படும் நஷ்டங்கள் இவைகளேல்லாம் பாவங்களை குறைக்கின்ற வழியாக இருக்கும். பாவங்களை குறைக்கின்ற வழி என்பது வாழ்க்கையில் இயல்பாக நடக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நோய் மூலம் படுகின்ற வேதனை தன விரயம் இது பாவங்களின் காரணமாக வரக் கூடியது. அதை போல் உடனிருந்து நம்பிக்கை துரோகம் செய்கின்ற மனிதர்களால் வருகின்ற துன்பம் பாவங்களை குறைக்கவும் சாபங்களை குறைக்கவும் வருகிறது. இது போன்ற உலகியல் சம்பவங்கள் அனைத்துமே பாவங்களை சாபங்களை குறைக்கும். எப்போது குறைக்கும் அதுபோன்ற சம்பவம் நடக்கும் பொழுது பாதிக்கப்பட்ட மனிதன் சினம் கொண்டு எழுந்து பழிக்குப் பழி வாங்காமல் அவனை ஏதும் சொல்லாமல் இறைவா என்றோ செய்த பாவம் நான் பெற்ற சாபம் இவன் மூலம் நேராகிறது போலும். சரி நான் பொறுமையாக இருக்க அருள்புரி என்று வேண்டிக் கொண்டு அவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகின்ற பக்குவம் வரும் பொழுது கட்டாயம் பாவங்கள் குறையும். இல்லையென்றால் நான் மிகச் சரியாக நடந்து கொண்டும் நீ ஏனப்பா தவறாக நடந்து கொள்கிறாய் என்று சரிக்குச்சரி அவனோடு சண்டையிட்டால் பாவங்கள் குறைவதற்கு பதிலாக பாவங்கள் சேர்ந்து விடும். இது போன்ற பல்வேறு பாவங்கள் குறைய வேண்டும். அதே நேரம் மனம் உறுதியடைந்து புண்ணியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெறுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் இந்த யாகங்கள். பெரும் பொருட் செலவில் அக்னி வார்த்து நிறைய பொருட்களை அதில் இட்டால்தான் இறைவன் அருள் புரிவாரா என்றால் கட்டாயமில்லை. அத்தனை பொருட் செலவு செய்தும் அக்னி வார்த்து பொருட்களை இட்டும் மனம் தூய்மை இல்லாமல் அதில் ஒருவன் ஆணவத்தோடு கலந்து கொண்டால் அவனுக்கு எந்த பலனும் வராது. அதைப் போல செய்து வைக்கக் கூடிய மனிதனும் பெருந்தன்மையோடும் சாத்வீக குணத்தோடும் தகாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாமல் சாத்வீக வார்த்தைகளையும் அன்பு பொழியும் வார்த்தைகளையும் பயன்படுத்தி அமைதியாக எந்த விதமான சினமும் கொள்ளாமல் அவனும் எரிச்சலடையாமல் அடுத்தவர்களுக்கு எரிச்சலை ஊட்டாமல் நடந்து கொள்ளும் போது அவனுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. ஒன்று பூஜை செய்து அதன் மூலம் ஒரு புண்ணியம் அவனுக்கு கிடைக்கிறது. இவன் யாருக்கு பூஜை செய்து வைக்கிறானோ அவனுக்கு பாவம் குறைவதால் ஒருவனுக்கு பாவம் குறைவதற்கு உண்டான வழியை காட்டியதற்கு உண்டான புண்ணியம் அவனுக்கு வருகிறது. மூன்றாவது உலகியல் ரீதியாக சிறு ஊதியமும் கிடைக்கிறது. எனவேதான் இது அனைத்தும் இறைவன் கருவியாக வைத்து நம்மையெல்லாம் இயக்குகிறார் என்ற எண்ணத்தோடு தன்முனைப்பு இல்லாமல் செய்யும்போது பல ஜென்மத்து சாபங்களும் பாவங்களும் குறையும். இந்த சாபங்கள் தான் உதாரணமாக ஒரு மனிதன் ஏதோ ஒரு பிறவியில் யாருக்கோ கொடுமையான தீங்கு செய்து அந்த தீங்கால் அவன் பாதிக்கப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்படும் பொழுது அவனால் அப்பொழுது எதிர்த்து ஏதும் செய்ய முடியாத ஒரு வலிமையற்ற நிலையில் இருக்கிறான். ஆனால் மனதிற்குள் பொங்குகிறான். வேதனைப்படுகிறான். இந்த வலிய மனிதனின் பதவி செல்வம் அதிகாரம் இவற்றுக்கு முன்னால் அடிபணிந்து இவன் செய்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறதே இறைவா. நீ அவனை கேட்க மாட்டாயா? நான் என்ன பாவம் செய்தேன்? என்று மனதிற்குள் மருகி மருகி மருகி மருகி மிகவும் வேதனைப்பட்டு அந்த ஜென்மம் முழுவதும் அப்படியே வாழ்ந்து இறந்து விடுகிறான் அல்லவா. ஏதோ ஒரு பாவம்தான் அவ்வாறு அவனுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த காரணமாக இருந்தாலும் அதை செய்த மனிதனுக்கு இவன் வேதனைப்பட வேதனைப்பட அது சாபமாக மாறி விடுகிறது. புனித ஆத்மாக்கள் புண்ணிய ஆத்மாக்கள் தவசீலர்கள் சபித்தால் உடனே பலிதமாகும். இதுப் போன்ற சராசரி ஆத்மாக்கள் மனதிற்குள் வேதனைப்பட வேதனைப்பட அது ஒரு ஜென்மமோ இரண்டு ஜென்மமோ தாண்டி பலவிதமான துன்பங்களாக வரும். இந்த சாபங்களை எல்லாம் பலவிதமான தர்மங்களின் மூலமும் தியாக வாழ்க்கையின் மூலமாகவும் பொறுமையின் மூலமாகவும் சகிப்புத் தன்மையின் மூலமாகவும் எரித்து விடலாம். அதில் ஒன்றுதான் இந்த யாகங்கள்.

இந்த யாகங்கள் மூலம் சாபங்களை குறைத்து விடலாம் எரித்து விடலாம். அது மட்டுமல்ல இப்படி அவன் ஏங்கி ஏங்கி அந்தப் பிறவியை விட்டு விடுகிறான் அல்லவா. மீண்டும் ஏதாவது ஒரு பிறவியிலேயே இவனை பழிவாங்க வேண்டும் என்று அவன் பிறக்கிறான். அல்லது அவனால் பிறவி எடுக்க முடியாத நிலையில் அவனுடைய வம்சா வழியினருக்கு ஏதாவது வகையிலே உள்ளுணர்வாக அதனை அந்த சிந்தனையை தூண்டி விட்டு அவனை இந்து ஜென்மாவில் அந்த ஜென்மத்தில் அவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தியவனை பார்த்து ஏதாவது இவனுக்கு தீங்கு செய் என்பது போல் அவன் செய்ய அதனால் தான் முன்பின் தெரியாத சிலர் நம்மை எதிரியாகவே கருதுகிறார்கள். இதுப் போன்ற ஒரு வார்த்தை படுத்த முடியாத வேதனைகளை பாவ வினைகளை குறைப்பதற்கு யாகங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சராசரி மனிதர்களின் பொறாமை பார்வை அது குறையவும் இந்த யாகங்கள் பெரும் பங்களிப்பை நல்குவதாகும். அதைதாண்டி முன்பே கூறியது போல ஒரு பொருளாதார சுழற்சிக்காகவும் யாங்கள் கூறுகின்றோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 332

கேள்வி: முதல் தவறு முதல் கர்மா எப்படி ஆரம்பமாகிறது?

ஒரு மனிதன் பூமியில் சகல சௌபாக்யங்களோடு பிறவியெடுக்க காரணம் அவன் அதற்கு முன்பு மனிதனாக இல்லாமல் சற்று மனிதனைவிட மேம்பட்ட யட்ச கந்தர்வ கூட்டத்தில் இருந்து அல்லது கடும் தவம் செய்த அசுரனாகவோ இருந்து ஏதோ ஒரு சிறு பிழை செய்து பிடி சாபம் நிலவுலகத்திற்கு செல் மனிதனாக என்று சாபம் வாங்கியிருப்பான். நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது மனிதனை விட பல நிலைகள் மேம்பட்ட தேவ வர்க்கமோ தேவதை வர்க்கமோ செய்கின்ற ஒரு சிறு குற்றம். மனித கண்ணோட்டத்தில் பார்த்தால் அது குற்றமே அல்ல. சுந்தரரின் கதை தெரியுமா? அது குற்றமா? அதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அம்பிகையின் தோழிகளை பார்த்து அழகு மிக்க யுவதிகளாக இருக்கிறார்களே? என்று ஒரு கணம்தான் சிந்தித்தார். சிவன் அழைத்தார். இது காமனை எரித்த இடம். எனவே இங்கு இந்த எண்ணம் எல்லாம் வரக்கூடாது வந்து விட்டது. செல் பூலோகம் என்றார். சுந்தரர் அஞ்சி நடுங்கி விட்டார். தெரியாமல் செய்து விட்டேன் என்னை தண்டிக்காதீர்கள் என்று. ஆனாலும் சிவபெருமான் விடவில்லை. சாபத்தை கொடுத்தார். மனிதர்கள் அறிந்தும் அறியாமலும் குழப்பத்தில் இருப்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் இறைவன் எளிதில் மன்னித்து விடுகிறார். ஆனால் மனிதர்களைத் தாண்டி ஒரு உயர்வான நிலைக்கு சென்ற பிறகு சிறிய தவறு கூட வரக்கூடாது. வந்தால் அவர்கள் எந்தவிதமான சாபத்திற்கும் ஆளாகலாம். அப்படி ஒருவனுக்கு மனிதப் பிறவி சாபமாக கிடைக்கிறது என்று வைத்துக் கொள். அவன் பல்லாண்டு காலம் தேவனாக உச்சத்தில் வாழ்ந்திருப்பான். அவனை பொறுத்தவரை அவன் செய்தது தவறாக இருந்தாலும் கூட அவன் ஒரு புண்ணிய ஆத்மாதானே? அதனால் மிக உயர்ந்த செல்வ செழிப்பிலே புகழின் உச்சியிலே தேக ஆரோக்கியத்திலே தோற்றப் பொலிவிலே சகலத்திலும் நன்றாக இறைவன் தந்துதான் பிறவி கொடுப்பார். ஆனால் (இவையெல்லாம்) கொடுத்த பிறகு அவன் என்ன செய்வான்? ஊழ்வினையாலும் மாயையாலும் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து போய் சராசரியாக தனக்கு கிடைத்த பட்டம் பதவி அந்தஸ்து தோற்றம் தனம் இவற்றை வைத்து பாவங்களை செய்யத் துவங்குகிறான். பிறகு மீண்டும் மீண்டும் இந்த சுழலிலே மாட்டிக் கொண்டு தவிக்கிறான். எனவே எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு இருந்து பாவங்களை செய்யாமல் இருந்தால் மீண்டும் மீண்டும் இந்த சுழற்சியில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 331

கேள்வி: ஆன்மா இருதய குகையில் இருப்பதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது அது குறித்து:

காற்று எப்படி ஒரு இடத்தில்தான் இருக்கிறது என்று கூற முடியாதோ பரந்த வான்வெளி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இந்த இடத்தில் இல்லை என்று எப்படிக் கூற முடியாதோ அப்படித்தான் ஆன்மா என்பதும் இறைவனைப் போல தேகமெங்கும் நீக்கமற பரவியிருக்கிறது. சில குறிப்பிட்ட இடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது புரிய வைப்பதற்கான ஒரு குறியீடான முயற்சி. அங்கும் இருக்கிறது. எங்கும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 330

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவன் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் கால காலம் எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் வாழ்வியல் நிலை குறித்துக் கூறுங்கால் வினைப் பயன் தொடர்பான விழிப்புணர்வு பெற வேண்டும் என்றே கூறிக் கொண்டிருக்கிறோம். ஒரு செயல் அந்த செயலை செய்யும் போது கிடைக்கக் கூடிய ஆதாயம் செய்து முடித்த பிறகு கிடைக்கக் கூடிய ஆதாயம் சில காலம் கழித்து கிடைக்கக் கூடிய ஆதாயம் இந்த செயலை செய்வதால் கிடைக்கின்ற ஆதாயம் எத்தனை விழுக்காடு? ஆதாயத்திற்கு எதிரான பாதகம் எத்தனை விழுக்காடு? செயலை செய்பவனுக்கு ஆதாயம். மற்றவர்களுக்கு பாதகம். இது போன்ற நிலைகளை சீர் தூக்கிப் பார்த்து பலருக்கும் பாதகத்தைத் தரும் ஆனால் செய்கின்ற ஒருவனுக்கு மட்டும்தான் ஆதாயத்தை தரும் என்றால் அந்த செயலை செய்யாமல் மனக் கட்டுப்பாட்டோடு இருப்பதே அவசியம். இன்னொன்று என் வரையில் எல்லாம் நன்மையோ தீமையோ நான் தான் நுகரப் போகிறேன். பிறரை இது எங்ஙனம் பாதிக்கக் கூடும்? என்று எண்ணி சிலர் சில செய்கைகளை செய்கிறார்கள் உண்மைதான்.

ஒருவன் மதி மயக்கும் பானம் பருகுவதோ வேறு அசுர பண்டங்களை ஏற்பதோ அவன் உள்ளத்தை உடலை அவன் நிலையை அவன் வாழ்வை பாதிக்கலாம். ஆனால் அவனையும் அறியாமல் பல பலகீனமான மனிதர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறான். அதாவது ஏதாவது ஒரு பூர்வ புண்ணியத்தால் ஒரு மனிதன் ஏதாவது ஒரு உயர்ந்த பதவியில் பொருளாதார நிலையில் உயர்ந்து விடுகிறான். ஆனால் தகாத பழக்கங்கள் அனைத்தும் அவனிடம் இருக்கிறது. அதை பார்க்கின்ற மிக மிக மிக மிக சாதாரணமான எளிமையான மனிதன் என்ன எண்ணுகிறான்? அவனின் பூர்வ புண்ணியம் அவனுக்குத் தெரிவதில்லை. அது தொடர்பான உழைப்பு தெரிவதில்லை. ஆனால் வெற்றி பெற்று இருக்கிறான். புகழ் இருக்கிறது. தனம் இருக்கிறது. பலரும் அவனை நாடுகிறார்கள். ஆனால் அவனிடம் மதி மயக்கும் பானம் போன்ற தீய பழக்க வழக்கங்கள் இருக்கிறது. எனவே இத்தனை விவரம் அறிந்தவன் உலகியல் ரீதியாக உயர் பதவியில் இருப்பவன் பெரும் புகழும் கொண்டவன் பொருளாதார நிலையில் மிக மிக உயர்ந்தவன் அவனே தவறு செய்யும் பொழுது நான் செய்தால் என்ன? என்ற ஒரு தவறான ஒப்பீடு சராசரி மனிதனுக்கு வந்து விட பிறரோடு தவறான நிலையில் ஒப்பிட்டு ஒப்பிட்டு மனிதன் தன்னுடைய வாழ்நாளை வீண் நாள் ஆக்குகிறான். எனவே நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால் இறைவனே தவறு செய்யத் தாண்டினாலும் விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும் போராடி போராடி ஒரு மனிதன் இறை வழியில் வந்து தன்னுடைய மனதை வலுவாக்கி உள்ளத்தை உறுதியாக்கி எண்ணங்களை சீராக்கி மனப்பாங்கினை வைரம் போல் உறுதியாக்கி தவறான பழக்கங்களுக்கு எதிராகவே தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.

திருநீறு

ஒருவன் வறுமையில் வாடிக் கொண்டிருந்தான். அவன் சோம்பேறியும் அல்ல. சென்ற ஜென்ம பிரதிபலனோ அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. அவன் பொய் பேச மாட்டான். ஆகையால் அவனை அனைவரும் வெறுப்பர்கள். ஒரு நாள் தன் வாழ்வை நொந்து நடந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு அருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா சற்று எனக்காக நிற்க முடியுமா என கேட்டான். சிவனடியாரும் என்ன வேண்டும் உனக்கு எனக்கேட்டார். சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தன் கேள்வியை கேட்டான். ஐயா தாங்கள் ஏன் இப்படி சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான்.

சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு. அதன் அடையாளமே இது நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவும் இன்னும் உயிருள்ள வரை இதுவே மகாலட்சுமி அம்சம் இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். அதற்கு அவன் சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நானும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்வேன் என்று சிவனடியாரிடம் புலம்பினான். சிவனடியாரும் சரி நீ திருநீறு அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான். நாம் பூச வேண்டாம் சிவனடியார் சொல்லியது போல் திருநீறு அணிந்தவரின் நெற்றியை பார்ப்போம் என்று முடிவு செய்தான். வீட்டின் எதிரில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டு அதிகாலை எழ வேண்டும் என்று உறங்க சென்றான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறை காண காத்திருந்தான். குயவர் வரவில்லை விசாரித்தான். அவர் சீக்கிரமாகவே சென்று விட்டார் என்று சொன்னார்கள். நாம் மண்ணெடுக்கும் இடத்திற்கே சென்று அவரின் நெற்றி விபூதியை தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.

குயவர் நெற்றி நிறைய விபூதியுடன் மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராதவிதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப் பானை புதையலைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியுடனும் இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் பானை இருவர் சேர்ந்தால்தான் தூக்க முடியும் என்ற அளவிற்கு எடை கணமாக இருந்தது. யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு வந்து சேர்ந்த ஏழையானவன் அவர் நெற்றியைப் பார்த்து பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கூறினான். குயவர் இவன் புதையலைத்தான் பார்த்து விட்டானோ? என்று எண்ணி உண்மையாகவே நீ பார்த்தாயா? எனக் கேட்டான். ஏழையானவன் ஆமாம் நிறைவாகக் கண்டு விட்டேன் எனக் கூறினான். அதற்கு குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைப்பிடி ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக் கூறினான். ஏழைக்கு அப்போதுதான் உண்மை விளங்கியது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே தங்கம் பாதி கிடைத்தது இன்னும் நாம் பூசினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தன் குல வழக்கத்தை தள்ளி வைத்து விட்டு திருநீற்றை பூசினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 329

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இந்த பரந்த பாரத மண்ணிலே ஏராளமான ஞானிகள் தோன்றியும் இன்னமும் தோன்றவும் இருக்கிறார்கள். என்றாலும் எம்போன்ற ஞானிகளுக்கு என்ன வருத்தம் தெரியுமா? இதுபோல ஞான கருத்துக்களை கேட்க அதிகம் வாய்ப்புகளைப் பெறாத அல்லது பெற முடியாத மேலை தேச மனிதர்கள் கூட அடிப்படை தர்மத்தை மறக்காமல் ஓரளவு வாழுகிறார்கள். தான் வாழும் நாட்டையும் வீட்டையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சகல தர்மங்களும் நியாயங்களும் போதிக்கப்பட்ட இந்த தேசத்தில்தான் சுத்தம் என்றால் என்ன? என்றே தெரியாத நிலைக்கு மனிதன் ஆட்பட்டு விட்டான். எதை எங்கே செய்யக் கூடாதோ அதை அங்கே செய்வதும் எதை எங்கே செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இருக்கும் ஒரு சராசரி நிலையில் கல்வி கற்றவன் கல்வி கல்லாதவன் என்று அனைத்து தரப்பினரும் இருக்கிறார்கள். நதியை பாழ்படுத்துதல் விருட்சங்களை வெட்டி சாய்த்தல் தான் வாழ வேண்டும் என்றால் இந்த பூமி எந்த சூழலுக்கு ஆட்பட்டாலும் பாதகமில்லை. இன்றைய தினம் நானும் என் சமுதாயமும் வாழ்ந்தால் போதும் என்று விருட்சங்கள் மீது கருணையே இல்லாமல் அடியோடு வேரோடு வெட்டி சாய்த்தல் நீரை மாசுபடுத்துதல் என்று பஞ்ச பூதங்களையும் எந்த அளவுக்கு பாழ்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறான் இங்குள்ள மனிதன்.

இந்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு புரிதலோடு ஒன்று தவறு என்று தெரிந்து விட்டால் அதை உற்பத்தி செய்யாமல் நாட்டிற்கும் தன் சமுதாயத்திற்கும் பின்னால் வரும் சந்ததிக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற சிந்தனை இங்குள்ள மனிதர்களை விட கடல் தாண்டிய தேசத்தில் வாழும் மனிதர்களிடம் இருக்கிறது. எல்லா விதத்திலும் தன்னை பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனிதன் அவனை பார்த்து அடிப்படை தர்மத்தை ஒழுங்கை கற்றுக் கொண்டால் இந்த தேசமும் நன்றாக இருக்கும். இதையெல்லாம் ஒரு சித்தன் சொல்லி செய்ய வேண்டிய அவசியமேயில்லை. இவையெல்லாம் மிக மிக அடிப்படை விஷயமாகும். எனவே இந்தக் கருத்தையும் இங்குள்ள அனைவரும் மனதிலே வைத்து தம்மை நாடும் நட்புக்கும் உறவுக்கும் இது போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறினால் சஹஸ்ரம் எனப்படும் ஆயிரம் மனிதரிடம் உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறினால் அதில் கட்டாயம் ஒரு மனிதன் பின்பற்றுவான் என்ற அளவிலே அனைத்தும் நலம் நலம் என்று நலமாய் மாறும் அப்பா.