நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் ஆகும். இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயிலில் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 235

கேள்வி: தந்தையே இறைவன் உறையும் இடம் கயிலை. கயிலை செல்ல பொருளாதாரம் இல்லை. பொருளாதாரம் இருந்தால் உடல் ஒத்து வரவில்லை. எனவே கயிலைக்கு சமமான ஸ்தலம் இங்கு எங்கு இருக்கிறது? எல்லா ஸ்தலங்களும் என்று சொல்லக்கூடாது குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இறைவன் உறையும் இடம் கயிலை என்று நீ கூறுகிறாய். வேறு மார்க்கத்தைப் பின்பற்றுபவனைக் கேட்டால் வேறு ஒன்றைக் கூறுவான். இறைவன் உறையும் இடம் அவனவன் கையிலே. எனவே அவனவன் கையைக் கொண்டு அவன் ஆற்றுகின்ற செயலும் அவன் மனப்பக்குவமும்தான் இறைவனை உணர்த்துகிறது. எனவே கயிலை சென்றுதான் இறைவனை வணங்க வேண்டும் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லையப்பா. மனிதர்களுக்கு ஒரு ஆசை தூர தூரமான இடங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்று. அப்படியெல்லாம் முற்காலத்திலே செல்லும் பொழுது நீண்ட காலம் ஆகும். இக்காலத்திலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அப்படி இறைவனை நோக்கி செல்கிறோம் என்ற உணர்வோடு பரிசுத்தமான எண்ணத்தோடு செல்லும் பொழுது அந்தப் புனிதப் பயணம் பூரத்தியடைகிறது. ஆனால் அப்படியோரு எண்ணமில்லாமல் எங்கு சென்றாலும் அந்த இறை பக்தி என்பது நிறைவடையாது. எனவே கயிலை தான் செல்ல வேண்டும் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இருக்கும் இடத்திலேயே உருக்கமான வழிபாடும் நல்ல எண்ணங்களும் இருந்தால் அதுபோல மனிதனைத் தேடி இறைவன் வருவான். மன்னன் கட்டிய ஆலயத்தில் அல்ல பூசலார் (63 நாயன்மார்களில் ஒருவர்) இதயத்தில்தான் இறைவன் அன்று கலச விழா என்று தேடிச் சென்றார். எனவே மனம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் கயிலையாக இருக்க வேண்டும். அவனவன் மனம்தான் திருவண்ணாமலையாக இருக்க வேண்டும். அவனவன் மனம்தான் திருப்பதியாக இருக்க வேண்டும். எனவே மனதை நல்ல எண்ணங்களால் இட்டு நிரப்புவதுதான் இறைவனுக்குப் பிடித்த பூஜையப்பா.

கேள்வி: புருவ மத்தி தியானத்தை எப்படி செய்வது?

வடகிழக்கு திசை நோக்கி பிரம்ம முகூர்த்தத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் ஏக (ஒரு) நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடல் சோர்வில்லாமல் அமர இயலுகிறதா? என்று முயற்சி செய்து பிறகு மனதிலே உள்ள எல்லா வகையான எண்ணங்களையும் விட்டுவிட்டு முதலில் இஷ்ட தெய்வ நாமாவளியை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வந்தால் பின்னால் இந்த தவ முறை மெல்ல மெல்ல சாத்தியமாகும்.

சுலோகம் -128

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-9

யாகம் போன்ற கர்மங்களை தவிர மற்ற கர்மங்கள் செய்வதனால் மூலமாக இந்த மனத சமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது. ஆகையால் அர்ஜூனா பற்று இல்லாமல் யாகம் செய்வது போல பற்று இல்லாமல் இந்த கடமையை செய்வாயாக.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பற்றில்லாமல் இறைவனுக்காக மட்டுமே என்ற எண்ணத்தில் செயல்களை செய்து அதனை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது யாகம் எனப்படும். இந்த யாகத்தை செய்வதினால் உலகத்துடன் பந்தங்கள் ஏற்படுவதில்லை. இறைவனுக்காக மட்டுமே என்று செய்யாத எந்த செயலும் உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. இதன் விளைவாக நல் கர்மாவோ தீய கர்மாவோ ஏற்படுகிறது. அது மேலும் பிறவிகளை உண்டாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே செய்யும் செயல்களை யாகம் செய்வது போல பற்றில்லாமல் இறைவனுக்காக என்ற எண்ணத்தில் செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -127

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-8

உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதை விட கர்மங்களை செய்வது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலை பராமரிப்பதும் இயலாத செயலாகி விடும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உனக்கு விதிக்கப்பட்ட விதியின் படி உனது தாய் தந்தை குழந்தைகளை பார்த்துக் கொள்வது முதல் உனக்கு உண்டான தொழிலை அல்லது உனக்கு விருப்பமான தொழிலை நீ செய்தே ஆக வேண்டும். ஏனெனில் நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சும்மா இருப்பதினால் உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை நீ செய்யாத காரணத்தினால் உனக்கு பாவம் வந்து சேரும். மேலும் உன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்கும் நீ உபயோகமில்லை என்று உன்னை தூற்றி தவறாக பேசுவார்கள். ஆகவே சும்மா இருப்பதை விட உனக்கு ஏற்ற தொழிலை நீ செய்து கொண்டு உனது குடும்பத்தை பார்த்துக் கொள்வது சிறந்தது. எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதினால் உடலும் உனக்கு ஒத்துழைக்காமல் கெட்டு விடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 234

கேள்வி: சதுரகிரி மலையில் சிவபெருமான் சற்று சாய்ந்து காட்சியளிப்பதின் காரணம் என்ன?

மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிவபெருமான் எப்பொழுதோ சாய்ந்து விட்டாரப்பா. முதலில் அவர் கங்கையிடம் சாய்ந்து விட்டார். பிறகு தன் பக்தர்களுக்காக விதவிதமாக சாய்ந்து விட்டார். மதுரையம்பதியில் அவர் பலமுறை சாய்ந்திருக்கிறாரப்பா. நீர் சுமந்து வரும் ஒரு பெண்ணிற்காகக் கூட ஒரு ஸ்தலத்தில் சாய்ந்து இருக்கிறார். எனவே இதன் பொருள் என்ன? நல்லவர் பக்கமும் நல்ல பக்தர்கள் பக்கமும் இறைவன் எப்பொழுதுமே சாய்ந்திருப்பார் என்பது பொருளாகும்.

கேள்வி: பொதிகை மலையில் தங்கள் தரிசனத்திற்குப் பிறகு வழக்கமாக மழை வரும் என்பார்கள். ஆனால் நாங்கள் தரிசனம் செய்து முடித்த பிறகு இடி விழுந்து மரங்கள் பற்றி எரிந்தன இது எத்தகைய வெளிப்பாடு?

பொதுவாக இறை தரிசனத்திற்குப் பிறகு மழை பெய்தால் அது இறைவனின் ஆசிர்வாதம் என்று நாங்கள் கூட கூறியிருக்கிறோம். அப்படி நிகழவில்லை என்பதற்காக எதிரான பொருளைக் கொள்ளக் கூடாது. எனவே பல்வேறு தருணங்களிலே இறைவன் தன் கருத்தை உணர்த்துவதற்கு பல்வேறு விதமான முறைகளைக் கையாளுகிறார். எனவே இந்த ஒரு நிகழ்ச்சி இனி எதிர்காலத்தில் நடந்தாலும் அல்லது எதுவுமே நடவாமல் போனாலும் கூட அதற்காக இறைவனின் கருணையோ மகான்களின் அருளாசியோ இல்லை என்று எண்ணத் தேவையில்லை. தற்கால மனிதர்களுக்குக் கூறுகிறோம். அத்தனை தூரம் ஒருவன் கடந்து செல்கிறான் என்றாலே இறைவனின் கருணை இருப்பதால்தான் அப்படி ஒரு உணர்வு வருகிறது. அங்கு செல்ல வேண்டும் என்கிற ஒரு நிலை ஏற்படுகிறது. எனவே இதுவும் ஆசிர்வாதம்தான்.

சுலோகம் -126

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-7

அர்ஜூனா எவனொருவன் தன் இந்திரியங்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக இருந்து கொண்டு தன் கர்மேந்திரியங்களால் கர்ம யோகத்தை கடைபிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா எவன் ஒருவன் தன்னுடைய பார்த்தல் பேசுதல் காணுதல் நுகர்தல் கேட்டல் ஆகியவற்றால் ஏற்படும் ஆசைகளின் வழியில் செல்லாமல் அதனை அடக்கி வசப்படுத்தி எதன் மீதும் பற்றில்லாமல் இருந்து கொண்டு வாக்கு கைகள் கால்கள் உடல் கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களையும் கர்ம யோகத்தினால் (நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல்) செயல்படுத்துகிறானோ அவனே சிறந்தவனாக இருக்கிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஸ்ரீ ராமர்

ரிஷிகளின் அறிவுரைப்படி ஸ்ரீ ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் சேர்ந்து பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க சிவலிங்கத்தை நிறுவி ஆகம முறைப்படி வழிபட்டார். அனுமன் அருகில் இருந்தார். அப்போது சிவன் பார்வதியுடன் வானில் தோன்றினார். இராமநாதசுவாமி கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள தூணில் இதை விளக்கும் சிற்பம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 233

கேள்வி: ஆலயத் திருப்பணி கோரிக்கை:

இறைவனின் கருணையைக் கொண்டு யாங்கள் (சித்தர்கள்) பலருக்கு பலமுறைக் கூறியதுதான். இந்த இன்னவனுக்கும் கூறுகிறோம். ஒரு ஆலயம் சிறப்புற வளர வேண்டுமென்றாலும் அந்த ஆலயம் நல்லவிதமாக கலச விழா காண வேண்டுமென்றாலும் அதற்கும் சில சூட்சும காரணங்கள் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க அந்த ஆலயம் தொடர்பான மனிதர்களும் அந்த ஆலயத்தை சுற்றி வசிக்கின்ற மனிதர்களும் ஒன்றுபட்ட உள்ளத்தோடு இறைவனை வேண்டி முயற்சியில் இறங்கினால் கட்டாயம் பலன் உண்டு. இதுபோல் முன்னர் ஒருவனுக்குக் கூறிய வாக்கையே இன்னவனுக்கும் கூறுகிறோம். மூத்தோனை அதாவது விநாயகப் பெருமானை தமிழகத்தில் உள்ள சிறப்பான ஸ்தலங்கள் (பிள்ளையார்பட்டி திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் போன்ற ஸ்தலங்கள்) சென்று வணங்கினால் தடையகன்று நல்ல முறையிலே அந்த திருப்பணி நடை பெறும். இந்த நிலையிலே தொடர்ந்து முயற்சிகள் சோர்வின்றி செய்ய நலம் உண்டு. ஆசிகள்.

கேள்வி: எந்தக் கோவில் மூத்தோனை (விநாயகப்பெருமானை) வணங்கினால் சிறப்பு? வேகமாகப் பணி நடக்கும்?

இறைவனின் கருணையாலே யாம் (அகத்திய மாமுனிவர்) ஒரு ஆலயத்தைக் குறிப்பிட்டால் அப்படியானால் வேறு ஆலயம் சிறப்பில்லையா? என்று ஒரு மனிதன் வினவுவான். ஆலயம் எப்பொழுதுமே சிறப்புதானப்பா. அந்த ஆலயத்திற்கு எந்த மனோபாவத்தில் மனிதன் செல்கிறான் என்பதைப் பொறுத்துதான் அவனுக்கு இறைவன் அருள் கிட்டுகிறதா? இல்லையா? என்பது புரியும். நாங்கள்(சித்தர்கள்) குறிப்பிட்டதை நன்றாக கவனி. விநாயகப்பெருமானுக்கு என்று பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அங்கு சில உண்டு. பிரசித்தி பெற்ற என்றால் மனிதர்கள் அறிந்த என்று பொருள். மனிதர்கள் அறியாத ஆலயங்களும் உண்டு. அது குறித்து பின்னர் உரைப்போம்.

லிங்க வடிவில் மாரியம்மன்

பழனியில் இருந்து 20 கிமீட்டரும் உடுமலையில் இருந்து 18 கிமீ துாரத்திலுள்ள கொழுமம் ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மன் அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறாள் மாரியம்மன். லிங்கத்தின் அடியில் ஆவுடையார் (பீடம்) உள்ளது. அம்பாளுக்குரிய அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அம்பாளாகவே கருதப்பட்டு புடவை கட்டி பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலை வீசிய போது லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதை கரையில் போட்டு விட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும் வலை வீச அந்த கல் வந்து கொண்டே இருந்தது. பயந்து போன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய அம்பாள் ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான் தான் என்றாள். இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார் மீனவர். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடிய போது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இந்த கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர். கல் லிங்கம் போல இருந்ததால் அப்படியே பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்க வடிவையே அம்பாளாக பாவித்து மாரியம்மன் என பெயர் சூட்டி பூஜைகள் விழாக்கள் நடக்க ஆரம்பித்தன.

குதிரையாறும் அமராவதியும் இணையும் உயரமான கோட்டை போன்ற இடத்தில் இருந்து ஊரைக் காப்பதால் கோட்டை மாரி என்றும் பெயர் உள்ளது. குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் குமணன் நகர் என அழைக்கப்பட்டது. இங்கு வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி கொழுமம் என்று ஆனது.