ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 420

கேள்வி: அகோரிகள் இறந்த உடலை இறைவனுக்குப் படைத்து அதை பச்சையாக உண்கிறார்கள். இதை இறைவன் ஏற்றுக்கொள்கிறாரா?

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் வினாவிற்குள் புகுவதற்கு முன்னால் மனிதர்களை பார்த்து ஒன்று கேட்க வேண்டும். மனிதர்கள் மட்டும் வேறு வேறு விலங்குகளை வேட்டையாடி உண்ணலாம் தவறொன்றுமில்லை. அதை நியாயப்படுத்துகிறான் மனிதன். அது குறித்து எதாவது கூறினால் இதை உண்டால்தான் பலம் உடலுக்கு ஆற்றல் என்று கூறுகிறான். அதோடு மட்டுமல்லாமல் அதற்கு வேறு வேறு வர்ணம் பூசுகிறான். பிற உயிரைக் கொன்று உண்ணாதே. உன் வயிறு என்ன சுடுகாடா? என்று கேட்டால் அதனை மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதேதோ காரணங்களை கூறுகிறான். எத்தனை நியாயமான காரணங்களை மனிதன் கூறினாலும் உயிர்களை கொன்று ஒரு மனிதன் தின்னும்வரை அவன் இறையருளை கடுகளவு கூட பெறமுடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். அதற்காக சைவமாக இருக்கிறேன் என்று ஒரு மனிதன் மற்ற அனாச்சாரங்களை செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்வார் என்று எண்ண வேண்டாம். சைவமாக இருப்பதும் ஒரு நல்ல கொள்கை ஒரு நல்ல சிந்தனை நல்ல குணம். அதோடு பிற நல்ல குணங்களையும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டிட வேண்டும். அறியாமையால் ஒரு மனிதன் இந்தத் தவறை செய்தால் இறைவன் மன்னித்து விடுவார். அறிந்த பிறகு அதைத் தொடர்ந்தால் தவறாகும்.

நிலைமை இவ்வாறிருக்க வலிமையான மனிதன் விதவிதமான பொறிகளை வைத்து விலங்கை பிடித்து உண்ணுகிறான். விலங்குகள் துடித்தாலும் மனிதனுக்கு கவலையில்லை. ஆனால் மனிதனைவிட ஆற்றல் உள்ள ஒருவன் மனிதனை வேட்டையாடித் தின்றால் மட்டும் அவன் அசுரன். இந்த வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? மனிதன் விலங்கைக் தின்னுவது நியாயம் என்றால் மனிதனை இன்னொருவன் வேட்டையாடி தின்றாலும் இறைவன் பார்த்துக் கொண்டிருப்பார். நடந்தது நடந்து கொண்டிருக்கிறது இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்றெல்லாம் கூறக் கூடாது. எனவே ஒரு விலங்கைக் கூட இந்த உலகில் எந்த மனிதனும் துன்புறுத்துவதில்லை, ஆராய்ச்சி என்ற பெயரில் அனாச்சாரம் செய்வதில்லை, உணவுக்காக கொன்று தின்பதில்லை என்ற உறுதி எடுத்துக் கொண்ட பிறகு மனிதனை வேறு யாரும் வேட்டையாடாமல் இருந்தால் அது குறித்து சிந்திக்கலாம். அடுத்ததாக எந்த நிலையிலும் எந்த ஒரு உயிரையுமே அடித்து துன்புறுத்தி உணவாக ஏற்பதை யாங்களோ இறைவனோ விரும்புவதில்லை. அடுத்து இறைவன் இதையெல்லாம் கேட்டாரா? என்று கேட்டால் பிறகு இறைவன் மற்றவற்றைக் கேட்டாரா? என்று மனிதன் கேட்பான். எனவே மனிதனாக உணர்ந்து இந்த உயிர்க் கொலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சாத்வீக வழியில் வந்தால்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும்.

இப்பொழுது இன்னவன் கேட்ட அகோரி தொடர்பான வினாக்களுக்கு வரும் பொழுது உண்மையான ஞானிகளும் மகான்களும் இந்த உலகில் எப்படி குறைவோ எப்படி அவர்களைப்போல் வேடமிட்டவர்கள் அதிகமோ அதைப்போல அகோரிகள் போல் வேடமிட்டவர்கள்தான் அதிகம். உண்மையான அகோரியின் தத்துவம் என்ன? பஞ்சபூத மாற்றங்களை எதில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றலாம். மனிதன் அருவறுக்கும் ஒரு பொருளை உண்ணக் கூடிய பொருளாக மாற்றலாம் என்ற தத்துவம்தான் இது. இறந்த மனித உடலை உண்கிறார்கள் என்றால் அப்படியல்ல அதன் பொருள். இறந்து போன அந்த உடலை வேறு ஒரு கனிவகையாக மாற்றிதான் உண்மையான அகோரி உண்ணுவான். அந்த ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அந்த நிலைக்கு எவன் சென்றானோ அவனை வேண்டுமானால் ஓரளவு அகோரி என்று கூறலாம். மற்றவர்கள் எல்லாம் ஏதோ அந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதுவாக முயற்சி செய்கிறார்களே தவிர எம் நோக்கிலே அவர்களையெல்லாம் ஏற்பதில்லை. எனவே இதுபோன்ற அனாச்சாரமான விஷயங்களை ஒருபொழுதும் சித்தர்கள் ஏற்பதில்லை. உச்ச நிலை ஞானம் பெற்றவர்கள் எதையும் செய்கிறார்கள் என்றால் அந்த ஞானத்தை பெறாதவர்கள் அதைப்பார்த்து புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதைப் போல செய்தால் அது ஏற்புடையது அல்ல. எனவே இது எப்படிப் பார்த்தாலும் அனாச்சாரமே.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 419

கேள்வி: கடைவிரித்தேன் கொள்வாரில்லை இது வள்ளலாரின் ஆதங்கம். கடந்த 9 ஆண்டுகளாக ஞானக் கருத்துக்களை தொடர்ந்து கூறிவந்தும் ஒருவர் கூட கடுகளவு கூட தேறவில்லை என்பதே கசப்பான உண்மை. இது தங்கள் ஆதங்கம். இரண்டிற்கும் வேறுபாடில்லை. நாங்கள் என்ன செய்வது?

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் காலகாலம் உயர்ந்த கருத்துக்களும் விஷயங்களும் ஞானக் கருத்துக்களும் பலரால் பல மகான்களால் போதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றை பல மனிதர்கள் கேட்டாலும் சிலர்தான் பின்பற்ற முடியும். சிலரில் சிலர்தான் உறுதியாக பின்பற்ற முடியும். இது போதிக்கின்ற மகான்களுக்கு தெரிந்தாலும் கூட பிள்ளைகள் இப்படி தவறான வழியில் செல்கிறார்களே? இந்த செல்வங்கள் உண்மையான ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கூறினாலும் நான் உணர்ந்ததை அறிந்ததை பெற்றதை இவர்களும் பெற வேண்டும் என்று எண்ணி உரைத்தாலும் அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே? என்ற ஆதங்கத்தில் கூறுவதுதான். இறைவனின் அருளாலே மகான்களுக்கு எதை செய்தாலும் அதன் எதிர்பார்ப்பும் விளைவும் எப்படியிருந்தாலும் பாதகமில்லை இறைவன் இட்ட கட்டளையை செய்ய வேண்டும். இந்த காலத்தில் இந்த ஜென்மத்தில் இந்தந்த பிறவிக்கு இந்தந்த ஞானத்தை போதிக்க வேண்டும். அதை இந்தந்த மனிதர்கள் பின்பற்றுவார்கள். இந்தந்த மனிதர்கள் கேட்பார்கள் பின்பற்ற மாட்டார்கள். இந்தந்த ஜென்மங்கள் தாண்டி அவர்களுக்கு இந்த ஞானக் கருத்துக்கள் உதவலாம் என்று தெரிந்துதான் போதிப்பார்கள். இருந்தாலும் மனித உடலெடுத்த பிறகு எத்தனை பெரிய ஞானியாக இருந்தாலும் சில ஆதங்கங்களும் எதிர்பார்ப்புகளும் வந்து விடுகிறது. அதன் விளைவுதான் அவன் கடைவிரித்தேன் என்ற வாசகத்தைக் கூறியது.

யாங்களும் எத்தனை ஞானக் கருத்துக்களை கூறினாலும் அதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் பாவங்கள் மனிதர்களை திசைமாற வைக்கிறதே? தடுமாற வைக்கிறதே? என்றுதான் கூறுகிறோம். அதனால்தான் அடிக்கடி யாங்கள் கூறுவது பாத்திரத்தை சுத்தி செய்து பிறகு பாலைக் காய்ச்சினால் பால் நன்றாக இருக்கும். பாவங்களை வைத்துக் கொண்டு எத்தனைதான் ஆன்மீகம் பேசினாலும் இறைவனை வணங்கினாலும் அந்த பாவங்கள் இறையாற்றலை சரியாக உணர விடாது. எனவே ஒன்று பாவங்களை அனுபவித்து தீர்க்க வேண்டும் அல்லது தர்ம காரியங்களால் தீர்க்க வேண்டும் அல்லது மந்திர ஜெபத்தால் தீர்க்க வேண்டும் அல்லது ஸ்தல யாத்திரையால் தீர்க்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் பாவங்களைத் தீர்க்கிறேன் என்று ஒருபுறம் பரிகாரங்கள் செய்து கொண்டே தர்மங்கள் செய்து கொண்டே இன்னொருபுறம் வார்த்தைகளால் பிறரை காயப்படுத்திக் கொண்டே உதாசீனம் செய்து கொண்டே பலரை நோகடித்துக் கொண்டே இருந்தால் அதனால் எந்த விதமான பலனும் இல்லை. எனவேதான் விதவிதமான ஞானக் கருத்துக்களை யாங்கள் போதித்தும் அதனை சரியாக புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறுகிறார்களே? தடுமாறி தடுமாறி மக்கள் மாய்ந்து வாழ்கிறார்களே? என்ற நோக்கில் யாங்கள் அதனை கூறியிருக்கிறோம். என்றிருந்தாலும் ஒவ்வொரு ஆத்மாவும் கடைத் தேறத்தான் வேண்டும்.

அது இன்றே இப்பொழுதே இத்தருணமே இக்கணமே கடைத்தேறினால் நன்றாக இருக்குமே? அதற்குதானே நாங்கள் இறைவனருளால் வழிகாட்டுகிறோம் என்றும் அதோடு மட்டுமல்ல எதையெதை எப்படியெப்படி உணர்வது? என்றெல்லாம் கூட நாங்கள் அவ்வப்பொழுது கோடிட்டுக் காட்டுகிறோம். இதழ் ஓதுகின்ற இன்னவன் மூலமும் சில விஷயங்களை செய்து காட்டுகிறோம். என்ன செய்தாலும் எதைப் பார்த்தாலும் எங்கள் உள்ளம் எங்கள் மனம் எங்கள் சிந்தனை எப்படியெல்லாம் இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல்தான் இறைவனும் சித்தர்களும் வரவேண்டும் என்று மனிதர்கள் எண்ணும் பொழுது அங்கேதான் சித்தர்களுக்கு, மனிதர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. இந்த இடைவெளி குறைய வேண்டும். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே இடைவெளியை குறைக்க வேண்டும் என்றுதான் யாங்கள் வந்திருக்கிறோம். ஆனால் அந்த இடைவெளியை குறைக்கவே மனிதர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். இடைவெளி குறைய நல்ல நல்ல மாற்றங்கள் ஏற்படும். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே என்னென்ன இடைவெளி இருக்கிறது? என்பது மனிதர்களுக்கே தெரியும். அவனுடைய ஆசை பாசம் பற்று அவனுடைய எதிர்பார்ப்பு சினம் இவையனைத்தும் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி. இவற்றையெல்லாம் மெல்ல மெல்ல விட்டுவிட்டால் இறையோடு மனிதன் நெருங்குவான்.

இறையோடு மனிதன் நெருங்க நல்ல மாற்றங்களை ஒரு மனிதன் உணர இயலும். நிரந்தர நிம்மதி சந்தோஷம் வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறான். அதற்கு வழிகாட்டினால் அந்த வழியில் செல்லத்தான் மனிதர்களுக்கு அச்சமாக தயக்கமாக குழப்பமாக இருக்கிறது. அதை மாற்றத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். இதனை சரியாக புரிந்து கொண்டு எம் வழியில் இறை வழியில் எம் சேய்கள் வர நல்லாசிகள்.

2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் நூலின் 2 வது படலமாகும். இப்படலக்கதை இதற்கு முந்தைய படலமான இந்திரன் சாபம் தீர்த்த படலத்துடன் தொடர்பு உடையது.

இந்திரன் விருத்தாசூரனை அழித்து அதனால் உண்டான பிரம்மகத்தி தோசத்தை சோமசுந்தரரின் அருளினால் நீங்கப் பெற்று சோமசுந்தரரின் ஆணைக்கிணங்க இந்திரலோகத்துக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான். இந்திரனை  தேவர்கள் அவனின் வாகனமான வெள்ளை யானை ஐராவதம் உட்பட அனைவரும் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தேவர்கள் அனைவரும் இந்திரனுக்கு வாழ்த்துக்களையும் பொன்னாலாகிய பரிசுகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காசி மாநகரில் துர்வாசர் மாமுனிவர் தன் பெயரால் லிங்கத் திருமேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார். ஒருநாள் துர்வாசர் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் தன் திருமுடியில் இருந்து பொன்னிறமான மணம் வீசும் தாமரை மலரினை துர்வாசகருக்கு கொடுத்தருளினார். துர்வாசரும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் அம்மலரை எடுத்துக் கொண்டு இந்திரனுக்கு பரிசாக தரும் நோக்கில் தேலோகத்திற்கு விரைந்தார். அப்போது இந்திரன் வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது ஏறி தேவலோகத்தில் பவனி வந்து கொண்டிருந்தான். தேவ மகளிர் மகிழ்ச்சியுடன் பாட்டிசைத்து ஆடிக் கொண்டு அவன் முன்னால் சென்று கொண்டிருந்தனர். வெள்ளை யானையான ஐராவதம் தேவர்களின் தலைவனான இந்திரனை சுமந்து கொண்டு செல்வதை பெருமையாக‌ எண்ணி ஆணவத்துடன் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது. துர்வாசர் தேலோகத்தை அடைந்தார். தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டதும் துர்வாசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். இறைவனான சிவபெருமான் தனக்கு கொடுத்த மணம்மிக்க தாமரை மலரினை தன்னுடைய பரிசாக இந்திரனுக்கு துர்வாசர் கொடுத்தார்.

தேவர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த இந்திரன் தன்னிலை மறந்திருந்தான். அதனால் துர்வாசர் அளித்த பரிசினை அலட்சியமாக வெள்ளை யானையின் மீது வைத்தான். ஆணவம் நிறைந்திருந்த வெள்ளை யானை இந்திரன் வைத்த தாமரை மலரினை தனது துதிக்கையால் எடுத்து காலில் போட்டு மிதித்து நசுக்கியது. இந்நிகழ்ச்சிகளைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் ஏற்பட்டது. பின் அவர் இந்திரனை நோக்கி இறைவனான சிவபெருமான் கருணைமிகுந்து மணம் மிகுந்த தாமரை மலரினை எனக்கு கொடுத்தார். சொக்கநாதரின் அருளினால் உனக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்கப் பெற்று புதுப் பொலிவுடன் சொர்க்கலோகத்துக்கு நீ திரும்பிய செய்தியை நான் அறிந்தேன். அதனால் இறைவனின் அருட்பிரசாதமான தாமரை மலரினை உனக்கு பரிசாக கொடுப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் நீ தன்னிலை மறந்து அம்மலரின் பெருமைகளை அறியாது உன் யானையிடம் தந்தாய். ஆகையால் உன் தலை எதிர் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனின் சக்கரப் படையால் சிதறடிக்கப்படும். மேலும் அவர் வெள்ளை யானையை நோக்கி இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரினை அதன் பெருமை அறியாது உன் கால்களால் நசுக்கினாய். ஆகையால் உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கி பலமும் போய் கருமை கொண்ட காட்டு யானையாக மாறுவாய் என்று இருவருக்கும் சாபம் கொடுத்தார்.

துர்வாசரின் சாபத்தை கேட்டதும் இந்திரன் தன்னிலைக்கு வந்தான். தன்னுடைய ஆணவச் செயலால் மறுபடியும் சாபம் பெற நேர்ந்ததை எண்ணி வருந்தினான். துர்வாசரிடம் முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும் எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள் என்று இந்திரன் வேண்டினான். யானையும் துர்வாசரின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தது. இந்திரன் மற்றும் வெள்ளை யானையின் இச்செயலால் துர்வாசர் மனம் மாறினார். அவர் அவர்களிடம் இறைவனின் அருளினை மதியாது நடந்த உங்களது செயல் குற்றமானது. அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆகையால் சாபத்தினை உங்களுக்கு மாற்றித் தருகிறேன். அதாவது உனக்கு தலையளவு கொடுத்த தண்டனை முடியளவாக மாறட்டும். ஆணவச் செருக்கினை உடைய வெள்ளை யானை அறிவிழந்து காட்டு யானையாகி நூறாண்டு கழிந்த பின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும் என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

முனிவரின் சாபத்தால் வெள்ளை யானை அறிவிழந்து கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறி தேவலோகத்தைவிட்டு பூலோகத்திற்குச் சென்றது. காட்டு யானையாக மாறிய ஐராவதம் பூலோகத்தில் உள்ள காடுகளில் சுற்றித் திரிந்தது. நூறாவது ஆண்டின் இறுதியில் கடம்ப வனத்தில் புகுந்தது. கடம்ப வனத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தினையும் சொக்கநாதரையும் கண்டது. தான் யார் என்பதினை அறிந்து பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடியது. உடனே காட்டு யானை வடிவம் நீங்கி மீண்டும் வெள்ளை யானையாக மாறியது. பின் பொற்றாமரை தீர்த்தத்து நீரினைக் கொண்டு சொக்கநாதரை அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது. வெள்ளை யானையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சொக்கநாதர் வெள்ளை யானைக்கு காட்சி தந்தார். அவர் வெள்ளை யானையிடம் நீ இங்க வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதனைக் கேட்ட வெள்ளை யானை ஆவணத்தால் தான் சாபம் பெற்றதையும் தற்போது சொக்கநாதரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றதையும் கூறி ஆணவம் இல்லாமல் பணிந்து வணங்கியது. பின் அது இறைவனாரிடம் தங்களுக்கு கூரையாக அமைந்திருக்கும் இவ்விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகி இவ்விமானத்தை தாங்கி தங்களைப் பிரியாது இருக்க வேண்டும். என்று வேண்டியது. அதற்கு சொக்கநாதரும் இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று கூறி பல வரங்களை அருளினார். பின்னர் வெள்ளை யானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும் ஐராவதேச்சுரர் லிங்கத் திருமேனியையும் ஐராவத விநாயகப் பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.

இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்து வர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை வருவேன் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது. பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும் அவ்வூரில் இந்திரேஸ்வரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது. இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை இறைவனை வழிபட்டு விடை பெற்றது. இறைவன் வெள்ளை யானை உண்டாக்கிய ஐராவதேஸ்வரரை வழிபட தீவினைகள் நீங்கப் பெறுவர் என்றும் இந்திரேஸ்வரரை வழிபட இம்மையில் எல்லா வளங்களும் பெற்று மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவர் என்றும் வரம் கொடுத்து ஐராவதம் யானைக்கு விடை கொடுத்தார். ஐராவதம் இந்திரலோகம் சென்று தனது கடமையை ஆற்றத் தொடங்கியது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

ஐராவதேஸ்வரர் மற்றும் இந்திரேஸ்வரர் ஆகிய இரண்டு லிங்கங்களை உலகிற்கு காட்டி அருளினார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் அனைவருக்கும் சொல்லும் கருத்து:

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தன்னிலை மறந்து ஆணவச் செயல்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவர்களுக்கான தண்டனையானது வந்தே தீரும். தான் செய்த தவறை உணர்ந்து ஐராவதேஸ்வரர் மற்றும் இந்திரேஸ்வரரை சரணடைந்தால் இறைவன் அவர்களுக்கு நன்மை புரிந்து அருளுகிறார்.

1. இந்திரன் பழி தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இந்திரன் பழி தீர்த்த படலம் நூலின் முதல் படலமாகும்.

தேவலோகத்தின் அரசனான இந்திரனை காண வந்தார் தேவ குரு பிரகஸ்பதி. இந்திரன் தேவ மகளீர்களுடன் இருந்தபடியால் தேவ குருவை கவனிக்காமலும் அவருக்கு தகுந்த வரவேற்பை கொடுக்காததாலும் சினம் கொண்ட பிரகஸ்பதி அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின் தேவர்கள் மூலம் குரு வந்ததை அறிந்த இந்திரன் அவரைக் காண ஐராவதமாகிய தனது வாகனத்தில் தேவர்களுடன் தேடிச் சென்றான். அவர்களால் தேவகுருவை கண்டு பிடிக்க இயவில்லை. தேவகுரு இல்லாமல் இந்திரனிடம் இருந்த சக்தியும் செல்வமும் குறைய ஆரம்பித்தது. தேவகுரு இல்லாமல் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பரிகாரம் தேடி அவன் தேவர்களோடு பிரம்மலோகத்திற்குச் சென்றான். தேவர்களுக்கு தற்போது நல்வழிகாட்ட குரு இல்லாததை பிரம்மாவிடம் எடுத்துக் கூறி வருந்தி இந்த சிக்கலுக்கு வழிகாட்டி அருளுமாறு வேண்டினான். அப்போது பிரம்மா இந்திரன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி பிரகஸ்பதியை கண்டு பிடிக்கும்வரை அறிவாலும் தொழிலாலும் சிறந்த ஒருவரை உங்களின் தற்காலிக குருவாக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி துவட்டா என்பவனின் மகனும் மூன்று தலைகளை உடையவனும் அசுர குலத்தில் உதித்தவனும் ஆகிய விச்சுவரூபன் என்பவனை தற்காலிக குருவாக்கிக் கொள்ளுமாறு அருளினார். அசுரகுலத்தில் உதித்தவனை குருவாக்கிக் கொள்வதா என்று முதலில் யோசித்த தேவேந்திரன் இறுதியில் பிரம்மாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு விச்சுவரூபனை குருவாக ஏற்றுக் கொண்டான்.

தேவ குரு பிரகஸ்பதியை அலட்சியப் படுத்தியதற்காக வருத்தம் கொண்ட இந்திரன் அதற்கு பரிகாரம் செய்ய எண்ணினான். புதிய குருவான விச்சுவரூபனிடம் தேவர்கள் நன்கு வாழ யாகம் செய்ய வேண்டும் என்று கூறினான். அதற்கு சம்மதித்த விச்சுவரூபனும் வாயினால் தேவர்களின் நலத்திற்காகவும் மனதினால் அசுரர்களின் நலனுக்காகவும் யாகத்தினை நடத்தினான். இதனை தனது ஞானதிருஷ்டியில் அறிந்த கொண்ட தேவேந்திரன் விச்சுவரூபனின் மூன்று தலைகளையும் கொய்தான். அவனின் மூன்று தலைகளும் காடை ஊர்குருவி கிச்சிலி பறவைகளாக மாறின. குருவைக் கொன்ற பாவத்தினால் இந்திரனை பிரம்மகத்தி தோசம் பிடித்தது. இந்திரனின் பிரம்மகத்தி தோசத்தினை தற்காலிகமாக போக்குவதற்காக தேவர்கள் மரங்களிடத்தில் பிசினாகவும் மகளிரிடத்தில் பூப்பாகவும் நீரினிடத்தில் நுரையாகவும் மண்ணிடத்தில் உவராகவும் பிரித்து அளித்தனர். இதனால் தற்காலிகமாக இந்திரனைப் பற்றிய பிரம்மகத்தி தோசம் நீங்கப் பெற்று பொலிவுடன் விளங்கினான்.

துவட்டா தன் மகன் விச்சுவரூபனின் முடிவினை அறிந்து இந்திரனை அழிக்க முடிவு செய்து வேள்வி ஒன்றினைத் தொடங்கினான். அவ்வேள்வியிலிருந்து பயங்கரமான உருவத்துடன் அசுரன் ஒருவன் தோன்றினான். அவ்வசுரனுக்கு விருத்தாசுரன் எனப் பெயரிட்ட துவட்டா விருத்தாசுரனுக்கு இந்திரனை அழிக்க ஆணை இட்டான். தேவேந்திரனுக்கும் விருத்தாசுரனுக்கும் பயங்கரப் போர் ஏற்பட்டது. இறுதியில் தேவேந்திரன் விருத்தாசுரனின் மீது தனது வஜ்ராயுதத்தை ஏவினான். விருத்தாசுரன் வஜ்ராயுத்தை வீழ்த்திவிட்டு தன்னிடம் இருந்த இரும்பு உலக்கையால் இந்திரனை அடித்து அவனை மூர்ச்சை அடையச் செய்தான். மூர்ச்சை தெளிந்த இந்திரன் இவ்வசுரனுடன் நேருக்கு நேர் போர் புரிய என்னிடம் வலிமை இல்லை எனக் கருதி மீண்டும் பிரம்மாவை சரணடைந்தான். இப்பிரச்சினையிலிருந்து தப்பிக்க திருமால் ஒருவரே உனக்கு வழிகாட்டுவார். ஆகையால் அவரை சரணடைந்து விருத்தாசுரனை அழிக்க உபாயம் கேள் என்று பிரம்மா கூறினார்.

திருமாலிடம் சென்ற தேவர்கள் தங்கள் பிரச்சினையை சொல்லி அதற்கு தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு திருமால் பாற்கடலைக் கடைந்தபோது உங்களின் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்க ததீசி முனிவரிடம் தந்தீர்கள். பின்பு அந்த ஆயுதங்களை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளத படியால் அவர் அந்த ஆயுதங்களை பாதுகாக்க திரவமாக்கி குடித்து தனது முதுகுத்தண்டில் சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் சென்று அவரின் முதுகெலும்பைப் பெற்று புதிய வலிமைமிக்க வஜ்ராயுத்தை உருவாக்கி அந்த ஆயுதத்தைக் கொண்டு அசுரனை வெல்லலாம் என்று கூறினார். திருமால் கூறியதை ஏற்றுக் கொண்ட தேவர்கள் ததீசி முனிவரை சந்தித்து நடவற்றை எல்லாம் கூறினர். கருணையுள்ளம் கொண்ட ததீசி முனிவரும் இறைவனான சிவபிரானின் விருப்பப்படியே நான் என்னுடைய முதுகெலும்பினைத் தருகிறேன். தாங்கள் அதனைக் கொண்டு அசுரனை வெல்லுங்கள் என்று சொல்லி ததீசி முனிவர் யோகத்தில் அமர்ந்து தனது உடலை விட்டு சிவலோகம் சென்றார். பின் ததீசி முனிவரின் முதுகெலும்பைப் பெற்ற இந்திரன் தேவதச்சன் மூலம் புதிய வலிமைமிக்க வஜ்ராயுதத்தை உருவாக்கினான்.

இறைவனின் அருளால் புதிய வஜ்ராயுதத்தைப் பெற்ற இந்திரன் மீண்டும் விருத்தாசுரனுடன் போரிட்டான். இந்திரனுடன் சண்டையிட முடியாத விருத்தாசுரன் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான். அசுரனைக் காணாது திகைத்த இந்திரன் பிரம்மாவிடம் சென்று நடந்ததைக் கூறி அசுரனைக் கண்டறிய வழி கேட்டான். பிரம்மாவும் அகத்தியரின் உதவியுடன் கடலினை வற்றச் செய்து அசுரனை அழிக்கலாம் என்று வழி கூறினார். இந்திரனும் அகத்தியரைச் சென்றடைந்து நடந்தவைகளைக் கூறி உதவிடுமாறு கேட்டான். அகத்தியரும் கடல் நீரை உளுந்தளவாக்கி குடித்து விட்டார். கடல் நீர் வற்றியதால் வெளியேறிய விருத்தாசுரனை இந்திரன் தன்னுடைய புதிய வஜ்ராயுதத்தால் அழித்தான். இதனால் இந்திரனை மீண்டும் பிரம்மகத்தி தோசம் பிடித்துக் கொண்டது. பிரம்மகத்தியால் மனம் பேதலித்த இந்திரன் குளத்தில் மலர்ந்திருந்த தாமரைத் தண்டினுள் போய் ஒளிந்து கொண்டான்.

தேவேந்திரனை காணாது தேவர்கள் பூலோகத்தில் அசுவமேதயாகம் செய்து சிறப்புற்றிருந்த நகுஷன் என்பவனை தேவேந்திரனாகத் தேர்வு செய்து இந்திரப் பதவியை அளித்தனர். இந்திரப்பதவி தந்த மமதையால் நகுஷன் இந்திராணியான சசிதேவியை தனக்கு சொந்தமாக்க விரும்பினான். நகுஷன் தனது விருப்பத்தை தேவர்களிடம் தெரிவித்து இந்திராணியை அழைத்து வரும்படி சொன்னான். இதனை அறிந்த இந்திராணி தங்களது குருவான பிரகஸ்பதியை மனதில் நினைத்து தன் துயர் போக்கும்படி வேண்டினாள். பிரகஸ்பதி நகுஷனை நேரடியாக வெல்ல முடியாது. அதனால் சப்த ரிசிகள் எழுவரும் சுமந்து வரும் பல்லாக்கில் வந்தால் நகுஷனை ஏற்றுக் கொள்வேன் என வேண்டுகோள் விடு என்று சதிதேவிக்கு ஆலோசனை கூறினார். சசிதேவியும் பிரகஸ்பதி சொல்லியவாறே சொல்லி அனுப்பினாள். நகுஷனும் இந்திராணியை அடையும் மோகத்தினால் சப்தரிஷிகள் பெருமை அறியாமல் அவர்கள் தன்னை சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். நகுசனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டு இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட ஆசை மிகுதியால் விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில் பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை விரைவுப்படுத்தினான்.

முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து செல்கிறோம் என்றனர். சப்தரிசிகளில் குள்ளமான முனிவர் தான் பல்லக்கு மெதுவாக செல்லக் காரணம் என்று கருதிய நகுசன் குள்ளமாக இருந்த முனிவரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்று சமஸ்கிருத மொழியில் வேகமாக வேகமாக என்ற பொருளில் தன் கையில் இருந்த குச்சியால் முனிவரை நகுசன் அடித்தான். இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த நகுசனை சர்ப்ப என்றால் நாகம் என்ற பொருளில் பூவுலகத்தில் மலைப் பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசனும் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். இவ்வாறு இந்திராணிக்கு ஏற்பட்ட துயரம் நீங்கியது. தேவேந்திரனை தங்களுக்கு மீட்டுத்தரும்படி பிரகஸ்பதியிடம் இந்திராணியும் தேவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரகஸ்பதி அவர்கள் மீது இரக்கம் கொண்டு தாமரைத் தண்டினுள் ஒளிந்திருந்த தேவேந்திரனை அழைத்தார். குருவின் குரல் கேட்டு தேவேந்திரன் சித்தம் தெளிந்து தாமரைத் தண்டிலிருந்து வெளிப்பட்டான். ஆனாலும் அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி தோசம் நீங்கவில்லை. பிரகஸ்பதி இந்திரனிடம் பூலோகத்தில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் பிரம்மகத்தி தோசம் நீங்கும் என்று வழி கூறினார். பிரகஸ்பதியுடன் பூலோகத்தை அடைந்த இந்திரன் ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று வழிபாடு நடத்தினான். அவ்வாறு ஒவ்வொரு ஆலயமாக சிவாலய தரிசனம் செய்து கொண்டு செல்லும் போது கடம்பவனத்தை கடந்த சமயத்தில் அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி தோசம் நீங்கி புதுப்பொலிவு பெற்றான். கடம்பவனத்தில் இருக்கும் இறைவனின் கருணையால்தான் இந்திரனுக்கு பிரம்மகத்தி தோசம் நீங்கியது. ஆகையால் இங்கிருக்கும் இறைவனைக் கண்டறியுங்கள் என்று பிரகஸ்பதி இந்திரனிடம் கூறினார். இந்திரனும் தேவர்களும் தேடி இறுதியில் கடம்பவனத்தில் லிங்கத் திருமேனியையும் தீர்த்தத்தையும் கண்டறிந்தனர்.

பிரகஸ்பதியின் அறிவுரையின்படி இந்திரனும் தேவர்களும் கடம்பவனத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டான். இறைவனின் திருவருளால் அத்தீர்த்தத்தில் பொற்றாமரைகள் மலர்ந்தன. இந்திரனும் அம்மலர்களைக் கொண்டு சிவபிரானை வழிபட்டான். பின்னர் அவ்விடத்தை சீராக்கி எட்டு யானைகள் 32 சிங்கங்கள் 64 சிவகணங்கள் கொண்ட அழகிய விமானத்துடன் அவ்விட இறைவனுக்கு அமைத்து கோவில் கட்டினான் இந்திரன். அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் இந்திரனே உன்னுடைய பிரம்மகத்தி தோசம் முற்றிலும் நீங்கிவிட்டது. இங்கு நீ வேண்டுவது யாது? என்று கேட்டார். இறைவனே நான் என்றைக்கும் இங்கிருந்து தங்களை வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் இந்திரன். அதற்கு சிவபெருமான் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் இங்கு வந்து வழிபடு. அன்றைய தினம் இவ்வாலய வழிபாடு உனக்கு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனை உனக்கு கொடுக்கும். இவ்வாலயத்தில் சொக்கநாதர் சோமசுந்தரர் என்ற திருநாமங்கள் கொண்டு எம்மை வழிபடுவோர் உன்னைப் போலவே தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். நீ பல்லாண்டு இந்திரப்பதவியை வகித்து இறுதியில் எம்திருவடி சேர் என்று அருளினார். இன்றைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவருக்கு இந்திரன் அமைத்த விமானம் இந்திர விமானம் என்றும் கடம்பவனத் தீர்த்தம் பொற்றாமரைக்குளம் என்றும் இறைவனார் சொக்கநாதர் சோமசுந்தரர் என்றும் அழைக்கப் படுகின்றனர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் அனைவருக்கும் சொல்லும் கருத்து:

  1. சுக போகங்களில் மூழ்கியும் ஆசைகளினால் தான் செய்ய வேண்டிய கடமையை மறந்தால் அதிகம் துன்பப்பட நேரிடும்.
  2. எந்த சூழ் நிலையிலும் வழிகாட்டிய‌ குருவை மறக்க கூடாது. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாக கொடுக்க வேண்டும்.
  3. மிகவும் உயர்ந்த நிலையில் எவ்வளவு பெரிய பதவி கிடைத்தாலும் தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும். தானே பெரியவன் என்றும் மற்றவர்கள் தன்னைவிட தாழ்ந்தவர் என்ற அகங்காரம் கொண்டாலும் பெண்களை இழிவுபடுத்தினால் அழிவு உறுதி.
  4. திக்கற்ற நிலையில் இறைவனே துணையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 418

ஆஞ்சனேயர் வாய்பொத்தி இருப்பதின் தாத்பர்யம் என்ன ?

இறைவனின் கருணையைக்கொண்டு யாம் கூறவருவது யாதென்றால் இதுபோல் முற்றிய கதிர் வளைந்தே இருக்கும். நிறைகுடம் தழும்பாது என்பார்கள். அதைப்போல பரிபூரண ஞானத்தன்மையும் பரிபூரண இறையாற்றலை உள்ளே உணர்ந்து கொண்ட எந்தவிதமான ஆத்மாவும் அல்லது இறையின் அம்சம் தானாக இருந்தாலும்கூட பணிந்து ஒன்றுமே இல்லாத நிலையில் தான் ஒன்றுமேயில்லை என்பதுபோல் காட்டிக் கொள்வதுதான் பெரியதின் விளக்கம். என்றுமே பெரியது சிறியதாக இருக்கும். சிறியது பெரியதாக இருக்கும். இதனால்தான் தமிழ் எழுத்திலே சிறியது சிறியவர் என்று சொல்லும் பொழுது அங்கே பெரிய எழுத்தையும் பெரியது என்று கூறும் பொழுது அங்கே சிறிய எழுத்தையும் எழுதுகின்ற வழக்கம் வந்தது. எனவே ஒரு மனிதன் வளர வளர ஒரு ஆத்மா வளர வளர தனக்குள் அதிக ஆற்றல் இருப்பதாக தற்பெருமை பேசாமல் அப்படியாக நயந்து நயந்து பணிந்து பணிந்து எந்தளவிற்கு பணிய முடியுமோ அப்படி பணிவதே சிறப்பாகும். எனவே ஆஞ்சனேயர் யார்? முக்கண்ணன் யார்? முக்கண்ணன் வேறு ஆஞ்சனேயர் வேறா? அதிருக்க நிலையிலே அதுபோல் பேதங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்று பட வேண்டும் என்ற கருத்திலே முக்கண்ணனாகிய நான் ஆஞ்சனேயராக இருந்தாலும் கூட மஹாவிஷ்ணுவின் அவதாரத்திற்கு முன்னால் பணிந்து தாழ்ந்து இருக்கிறேன் என்பதுதான் பொருள். எனவே உயர ஒரு மனிதன் பணிய வேண்டும் என்பதின் உட்பொருளே இது.

திருவிளையாடல் புராணம் முன்னுரை

சிவபெருமான் தன்மீது பக்தி கொண்ட அடியவர்கள் மற்றும் சிற்றுயிர்கள் மீது திருவிளையாடல்கள் நிகழ்த்தி தனது அன்பையும் கருணையும் அவர்களுக்கு அருளும் வரலாறே திருவிளையாடல் புராணம் ஆகும்.

திருவிளையாடல் புராண‌மானது தமிழ் கடவுளான முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப்பட்டு பின் அகத்தியரின் மூலம் மற்ற முனிவர்கள் அறிந்து கொண்டனர். நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி கூறினார். அதை சனத்குமாரர் வியாசருக்கு கூறினார். அதனை வியாசர் கந்த புராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியம் நூலில் வியாசர் இயற்றினார். பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை தமிழில் பாடியுள்ளார். திருவிளையாடல் புராணமானது திருஆலவாய் மான்மியம் மதுரைப் புராணம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் வடமொழி நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மூன்று புராண நூல்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றப்படுகின்றன. சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் இறைவனாரின் வலது கண்ணாகவும் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும் போற்றி சிறப்பிக்கப் படுகின்றன.

மொத்தம் நான்கு திருவிளையாடல் புராணங்கள் உள்ளது.

  1. திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் இதனை பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றினார்.
  2. கடம்பவன புராணம் இதனை தொண்டை நாட்டு இலம்பூர் வீத நாத பண்டிதர் இயற்றினார்.
  3. சுந்தரபாண்டியம் இதனை தொண்டை நாட்டு வாயர்பதி அனதரியப்பன் இயற்றினார்.
  4. திருவிளையாடல் புராணம் இதனை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையால் புராணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவருடைய தந்தையார் மீனாட்சி சுந்தரதேசிகர் ஆவார். பரஞ்சோதி முனிவர் தமிழ் மொழி வட மொழி திருமுறைகள் சித்தாந்த சாஸ்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுணர்ந்தவர். தம் தந்தையிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டு பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மன் அவருடைய கனவில் தோன்றி இறைவனின் திருவிளையாடல்களை தமிழில் பாட கட்டளையிட்டார். மீனாட்சி அம்மனின் ஆணைக்கு இணங்க ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் தமிழுக்கே உரிய தான செய்யுள் நடையில் சத்தியாய் எனத்தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் 3363 செய்யுள்கள் உள்ளன. இந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது

  1. காப்பு
  2. வாழ்த்து
  3. நூற்பயன்
  4. கடவுள் வாழ்த்து
  5. பாயிரம்
  6. அவையடக்கம்
  7. திருநாட்டுச்சிறப்பு
  8. திருநகரச்சிறப்பு
  9. திருக்கையிலாயச்சிறப்பு
  10. புராணவரலாறு
  11. தலச் சிறப்பு
  12. தீர்த்தச் சிறப்பு
  13. மூர்த்திச் சிறப்பு
  14. பதிகம் ஆகிய இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன. 344 வது செய்யுள் முதல் சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிறது.

திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும் கூடற்காண்டத்தில் 30 படலங்களும் திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.

திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்

  1. இந்திரன் பழி தீர்த்த படலம்
  2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
  3. திருநகரங்கண்ட படலம்
  4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்
  5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்
  6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
  8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
  9. ஏழுகடல் அழைத்த படலம்
  10. மலையத்துவசன் அழைத்த படலம்
  11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
  12. உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்
  13. கடல் சுவற வேல் விட்ட படலம்
  14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
  15. மேருவை செண்டால் அடித்த படலம்
  16. வேதத்திற்கு பொருள் அருளிச்செய்த படலம்
  17. மாணிக்கம் விற்ற படலம்
  18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
  19. நான்மாடக்கூடல் ஆன படலம்
  20. எல்லாம்வல்ல சித்தரான படலம்
  21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்
  22. யானை எய்த படலம்
  23. விருத்த குமார பாலாரன படலம்
  24. கால் மாறி ஆடிய படலம்
  25. பழி அஞ்சின படலம்
  26. மாபாதகம் தீர்த்த படலம்
  27. அங்கம் வெட்டின படலம்
  28. நாகம் எய்த படலம்
  29. மாயப் பசுவை வைத்த படலம்
  30. மெய் காட்டிட்ட படலம்
  31. உலவாக்கிழி அருளிய படலம்
  32. வளையல் விற்ற படலம்
  33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்
  34. விடை இலச்சினை விட்ட படலம்
  35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
  36. இரசவாதம் செய்த படலம்
  37. சோழனை மடுவில் வீட்டிய படலம்
  38. உலவாக் கோட்டை அருளிய படலம்
  39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
  40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
  41. விறகு விற்ற படலம்
  42. திருமுகம் கொடுத்த படலம்
  43. பலகை இட்ட படலம்
  44. இசை வாது வென்ற படலம்
  45. பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்
  46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்
  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
  48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
  49. திருவால வாயான் படலம்
  50. சுந்தரப் பேரன் செய்த படலம்
  51. சங்கப்பலகை கொடுத்த படலம்
  52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
  53. கீரனைக் கரையேற்றிய படலம்
  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
  55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்
  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
  57. வலை வீசின படலம்
  58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
  59. நரி பரியாக்கிய படலம்
  60. பரி நரியாக்கிய படலம்
  61. மண் சுமந்த படலம்
  62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
  63. சமணரைக் கழுவேற்றிய படலம்
  64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 417

ஔவையார் சொன்ன அற்புதம் நின்ற கற்பகக் களிறே இதற்கு விளக்கம்:

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறும் முன் ஒவ்வொரு வாசகம் வாக்கியம் இதுபோல் பக்தி பாடல்கள் பாசுரங்கள் இவற்றின் பொருள் என்பதும் அர்த்தம் என்பதும் வெளிப்படையாக தெரிவது ஒன்று உள்ளொன்று இருப்பது ஒன்றாகும். மனிதர்கள் அதற்கு அர்த்தம் கற்பிப்பது என்பது வேறு. மகான்கள் அதை வேறு வகையில் புரிந்துகொள்ள என்றுமே அர்த்தம் கற்பிப்பார்கள். இதுபோல் முழுக்க விநாயகப் பெருமானின் தன்மையையும் பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவில் இருக்கின்ற பொழுது அந்த ஓம்கார தத்துவத்தை அந்த வடிவம் உணர்த்தி அந்த வடிவத்தையே தொடர்ந்து தியானம் செய்து தியானம் செய்து அந்த வடிவத்தின் தன்மையாய் தானும் மாறுகின்ற அந்த செயல்தான் அற்புதமாகும்.

அந்த அற்புதமாய் நின்ற கற்பகக் களிறே என்று அதுபோல் விநாயகப் பெருமானின் அற்புதமான அந்த ஆற்றலை பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவத்தில் செய்கின்ற லீலா வினோதங்களை விநாயகப் பெருமானின் அந்த வடிவத்தால் மனிதனுக்குள் ஏற்படக்கூடிய ஆன்மீக மெய்ஞான மாற்றங்களை அதோடு மட்டுமல்லாமல் முழுமையான நல்விதமான பற்றற்று மிகவும் லோகாய ஆசைகளில் சிக்கி உழல்கின்ற மனிதனுக்கு அதையெல்லாம் தாண்டி அதுபோல் ஒரு ஞான நிலை சட்டென்று கிட்டுவதற்கு அதுபோல் வழிமுறையை கற்பிக்கின்ற அருளுகின்ற விநாயகப் பெருமானையே அற்புதம் என்றும் களிறே என்றும் பிராட்டி (அவ்வை) போற்றுகிறாள். அதோடு மட்டுமல்ல எல்லோரும் அவசரமாய் சுந்தரரின் முக்திமோட்ச நிலையை தரிசிக்கும் வேளையிலே இதுபோல் பிராட்டியும் நல்விதமாய் ( திருக்) கோவிலூர் தன்னிலே அவசரகதியாய் பூஜை செய்யும் பொழுது மூத்தோனும் தடுத்தாட் கொண்டு சுந்தரனுக்கு முன் உன்னை அழைத்து யாம் செல்வோம் என்று கூறிய அந்த வாசகத்தின் பொருளால் சிலிர்த்துப் போன பிராட்டியின் வாசகமப்பா இது. இதைத்தாண்டி எந்தவிதமான பொருள் கூறினாலும் அது மனிதனின் விருப்பமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 416

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் எமை நாடும் சேய்கள் ஏன் மனித குலம் முழுவதும் எல்லா உயிரினங்களும் நலமாய் வாழ பாவ எண்ணங்கள் இல்லாது வாழ பாவத்தின் பிடியிலிருந்து விலகி வாழ இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் இதுபோல் நல்விதமாய் ஹஸ்தம் (அஸ்த நட்சத்திரம்) மீன் ஓடும் காலம் இதுபோல் இறைவனின் அருள் ஆணையால் யாம் எம் சேய்களுக்கு சில வாக்குகளை கூற இருக்கின்றோம் நலமாய். நலமாய் வாழத்தான் உயிர்கள் எண்ணுகின்றன. நலமாய் வாழத்தான் மாந்தனும் எண்ணுகிறான். நலமாய் வாழ வேண்டும் என எண்ணுகின்ற மாந்தன் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று நாங்களும் நாள்நாளும் கூறிக் கொண்டே இருக்கிறோம். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்தாலும் நலமில்லாமல் வருகிறதே? என மனிதன் விரக்தி கொண்டே வாழ்கிறான். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ என்றென்றும் யாங்கள் அருளாணையிட்டாலும் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்து வாழ மாந்தர்களுக்கு பல்வேறு தயக்கங்கள் இருக்கின்றன. அத் தயக்கம் யாவற்றையும் விட்டுவிட்டு என்ன விளைவுகள் நடந்தாலும் நலம் எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ இதுபோல் மீண்டும் அதுபோல் நலத்தை நினைவூட்டி நலமாய் அனைவரும் வாழ இறைவனருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இயம்புகிறோம் இதுபோல் மனம் தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமாகும். இயம்புகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமானது இதுபோல் விதவிதமாய் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டம் ஒடுங்கினால் தொடரும் எண்ணங்கள் அற்ற நிலை வரும். எண்ணங்களற்ற நிலை ஒரு மனிதனுக்கு எப்பொழுது வருகிறதோ அன்றுதான் அவன் பின்னங்கள் இல்லாது வாழக்கூடிய வழியை அறிவான். எனவே எவ்வித எண்ணங்களும் இல்லாத நிலையை நோக்கி மனிதன் செல்வது என்பது எடுத்த எடுப்பிலேயே கடினம் என்றுதான் பக்திவழி கூறிக் கொண்டே இருக்கிறோம். பக்தியும் தர்மமும் சத்தியமும் ஒருநாள் கட்டாயம் மனிதன் எண்ணுகின்ற நிரந்தர நிம்மதியை, நிரந்தர சந்தோஷத்தை தரும். ஆனால் அதுவரை மனிதனின் மனம் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கிறது இந்த உலகினால் ஆசாபாசங்களால் பந்தபாசங்களால் பற்றால். ஆசையால் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே இவற்றையெல்லாம் விடு என்று கூறுவதைவிட மாந்தர்களின் போக்கிலேயே ஆன்மீக வழிமுறைகளை போதித்து இதுபோல் பல்வேறு விதமான சடங்குகளையும் பூஜை முறைகளையும் கூறி அந்த வழியிலிருந்து மெல்ல மெல்ல அவன் மேலேறி வரவேண்டும் என்றுதான் யாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும்கூட எத்தனைதான் நுணுக்கமாய் யாங்கள் வெளிப்படையாய் தெளிவாய் உரைத்தாலும் யாங்கள் எந்த நோக்கிலே உரைத்தாலும் அந்த நோக்கிலே புரிந்து கொள்ளாமல் போவதுதான் மனிதர்களின் தன்மையாகும்.

யாங்கள் எதை எதற்காக எப்படி கூறுகிறோம்? என்பதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனம் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் அவன் விரைவில் இறையருளை பரிபூரணமாக பெற்றுவிடுவான். இதுபோல் மனதிலே ஒரு மனிதனுக்கு கள்ளமும் சூதும் சூழ்ச்சியும் இல்லாத நிலையிலே அவன் இறையருளைப் பெறுவது எளிதாகும். சுயநலமும் சூழ்ச்சியும் சந்தேகமும் ஆளுமை சிந்தனையும் அகங்காரமும் யாரிடம் இருந்தாலும் இறையருளைப் பெறுவது கடினமாகும். எனவே எமை நாடும் சேய்கள் நாள்நாளும் எமது வாக்கின் போக்கை சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு கூறுகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த இடத்தில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? என்ன வழிமுறைக்காக கூறுகிறோம்? அதனை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? என்பதை நன்றாக சுய ஆய்வு செய்து புரிந்து புரிந்து புரிந்து எமது வாக்கை அசைபோட்டு அசைபோட்டு அந்த வழியில் மேலேற இறைவன் அருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து இறை பக்தியும் பரிபூரண சரணா பக்தியும் இந்த சரணா பக்தி என்பது சரணாகதியிலிருந்து வருவதாகும். சரணாகதி பக்தி இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு எந்தவிதமான நிம்மதியும் சட்டென்று வந்துவிடாது. எனவேதான் எந்தவிதமான ஐயமுமின்றி சரணாகதி பக்தியை ஒருவன் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரணாகதி பக்தி வளரவேண்டும் என்றால் ஒரு மனிதனிடம் கூடுமானவரை குற்றங்களும் குறைகளும் இல்லாமல் இருத்தல் அவசியம். குற்றங்கள் இருந்தாலும் அவற்றை உள்ளுணர்ந்து மெல்ல மெல்ல திருத்திக்கொள்ள வேண்டும். தவறு செய்வதைவிட பலர் முன் அந்தத் தவறை எவனொருவன் ஒத்துக்கொள்கிறானோ அவன்தான் எமது வழியில் வர தகுதி பெற்றவனாவான். எனவே நல்விதமாய் சிந்தனையை வளர்த்து சிந்தனையை கூர்மையாக்கி எமது வழிமுறையை புரிந்துகொண்டு வர பரிபூரண நல்லாசியை இத்தருணம் கூறுகிறோம்.

திருநீற்றின் மகிமை

ஒரு ஏழை அன்றாட உணவிற்கே ஒன்றுமில்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் பொய் பேச மாட்டான். சோம்பேறியும் அல்ல. முன் ஜென்ம பிரதிபலன் அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. ஒருநாள் தன் வாழ்வினை நொந்து நடந்து கொண்டிருந்தான். அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா எனக்கு சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள் அதுவும் மேனி முழுதும்? என்றான்.

சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு அதன் அடையாளமே இது. நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அறியவும். இன்னும் உயிருள்ளவரை இதுவே மகாலெட்சுமி அம்சம். இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நான் மிகவும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்யவேன் என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான். சிவனடியாரும் சரியப்பா நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான் நம் குல வழக்கப்படி பூச முடியாது. அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டும் என முடிவு செய்து அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில் உறங்கினான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறு பூச்சை காண காத்திருந்தான். குயவர் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார். இதனை அறிந்த அவன் நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? என்று எண்ணி குயவன் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.

குயவர் அதிகாலை மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராத விதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் பார்த்தான். அப்போது ஏழை குயவனின் நெற்றியிலிருந்த திருநீற்றை தூரத்திலிருந்து பார்த்ததும் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கத்தினான். உடனே குயவன் உண்மையாகவே பார்த்து விட்டாயா என்று கேட்டான். ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன் எனக் கூறினான். உடனே குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைபிடித்து தூக்கு ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக்கூறினான். அப்போது தான் புதையல் விஷயம் ஏழைக்கு புரிந்தது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே பாதி தங்கம் கிடைத்ததே இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ என்று தன் குல வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 415

நாங்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது லிங்க ஸ்வரூபத்தை வணங்குவதா? அல்லது சுடரை ஆராதிப்பதா? எதில் ஒன்றுபடுவது?

இறைவனின் கருணையைக் கொண்டு யாம் கூறுவது என்னவென்றால் இறையை உணர்வதற்கு உண்டான கரணங்களே புறத்தோற்றங்களே இத்தனையும். ஆலயமாக இருக்கட்டும் தெய்வ வடிவங்களாக இருக்கட்டும். அங்கே நடக்கின்ற புற சடங்குகளாக இருக்கட்டும் தீப ஆராதனையாக இருக்கட்டும் ஒலிக்கின்ற மணியாக இருக்கட்டும். மனிதரின் மனோநிலையும் மன பக்குவமும்தான் இறைவனை உணர்வதற்கு உண்டான ஒரு கருவியாகும். உதாரணமாக உரத்து மந்திரங்களை சொன்னால்தான் சிலருக்கு இறைவனை வழிபட்ட திருப்தி ஏற்படும். அப்படி ஒரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறு செய்துவிட்டுப் போகட்டும். சிலருக்கு மனதிற்குள் மந்திரத்தை உச்சரித்தால்தான் இறைவனை திருப்தியாக வழிபட்ட ஒரு நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மனிதன் அப்படியே வணங்கிவிட்டு செல்லட்டும். இன்னும் சிலருக்கோ இன்னவன் கூறியதுபோல கண் மூடி மௌனமாக இருந்தால்தான் இறைவனை வணங்கியது போல் தோன்றும்.

இறைவன் காட்சி தந்தது போலவும் தோன்றும். அப்படியொரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறே செய்துவிட்டுப் போகட்டும். இது மனிதன் வளர வளர மாறக் கூடிய நிலையாகும். எனவே கருவறையின் முன்னால் நிற்க வேண்டும் விழி மூடவேண்டும் அல்லது விழி திறக்க வேண்டும் அல்லது லிங்க ஸ்வரூபத்தையோ அம்பாளையோ பார்க்க வேண்டும் அல்லது ஆராதனையை காதால் கேட்க வேண்டும். மந்திரங்களை கேட்க வேண்டும் அல்லது தீப சுடரை உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி எதையும் நாங்கள் கூறவில்லை. மனதில் இறை பற்றிய சிந்தனை இருக்கிறதா? இறைவனை இந்த வடிவத்தில் பார்த்தால் என் மனம் ஏற்றுக் கொள்கிறது என்று ஒரு மனிதனுக்கு ஒரு வடிவம் பிடித்திருக்குமே? அந்த வடிவத்தை மனதில் கொண்டுவந்து வைத்து விட்டால் போதும். இறை சிந்தனை இருந்தால் போதும். விழி மூடி வாய் மந்திரங்களை உச்சரிக்க உடலெங்கும் திருநீறு பூசியிருக்க சிந்தனை எங்கோ இருந்தால் அதனால் பலனேதுமில்லை. அங்கே ஒரு கணமாவது வேறு சிந்தனை ஏதுமில்லாமல் அதுபோல் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை லிங்க வடிவமாகவோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எண்ணினால் மனம் சிக்கென்று பிடித்துக் கொள்கிறதோ அந்த வடிவத்தில் நினைக்க பிடித்துக் கொள்ள நன்மையாகும் அதே வழிபாடாகும்.

Spiritual evolution is achieved by yoga and striving. Devotees perform tapas, holding pots of fire, meditating for long hours, rolling around the temple in hot sand and carrying kavadi. Devas bless their efforts from the inner planes, while the baser worlds remain below and apart.