சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்று திருமால் தனது வாகனமான கருடன் மீதேறி சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலைச் சென்றார். அங்கே நந்தி தேவனின் அனுமதியுடன் சிவபெருமானை காண சென்றார். கருடன் வெளியே காத்திருந்தார். திருமால் சிவபெருமானை தரிசிக்க சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராததால் கருடன் உள்ளே செல்ல முயன்றது. அதற்கு நந்திதேவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட கருடன் நந்திதேவரை தாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட நந்திதேவர் விட்ட மூச்சுக் காற்று கருடனை தாக்கியது. அந்த காற்றறின் வேகமானது கருடனை மிக தூரத்திற்கு தூக்கிச் சென்று போட்டது. நந்தி தேவர் மீண்டும் மூச்சை இழுத்ததும் காற்றின் வேகத்தில் உறிஞ்சப்பட்ட கருடன் மீண்டும் தான் இருந்த இடத்திலேயே வந்து விழுந்தது. அக்காற்றில் அகப்பட்ட கருடன் நிலைத் தடுமாறியது. மீண்டும் மீண்டும் நந்தி தேவரின் மூச்சுக் காற்றில் அகப்பட்டு அங்கும் இங்குமாக விழுந்து கொண்டிருந்தது கருடன். இதிலிருந்து திருமால் தான் தன்னைக் காக்க வேண்டும் என்று எண்ணி அவரை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது. கருடனின் பிரார்த்தனை திருமாலின் காதில் விழ அவர் சிவபெருமானிடம் வேண்டினார். கருடனை மன்னித்த சிவபெருமான் நந்திதேவரை அழைத்து கருடனை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப கருடனை விடுவித்தார் நந்தி. கருடன் தன் கர்வம் அடங்கி பின் பழையபடி திருமாலுடன் பாற்கடல் சென்றது. நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்கு உதவியதால் சிவபெருமானுக்கு கருடன் அருகிருந்த மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வரலாற்றை பதினோராவது திருமுறை சிறப்பாக கூறுகிறது.
எல்லா கலசங்களில் உள்ளே இருப்பதும் ஒரே கங்கை நீர்தான். அப்படித்தான் மனிதர்கள் தேகம் என்னும் கலசத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பாகுபாடுகளை பார்த்து உன்னை எனக்கு பிடிக்கும். உன்னை எனக்கு பிடிக்காது. நீ நல்லவன். நீ நல்லவன் அல்ல. நீ எனக்கு நல்லதை செய்கிறாய். அதனால் நீ எனக்கு பிரியமானவன். நீ எப்போதும் என்னை தூற்றிக் கொண்டிருக்கிறாய். அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் நமக்குள் அபிப்பிராய பேதங்களை வளர்த்துக் கொண்டு அதை பகையாகவே மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால் மகான்கள் எப்படி பார்ப்பார்கள்? உள்ளே இருக்கும் நீரான ஆத்மாவைதான் பார்ப்பார்கள். எல்லாம் ஒரே நதியில் இருந்து எடுக்கப்பட்ட நீர் என்பது போல எல்லாம் ஒரே பரம்பொருளின் அந்த அம்சத்தில் இருந்து தான் பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து மாயையில் ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து பிறவி தோறும் அறியாமையில் வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து பாவ சேற்றிலே சிக்கி தன்னை அறியாமல் உழன்று கொண்டே இருக்கும் தேகம் எனும் கலசத்திற்குள் அடைபட்ட ஆத்மா எனும் கங்கை நீர். இவற்றையெல்லாம் விடுவித்து புனிதமான கங்கையோடு சேர்ந்து விட்டால் மீண்டும் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல் தெரியும். இப்படி சேர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு எத்தனையோ பிறவிகள் காலங்கள் ஆகும். எனவே இதனை உணர்ந்து எம்மை நாடி வருகின்ற சேய்கள் தமக்குள் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல் தமக்குள் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் பாவங்களை குறைத்துக் கொள்ள வழிமுறைகளை மட்டும் பின்பற்றி பிறருடன் இதமாக வாக்கை உரைத்து எப்பொழுதும் புண்ணிய காரியங்களை செய்து கொண்டே இருந்தால் இறைவனருள் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் கட்டாயம் கிட்டுமப்பா.
இறையே பெரியது அன்புக்கு கட்டுப்படும் பொழுது இறையே சிறியது. ஒருவன் தனக்குத்தானே வீசிக் கொள்ளும் வலைதான் கவலை. சினம் எப்படி ஒருவனை அழித்து விடுமோ அதுபோல் கவலையும் ஒருவனை அழித்து விடும்.
பக்குவமற்ற மனிதர்கள் பண்பாடு இல்லாமல் பேசுவதும் தாறுமாறான விமர்சனங்களை செய்வதும் சினம் வருவது போல நடந்து கொள்வதும் இயல்பு. அவன் அப்படி நடந்து கொள்வதே சினத்தை வரவழைக்கத்தான். ஆனால் அவன் தோற்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதன் என்ன செய்ய வேண்டும் சினம் இல்லாமல் நாகரீகமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவன் வெற்றி பெற தானே ஒரு காரணமாகி விடக்கூடிய ஒரு சூழல் வந்துவிடும். எனவே பண்பாடு இல்லாத மனிதர்களோடு நெருங்கி பழகாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் இருக்க நேரிட்டால் அமைதியான முறையிலே கூடுமானவரை மௌனத்தை கடைப்பிடிப்பதும் அதுபோல் வாத பிரதிவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதுமே எம் வழிவரும் சேய்களுக்கு ஏற்றதாகும். இதை மனதில் தெள்ளத் தெளிவாக பதிய வைத்து தொடர்ந்து சினமில்லாமல் பதட்டம் இல்லாமல் கவலை இல்லாமல் வேதனை இல்லாமல் வெட்கமில்லாமல் நாங்கள் கூறுகின்ற அனைத்து நல்ல காரியங்களும் செய்ய எண்ணி செய்து கொண்டு வர வேண்டும். இதுபோல் நலமாய் ஒவ்வொரு ஆத்மாவும் தன்னைத்தானே உணர்ந்து ஆணவத்தை விட்டொழித்து தன்முனைப்பை அணுவளவும் வளர்த்துக் கொள்ளாமல் பவ்யமாக அவையடக்கமாக தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி இறைபக்தியில் ஆழ்ந்து பரிபூரண சரணாகதியிலே என்றென்றும் இருந்து இயன்ற அளவு தர்மத்தை தொடர்ந்து வாழ்ந்து வந்தாலே அவனவன் தலைவிதி கடுமையாக இருந்தாலும் அதை இனிமையாக இறைவன் மாற்றுவார். இதைத்தான் நாங்கள் பல விதமான வார்த்தைகளில் இயம்பிக் கொண்டிருக்கிறோம்.
தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்து இருந்தார்கள். தங்களின் வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைய வேண்டும். அதனைக் கடைவதற்கு கூட தங்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தார்கள். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும் வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திர மலையின் அடியை தாங்கினார். பாற்கடலை கடைய கடைய பல பொருட்கள் வந்தது. அப்பொருட்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டார்கள். நடுவில் ஆலகால விஷம் வந்தது. அந்த விஷமானது உலகத்தை அழித்து விடும் என்பதால் அனைவரும் பின்வாங்கி பயந்து ஓடினார்கள். அனைவரும் சிவனை பிரார்த்தனை செய்ய சிவபெருமான் உலகத்தை காக்க ஆலகால விஷத்தை அருந்தினார். இதனைக் கண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்து அவரது கழுத்திற்கு கீழே விஷம் இறங்காதவாறு கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் கழுத்தில் நின்ற விஷமானது சிவபெருமானின் கழுத்தை நீல நிறமாக்கியது. கண்டம் என்றால் கழுத்து என்று பொருள். உலகத்தை காக்க ஆலகால விஷத்தை அருந்தி நீலநிற கழுத்தை பெற்றதால் சிவபெருமான் நீலகண்டர் என்ற பெயரைப் பெற்றார். தொடர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பெற்றவர்கள் திருமாலின் மோகினி அவதாரத்தால் தேவர்கள் மட்டும் அருந்தி வலிமை பெற்று அசுரர்களை தோற்கடித்து தங்களுக்கு உண்டான பதவியை மீண்டும் பெற்றார்கள்.
சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை அருந்தி அனைவரையும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி (நீலகண்டர்) என்ற பெயர் ஏற்பட்டது. வாமன புராணம் பிரம்மாண்ட புராணம் பாகவதம் ஆகிய நூல்கள் சிவபெருமான் நஞ்சுண்ட வரலாற்றை சிறப்பாக கூறுகின்றன. சங்க இலக்கியங்களிலும் இந்த வரலாறு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வடிவினை பற்றி பெரியாழ்வார் திருமழிசையாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள். கம்பர் தனது காவியமான இராமாயணத்தில் நீலகண்ட திருமேனி என்று குறிப்பிட்டுள்ளார்.
நீலகண்டர் மூன்று கண்களுடன் சடாமகுடம் தரித்து இருப்பார். கரங்களில் மானும் மழுவும் இருக்கும். ஒரு கரத்தில் ஆலகால விஷமுள்ள கிண்ணமும் மறுகரத்தில் அருளால் குறியீடும் இருக்கும். உடலெங்கும் அழகான அணிகலன்களை அணிந்திருப்பார். நீலகண்டரின் இடப்புறத்தில் உமையம்மையார் அவரின் கழுத்தில் நஞ்சு இறங்காதவாறு பிடித்திருப்பார். நீலகண்டரின் இன்னொரு தோற்றம் பற்றியும் சில நூல்கள் கூறுகின்றன. இத்திருவடிவத்தில் இடப வாகனத்தில் சிவபெருமான் மிக்க கோபம் கொண்டவராகவும் கோரைப்பற்கள் உடையவராகும் அழகிய ஆபரணங்களையும் அணிந்தவராகவும் காணப்படுகிறார். வலது கையில் சூலமும் ஆலகால விஷம் இருக்கும். இடது புறத்தில் உள்ள கையில் கபாலம் இருக்கும். அவரின் அருகில் பார்வதிதேவி விற்றிருப்பாள்.
சென்னை ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப் பள்ளி கோயிலில் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்ட கோலத்தில் படுத்திருக்கிறார். அவரை சுற்றி தேவர்கள் அனைவரும் நிற்பதை காணலாம். திருநீலகண்டரது சிற்பங்களையும் ஓவியங்களையும் தமிழ்நாட்டில் உள்ள பல சிவாலயங்களில் காணலாம். சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் நீலகண்டரின் பஞ்சலோகத் திருமேனி உள்ளது. கழுகுமலை வெட்டியான் கோவில் விமானத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தூணிலும் திருவுருவம் உள்ளது.
திருக்கைலையில் சிவபெருமான் சிங்காசனத்தில் எழுந்தருளியுள்ளார். அப்போது பார்வதிதேவி அருகில் வந்து இறைவா தாங்கள் உருவமற்றவர் என்றும் பல உருவங்களை கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. எங்கும் நிறைந்துள்ள உங்களுடைய உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் யாம் பிரம்மமாக இருக்கும் போது எனக்கு உருவம் இல்லை. உலகில் உள்ள உயிர்களுக்கு அருள் புரிவதற்காக நான் பலவகையான உருவங்களை எடுக்கிறேன். இவை அனைத்தும் அருள் வடிவங்கள் ஆகும். இந்த உலகத்தில் உருவம் அருவம் அருஉருவத்துடன் இருப்போம். நானே உன்னிலும் அனைவரிடத்திலும் இயக்க சக்தியாக இருக்கிறோம். நானில்லையெனில் அனைவரும் இயக்க சக்தியில்லாமல் சதைப்பிண்டம் என்றார். இதனைக் கேட்ட பார்வதிதேவி இயக்க சக்தியாக இருப்பது நான்தானே என்று சிரித்துக் கொண்டே கூறினார். இதனைக் கேட்ட சிவபெருமான் எனது சக்தி என்று பெருமையாக சொல்கிறாயா? என்று பிரம்மாவிடம் இருந்தும் திருமாலிடம் இருந்தும் தமது சக்தியை நிறுத்தினார். இதனால் பிரம்மாவாலும் திருமாலாலும் தனது தொழிலை செய்ய முடியவில்லை. உலகம் செயலிழந்தது. உலகம் செயலிழந்ததை கண்ட பார்வதிதேவி நான் விளையாட்டாக சொன்னேன். நீங்கள் அதை உண்மையாக எடுத்துக் கொண்டீர்கள் என்னை மன்னியுங்கள். உலகம் முன்பு போல இயங்கச் செய்யுங்கள் என்றார். அதற்கு சிவபெருமான் நானே இயக்க சக்தி என்ற எண்ணம் உனக்குள் தோன்றியதால் அதற்கு தண்டனையாக உலகத்தில் பிறப்பெடுத்து அங்கே தவம் செய்வாயாக என்றார்.
சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப பார்வதி தேவியார் பூமியில் குழந்தையாக யமுனை நதிக்கரையோரத்தில் அவதரித்தார். தட்சன் அவருளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு தன் மகளாகக் கருதி வளர்த்தார். தாட்சாயிணிக்கு வயது ஐந்தானதும் சிவனைக் குறித்து தவமியற்றினார். இவ்வாறு பணிரெண்டாண்டு காலம் கடுமையான தவம் மேற்கொண்டார். அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேதியராக வேடமிட்டு தவமிருந்த பார்வதி தேவியை மணக்க விரும்புவதாக சொன்னார். பார்வதிதேவியும் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். பின்னர் சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி பார்வதி தேவியின் மாயையை விலக்கினார். மாயை விலகிய பார்வதிதேவி சிவபெருமானின் உண்மையை அறிந்து கொண்டாள். உடனே சிவபெருமான் தன்னை மறைத்துக் கொண்டார். பார்வதிதேவி எப்போதும் போல் தவச்சாலையில் தவம் செய்து காலம் கழித்தார். அவருடைய தவமானது முற்றுப் பெற்றதும் சிவபெருமான் இடபாருடராக வந்து தாட்சாயிணியை திருக்கயிலை அழைத்துச் சென்றார். இவ்வாறு திருமணம் செய்த பார்வதிதேவியை விட்டு மறைந்து பின் மீண்டும் வந்து கயிலைக்கு அழைத்தச் சென்ற மூர்த்தயே கௌரி லீலா சமன்விதமூர்த்தி ஆவார்.
ஒரே பிறவியில் ஞானம் அடைந்தவர்கள் என்று யாருமே கிடையாது. இறை மனது வைத்தால் வேண்டுமானால் அப்படி அமையலாம். பல பிறவிகள் எடுத்து அனுபவங்களை நுகர்ந்து பல்வேறு கர்மாக்களை கழித்த பிறகுதான் ஞானம் என்பது சித்திக்கும். உண்மையான ஞானத்தை அடைந்து விட்டால் ஒரு மனிதன் யாருடனும் பேச மாட்டான். அவன் பேசுவதற்கும் கேட்பதற்கும் எதுவும் இல்லை. பார்ப்பதற்கு உணர்வதற்கும் எதுவும் இல்லை. அவனுக்கு தேவையுமில்லை. அவன் தேவையும் யாருக்கும் இல்லை. இதுதான் ஞானத்தின் உச்ச நிலையாகும். அதை அடைவதற்குத்தான் அனைத்து வழிபாடுகளும் சடங்குகளும் புறச் செயல்களும் கூறப்பட்டுள்ளன. விட்டு விடுதல் சகித்துக் கொள்ளுதல் எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுதல் எத்தனை துன்பத்திலும் இறைவனை இகழாமல் இருத்தல் ஞானத்தை இப்படித்தான் விளக்கம் தரலாமே ஒழிய இதுதான் என்று தனியாக உனக்கு காட்ட முடியாது. ஏனென்றால் நீ ஞானமாகி விட்டால் அப்போது நீயே இருக்க மாட்டாய்.
கேள்வி: கிரகங்கள் நன்மை செய்ய என்ன செய்ய வேண்டும்?
இறைவனை வணங்கினாலே ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். தன்னை விட ஒரு பெரிய உயரிய சக்தியின் அருள் நமக்கு கிடைக்கிறது என்ற தைரியம் பிறக்கும். இறைக்கு பிடிக்காததை செய்யக் கூடாது என்ற எண்ணம் வரும். அவன் நல்லவனாக மாறும்பொழுது எல்லா கிரகங்களும் நன்மையைத்தான் செய்யும்.
குபன் என்றும் மன்னன் முன்னொரு சமயம் உலகம் முழுவதையும் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்காக திருமால் ததீசி எனும் முனிவரை எதிர்த்து யுத்தம் செய்தார். யுத்தம் நடைபெறும் போது திருமாலால் தாக்குப் பிடிக்க முடியாத நிலை வந்தது. திருமால் தனது சக்ராயுதத்தை அனுப்பினார். சக்ராயுதம் முனிவரின் வஜ்ஜிரக் கையில் பட்டு திரும்ப திருமாலிடமே சரணடைந்தது. உடன் திருமால் தன்னைப்போல் ஒரு உருவத்தை மாயையால் உருவாக்கினார். அதனைக் கண்ட முனிவர் தனது பாத கட்டை விரலை அசைத்தார். அந்த அசைவிலிருந்து பல திருமால்கள் உருவானார்கள். இதனைக் கண்ட திருமால் இம்முனிவர் தம்மைவிட வலிமை வாய்ந்தவர் என்று அவரிடம் சரணடைந்து விடைபெற்றார்.
திருமால் வைத்திருந்த சக்கரத்தின் வரலாறு. ஒரு சமயம் பிரளயத்தால் உலகம் முழுதும் அழிந்தது. இறைவன் மீண்டும் ஒரு புதிய உலகைப் படைக்க பிரம்மாவையும் திருமாலையும் உண்டாக்கினார். அவர்கள் இருவரிடமும் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்படைத்தார். காத்தல் தொழிலுல் செய்வதற்காக திருமால் இறைவனிடம் ஆயுதம் ஒன்று வேண்டினார். சிவபெருமான் தனது முக்கண்களால் சூரிய சந்திர ஒளியைக் கொண்டு கதை ஒன்றும் சக்கரம் ஒன்றும் கொடுத்தார். உடன் பார்வதி தன்பங்கிற்கு தனது முகத்தினால் ஒரு சங்கும் கண்களால் பத்மமும் உருவாக்கி அவை தாங்குவதற்கு இருகரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார். காத்தல் தொழில் செய்ய இறைவன் கொடுத்த சக்கராயுதம் ததீசி முனிவரிடம் தோற்றதால் அதனை விட வலிமையான ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற வேண்டும் என்று திருமால் எண்ணினார். யாராலும் அழிக்க முடியாத சலந்தரனை அழிக்க சிவபெருமான் தனது கால் கட்டை விரலால் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அதனை ஆயுதம் ஆக்கி சலந்தரனை அழித்தார். அது போல் ஒரு ஆயுதத்தை பெற வேண்டும் என்று முடிவு செய்து கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை பூஜித்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்றை சிவபெருமான் மறைத்தார். பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு மலர் இல்லாததைக் கண்ட திருமால் தனது கண்களில் ஒன்றைப் பிடுங்கி எடுத்து இறைவனுக்கு சமர்ப்பித்து அன்றைய தனது பூஜையை முடித்தார். கமலம் என்றால் தாமரை. தனது கண்ணை தாமரை மலராக எண்ணி இறைவனுக்கு அர்ச்சித்ததால் சிவபெருமான் அவரை கமலக்கண்ணன் என்றழைத்து அவரின் விருப்பப்படி சுதர்சன சக்கர ஆயுதத்தை கொடுத்தார். யாரையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை கொண்ட சுதர்சன சக்கரத்தை திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு சக்கர தான மூர்த்தி எனப் பெயர் ஏற்பட்டது.
அதர்வண வேத உபநிடாதமான சரபோப நிடதத்திலும் மகாபாரதத்திலும் காஞ்சி புராணத்திலும் சிவபெருமானிடம் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு உண்டு. சக்கரதான மூர்த்தியின் திருவடியில் சிவபெருமான் நான்கு கைகளுடன் சடாமகுடம் தரித்துக் காணப்படுகிறார். வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு சாந்தமாக அமர்ந்திருப்பார். இரு கரங்களிலும் மானும் டங்கமும் இருக்கும். முன் வலது கரத்தில் சக்கரம் இருக்கும். சிவபெருமானின் பக்கத்தில் உமையமை அமர்ந்திருக்கிறாள். வலப்பக்கத்தில் பிரம்மாவும் எதிராக திருமாலும் வழிபட்டுக் கொண்டு நிற்பார்கள். இவ்வடிவ அமைப்பு உத்தரகாமிய ஆகமத்தில் உள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இத்திருவுருவம் உள்ளது. திருவழிமிழலை திருக்கோயிலில் இவ்வடிவத்தின் செப்புத் திருவுருவம் உள்ளது.
பிரம்மாவை நோக்கி அசுரன் ஒருவன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் பலனால் அவனுக்கு காட்சி கொடுத்த பிரம்மாவிடம் பார்வதிதேவியின் உடலிருந்து தோன்றியப் பெண்ணைத் தவிர வேறொருவரால் எனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்கினான். வரத்தின் பயனால் தேவர்கள் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் தன்னை அழிக்க முடியாது என்று அனைவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். அசுரனின் கொடுமை அதிகரிக்க அவனது கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டார்கள். பிரம்மா தேவர்களுடன் சிவபெருமானிடம் சென்று அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். சிவபெருமான் பார்வதி தேவியை பார்த்து காளியே வருக என்றார். உடனே பார்வதி தேவியின் உடலில் இருந்து கருமையான நிறத்துடன் காளி தேவி வெளிப்பட்டாள். சிவபெருமானிடம் எம்மை அழைத்த காரணம் என்ன? என்று கேட்டு தனது கருமை நிறத்தை மாற்றி பொன்னிறமாக மாற்றிக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டாள். அதற்கு சிவபெருமான் காளியிடம் இமயமலையில் தவமியற்று. அனைத்திற்கும் காரணம் உனக்கே தெரியும் என்றார். காளிதேவியும் இமயமலையில் தவம் செய்தாள். தவத்தின் பலனால் தேவி தனது கருமை நிறம் நீங்கி பொன்நிறத்தைப் பெற்றாள். பொன்நிறத்துடன் இருந்த தேவியிடம் சிம்ம வாகனத்தை கொடுத்த பிரம்ம அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். பொன் நிறத்துடன் சிம்ம வாகனத்தில் அசுரனை அழித்த தேவியானவள் துர்கை தேவி என பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் தனது போர்க்கோலம் நீக்கி மீண்டும் சிவபெருமானிடம் சென்ற தேவி கௌரி எனப் பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் வந்த தேவியை சிவபெருமான் ஏற்றுக் கொண்ட திருவடிவமே கௌரிவரப்ரதமூர்த்தி ஆகும்.
பல்வேறு தருணங்களில் யாங்கள் மெளனமாக இருக்கிறோம் என்றால் அது போன்ற மௌனம் பல்வேறு தெய்வீக சூட்சுமத்தை உடையது. மனிதர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கக் கூடியது. நாங்கள் மௌனமாக இருக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். வாக்கை உறைக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். பல்வேறு தருணங்களில் உரைத்தாலும் எதிரே அமர்ந்திருக்கும் அதுபோல் மனிதன் பல்வேறு பிறவிகள் கடந்துதான் இறைவனை நோக்கி வரப்போகிறான் என்று தெரிந்த பிறகு இறைவன் கட்டளை இல்லாமல் நாங்கள் வாக்கை கூறுவதில்லை. அதனால்தான் இன்னும் பல்வேறு மனிதர்களுக்கு நாடியின் சூட்சுமம் புரிவதில்லை. இதை புரிந்து கொள்வதற்கும் புரிந்து அதன் வழியில் வருவதற்கும் கூட சில புண்ணியங்கள் தேவைப்படுகிறது.
முடிவு நிச்சயமாக உறுதியாக வெற்றி என்றால்தான் இறங்குவேன் என்பது மனிதனின் இயல்பு. முடிவு எதுவாக இருந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எண்ணி செயல்படுவது என் போன்ற மகள்கள் மகான்களின் இயல்பு.
Life’s highest grace is to see, to know, to hear and to commune with a living satguru. A devotee falls humbly at his guru’s feet, prayerful that training, protection and perhaps initiation may come. The satguru’s mind is on Śiva within, who blesses with a garland of coral jasmine flowers.