சக்தி பீடம் 4. விசாலாட்சி – காசி

சக்தி பீடத்தில் 4 ஆவது கோயில் காசி விசாலாட்சி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் கங்கைக் கரையில் உள்ள மீர்காட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் மணிகர்ணீகா சக்தி பீடமாகும். தேவியின் காதணி விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சதி தேவியின் காதணி முத்து (மணி) போல இருந்ததால் மணிகர்ணீகா என்று பெயர் ஏற்பட்டது. மற்றோரு நூல் விசாலாட்சியின் மூன்று கண்களில் ஒன்று இங்கு விழுந்ததால் இது சக்தி பீடம் என்று கூறுகிறது. கோயிலில் உள்ள அம்பாளின் பெயர் விசாலாட்சி ஆகும். விசாலாட்சி என்றால் ஆகன்ற பெரிய கண்களைக் கொண்டவள் என்று பொருள். இந்தக் கண்ணால் பிரபஞ்சம் முழுவதையும் உணர முடியும் என்பதால் விசாலாட்சி என்று அழைக்கப்படுகிறாள். தற்போது உள்ள விசாலாட்சியின் கருஞ்சிலை 1970ஆம் ஆண்டு கோயிலை புணரமைக்கும் போது நிர்மாணிக்கப்பட்டது. சிலைக்கு வலது பக்கத்தில் தேவியின் உண்மையான சித்திரம் இடம் பெற்றுள்ளது. தேவியின் பிரதான கல் சிலைக்கு பின்னால் மற்றொரு சிலை உள்ளது. பண்டைய காலத்தில் இருந்து வழிபடப்பட்ட சிலை இதுவாகும். இச்சிலை வெள்ளியால் செய்யப்பட்டது என்று ஒரு கருத்து உள்ளது. ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலுக்குச் சென்ற போது ​​பல படையெடுப்புகளின் சுமைகளைத் தாங்கிய கோயிலில் சக்திகளை நிரப்ப பிரார்த்தனை செய்து ஒரு ஸ்ரீ யந்திரத்தை நிறுவினார்.

கோயிலில் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள் அன்னை விசாலாட்சி. சாந்த வடிவத்தோடு எட்டு திக்குகளிலும் பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில் அன்னை விசாலாட்சி மணி கர்ணிகா பீடத்தில் அழகுற அருள் பாலிக்கிறாள். நவராத்திரியின் போது 9 நாட்களும் நவ துர்க்கா வடிவில் தோன்றி அருள்பாலிக்கிறாள். இந்த முக்தி தலத்தில் வந்து இயற்கையாக உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும். ஆன்மா பிரியும் தருணம் அவர்களை விசாலாட்சி தன் மடி மீது கிடத்திக் கொள்கிறார். அப்போது விஸ்வநாதர் அவர்களது காதில் ஸ்ரீ இராம நாமத்தை உபதேசிக்கிறார். ஆகவே அந்த ஆன்மாவானது பிறவியில்லாத நிலையை பெறுகிறது. கங்கை கரையோரத்தில் நீராடுவதற்கென்று 64 படித்துறைகள் தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை தீர்த்தக் குளம், ஞான வாவி சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் ஆகும். கங்கையில் நீராடினால் தேகமும் விஸ்வநாதரை தரிசித்தால் ஆன்மாவும் புனிதமடைகின்றன.

புனித தலங்களில் சிறப்பு மிக்கது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசி புராதனமான நகரான இது. முக்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அசி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. புராண பெயர் பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம் ஆகும். வட இந்தியாவில் அயோத்யா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகா ஆகிய ஏழு மோட்சபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும். 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான். கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும் திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும் துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி தலம் இருப்பதாக காசி ரகசியம் புராண நூல் கூறுகிறது. மகான்களான ஆதிசங்கரர் இராமனுஜர் குமரகுருபரர் முனிவர்கள் ஞானிகள் ரிஷிகள் தடம் பதித்த புனித பூமி. காசி என்றால் ஒளிநகரம் மற்றும் ஒளி மங்காத ஞானம் என்று பொருள். பிரளய காலத்தில் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கிய பிறகும் இந்த நகரம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சிவனை அழைக்காமல் தட்சன் யாகம் செய்த போது தாட்சாயிணி சிவனின் பேச்சை மீறி தந்தையை எதிர்த்தாள். அப்போது யாகத்தை நிறுத்த தீயில் மாய்ந்த தாட்சாயிணியைக் கண்டு சிவன் ஊழித்தாண்டம் ஆட திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி பார்வதி தேவியின் உடலை துண்டித்தார். அதில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு இடத்தில் சிதறி விழுந்தன. ஆவேசமடைந்த சிவன் பார்வதியின் உடல் பாகங்களைக் காசிக்கு கொண்டு வந்தார். அப்போது சிவன் பார்வதியின் காதில் தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். அப்போது தேவியின் காதில் இருந்த காதணிகளைக் காணாத சிவபெருமானின் கண்களில் திருமால் தென்பட்டார். தமது சக்கரத்தால் கிணறு தோண்டி அருகே அமர்ந்து சிவனை நோக்கி தரிசனம் செய்தார். அவரிடம் சென்று அம்பிகையின் காதணியைக் கேட்க அவர் அருகில் இருந்த கிணற்றைக் கை காண்பித்தார். சிவன் கிணறை எட்டிப்பார்க்க அச்சமயம் சிவனின் காதுகளில் இருந்த குண்டலமும் விழுந்தது. அப்போது கிணற்றில் பிரகாசமான பேரொளியுடன் வெளிப்பட்ட சிவலிங்கத்தில் சக்தி சிவன் இருவரது சக்தியும் ஐக்கியமாக இருந்தது. அந்த ஜோதிர் லிங்கத்தை எடுத்து திருமால் வழிபட்டதோடு தொடர்ந்து சிவனை நோக்கி தவமிருந்து இந்த ஜோதிர் லிங்கத்தை மக்கள் வழிபட வேண்டும் என்றும் சிவனது பிறையில் குடிகொண்டிருக்கும் கங்கை இந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து இங்கு நீராடும் மக்களின் பாவங்களைப் போக்க வேண்டும் என்றும் வேண்டினார். சிவபெருமானும் திருமாலின் விருப்பத்துக்கு இணங்க அந்த ஜோதிர் லிங்கத்தில் ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருக்கிறார்.

காசி நகரத்தில் வசிக்கும் மனிதர்கள் மட்டுமல்ல அங்கு வசிக்கும் அனைத்து ஜீவன்களும் புண்ணியம் செய்தவையே. இங்கு நாய்கள் குரைப்பதில்லை. பல்லிகள் சத்தம் எழுப்புவதில்லை. மாடுகள் யாரையும் முட்டுவதில்லை. மேலும் பூக்கள் மணப்பதில்லை. எரிக்கப்படும் பிணங்களின் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் நின்றார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அதைக் கண்டதும் என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்றும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

காசி நகரம் வேதகாலம் புராண காலத்துக்கு முந்தையது. சூரியனின் புதல்வரான சனிபகவான் சிவனை நினைத்து தவம் செய்து நவக்கிரகங்களில் ஒரு வராகவும் மற்றொரு புதல்வர் எமதர்மர் எம்பெருமானை நோக்கி தவம் செய்து எமலோகத்துக்கு அதிபதியாகவும் ஆயினர். பிரம்மதேவன் இத்தலத்தில் யாகம் செய்து பிரம்ம பதவியைப் பெற்றார். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலமாக கூறப்படுகிறது. பல ஞானிகளும் யோகிகளும் சப்த ரிஷிகளும் இங்கு தவம் புரிந்து பல பேறுகளை அடைந்திருப்பதால் சொல்லில் அடங்கா சிறப்புகளைப் பெற்றது. காசி சேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில் லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கழிக்க நகருக்கு வெளியே செல்வார். காஞ்சி மகாபெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணிய மாட்டார்.

சக்தி பீடமாக திகழும் அன்னை விசாலாட்சி கோயில் தென்னிந்திய பாணியில் அழகுற கட்டப்பட்டுள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கிபி 1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள் கிபி1908இல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தீபாவளியின் போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள சுவர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றாள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 647

கேள்வி: அனைத்து பிரச்சினைகளுக்கும் கர்மா தான் காரணமாகிறது. இது மாயையால் மனிதனைப் பற்றுகிறது. அவதாரங்களாகவே இருந்தாலும் அவர்களையும் மாயை பற்றுகிறது என்று முன்னர் கூறியிருந்தீர்கள். மாயை தான் உயிர்களை பற்றுகிறது. அப்படி செய்வது யார்? இறைவன் தானே? அதற்கு பொறுப்பு இறைவன் தானே? பிறகு ஏன் மக்களைத் தாக்க வேண்டும்?

இறைவன் அருளாலே நல்லதொரு வினாவை இன்னவன் எழுப்பியிருக்கிறான். எனவே இனிமேல் அனைத்து பாவங்களும் இறைவனுக்கு சேர்ந்துவிடும் என்பதால் சேய்கள் அனைவரும் இனி பாவங்களை துணிந்து செய்யலாம். இருந்தாலும் சிந்திக்க வேண்டிய வினாவைத்தான் இவன் எழுப்பி இருக்கிறான். நன்றாக கவனிக்க வேண்டும். மாயை மனிதர்களை பற்றுகிறது. ஏன்? ஒரு மனிதரிடம் நிலம் இருக்கிறது அதிலே முறையாக விவசாயம் செய்கிறான். பயிர் விளைகிறது சிலருக்கு பயிரை விட களை அதிகம் விளைகிறது. அந்த நிலம் இருப்பதால்தானே நான் விவசாயம் செய்தேன். விவசாயம் செய்தால் தானே களை வந்தது என்று அவன் அலுத்துக் கொள்ளலாமா?

நன்றாக கவனிக்க வேண்டும். மாயை சென்று எல்லோரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்ம வினை இருக்கிறது. உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது? என்ற அடுத்ததொரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான். அதாவது ஏகன் ஏகனாகவே இருந்து விட்டால் பிறகு பிரச்சனையே இல்லையே. ஏகன் எதற்கு அநேகமாக மாறினான்? என்று இவன் கேட்கிறான். ஏகன் அநேகமாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனை பார்த்து யாராவது ஒருவர் நீ இப்படியே இரு பல் கூறுகளாக பிரியாதே என்று கூறியிருக்கலாம். ஆனால் அங்கு தான் அப்படி கூறுவதற்கு யாரும் இல்லையே. அப்படி யாராவது கூற வேண்டும் என்பதற்காகவாவது ஏகன் அநேகன் ஆகி இருக்கலாம் அல்லவா? எனவே என்னை எதற்காக படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன் என்று கூறுவதை விட நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மன நிலையை அமைத்துக் கொடு என்று பிரார்த்தனை செய்வது சிறப்பப்பா.

திரிபுர பைரவி

தசமஹாவித்யா என்ற 10 பெரும் தேவியரில் திரிபு ரபைரவி தேவியும் ஒரு சக்தி. ஆதி சக்தியான காளியே சம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். பைரவ சக்திக்கெல்லாம் மூலமானவள் திரிபுர பைரவி. சிவப்பரம்பொருள் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர்.

அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமானார் ஆட்கொண்ட பிறகு மலைகளில் உறைந்து சிவார்ச்சனை விதிகளையும் தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். அவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட எல்லாம் வல்ல பராசக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி அனைத்து பைரவ சக்திகளும் உண்டாயினர்ர்ந்த சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளை சிருஷ்டி செய்வதாலும் முன்னரே இருப்பதாலும் மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குவதாலும் உலகம் அழிந்த பின்னும் முன்போலவே உலகை பூர்த்தி செய்வதாலும் சரஸ்வதி லட்சுமி காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குவதாலும் ஸ்தூலசூட்சும காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை திரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர். இடம்: கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.

சேனாபதி முருகர்

பிணிமுகம் என்ற யானையின் மீதேறி இருக்கும் குமரனை அர்ஜுன ரதத்தில் காண முடியும். இது தேவ சேனாபதி வடிவமாகும். தாரகன் சூரபத்மன் ஆகியோருடன் சண்டை செய்யத் தயாராக இருக்கும் நிலையாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 646

கேள்வி: கருட புராணத்தில் தாய் தந்தைக்கு செய்வது பல ஆயிரம் மடங்காகவும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு செய்வது பல லட்சம் மடங்காகவும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையா? கருட புராணத்தை இறப்பு ஏற்பட்ட வீட்டில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லப்படுவது பற்றியும் அதில் கூறப்படும் சொர்க்கம் நரகம் தண்டனைகள் பற்றியும் விளக்குங்கள்:

இறைவன் அருளால் கருட புராணத்தை அனுதினமும் ஓதலாம். தவறேதும் இல்லை. இது அனுதினமும் ஓதப்பட்ட விஷயம் அல்ல என்பது மனிதனின் அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. மனிதன் உடலை விட்ட பிறகு அவனுக்கு கருட புராணம் ஓதி என்ன பயன்? உடலோடு இருக்கும் போது கருட புராணம் ஓதினால் தான் இப்படி எல்லாம் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கும். இப்படி எல்லாம் வாழக்கூடாது என்ற கருத்தை புரிந்து கொள்வான். ஆனால் மனிதனுக்கு கிட்டிய கருட புராணம் குறைந்த அளவை. அதுவும் இடைச் செருகல்களோடு கிடைக்கப் பட்டிருக்கிறது. அதே போல் நரகம் சொர்க்கம் என்பது உண்மை. அது ஒரு புறம் இருக்கட்டும். இப்பூலகமே ஒரு நல்ல எண்ணம் கொண்டவனுக்கு புண்ணிய ஆத்மாவிற்கு சொர்க்கமாகவும் அப்படியில்லாதவனுக்கு நரகமாகவும் தோன்றுவது உண்மையே.

அடுத்ததாக தாய் தந்தையை பேண வேண்டும் என்ற நோக்கிலே தாய் தந்தையை மதிக்க வேண்டும் போற்ற வேண்டும் என்பதற்காக அவ்வாறெல்லாம் எல்லா புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் உடன் பிறந்தவர்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக மற்றவர்களுக்கு உதவ கூடாது என்று நாங்கள் கூறவில்லை. என்னதான் ரத்த பந்தம் உடையவர்களுக்கு உதவ வேண்டியது கடமை என்றாலும் ரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவும் பொழுது தான் விரைவில் பாவங்கள் குறைகின்றன. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டியது மனிதனின் அத்தியாவசியமான கடமை. அந்த கடமையிலிருந்து அவன் தவறினால் கடமை தவறிய குற்றம் பாவம் வந்து சேரும். ரத்த தொடர்பில்லாதவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் புதிதாக பாவம் வராது. ஆனால் சேர்த்த பாவம் தீராது. புண்ணியமும் சேராது.

போகாசன மூர்த்தி

விஷ்ணு ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் மேல் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம் காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். பூமாதேவி விஷ்ணுவின் இடது புறத்தில் வலது காலை மடக்கி அமர்ந்த நிலையில் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். இடம்: பாதாமி குடைவரை கோவில். குகை எண் 3.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 645

கேள்வி: பித்ரு தோஷம் என்றால் என்ன? ஒருவனுக்கு ஜாதக ரீதியாக இல்லாமல் பித்ரு தோஷத்தால் என்னென்ன தடைகள் ஏற்படும்? அந்த தடைகளை நீக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவனின் கருணையை கொண்டு நாங்கள் கூறுவது யாதென்றால் பித்ரு என்ற சொல்லுக்கு முன்னோர்கள் என்ற பொருள் உண்டு. ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவம், அவர்கள் பெற்ற சாபம், அந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீர் கடனை செய்யாது விட்டதால் அவர்களால் வரக்கூடிய தோஷம் என்று பல்வேறு விதமான தோஷங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த பித்ரு தோஷத்தின் அடுத்த உயர்வான நிலைதான் பிரம்மஹத்தி தோஷம். அதன் கிளை தான் நாகதோஷம். எனவே இவையெல்லாம் உச்சகட்ட பாவத்தையும் குறியீடுகள்தான். நாகதோஷம் என்றால் ஏதோ நாகப்பாம்பை கொன்றால் வரும் தோஷம் என்று என்பது ஒரு தவறான நிலையாகும். எல்லா வகையான உச்சகட்ட பாவத்தின் ஒரு அடையாளம் தான் இது போன்ற தோஷத்தின் நாம கரணங்கள் (பெயர்கள்). நாம கரணங்களை விட்டுவிட்டு உச்சகட்ட பாவங்கள் வாழ்க்கையில் பின்னிக் கலந்திருக்கிறது. அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டாலே முதலில் காலபைரவர் வழிபாட்டை துவங்க வேண்டும். அடுத்ததாக பசுக்களை நல்ல முறையில் பராமரிக்கின்ற ஒரு நிலைக்கு தன் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பால்பட்ட ஆலயங்களுக்கு சென்று முடிந்த தொண்டுகளை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தினத்திற்கு உச்சிப் பொழுதிற்குள் ஒரு ஏழைக்காவது அன்னமிட வேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் அன்னமிடுதலை நாங்கள் வரவேற்றாலும் முறையாக அன்னமிடுதல் ஒரு வழக்கம் இருக்கிறது.

அதாவது அதிதியாக வரக்கூடிய மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் தேகமெங்கும் அழுகியிருந்தாலும் அருவருக்கத்தக்க தோற்றம் இருந்தாலும் அவனை அழைத்து அவன் பாதத்தை நன்றாக நீரால் நனைத்து பாத பூஜை செய்து அவனை இல்லத்திலே அமர வைத்து உயர்ந்த மகானோ ஞானியாகவோ வந்தால் என்ன மரியாதையை மனிதன் செய்வானோ அப்படி செய்து இன்முகத்தோடு உணவிடுவதே பரிபூரண அன்ன சேவையாகும். எதோ ஒரு அன்னத்தை வாங்கினோம் இந்தா பிடித்துக் கொள் என்று கொடுப்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் எப்படியாவது செய்கிறார்களே சேய்கள் என்று நாங்கள் சற்றே மனம் மகிழ்ந்து இருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வந்தாலும் அந்த பித்ரு தோஷங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இது ஒரு மனித வாழ்க்கையில் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. செய்தொழில் விருத்தி இல்லாமலும் குடும்பத்தில் குழப்பமும் அதிக மருத்துவ செலவினங்களை ஏற்படுத்திக் கொண்டு நோய் ஒன்று போய் ஒன்று வந்து கொண்டே இருப்பது போல எல்லாவற்றையும் தாண்டி மனக்கிலேசமும் சித்த பிரமையும் குடும்பத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் எனவே இது போல் எளிய வழிபாடுகளையும் தர்ம காரியங்களையும் செய்து ஒரு மனிதன் இந்த தோஷத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வர வேண்டும்.

சோமாஸ்கந்தர்

மாகாபலிபுரத்தில் பல இடங்களில் மிக அழகிய சோமாஸ்கந்தச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. சோமாஸ்கந்தர் எனும் வடிவம் பல்லவர்களுக்கே பிரத்யேகமானது. பின்னர் சோழர்களால் உலோகத்தில் முன்னெடுக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் என்றால் உமை ஸ்கந்தன் ஆகியோருடன் கூடிய சிவன். அருகருகே சிவனும் உமையும் அமர்ந்திருக்க இடையில் குழந்தை வடிவக் குமரன் விளையாடுவதுபோல் இந்தச் சிற்பங்கள் இருக்கும். முருகன் ஏழே நாள்களில் வளர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தது மூன்று நாள் மட்டுமே. நான்காவது நாள் இளைஞனாகி விட்டான். இந்த சிற்பத்தில் சோமாஸ்கந்த வடிவில் இருப்பவர் மூன்று நாட்களே ஆன குழந்தை முருகப்பெருமான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 644

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும் தனத்தையே குறியாகக் கொண்டு வாழ்பவரை யாங்கள் கரை சேர்ப்பதில்லை. சிறப்பான சிந்தை உயர்ந்த குணம் எவருக்கும் உதவுதல் எதிரிக்கும் உதவுதல் என்ற மனம். மனத்தால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது. வாரி வாரி வழங்குவது போன்ற குணங்கள் எம்மை அருகில் சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க வாக்கு ஒன்று சொல்ல செயல் ஒன்று செய்ய வரும் மாந்தர்களை நாங்கள் நன்றாக அறிவோம். சரணாகதி அடைந்தால் தான் தேற முடியும். எம்மை பணிந்தாலும் பணியா விட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும் ஏற்கா விட்டாலும் இறையை ஏற்க வேண்டும். வெறும் வழிபாட்டை மட்டுமல்ல சத்தியத்தை ஏற்க வேண்டும். ஏற்பதென்றால் மந்திர உருப்போடுவது மட்டுமல்ல. மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்க வேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால் இறையிடம் கணிதம் பார்த்தால் யாங்களும் கணிதம் பார்க்க வேண்டி வரும்.

தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி

சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும்.

மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று திருஞானசம்பந்தர் தம்பதி சமோதரர்களாக விளங்கும் தம்பதி சமேத தட்சிணாமூர்த்தியை சிறப்பிக்கிறார். சாந்த சொரூபமாக தனது இடது புறத்தில் தனது தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது. தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து வலக்காலை முயலகன் முதுகின் மீது தொங்கவிட்டு பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தனது முன்கை சின்முத்திரை காட்ட இடது முன்கை மடித்த இடது காலின்மீது உள்ளது. பின்னிரு கரங்களில் மானும் மழுவும் உள்ளன. சனகாதி முனிவர்கள் காலடியில் அமர்ந்துள்ளனர். அவரது இடது தோளின் பின்புறம் பரிவோடு தோளைப் பற்றியவாறும் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் அமைந்துள்ள பார்வதி தேவியின் அழகிய திருவடிவம். இடம்: பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் ஊத்துக்கோட்டை சுருட்டபள்ளி ஆந்திர மாநிலம்.