கல்யாண சுந்தரமூர்த்தியின் புராண சிற்பம். இடம் பங்களாதேஷ் டக்காவின் தேசிய அருங்காட்சியகம்.

கல்யாண சுந்தரமூர்த்தியின் புராண சிற்பம். இடம் பங்களாதேஷ் டக்காவின் தேசிய அருங்காட்சியகம்.

தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்து இருந்தார்கள். தங்களின் வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைய வேண்டும். அதனைக் கடைவதற்கு கூட தங்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தார்கள். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும் வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திர மலையின் அடியை தாங்கினார். பாற்கடலை கடைய கடைய பல பொருட்கள் வந்தது. அப்பொருட்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டார்கள். ஆலகால விஷத்திற்கு பின் இறுதியாக அமிர்தம் கிடைத்தது.
அமிர்தத்தை அசுரர்கள் பெற்றால் உலகிற்கு மேலும் தீமைகள் நடைபெறும் என்று எண்ணிய திருமால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தத்தை குடித்தார்கள். இதனை அறிந்த திருமால் கையில் இருந்த அகப்பையால் அவர்களது தலையை வெட்டி அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல் சிவபூஜை செய்து ராகு கேது கிரகங்களாக உருமாறினார்கள். இதனிடையே மந்திர மலையைத் தாங்கியபடி நின்ற திருமாலின் அவதாரமான ஆமை ஏழு கடல்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் அனைத்து கடல் நீரையும் குடித்த ஆமை கண்ணில் கண்ட அனைத்தையும் உண்டது. இதனால் உலக மாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர்கள். ஆமையை அழிக்குமாறு கூறினார்கள். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் ஆமையின் உடலைக் குத்தி ஆமையின் வலிமையை குறைந்து அதன் ஓட்டை தன் திருமார்பில் ஆபரணமாக அணிந்து கொண்டார். நடந்தவற்றிற்கு திருமால் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தனது திருபாற்கடலுக்கு சென்றார். திருமாலின் ஒரு அவதாரமாகிய ஆமையின் உருவத்தை அழித்ததால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
சென்னையில் பாரிமுனைக்கு அருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது ஓவியம் காணப்படுகின்றது. சிவலிங்கம் ஆமையின் மீது இருப்பதைக் காணலாம். கந்த புராணமும் காஞ்சி புராணமும் இந்த வரலாற்றை சிறப்பாக சொல்கிறது.

சிவபெருமான் தனது 20 கைகளில் பல ஆயுதங்கள் ஏந்தியபடி தாமரை பீடத்தில் நடனமாடும் தோரணையில் இந்த வெண்கலச் சிற்பம் உள்ளது. சிவபெருமானின் இரண்டு பக்கமும் பரிவார தேவதைகள் உள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரம் கோயிலில் உள்ள நந்தி தேவரின் அழகிய சிற்பம். கரிகாலசோழன் காலத்தில் கட்டப்பட்ட சிற்பம். காலம் 2 ஆம் நூற்றாண்டு.

பிரம்மாவுக்கும் திருமாலிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது. வேதமும் பிரணவமும் சிவனே இருவரிலும் உயர்வானவர் என்று கூறிய பின்னும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது. இதை தேவர்கள் மூலம் அறிந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி தந்தார். அதனைக் கண்ட திருமால் தன்னைவிட சிவப்பரம்பொருளே பெரியவர் என்று அமைதியானார். ஆனால் பிரம்மா அதை ஏற்காமல் இன்னும் செருக்குடன் இருந்தார். சிவனுக்கு ஐந்து முகங்கள் இருப்பது போலவே தமக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் நானே பெரியவன் என்ற அகந்தை உண்டானது. (பிரம்மாவுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தது) பிரம்மனது அகந்தையை போக்க எண்ணிய சிவபெருமான் பைரவராக மாறி அவருடைய தலைகளில் ஒன்றினை கொய்தார். இதனால் பிரம்மா நான்கு முகத்துடன் நான்முகன் என்று பெயர் பெற்றார். பிரம்மாவின் செறுக்கும் அழிந்தது. செருக்கு மிகுந்த பிரம்மாவின் தலைகளில் ஒன்றினை கொய்த சிவபெருமானின் திருவுருவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் ஆகும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப் படுகின்றார்.
சிவபெருமானின் இந்த பேராற்றலை திருஞானசம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் தேவாரங்களில் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்கள். திருஞானசம்பந்தர் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களில் இதுவும் ஒன்று என்று பாடியதோடு இவ்வீர செயலை பற்றி தேவாரங்களில் 29 இடங்களில் சிறப்பாக பாடியுள்ளார். அப்பர் 35 இடங்களிலும் சுந்தரர் 5 இடங்களிலும் மாணிக்கவாசகர் 6 இடங்களிலும் சிறப்பித்து பாடி உள்ளார்கள். ஸ்ரீ தத்துவநிதி சில்பரத்தினம் என்ற சிற்ப நூல்கள் இவர் வெண்ணிறத்தவர் என்றும் நான்கு கரங்களை உடையவர் என்றும் வலக்கரத்தில் வஜ்ஜிரமும் கைக்கோடாரியும் வைத்திருப்பார் என்றும் இக்கரங்களில் பிரம்மனின் கபாலமும் சூலமும் வைத்திருப்பார் என்றும் சுருண்ட தலைமுடியை உடையவர் என்றும் புலித்தோலை அணிந்திருப்பார் என்றும் கூறுகின்றன. இவ் வடிவத்தை கொண்ட இவரது அழகிய சிற்பம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ளது. இதில் நான்கு தலைகளுடன் பயத்துடன் பிரம்மன் காட்சியளிக்கிறார்.

சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்று திருமால் தனது வாகனமான கருடன் மீதேறி சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலைச் சென்றார். அங்கே நந்தி தேவனின் அனுமதியுடன் சிவபெருமானை காண சென்றார். கருடன் வெளியே காத்திருந்தார். திருமால் சிவபெருமானை தரிசிக்க சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராததால் கருடன் உள்ளே செல்ல முயன்றது. அதற்கு நந்திதேவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட கருடன் நந்திதேவரை தாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட நந்திதேவர் விட்ட மூச்சுக் காற்று கருடனை தாக்கியது. அந்த காற்றறின் வேகமானது கருடனை மிக தூரத்திற்கு தூக்கிச் சென்று போட்டது. நந்தி தேவர் மீண்டும் மூச்சை இழுத்ததும் காற்றின் வேகத்தில் உறிஞ்சப்பட்ட கருடன் மீண்டும் தான் இருந்த இடத்திலேயே வந்து விழுந்தது. அக்காற்றில் அகப்பட்ட கருடன் நிலைத் தடுமாறியது. மீண்டும் மீண்டும் நந்தி தேவரின் மூச்சுக் காற்றில் அகப்பட்டு அங்கும் இங்குமாக விழுந்து கொண்டிருந்தது கருடன். இதிலிருந்து திருமால் தான் தன்னைக் காக்க வேண்டும் என்று எண்ணி அவரை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது. கருடனின் பிரார்த்தனை திருமாலின் காதில் விழ அவர் சிவபெருமானிடம் வேண்டினார். கருடனை மன்னித்த சிவபெருமான் நந்திதேவரை அழைத்து கருடனை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப கருடனை விடுவித்தார் நந்தி. கருடன் தன் கர்வம் அடங்கி பின் பழையபடி திருமாலுடன் பாற்கடல் சென்றது. நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்கு உதவியதால் சிவபெருமானுக்கு கருடன் அருகிருந்த மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வரலாற்றை பதினோராவது திருமுறை சிறப்பாக கூறுகிறது.
