காளி மரச்சிற்பம்

எட்டு கரங்களைக் கொண்ட காளி தேவி ஈசனுக்கே உரியதான சந்திரப்பிறைக் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளார். இங்கே இவள் தீயவற்றை அழிக்க கோபத்துடன் பார்க்கும் கண்கள் மற்றும் கோரைப் பற்களுடன் காட்சியளிக்கின்றாள். தேவி அணிந்துள்ள காதணிகளில் வலது காதில் சிங்கத்தையும் இடது காதில் யானையையும் அணிந்திருக்கிறாள். ஒவ்வொரு கைகளிலும் அரிவாள் வில் அம்பு ஈட்டி மண்டை ஓடு சுடர்விடும் ரத்தினம் என்று தமிழில் அறியப்படும் அரிவாள் வடிவ பலி வாள் ஏந்தியிருக்கிறாள். 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மரத்தில் செதுக்கப்பட்ட காளி தேவியின் சிலை தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரம் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பேதம்

ஒரு முறை கிருஷ்ண பகவான் உதங்க முனிவரிடம் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். ஒன்றும் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார். நான் சுற்றிக் கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது என்றார் உதங்கர். கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார். தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக் கொண்டார். நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.

கிருஷ்ணரின் திருவுள்ளம் தொலை தூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர் உடனே தேவேந்திரனைத் தொடர்புகொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மனித ரூபத்தில் உள்ளவர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லையே என்றான். கிருஷ்ணரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தான். ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல் அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை பஞ்சடைந்த தாடி மீசை கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை பக்கத்தில் சொறி பிடித்த நாய். இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான். அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டி விட்டார். மாற்றுருவில் வந்த இந்திரன் வற்புறுத்தினான். முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான். உதங்கருக்கு மகா கோபம். கிருஷ்ணன் இப்படிச் செய்து விட்டானே என்று வருந்தினார். எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக் கொண்டார்.

கிருஷ்ணரை வேறொரு நாளில் மீண்டும் சந்தித்தார். உதங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புன் சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர் என்ன முனிவரே உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன் நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே என்றார். உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது. உதாங்கர் பெரிய தவயோகி. ஆனால் ஏன் அவரால் கிருஷ்ணர் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை. விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? உயிர்களிடத்தில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கும் அவரது குணம் காரணம். ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம். இதைத்தான் கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார். உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தனது மாய விளையாட்டால் இதனை உதாங்க முனிவருக்கு உணர்த்தி அவரது குணத்தை மாற்றினார் கிருஷ்ணர்.

வாசுகி நர்த்தனர்

சிவபெருமான் வாசுகி பாம்பின் மீது நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம் எனப்படும். ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி அனைவரையும் பயமுறுத்திய வாசுகியின் தலைமீது ஈசன் தன் திருப்பாதம் வைத்து நாடனம் ஆடினார். ஈசனின் நடன வேகத்தால் நிலை குலைந்த வாசுகி ஆணவம் நீங்கி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் ஈசன் வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார். பத்துத் திருக்கரங்களோடு வாசுகி மீது திருப்பாதம் தாங்கிப் புன்னகையோடு நிற்கும் நடன மூர்த்தி இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்கள் உள்ளது. மற்ற இரு திருக்கரங்களில் மான் மழு யோக முத்திரைகளோடு அருள் காட்சி தருகிறார் ஈசன். இடம் ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதீஸ்வரர் ஆலயம் மேலக்கோட்டையூர்.

எங்கிருந்து வந்தோம். எங்கே செல்வோம்

குருவே இந்த வாழ்கை பற்றி ஒரு சந்தேகம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் பிறப்பதற்கு முன் எங்கிருந்து வந்தேன். நான் இறந்த பின் எங்கே செல்வேன். இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் என்னால் இரவு தூங்க முடியவில்லை. இந்த கேள்விக்கு சற்று விளக்கமாக நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும் என்று கேட்டான். குரு சீடனிடம் புத்தக அறைக்கு சென்று ஒரு புத்தகத்தின் பெயரை சொல்லி அதை எடுத்து கொண்டு வா என்றார். சீடன் அந்த அறைக்கு சென்றான். அங்கு வெளிச்சம் எதுவும் இல்லாமல் இருள் நிறைந்து காணப்பட்டது. உடனே சீடன் குருவே இங்கு வெளிச்சம் எதுவும் இல்லை எப்படி நான் அந்த புத்தகத்தை தேடி எடுப்பேன் என்று கேட்டான். குரு ஒரு தீப விளக்கை சீடனிடம் கொடுத்து இப்போது சென்று புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா என்றார். சீடனும் குரு கூறிய புத்தகத்தை விளக்கு வெளிச்சத்தில் தேடி எடுத்து வந்து குருவிடம் கொடுத்தான். குருவே தாங்கள் இன்னும் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றான் சீடன். குரு சீடன் கையில் வைத்திருந்த விளக்கின் தீபத்தை அணைத்தார்.

சீடனை இந்த புத்தகத்தை எப்படி எடுத்து கொண்டு வந்தாய் என்று கேட்டார். அதற்கு சீடன் இந்த விளக்கில் உள்ள வெளிச்சத்தின் உதவியால் கொண்டு வந்தேன் என்றான். சீடனே அது இரண்டாவது முறை முதல் முறை என்ன செய்தாய் என்று கேட்டார். முதல் முறை நான் அந்த அறைக்கு செல்லும் போது அங்கு வெளிச்சம் இல்லை அதனால் புத்தகத்தை எடுக்க இயலாமல் தடுமாறினேன் என்றான். சீடனே முதல் முறை உன்னால் புத்தகத்தை எடிக்க முடியவில்லை இந்த விளக்கின் ஒளியால் தான் இந்த புத்தகத்தை உன்னால் எளிதில் எடுக்க முடிந்தது அல்லவா என்றார். ஆம் குருவே என்றான் சீடன் இந்த விளக்கின் நெருப்பு எங்கிருந்து வந்தது என்று கேட்டார் குரு. சீடன் தெரியாது என்றான். அந்த விளக்கின் நெருப்பை அணைத்த பிறகு அந்த விளக்கின் வெளிச்சம் எங்கே சென்றது என்று கேட்டார் சீடன் தெரியாது என்றான். விளக்கிலிருந்த தீபம் இந்த பிரபஞ்ச பஞ்சபூத சக்தியிலிருந்து வந்தது. தீபத்தை அணைத்ததும் அந்த தீபம் பஞ்ச பூத சக்தியிடமே ஓடுங்கியது.

மாயை என்ற தெரியாத இருள்களுக்கு நடுவே நமது ஆசைகள் மற்றும் வினைகளின் காரணமாக இந்த மனித வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்குள் இறை நம்பிக்கை மற்றும் அந்த இறையிடம் சரணாகதி அடைந்தால் இந்த ஆசைகள் வினைகள் மாயை என்ற இருள் மறைய ஆரம்பித்து ஒரு வெளிச்சம் தோன்றும். அந்த வெளிச்சத்தில் பார்த்தால் புத்தகம் கிடைத்தது போலவே இறைவனை தரிசிக்கலாம். அந்த இறைவனது திருவடிதான் நாம் இறுதியாக சென்று சேரும் இடம். நாம் வந்ததும் அந்த திருவடியிலிருந்துதான். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே மீண்டும் சென்று சேருவோம். இறைவனது திருவடியை தவிர வேறு கதி என்று ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை. ஆகவே எங்கிருந்து வந்தோம் எங்கே போவோம் என்ற சிந்தனையை தூக்கி எறிந்து உனக்குள் தீபத்தை ஏற்றி இந்த வெளிச்சத்தில் இறைவனை தரிசித்து அவரது திருவடியை சேர்ந்தால் இறப்பு பிறப்பு இல்லாத பேரின்ப இறைவனது திருவடியில் லயித்திருக்கலாம் என்று சொல்லி முடித்தார்.

சரஸ்வதிதேவி

மணல் கல்லிலான முப்பெரும் தேவியர்களின் ஒருவரான சரஸ்வதிதேவியின் சிற்பம். நேபாளத்தை சேர்ந்த இந்த சிற்பம் 10 மற்றும் 11 நூற்றாண்டை சேர்ந்தது. தற்போது இருக்கும் இடம்: வால்டர்ஸ் கலை அருங்காட்சியகம். பால்டிமோர் ஆசிய கலை அருங்காட்சியகம் சான்பிரான்சிஸ்கோ.

இல்லறம் அது நல்லறம்

முனிவரிடம் அவரது சீடர் இல்லறம் அது நல்லறம் என்று சொல்கிறார்கள். அது ஏன் என்று கேள்வி கேட்டார். விரைவில் அதற்கு பதில் கொடுப்பதாக முனிவர் கூறினார். அப்போது அவரிடன் வந்த ஒரு பறவை சுவாமி உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து சென்று அங்கே உள்ள ஒரு அழகான தீவை பார்க்க விரும்புகிறேன் நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றது. அதற்கு முனிவர் பறவையே உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஆகவே முயற்சி செய். ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் முனிவர். தலையசைத்து விட்டு பறந்தது பறவை.

இதனை கவனித்த சீடன் ஏன் சோர்வு வரும் போது திரும்ப வர வேண்டும் என்று கேள்வி கேட்டான். அதற்கு முனிவர் சீடனே முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்து விடுவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார். ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. சுவாமி கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன் சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால் கடலில் விழுந்திருப்பேன். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் என் முயற்சியை தொடர விரும்புகிறேன் என்றது பறவை. அதற்கு முனிவர் பறவையே இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன் திரும்பி வா என்றார் சாது. பதினைந்து நாட்கள் போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன. சுவாமி எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்து விட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள் என்றது பறவை.

முனிவர் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார். பறவைகளே பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள் என்றார் முனிவர். பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு முனிவரிடம் வந்தன. சுவாமி உங்களின் வழிகாட்டுதலினால் ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் எனது துணையுடன் ஓய்வெடுத்தோம் என்றது பறவை.

பறவைகளே அருமை நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா? என்று கேட்டார் முனிவர். சுவாமி சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் யார் இதனை சுமந்து செல்வது என்று எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால் கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது காப்பாற்றுகிறது என்ற உண்மை புரிந்தது என்று முனிவருக்கு நன்றி சொல்லி விட்டு பறந்தது பறவை.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சீடனிடம் பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்கு காரணம் துணை. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய குச்சி என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது சண்டையைக் கொடுத்தது பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால் அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு குச்சியைப் போல மனிதர்களுக்கு இல்லறம் கருவியாகிறது.

சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடக்க கடலில் குதிக்க வேண்டியதில்லை நீந்த வேண்டியதில்லை. துணையின் உதவியுடன் இல்லறம் என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம். குச்சியை சுமப்பதாக பறவைகளுக்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் குச்சியே பறவைகளை சுமக்கிறது. இதைப் போல கணவனும் மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையில் இல்லறமே அவர்களை நல்லறமாக இருந்து வழி நடத்தி சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைய உதவி செய்கிறது என்று சொல்லி முடித்தார்.

வாராஹிதேவி

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள ஆதி சக்தி பீடமாக விளங்கும் தாராதாரிணி கோயிலில் அன்னை வாராஹிதேவி. நான்கு கரங்களில் பின் இருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய படியும் சாந்தமே உருவாக கையில் குழந்தையுடன் அன்னை காட்சியளிக்கின்றாள்.

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரத்தைப்பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னது. காயத்ரீ மந்திரமானது மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநு சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக் யஜுர் ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த சாரம் காயத்ரீ மகாமந்திரம். காயத்ரீ என்றால் எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்று பொருள். கானம் பண்ணவதென்றால் இங்கே பாடுவது என்று பொருளில்லை. அன்புடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் பய பக்தியுடனும் அன்புடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் காக்கும். அதனால் அந்தப் பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது காயத்ரீம் சந்தஸாம் மாதா என்று இருக்கிறது. சந்தஸ் என்றால் வேதம். வேத மந்திரங்களுக்கு எல்லாம் தாயார் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அட்சரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொரு அடியிலும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு திரிபதா காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. காயத்ரீயில் சகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். வேத மந்திரங்களில் சித்தி உண்டாக காயத்ரீயை சரியாக ஜபம் செய்ய வேண்டும்.

மூன்று அடி மண் கேட்ட வாமன அவதாரம்

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆட்சி செய்து வந்தார். தானம் தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்தார் திருமால். மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி மகாராஜா. அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவரை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் உள்ள இடம் ஜகன்னாதர் கோவில். கிதிர்பூர் கொல்கத்தா மாநிலம்.

அகந்தை

நான்கு பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து தங்களில் யார் முதலில் சொர்க்கத்துக்கு போவோம் சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

முதலில் சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்தவன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்கு உண்டு என்றான்.

2 ஆவது வேதபாலன் என்ற பக்தன் சொன்னான். வேதங்களையும் மந்திரங்களையும் கற்று வைத்திருப்பது போர் கருவிகளை உபயோகிக்காமல் வைத்து துருப்பிடிக்க செய்வதற்கு சமம். நான் வேத மந்திரங்களை கற்றிருப்பதோடு அவற்றை என்னால் இயன்றவரை மக்களுக்கும் உபதேசிக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

3 ஆவது குகநாதன் என்ற பக்தன் சொன்னான். கிளிப்பிள்ளை மாதிரி வேதங்களை கற்பதனாலும் பிறருக்கு ஒப்புவித்து விடுவதாலும் ஒரு மனிதனுக்கு தகுதிகள் எதுவும் அமைந்து விடாது. வேதங்களும் மந்திரங்களும் சொல்லும் உட்பொருளை கிரகித்து அந்த முறைப்படி வாழ முற்படுபவனுக்கு தான் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி உண்டு. அதன்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

4 ஆவது சுந்தரானந்தன் சொன்னான். நான் உங்களை மாதிரி வெளிப்பகட்டு வாய் வேதாந்தி அல்ல. நான் என் உடலை வாட்டி வதைத்து விரதங்கள் அனுஷ்டிக்கிறேன். இரவு பகல் பாராது பூஜை புனஸ்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

இவர்கள் விவாதம் செய்வதை அருகில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு வயதான மூதாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள். தன் வேலை முடித்துக் கொண்டு எழுந்த அந்த மூதாட்டி நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம் என்று கூறிக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நால்வரும் எழுந்து அவள் பின்னால் சென்று அவளை வழி மறித்து பாட்டி நாங்கள் எவ்வளவோ தகுதிகளை பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று உறுதி எங்களுக்கு ஏற்படவில்லை. நான் சொர்க்கத்துக்கு போவேன் என்று நீ உறுதியாக சொல்லுகிறாய். எங்களிடம் இல்லாத தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டனர். நான் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று சொல்லவில்லை. நான் போனால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சொன்னேன் என்றாள் பாட்டி. நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியவில்லை. நீங்கள் சொல்வதில் உள் அர்த்தம் இருக்கிறதா? எங்களுக்கு புரியும் படி சொல்லுங்கள் என்று பக்தர்கள் கேட்டார்கள். அதற்கு வயதான மூதாட்டி வெளிப்படையாக தானே பேசுகிறேன். நான் என்று சொன்னது என்னைப் பற்றி அல்ல. நான் என்ற அகந்தையை பற்றி. அந்த நான் போய்விட்டால் அதாவது நான் என்ற அகந்தை அகன்று விட்டால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போய்விடலாம் என்று சொன்னேன் என்றாள் வயதான மூதாட்டி. நான் என்ற அகந்தைக்கு ஆளாகி நின்ற நான்கு பக்தர்களும் உண்மை உணர்ந்து நான் என்ற அகந்தையை எப்படி விடுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.