லட்சுமணன்

ராமர் சீதை மற்றும் லட்சுமணன் வனவாசத்தின் போது லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டும் சிற்பமானது 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தைச் சேர்ந்த ஆதிவராக கோவிலில் சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முருகன் வயோதிக தோற்றத்தில்

வள்ளியை மணம் முடிக்க வள்ளிமலைக்கு வயோதிக வடிவில் சென்றார் முருகர். அங்கு தினைப் புனத்தில் வேடனாகவும் வேங்கை மரமாகவும் விருத்தனாகவும் வேடமிட்டு லீலைகள் பல செய்து அவளை மணம் புரிய விரும்பி காதல் மொழிகளைப் பேசினார். வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார் முருகர். அவர் யானை வடிவில் வந்து வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி வயோதிகராக வந்த முருகனை அணைத்துக் கொண்டாள் வள்ளி. இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இதனை அற்புதமாக விளக்கும் சிற்பக்காட்சி தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புற சுவற்றில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தலையுடன் அக்னிபகவான்


பஞ்சபூதங்களகளில் ஒருவரும் அட்டதிக்கு பாலகர்களில் தென்கிழக்குத் திசைக்கு உரியவரான இரண்டு தலைகள் கொண்ட அக்னிபகவான். துணைவியான சுவாகா தேவியுடன் ஆடு வாகனத்தின் மீது அமர்ந்துள்ளார். 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம்.

சக்தி பீடம் 17. ஞானாம்பிகை – காளஹஸ்தி

சக்தி பீடம் 17. ஞானாம்பிகை – காளஹஸ்தி

சக்தி பீடத்தில் 17 ஆவது கோயில் காளஹஸ்தி ஞானாம்பிகை கோயிலாகும். இக்கோயில் ஆந்திராவில் அமைந்துள்ளது. புராண பெயர் சீகாளத்தி ஆகும். இக்கோயில் ஞான சக்தி பீடமாகும். 51 சக்தி பீடங்களில் எந்த உடல் பகுதி விழுந்தது என அறியப்படவில்லை. இங்கு மூல தெய்வமாக ஞானாம்பிகை அருள் பாலிக்கிறாள். இவள் ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது. அம்பாளின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு உள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சக்தி வாய்ந்த எந்திரம் இருக்கிறது. தலவிருட்சம் அலரி. தீர்த்தம் பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு. தலமரம் மகிழம். இக்கோயில் கயிலாய மலையின் ஒரு பகுதியாக இக்கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை. காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. நாள்தோறும் நான்கு கால பூஜைகளே நடக்கின்றன. அர்த்தசாமப் பூஜை இல்லை. ஆகையால் சாயரட்சை பூஜையுடன் முடித்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.

இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள் தண்ணீர் வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது. இதே போன்று சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம் பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது. ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான் அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன். புராண பெயரான சீகாளத்தில் என்ற சொல்லில் சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம் அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும் அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப்பெயர் பெற்றது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 252 வது தலம் ஆகும். மூலவர் காளத்தீசுவரர், காளத்தியப்பர், காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாயு (காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக் கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும் நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும் மேற்புறத்தின் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். மூலவர் தீண்டாத் சிவலிங்கத் திருமேனி ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது உள்ள தங்கக் கவசம் பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது சார்த்தும் போதும் எடுக்கும் போதும் கூட சுவாமியை இங்கு உள்ள குருக்கள் தீண்டுவது இல்லை. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகிறது. இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர்.

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளையில் நந்தியுமாக இரு நந்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும் 60 அடி உயரமுடைய ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் ஆகியோர் பிரதிஷ்டை செய்த பல சிவலிங்கங்களும் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது.

கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்கு பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளியுள்ளார். சிவபெருமான் மீது பெரும்பிரியம் கொண்டிருந்த வேடனான கண்ணப்பன் என்பவர் தினமும் தான் வேட்டையாடிய விலங்குகளையே இங்கே காளத்தீசுவரருக்கு படைத்து வழிபட்டு வந்திருக்கிறார். எம்பெருமானுக்கு புலால் படைக்கப்படுவது கண்டு கோபம் கொண்ட காளஹச்தீஸ்வரருக்கு பூசை செய்து வழிபடும் சிவ கோசரியார் என்ற அந்தணர் சிவபெருமானிடம் வேண்டி முறையிடுகிறார். சிவ கோசரியார் கனவில் தோன்றிய சிவபெருமான் கண்ணப்பன் என்மீது கொண்ட அதீத பக்தியின் வெளிப்பாடாகவே தனக்குத் தெரிந்த வகையில் எனக்கு சேவை செய்கிறான். என் மீது கொண்ட அவனது பக்தியை உமக்கு உணர்த்துகிறேன் என்று சொல்லி மறைகிறார். அடுத்த நாள் கண்ணப்பன் சிவனுக்கு பூசை செய்வதை சிவ கோசரியார் மறைந்திருந்து காண்கிறார். அப்போது லிங்கத்தின் கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறது சற்றும் யோசிக்காத கண்ணப்பன் அம்பு கொண்டு தன்னுடைய ஒரு கண்ணை தோண்டியெடுத்து லிங்கத்தின் கண் மேல் வைக்கிறார். ஒரு கண்ணில் ரத்தம் நின்று கொஞ்ச நேரத்தில் லிங்கத்தின் மறு கண்ணிலும் ரத்தம் வரவே சற்றும் யோசிக்காத கண்ணப்பன் ரத்தம் வரும் இடத்தை அடையாளம் காண தன் ஒரு காலை லிங்கத்தில் ரத்தம் வரும் இடத்தில் வைத்தபடியே அம்பினால் தன்னுடைய மற்றொரு கண்ணையும் எடுக்க எத்தனித்த நேரத்தில் சிவபெருமான் தோன்றி நில் கண்ணப்பா என்று கூறி தடுத்தி நிறுத்தி அவருக்கு முக்தி வழங்கினார். இந்த நிகழ்வு நடந்த இடம் தான் இப்போதிருக்கும் காளத்தீசுவரர் கோயில்.

திருமஞ்சனக் கோபுரம் எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியே தான் திண்ணனார் என்ற கண்ணப்பர் நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். கண்ணப்பரின் பக்தியை ஆதிசங்கரர் தனது சிவானந்தலஹரியில் பாடியுள்ளார். கண்ணப்பர் தனது வாயில் நீர் கொண்டு வந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு விபூதி வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.

சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார். இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார். இன்றும் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. பாதாள விநாயகர் சந்நிதி விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம் பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளது.  இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான் வாயுதேவனே நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன். போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும் அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்று தான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

சண்டேசுவரர் சந்நிதியில் மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர். அவ்வாறு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் ஓரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி உடைத்துப் பார்த்து ஒன்றும் கிடைக்காமையால் திரும்பி விட பின்பு சில காலம் கழித்து மூலவர் சன்னதி திறக்கப்பட்டது. நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றார். நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி என்ற பாடல் பாடியுள்ளார்.

அர்ஜூனன் தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டு பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றிருக்கிறார். தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் பிரவேசித்தால் முக்தி என தலபுராணம் கூறுகிறது. வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உள்ளது. வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.

ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் காளிகோபுரம், நூற்றுக்கால் மண்டபம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கிபி 1516 இல் கட்டப்பட்டது. கோயிலின் பிரதான வாயிலில் உள்ள பிக்ஷசாலா கோபுரமும் ஏனைய கோபுரங்களும் 12 ஆம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும். பிரதான தக்ஷிண கோபுரம் 11 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டது. கண்ணப்பர் கோயிலும் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபமும், தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் புத்தங்கையாரால் கட்டப்பட்டது. உட்பிரகாரம் 5ஆம் நூற்றாண்டிலும் வெளிப்பிரகாரம் 12ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டது. பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். சோழ விஜயநகர காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் தென்கயிலாயமுடையார் என்றும் திருக்காளத்தி உடைய நாயனார் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் காளத்தி உடையான் மரக்கால் என்ற அளவு கருவி இருந்ததாக குறிப்பிடுகிறது. காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னரான இராஜராஜ சோழனின் மகன் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் வழிபட்டுள்ளனர். இங்கு வந்து பாடிய திருஞானசம்பந்தர் இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர் ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிட்டு பாடுகிறார். திருநாவுக்கரசர் காளத்தி வந்து வழிபட்டபோது வடகயிலை நினைவு வர கயிலைக் கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார். சுந்தரர் இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சோறு

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருக்கிறது. சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று. சூடாமணி நிகண்டுவில் அந்தத 27 பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. அசனம்
2. அடிசில்
3. அமலை
4. அயினி
5. அன்னம்
6. உண்டி
7. உணா
8. ஊண்
9. ஓதனம்
10. கூழ்
11. சரு
12. சொன்றி
13. சோறு
14. துற்று
15. பதம்
16. பாத்து
17. பாளிதம்
18. புகா
19. புழுக்கல்
20. புன்கம்
21. பொம்மல்
22. போனகம்
23. மடை
24. மிசை
25. மிதவை
26. மூரல்
27. வல்சி

கந்தபுராணத்தில் ஐயனார் வழிபாடு

சூரபத்மனின் கொடுமை தாங்க முடியாத இந்திரன் தம் மனைவி இந்திராணியோடு சீர்காழி வந்து தங்கி மூங்கிலில் மறைந்து ஒளிந்திருந்து சிவபூஜை தவம் செய்தார். தமது துன்பத்தை நீக்க கயிலையில் வீற்றிருக்கும் சிவபரம்பொருள் அன்றி எவரும் துணை செய்ய முடியாது என்பதை உணர்ந்த இந்திரன் கயிலை செல்ல முடிவெடுத்தான். அப்பொழுது தனியாக இருக்க இயலாது என்று இந்திராணி அச்சம் கொண்டாள். இந்திராணிக்கு காவலாக இருக்க ஐய்யனாரை பிரார்த்தனை செய்து அழைத்தான் இந்திரன். ஐய்யனார் வீரமாகாளனாய் காவலுக்கு நிற்க இந்திரன் கயிலை சென்றான்.

ஒருநாள் அஜமுகி வந்து இந்திராணியை கைப்பற்ற முயற்சிக்க இந்திராணி ஐய்யனாரை பிரார்த்தனை செய்து அழைத்தாள். அப்பாடல்கள்

பைஅரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம் விண்ணோர்க்கு ஆதியே ஓலம்
செண்டர் கையேனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யார்
மெய்யனே ஓலம் தொல்சீர் வீரனே ஓலம் ஓலம்.

ஆரணச் சுருதி ஓர்சார் அடல்உருத்திரன் என்று ஏத்தும்
காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத்து எந்தாய் ஓலம்
பூரணைக்கு இறைவா ஓலம் புட்கலை கணவா ஓலம்
வாரணத்து இறைமேல் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள்.

இந்த இருபாடலும் ஐயனாரை உளம் உருக அழைக்கும் பாடலாகும். ஐயனாரை குலதெய்வமாகக் கொண்ட குடும்பம் இங்கு பலர் உள்ளனர். அச்சம் பயம் ஆபத்து ஏற்படும் காலங்களில் முக்கியமாக பெண்கள் இப்பாடலை பாடி பிரார்த்தனை செய்து ஐயனாரை அழைத்தால் ஐய்யனார் மன தெளிவையும் மன தைரியத்தையும் கொடுப்பார்.

மேலும் கந்தபுராணத்தில்

அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்கும் ஆகி இருந்து எவ் உலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பான் ஆல்

என்று ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் ஐய்யனாரை போற்றிப் பாடுகின்றார். ஐய்யனார் இவ்வுலகையும் உயிர்களையும் காக்கும் தெய்வமாக விளங்குகின்றார் என்பது கந்தபுராணம் வாக்கு.

ஜீவன் முக்தி விதேக முக்தி

ரமண மகரிஷியிடம் பானர்ஜி எனும் பக்தர் ஒரு கேள்வி கேட்டார். ஜீவன் முக்திக்கும் விதேக முக்திக்கும் வித்தியாசம் என்ன?

ரமண மகரிஷிகள்: வித்தியாசம் ஒன்றுமில்லை. உடலுடன் இருக்கும் ஞானி ஜீவன் முக்தன். உடலை விடும்போது அவன் விதேக முக்தி அடைகிறான் என்று சொல்லலாம். ஆனால் இந்த வித்தியாசம் காண்பவருக்குத்தான் இருக்கும். ஞானிக்கு அல்ல. உடல் விடுவதற்கு முன்னும் பின்னும் ஞானியானவர் ஒரு நிலையிலேயே இருக்கிறான். நாம் ஞானியை மனித உருவமாக அல்லது அந்த உருவில் இருப்பவனாகப் பார்க்கிறோம். ஆனால் ஞானி தன்னை ஆன்மா ஒன்றேயான சத்வஸ்து. உள்ளும் புறமும் வியாபித்து எந்த உருவாலும் வடிவாலும் பந்தப்படாதவன் என்பதை அறிகிறான். பின்வரும் பாடலை பகவான் மேற்கோள் காட்டினார்.

தான்இருந்தும் தானாகத் தன்னைத்தான் நான்எவன்
யான்இருக்கும் ஸ்தானம் எதுவெனக்கேட் பானுக்கு
யான்எவன் எவ்விடம் யானுளன் என்றமது
பானனை யீடு பகர். – ஏகான்ம பஞ்சகம்

பொருள்: மது அருந்தியவனுக்குத் தன்மேல் ஆடை உள்ளதா இல்லையா என்ற உணர்வில்லாதது போல் ஞானிக்கு உடலின் உணர்வே இருக்காது. அது இருந்தாலும் விழுந்து விட்டாலும் வித்தியாசம் ஒன்றுமில்லை.

மானசாதேவி

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நாகராஜனான வாசுகியின் தங்கையும் ஜரத்காரு முனிவரின் மனைவியுமான மானசாதேவி. இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட்.

சக்தி பீடம் 15. பிரம்மராம்பாள் – ஸ்ரீ சைலம்

ஸ்ரீ சைலம் சக்தி பீடத்தில் 15 ஆவது கோயில் பிரம்மராம்பாள் கோயிலாகும். இக்கோயில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலத்தில் அமைந்துள்ளது. புராண பெயர் திருப்பருப்பதம் ஸ்ரீபர்வதம் ஆகும். இக்கோயில் சைல சக்தி பீடமாகும். 51 சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த சக்தி பீடமாகும். வேறு நூல்களின் கருத்துப்படி மேல் உதடு விழுந்ததாக சொல்லப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் 18 மகா சக்தி பீடங்கள் உள்ளது. இக்கோயில் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இக்கோயில் உள்ளது. அம்பாள் பிரம்மராம்பாள். இவளுக்கு பிரம்மராம்பிகை தேவி பருப்பநாயகி பிரமரம்பா என்ற வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் இறைவன் மல்லிகார்ஜூனர். இவரது சன்னதி கீழே இருக்க பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது. தீர்த்தம் பாலாநதி மற்றும் பாதாள கங்கை. தலமரம் மருத மரம் மற்றும் திரிபலா மரம். ஸ்ரீசைல மலையை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறது தலபுராணம். இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என தல வரலாறு உள்ளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் இத்தலமும் ஒன்றாகும். ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே ஆலயத்தில் அமைந்திருப்பது போன்ற அமைப்பு இந்தியாவில் மூன்று கோயில்களில் மட்டுமே உள்ளது. அந்த மூன்று கோயிலில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் இறைவனை கிருதாயுகத்தில் இரணியனும் திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும் ஆதிசங்கரரும் பூஜைகள் செய்துள்ளனர்.

ஸ்ரீபர்வதம் ஸ்ரீநகரம் ஸ்ரீகிரி ஸ்ரீசைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த கோவில் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் ஆந்திரா கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் இக்கோயில் மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலுக்குள் மல்லிகார்ஜுனன் சன்னதி பிரம்மராம்பாள் சன்னதி கிழக்கிலிருந்து மேற்கு பார்த்தபடி உள்ளது. விருத்த மல்லிகார்ஜுனர் சஹஸ்ர லிங்கேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் வீரபத்ரர் உமா மகேஸ்வரர் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த ஐந்து லிங்கங்கள் நவபிரம்ம கோயில்கள் உள்ளது. நந்திமண்டபம் வீரசிரோமண்டபம் என்ற இரண்டு மண்டபங்கள் உள்ளது. இக்கோயிலானது 20 அடி உயரமும் 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதில் சுவரின் வெளிப்புறத்தில் நான்கு புறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்ஜூனனின் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிஷாசுரமர்த்தினி போன்ற பல புடைப்புச் சிற்பங்களாக உள்ளது. கோயிலுக்கு நான்கு பக்கமும் கோபுரத்துடன் வாசல்கள் உள்ளது. பிரதான வாசல் கிழக்கு கோபுரம் ஆகும். ராமாயண காலத்தில் ராமர் இக்கோயிலில் சஹஸ்ர லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். மகாபாரத காலத்தில் பாண்டவ சகோதரர்கள் ஐந்து பேரும் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

ஸ்ரீசைலம் மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன. ஸ்ரீசைலம் மலையிலிருந்து 2 கிமீ தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹாவிஷ்ணு விநாயகரின் உருவத்தில் அமர்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காண வரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள் யார் இல்லாதவர்கள் என ஸ்ரீ சைலத்தில் உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவருக்கு சாட்சி கணபதி என பெயர். புனித அதிர்வுகள் இந்த வினாயகர் சன்னதியில் இருக்கிறது. அதன் காரணமாக இந்த விநாயகர் இச்சா சித்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டு அந்த புனித அதிர்வுகளை உணர்ந்தால் விநாயகரிடம் பிரார்த்தனையில் கேட்ட அனைத்தும் நிறைவேறும்.

அருணாசுரன் என்ற ராட்சசன் காயத்ரி தேவியின் பெயரில் உபாசனை செய்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த காயத்ரி தேவி அவனுக்கு தரிசனம் கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டாள். காயத்திரியிடம் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற வரத்தை கேட்டான். அதற்கு காயத்ரி தேவி தன்னால் அத்தகைய வரத்தை கொடுக்க முடியாது என்றும் பிரம்ம தேவன் மட்டுமே அப்படிப்பட்ட வரத்தை கொடுக்க முடியும் என்றும் கூறினாள். ராட்சசன் உடனே பிரம்மனை நோக்கி கடும் தவம் இயற்ற தொடங்கினான். அவனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அருணாசுரன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். யாராலும் தன்னை அழிக்க முடியாத வரத்தை கேட்டான். அதற்கு பிரம்மா இந்த வரமானது பிரபஞ்சத்தின் கொள்கைகளுக்கு எதிரானது அதனை கொடுக்க இயலாது. ஆகையால் அதற்குப் பதிலாக வேறொரு வரத்தை கேட்டுமாறு கூறினார். அருணாசுரன் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு 2 கால்கள் மற்றும் 4 கால்கள் கொண்ட உயிரினங்கள் எதனாலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்ற வரத்தை கேட்டான். பிரம்மா அவன் விரும்பிய வரத்தை கொடுத்தார். தன்னை அழியாதவனாகவும் யாராலும் தோற்கடிக்க முடியாதவனாகவும் கருதிய அருணாசுரன் தேவர்களையும் மக்களையும் துன்புறுத்த தொடங்கினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தார்கள். சிவன் பார்வதியை பார்க்க பார்வதி 6 கால்கள் கொண்ட ஆயிரம் தேனீக்களாக பிரமரம்பா சக்தி ரூபத்தில் பல தேனிக்களை வெளிப்படுத்தி (பிராமரி என்றால் தேனீக்களின் தாய் என்று பொருள்) அவதாரம் எடுத்து கொடூரமான அருணாசுரனைக் கொன்றாள். மகிழ்ச்சியான தேவர்கள் தேவியை பிரமராம்பாவின் வடிவத்தோடு இந்த உலகத்தில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீசைலம் சிவபெருமானுக்கு பிரியமானது என்பதால் பார்வதி தேவி ஸ்ரீசைலத்தை பிரமராம்பா தேவியாக இருந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறாள்.

பிரமராம்பா தேவியின் தோற்றம் மற்றும் தெய்வீக வடிவத்தை ஸ்கந்த புராணமும் ஸ்ரீசைல காண்டமும் விவரிக்கின்றன. மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு பின்புறம் பிரமரம்பா தேவியின் வடிவம் உள்ளது. இந்த வடிவத்தில் எட்டு கரங்கள் உள்ளது. பிரமரம்பா கோவிலில் தற்போதும் உள்ள ஒரு சிறு துளை வழியாக தேனீயின் ரீங்கார சத்தம் கேட்கிறது. இக்கோயிலில் உள்ள தேனீக்கள் பக்தர்களை ஒருபோதும் துன்புறுத்தியதில்லை.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 268 வது தேவாரத்தலம் இக்கோயிலாகும். மூலவர் மல்லிகார்ச்சுனர் வேறு பெயர்கள் ஸ்ரீசைலநாதர் ஸ்ரீபர்ப்பதநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திரரேகா என்ற இளவரசி. ஒரு நாள் அவள் கனவில் சிவன் தோன்றி தேனீயைத் பின் தொடர்ந்து செல்லவும் என்றார். அவள் கண் விழித்த போது ​​அவள் முன் ஒரு தேனீ இருந்தது. இளவரசி தேனீயைப் பின் தொடர்ந்து சென்றாள். தேனி அவளை ஸ்ரீசைலம் மலைக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த ஒரு மல்லிகைப் பூவில் குடியேறியது. அங்குள்ள இயற்கையில் லயித்த அவள் தன் தந்தையை விட்டு பிரிந்து இம்மலையில் வாழ ஆரம்பித்தாள். ஒரு நாள் மலைப் பகுதியில் இருக்கும் சிவலிங்கத்தைப் போன்ற பாறைகளின் மேல் ஒரு பசு தானாகவே பால் சொரிவதை கண்டாள். அன்று முதல் அந்த பாறைகள் அனைத்தும் சிவபெருமானே என்று அதனை வணங்கத் தொடங்கினாள். மலையில் உள்ள மல்லே என்றும் அழைக்கப்படும் மல்லிகை மலர்களாலும் அர்ஜுனா மலர்களாலும் தினமும் மாலை செய்து அணிவித்து இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இறைவனுக்கு மல்லிகார்ஜுனா என்ற பெயர் வந்தது. சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் இத்தலமும் ஒன்று.

நந்திதேவர் அவதரித்த தலம். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம். சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால் மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள் நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி தந்தையே கலங்காதீர்கள் நான் சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்று தவம் இருந்தார். தவத்தில் மகிழ்ந்த சிவன் நந்தியை தன் வாகனமாக்கியதுடன் அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த நந்தியால் என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். அதன்படி பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்று பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். பர்வதமலை ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால் நந்தி அவதரித்த இந்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

கோயிலின் கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபம் உள்ளது. தெற்கு வாயில் கோபுரம் ரங்க மண்டபம் என அழைக்கப்படுகிறது. கிழக்குப் புறமுள்ள கோபுரம் கிருஷ்ண தேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப் புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677 ல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப் புற கோபுரம் கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. கருவறை மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டது. கோயில் முகப்பில் சித்தி விநாயகர் உள்ளார். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில் ராஜராஜேஸ்வரி கோயில் அன்னபூரணி ஆலயம் சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில் பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் உள்ளது. அகஸ்தியரின் மனைவியான லோபாமுத்ராவின் சிலை தனிச்சன்னதியில் உள்ளது. இந்த சிலை முன்பாக ஒரு ஸ்ரீ யந்திரம் உள்ளது. இந்த சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக் கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். மல்லிகார்ஜுனரையும் அன்னை பிரம்மராம்பாளையும் தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்து விட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் பிரம்மராம்பாதேவி சிவாஜிக்கு காட்சி தந்தருளி பெரிய வாள் அளித்து கடமை உணர்வை போதித்து பகைவரை அழித்து வெற்றி பெற வாழ்த்தினாள். வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும் தியான மண்டபத்தையும் உருவாக்கினார். இந்த கோபுரம் சிவாஜி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார். சிவாஜியால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது இங்குள்ள கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும் கங்கையில் 2000 முறை குளிப்பதாலும் நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும் காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சி புரிகிறார். வேதாந்திகள் பரமயோகிகள் சித்தர்கள் மகாதவசிகள் இருக்கும் இக்கோவிலுக்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள காடுகளில் ஹனுமந்தபீரம் என்ற வகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் இலையின் இரு பகுதிகளிலும் ஆஞ்சநேயர் உருவம் காணப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப் பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குல குருவான ரேவணசித்தர் ஒரு நாரத்தம் பழத்தைக் கொடுத்து சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச்சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றி தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாக கூறவே ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்ட போது அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி இவரே மல்லையா என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்த போது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினார். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தார். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தான் வெட்டிய குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம் அளித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனது மண் பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விட்டார்கள். சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்க லிங்க மயமாகப் காட்சி கொடுத்து அஞ்சாதே உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக என்று அருளினார். வீட்டிற்குள் சென்ற கேசப்பா பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு இறைவனின் திருவருளை வியந்தவனாக அடியார்களுக்கு அன்னம் அளித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம் அடிகேச்வரம் என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன் ஒரு கயிற்றைக் கொடுத்து அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் அருகில் கயிற்றைக் கண்ட சிற்பி அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும் போது ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் நீரின் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் துரியோதனனின் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும். அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை கூறினார். கிருஷ்ணர் ஆலோசனைப்படி அர்ஜூனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ஜூனன் தபம் செய்யும் இடத்திற்கு வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ஜூனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ஜூனன் கண் விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது யார் என்பது பற்றி சண்டை வந்து விட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். சிவபெருமானை வில்லால் அடிக்க அர்ஜூனன் வில் ஒடிந்தது. பின்பு சிவபெருமான் அர்ஜூனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார். அர்ஜூனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டு தமக்கு பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டான். அர்ஜூனன் தம்முடன் போர் செய்து வில்லாற்றில் மேன்மை பெறுவதற்காகவும் தனுர் வேதத்தை அர்ஜூனனுக்கு போதிப்பதற்காகவும் வேடனாக வந்ததாக சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸ்திரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அர்ஜூனன் தவம் செய்த இடம் இங்கே உள்ளது. மலையில் படிக்கட்டுப்பக்கம் என்ற இடத்தில் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ஜூனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர்.

ஸ்ரீசைலத்தைப் பல நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம் இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி ஆகியவை இத்தலத்தின் மகிமையைக் கூறும் நூல்களாகும். ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான சிகரத்தைத் தரிசித்தபடியே மல்லிகார்ஜுனரைத் தியானிப்பார்கள். தான் இருந்த இடத்திலிருந்தே ராமபிரான் மல்லிகார்ஜுனரைத் தரிசித்துள்ளார்.

இந்த கோயிலில் பூஜைகள் வீரசைவ காரணாகம விதிமுறைப்படி நட்சந்து வருகின்றது. தினமும் நடக்கும் நித்ய நைவேத்ய பூஜையின் போது விருத கக்பத்தின் அடிப்படையில் இங்கு அமைந்துள்ள மகா நந்திக்கு நைவேத்யம் கிடையாது. செவ்வாய் கிழமைகளிலும் பிரதோஷம் சிவராத்திரி தினத்தில் மட்டும் தான் இந்த மகா நந்திக்கு நீரில் ஊர வைத்த முக்கடலையை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதை நந்தியின் வாயோடு கட்டி வைப்பது காலம் காலமாக நடந்து வருகின்ற முறையாகும். இதை அறியாத பலர் இந்த முக கவசம் அணிந்தது போன்ற படத்தை அறியாமையாலும் மூடத்தனத்தினாலும் பரப்பி கடவுளுக்கே கொரோனா வைரஸ் பிடிக்கிறதா என கேளி செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

வரலாற்று ஆய்வுகளின்படி ஸ்ரீசைலத்தின் வாழ்விட வரலாறு சுமார் 30000 முதல் 40000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஸ்ரீசைலத்தின் பல்வேறு இடங்களில் அந்தக் காலக் கற்காலக் கருவிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஸ்ரீசைலத்தின் வரலாறு தென்னிந்தியாவின் முதல் பேரரசைக் கட்டியவர் மற்றும் ஆந்திரதேசத்தின் ஆரம்பகால ஆட்சியாளர்களான சாதவாகனர்களுடன் தொடங்குகிறது என்பதை கல்வெட்டுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. ஸ்ரீசைலம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலுமாவியின் நாசிக் கல்வெட்டில் காணலாம். தத்தாத்ரேயர் இங்கு தவம் செய்திருக்கிறார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது தத்தாத்ரேய விருட்சம் என்றழைக்கப்படும் மரம் உள்ளது. ஆதிசங்கரர் இங்கு தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை இங்கு எழுதினார். இந்த மலையில் தவம் புரிந்த ரிஷ்யசிருங்க முனிவர் முன் சிவபெருமானும் பார்வதி தேவியும் தோன்றி அவருக்கு அருள்புரிந்தார்கள்.

சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பிய போது அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி கௌசிக அரசனை வீர சைவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு அவனை சந்திக்கச் சென்றாள். அரசனின் தவறான செய்கையால் மனம் நொந்து தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள் அக்கமஹா தேவி. ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்கமஹா தேவியின் திருவுருவச் சிலை உள்ளது.

3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதகர்ணியின் பண்டைய நூல்களில் ஸ்ரீசைலம் பற்றிய குறிப்பு உள்ளது. அந்த அரசரின் ஆட்சியின் கீழ் உள்ள நிலங்களை விவரிக்கும் நூல்களில் ஸ்ரீசைலம் சகோர ஷேதகிரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுனர் கோயிலை முதன் முதலில் கட்டமைத்தவர்கள் சத்வஹன்சர்கள் என்று வரலாற்றுக்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவில் பல காலங்களில் பல ஆட்சியாளர்கள் மற்றும் வம்சங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

இக்ஷவாகுக்கள் கிபி 200-300 ஆம் ஆண்டில் ஸ்ரீசைலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள விஜயபுரியில் இருந்து ஆட்சி செய்தனர்.

பல்லவ ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிபி 340-575 ஆம் ஆண்டில் இந்த பகுதியும் சேர்க்கப்பட்டது. கிபி 340-450 ஆம் ஆண்டு வரை சுதந்திர சமஸ்தானமாகவும் இருந்துள்ளது. கடம்ப சாந்தி வர்மாவின் தெலகுண்டா கல்வெட்டில் இந்த தகவல் உள்ளது.

கிபி 6 ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னன் மயூர சர்மா ஸ்ரீசைலத்தை ஸ்ரீபர்வதம் என்று அழைத்தார். பிருஹதனா என்று அழைக்கப்படும் ஒரு வகை கடம்பர்களின் உதவியுடன் பல்லவ வம்சத்தை கைப்பற்றி நிலத்தை கைப்பற்றினார். தாங்கள் வென்ற நிலத்தோடு ஸ்ரீபர்வதத்தை ஒருங்கிணைத்தனர்.

கிபி 735 – 755 இல் ராஷ்டிரகூடப் பேரரசின் ஆட்சியாளரான தந்திதுர்கா ஸ்ரீபர்வதம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களை ஆட்சி செய்தார்.

கல்யாண சாளுக்கியராஜு 980-1058 ஆம் ஆண்டு ஒரு கோபுரத்தை நிறுவினார். அவரது பேரன் கிபி 1069 இல் சத்திரம் மற்றும் தர்மசாலாவுக்காக ஸ்ரீசைலத்திற்கு ஒரு கிராமத்தை நன்கொடையாக வழங்கினார். 

ஸ்ரீசைலம் மகா சிவன் கோயில் என்றும் வேதங்களின் தாயகம் என்றும் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ் பெற்றது. ஹொய்சாள வம்சத்தின் ஆட்சியாளர்கள் காலத்தில் ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியில் உள்ள பாடலகங்கையில் இருந்து ஸ்படிக சிவலிங்கங்களை சேகரித்து அவற்றைப் பயன்படுத்தி ஏராளமான கோயில்களைக் கட்டினார்கள். அன்றிலிருந்து மகாராஷ்டிரர்கள் ஸ்ரீசைலத்தை தெற்கு காசி என்று அழைக்கின்றனர். 

ரெட்டி மன்னர்களின் காலம் கிபி 1325-1448 ஆம் ஆண்டு வரை ஸ்ரீசைலத்தின் பொற்காலம் ஆகும். இந்த வம்சத்தின் அனைத்து ஆட்சியாளர்களும் கோயிலுக்கு சேவைகள் செய்து கொண்டாடினர். பிரோலயவேமா என்ற ரெட்டி மன்னன் ஸ்ரீசைலம் மற்றும் பாதாளகங்கைக்கு படிக்கட்டுப் பாதையை அமைத்தார். அனவெமரெட்டி வீரசிரோ மண்டபம் கட்டினார்.

விஜய நகர சாம்ராஜ்யத்தில் கிபி 1336-1678 ஸ்ரீசைலத்தில் கட்டுமானப் பணிகள் பல நடைபெற்றிருக்கிறது. அப்போது ஸ்ரீசைலத்திற்கு பல கிராமங்களை தானமாக வழங்கினார்கள்.  விஜயநகரப் பேரரசின் இரண்டாம் ஹரிஹரராயர் மல்லிகார்ஜுனா கோயிலின் முகமண்டபத்தைக் கட்டினார். மேலும் கோயில் வளாகத்தின் தெற்குப் பகுதியில் ஒரு கோபுரத்தையும் எழுப்பினார்.

கத்யவேமா ரெட்டி கிபி 1405 இல் ஸ்ரீசைலத்திற்கும் பெடகோமதி வேமா ரெட்டி பாதலகங்காவிற்கும் படிகளை அமைத்தார்.

கிருஷ்ணதேவராயர் கிபி 1516 இல் போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பும் போது இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு சாலு மண்டபங்களைக் கட்டினார். கோவிலின் ராஜகோபுரத்தையும் கட்டினார்.

பின்னர் முகலாயப் பேரரசர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினர். மேலும் இந்த இடம் கர்னூல் நவாபுகளுக்கு ஜாகிர் என்று வழங்கப்பட்டது. முகலாய பேரரசர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த இடம் ஹைதராபாத் நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கிபி 1800ல் நிஜாம் கர்னூல் மாவட்டத்தை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்த போது மேஜர் மன்றோ மாவட்டத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நிர்வாகத்தை மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 1929 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நிர்வாகத்திற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.1949 ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த இக்கோயில் 1956 ஆம் ஆண்டு முதல் அதன் பழைய பெருமையைப் பெற்றது.

சாதவாகனர்கள் இக்ஷவாகுகள் பல்லவர்கள் விஷ்ணுகுண்டிகள் சாளுக்கியர்கள் காகத்தியர்கள் ரெட்டி மன்னர்கள் விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் சத்ரபதி சிவாஜி போன்ற புகழ்பெற்ற பேரரசர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கோயிலிலும் அதைச் சுற்றிலும் சுமார் 116 கல்வெட்டுகள் உள்ளன திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் திருப்பதிகங்களில் இத்தலம் திருப்பருப்பதம் என்றும் சுந்தரர் திருப்பதிகத்தில் சீபர்ப்பதம் என்றும் குறிக்கப்படுகிறது. தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.