ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 702

கேள்வி: இறைவனை நம்புகின்ற புண்ணிய ஆத்மா ஒன்று சில நேரங்களில் இறைவனுக்கு எதிரான பாவ காரியத்தில் பங்கேற்க வேண்டிய விதி அமையும் போது அந்த பாவம் அந்த ஆத்மாவை சேருமா?

இறைவன் கருணையால் ஒருவன் இறைவனை பூஜிக்கிறான் அல்லது இறைவனை எதாவது அபவாதமாக பேசுகிறான். இறைவன் இருப்பதை ஒத்துகொள்கிறான். ஆனால் ஏதோ ஒரு சினத்திலே இறைவனை அப்படி தூஷிக்கிறான். அதை சராசரி மனிதன் செய்தால் இறைவனோ மகான்களோ மற்றவர்களோ அவன் அறியாமையில் இருக்கிறான் என்று பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பல கோடி தவங்கள் செய்து மனிதனை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் தேவனாகவோ யக்ஷனாகவோ இருக்கக் கூடிய ஒருவன் எதாவது ஒரு சிறிய வருத்தத்தால் இறைவனை தூஷித்து ஆனால் மற்ற தேவதைகளை மகிழ்விப்பதற்காக யாகங்கள் செய்தால் இறைவனை தூஷிக்கிறானே நாமெல்லாம் யாகத்திற்கு செல்லக்கூடாது என்ற சிறிய சிந்தனைகூட யாருக்கும் இராதா?

எதற்காக தக்ஷன் (செய்த) யாகத்தில் எல்லோரும் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? விதி. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு அருகில் இருந்தாலும் இறைத் தன்மையை எந்த ஆத்மா பரிபூரணமாக புரிந்து கொள்கிறதோ அது வெறும் பார்வையாளனாகத்தான் இருக்கும். அது எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. எதாவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் தாமரை இலை தண்ணீர் போல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நீ கூறியது போல் பாவம் என்பது வராமல் இருக்கும். ஆனால் அதிலேயே மூழ்கி விட வேண்டிய நிலையில் மனிதனோ தேவர்களோ மற்ற தேவதைகளோ ஈடுபடுவதால்தான் இதுபோல் நிலை உருவாகிறது.

லிங்க பிள்ளையார்

அரளிப்பட்டி அரவங்கிரிக் குன்றின் குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத் திருமேனியில் பிள்ளையார் லிங்கமாக ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்க பாணத்தில் உள்ளது. காலம் எட்டாம் நூற்றாண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 701

கேள்வி: பிறவி எடுக்கும் போதே இன்னவிதமான பாவ காரியங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கப் படுகின்றதா? ஆம் எனில் அப்படி ஏற்கனவே விதிக்கப் பட்ட பாவ காரியங்கள் செய்யும் போது அந்த பாவத்திலிருந்து விலக்கு உண்டா?

இறைவன் அருளால் நீ கூறுவதை உண்மை என்று வைத்துக்கொண்டு பார்ப்போம். விதிக்கப்பட்டது அல்லது விலக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுதே ஒருவன் உடல் பலம் எதற்கு பெற வேண்டும்? பிறரோடு போரிட வேண்டும் என்றால் உடல் பலம் வேண்டும். பிறரோடு போரிடுவதையே முட்டாள்தனம் என்று நாங்கள் கூறும் பொழுது போர் என்பது அடிப்படையில் மனிதனுக்கு தேவையில்லாத விஷயம். அடுத்த நிலையிலே அப்படி ஒருவன் வாழ வேண்டும் என்ற குடும்பத்திலோ அல்லது ஒரு சூழலிலே பிறப்பு எடுக்கிறான் என்றாலே என்ன பொருள்? அந்த பாவத்தை செய்துதான் ஆகவேண்டும் என்கிற ஒரு பிறப்பு எடுக்க வேண்டுமானால் அவன் என்ன பாவத்தை ஏற்கனவே செய்திருப்பான்? எனவே பாவத்தை செய்யாமல் இருந்தால் தவிர்க்க முடியாமல் பாவத்தை செய்ய வேண்டிய அல்லது ஒரு பாவத்தை செய்து கொண்டே அதற்கு ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய நிலைமை ஒரு மனிதனுக்கு வராது. வேதங்களிலோ அல்லது எம்போன்ற மகான்களோ இதுபோல் விலங்குகளைக் கொன்று இவர்கள் இவர்கள் உண்ணலாம். இவர்கள் இவர்கள் உண்ணத் தேவையில்லை என்று கூறவில்லை. இவைகள் அனைத்துமே இடைசெருகல்களே எந்த இடத்திலும் இறைவனோ ஞானியர்களோ இதுபோன்ற விஷயங்களைக் கூறவில்லை. போதிக்கவில்லை. மனிதன் தன் சுயநலத்திற்கேற்ப இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 700

கேள்வி: ஞானம் பற்றி:

இறையருளால் இயம்பிடுவோம் இத்தருணம். இறை வணங்கி அறம் புரிய என்றென்றும் நலமாம். இடைவிடாத பிரார்த்தனைகள் நலத்தை சேர்க்கும். அறிவு என்றால் என்ன? பலவற்றை அறிந்து கொள்வது அறிவு. புத்திசாலிதனம் என்றால் என்ன? நீ அறிந்து கொண்ட அறிவை நடைமுறையில் பயன்படுத்த தெரிந்து கொண்டல் நீ புத்திசாலி. அதாவது மின்சக்தி எனப்படுவது மிகவும் அதிர்சியைத் தரக்கூடியது. அதை தீண்டினால் உயிருக்கே ஆபத்தாகும் என்பது ஒருவன் அறிந்த அறிவு. ஆனால் அதை தீண்டக்கூடாது என்ற உணர்வோடு அதனோடு அவன் ஒரு செயல்பாட்டை வைத்துக் கொண்டால் அது புத்திசாலித்தனம். எனவே இந்த அறிவும் புத்திசாலிதனமும் எங்கு தோற்கிறதொ அங்கு ஞானம் பிறக்கிறது. எனவே இந்த உலகிலே பார்க்கின்ற நிகழ்ச்சிகள் பொருள்கள் அனைத்தும் மனிதப் புலன்களுக்கு உட்பட்டெ இருக்கிறது. மனிதப் புலன்களுக்கு உட்படாத எத்தனையோ விசயங்கள் இருக்கிறது. மனிதனால் பார்த்து உணர முடியாத கேட்டு உணர முடியாத நுகர்ந்து உணர முடியாத தொட்டு உணர முடியத எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. அதை புரிந்து கொள்ளுதல் அதை அறிந்து கொள்ளுதல் அதை நோக்கி செல்லுதல் இது ஒருவகையான ஞானம் தெய்வீக ஞானம்.

அடுத்தது மனத உடலோடு இருந்தாலும் உடல் சார்ந்த இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உள்ளத்தை இறையை நோக்கி வைத்து பற்றற்று தெய்வீக விழிப்புணர்வோடு வாழ்ந்து இந்த உடல் கூட ஒரு பாரம் போல் எண்ணி தன்னையே மூன்றம் மனிதனைப் போல் பார்த்து நல்லதை மட்டும் எண்ணி நல்லதே செய்து நல்லதையே உரைத்து வாழ்வதே உண்மையான தெய்வீக ஞானம். அதை நோக்கி செல்ல நீ முயற்சி செய்யலாம். ஆனால் இந்த பிறவியிலே வெற்றி அடைவாய் என்று உறுதியாக கூற இயலாது. வெற்றி அடையவேண்டும் என்று உறுதியோடு இருந்தால் பல்வேறு சோதனைகளைத் தாண்டி நீ வரவேண்டும். அதற்கு உன் உள்ளம் தயாராக இருக்க வேண்டும். பற்று விடுதலே ஞானமாகும்.

இதுபோல் முழுக்க முழுக்க லோகாய விஷயங்களுக்காகவும் புலன் ஆசைகளுக்காகவும் மட்டும் வாழக்கூடிய மனிதர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். இது ஒரு வகையில் அவனவன் கர்ம வினை என்றாலும் கூட இதனையும் மீறி போராடித்தான் வர வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ யோக நிலையை நோக்கி ஞான மார்கத்தை நோக்கி நிஜமாகவே செல்லக் கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உலகிலே சராசரி விஷயங்களும் சாமான்ய விஷயங்களும்தான் சாமான்ய மனிதர்களால் எப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. இதுபோல் சித்தர்களின் நாமத்தை உச்சரிப்பதாலோ சதாசர்வகாலம் சித்தர்களைப்பற்றி விவாதம் செய்வதாலோ மட்டும் ஒருவருக்கு ஞானம் வந்து விடுவதில்லை. இதுபோல் சித்தர்களைப் பற்றி பேசுவதாலும் இறைவனைப் பற்றி பேசுவதாலும் சில மந்திரங்களை உச்சரிப்பதாலும் ஏதாவது நன்மை கிட்டாதா? அல்லது லோகாயதத்தில் உள்ள கஷ்டங்கள் விலகாதா? என்றுதான் பல மனிதர்கள் வருகிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அதுவும் குற்றமில்லை என்று தோன்றினாலும் கூட அதனையும் தாண்டி மெய்யான ஞானத் தேடலான மனிதக் கூட்டம் ஒன்று இருந்தால்தான் அந்த மனிதக் கூட்டத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு எதனையும் செய்தால்தான் கூடுமானவரை பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். மற்றபடி எமது வழியில் வருகின்ற பல்வேறுபட்ட மனிதர்களாக இருந்தாலும் ஆன்ம நேய மனிதர்களாக இருந்தாலும் உள்ளே உள்முகமாக அகத்திலே பெருந்தன்மை இல்லாததால் உள்ளே வளராமல் இருப்பதால் இதுபோல் மாந்தர்களோடு உறவு வைத்துக் கொண்டால் பெயரளவிற்கு ஆன்மீகம் இருக்குமே தவிர உண்மையான ஆன்மீகமாக இராது. செம்பிலே உள்ள களிம்பை நீக்கிவிட்டால் செம்பு தன்னால் ஒளிர்வது போல ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பூர்வீகத்தில் அது எந்த பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்ததோ அந்த ஆத்மாவின் சாயல் இருக்கும். ஆனால் ஆசா பாசங்களும் கர்மங்களும் மாயைகளும் மூடியிருப்பதால் அது உணர்வது இல்லை. இவற்றை உணரத் தொடங்கும்போது உலகியல் அதை உணர விடாது செய்யும். அதை மீறிச் செல்வதற்கு மனத்துணிவு வேண்டும். மன ஆற்றலை திடத்தை தைரியத்தை அதிகரித்துக் கொண்டால் ஆன்ம ஞானத் தேடலில் வெற்றி பெறலாம்.

அனைத்து பற்றியும் அதைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது உறவு பற்றியும் கவலை கொள்ளாது கவலை பற்றியும் கவலை கொள்ளாது பிரிவு பற்றியும் கவலை கொள்ளாது பிறர் பரிவு பற்றியும் கவலை கொள்ளாது தெளிவு பற்றியும் கவலை கொள்ளாது குழப்பம் பற்றியும் கவலை கொள்ளாது தனம் பற்றியும் கவலை கொள்ளாது குணம் பற்றியும் கவலை கொள்ளாது பிறர் சினம் பற்றியும் கவலை கொள்ளாது தினம் தினம் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது பற்றி பற்றி வாழாது பற்றா பற்றி வாழ இறை அருளுமப்பா.

கடமை ஆற்றுவது என்பது வேறு. கவலை கொள்ளுவது என்பது வேறு. இல்லிற்க்கும் (இல்லம்) ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டும். கடமைகளை தட்டிக் கழிக்க யாங்கள் சொல்லவில்லை. கடமைகளை சுமைகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்றுதான் கூறுகிறோம். வாழ்வை எளிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அண்ட (உலக) லட்சியத்திற்க்காக ஏங்குவதைவிட அகண்ட லட்சியத்திற்காக ஏங்கி உழைக்க வேண்டும். இன்பம் துன்பம் என்ற நிலைதாண்டி வாழ முயல்வதே மெய் ஞானமாகும்.

ஞானம் அடைய வேண்டும். ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே தாய் தந்தை உற்றார் உறவினர் சூழல் எதுவாக இருந்தாலும் கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார் தந்தை சிரமப்படுகிறார் என்று எண்ணும்பொழுதே மீண்டும் மனிதன் மாய வலைக்குள் சிக்கிவிடுகிறான். எனவே ஒவ்வொரு உடலும் தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெற்று வந்த கர்மங்களின்படி அதன் வாழ்வின் போக்கும் சிந்தனைகளும் சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன. இருந்த போதிலும் துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த ஒரே வழி பிரார்த்தனை. (பித்ரு தோஷங்களும் தந்தை வழி தாய் வழி முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால் இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு ஆலயத்தில் மீன்களுக்கு உணவு இராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால் முன்வினை இருக்கிறது. என்று பொருள். முன்வினை குறையக் குறைய துன்பங்கள் குறைந்து கொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை. தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒரு வகை.

சிவநந்தி துர்கா

சாளுக்கியர்களின் முதல் தலைநகரம் மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. இங்கு சிவநந்தி துர்கா கோவில் உள்ளது. கிபி 6 ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கிபி 12 ஆம் நூற்றாண்டு வரை இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு 125 க்கும் மேற்பட்ட கோயில்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளது. இடம் ஐஹோல் கர்நாடகா.

சாமுண்டி

இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு இவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகளில் சடல குண்டலங்கள் தோள்களை வருடுகிறது. கொண்டையின் முகப்பில் மண்டையோடு உள்ளது. வலக் கையில் சுரைக் குடுவை உள்ளது. இடம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோளக்குடிக் குடைவரை கோவில். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை கோயில் கோளக்குடிதான்.