கேள்வி: திருவட்டாறு (கன்னியாகுமரி மாவட்டம்) ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி?
எல்லா ஸ்தலங்களிலும் எல்லா வகையான பாக்கியங்களையும் ஒரு மனிதன் பெறலாம். இது பொது நியதி. பிறகு எதற்கு எந்த பிரச்சனை என்றால் இந்த ஸ்தலம் செல்ல வேண்டும் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள்? என்றால் அப்படியாவது அந்த பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அந்த பிரச்சனை யாரை வாட்டுகிறதோ அந்த மனிதன் அதனை ஒருமுகமாக எண்ணி இதோ இந்த ஆலயத்திற்கு வந்துவிட்டேன். இதோ மனம் ஒன்றி இந்த இறைவனை வணங்கிவிட்டேன். எனவே இந்த பிரச்சனை இனி என்னை விட்டுப் போகும் என்று ஒரு தீவிர நம்பிக்கையை கொண்டு வருவான். அதற்காகத்தான் இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எல்லா ஆலயங்களும் சிறப்புதான். இருந்தாலும் இன்னவன் கூறுகின்ற ஆலயமும் ஐாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள் புதன் தோஷம் இருப்பவர்கள் அதனை சார்ந்து (லோகாய ரீதியாக மட்டும் கூறுகிறோம். இதனை வேறுவிதமாக புரிந்து கொள்ளக்கூடாது) லோகாய ரீதியாக எத்தனைதான் உழைத்தாலும் செல்வம் சேரவில்லை. செல்வம் வந்தாலும் நேரிய வழியில் செலவை விருப்பம் போல் செய்ய முடியாமல் வீண் வழியில் செல்கிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் சென்று வணங்கக்கூடிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இன்னும் பல்வேறு சிறப்புகளை காலப்போக்கில் புரிந்து கொள்ளலாம்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. ராமாவதாரம் முடிந்த பின்பு தோன்றிய பழமையான கோயில். 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். கோயில் தல விருட்சம் புன்னை மரம். மூலவர் ஸ்ரீரங்கநாதர். பாற்கடலில் பள்ளி கொண்ட சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால் சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை பிரம்மா பூஜிக்கிறார். உற்சவர் நம்பெருமாள். தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். தீர்த்தம் சந்திர புஷ்கரணி வில்வ தீர்த்தம் சம்பு தீர்த்தம் பகுள தீர்த்தம் பலாச தீர்த்தம் அசுவ தீர்த்தம் ஆம்ர தீர்த்தம் கதம்ப தீர்த்தம் புன்னாக தீர்த்தம் என்று 9 தீர்த்தங்கள் உள்ளன. விமானம் பிரணாவாக்ருதி. புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு சேத்ரங்களில் ஒன்று. பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கம் மற்றும் 11வது தலமான திருச்சிறுபுலிர் ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும் தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. மற்ற திவ்யதேசங்களில் 9 ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். ஸ்ரீரங்கம் பெருமாள் பிரம்ம லோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள் ஆவார். சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளுக்கு மேலாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் உள்ள பாடல்களில் இதற்கான குறிப்புகள் உள்ளது. அகநானூறில் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.
மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி கைகளில் சங்கு கரம் அமிர்த கலசம் மற்றும் அட்டைப் பூச்சியுடன் காட்சி தருகிறார். ரங்கநாதர் சன்னதி எதிரில் கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. இவர் கையில் வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. ஸ்ரீதேவி பூதேவி இருவரும் பெருமாளுடன் அனைத்து கோவில்களிலும் இருப்பார்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும் அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இந்தத் தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும் போது மத்தளம் எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயக்கப்படுகின்றன. சிலப்பதிகாரம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. திருக்கோயில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைமிக்க ஒரு நாகரிகப் பண்பாடும் மற்றும் பேரரசுகளை கண்ட வரலாறு உள்ளது.
பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும் தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன் இட்சுவாகு வேண்டுகோளின்படி தான் தினமும் பூஜித்த வந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார். இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால் ராவணனை அழித்த பின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். இலங்கை செல்லும் வரை சிலையை எங்கும் கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான் விபீஷணன். வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான் அச்சிறுவனிடம் சிலையை கொடுத்து எக்காரணம் கொண்டும் இதனை கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான். பின்னர் விபீஷணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான். சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். தன் முழு வலிமையை பயன்படுத்தி எடுக்க முயன்றான் அவனால் எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான் கலங்கினான். பின் சிறுவனாக வந்த விநாயக பெருமான் தன்னை வெளிப்படுத்திக் காட்டினார். சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது. அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும். திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக் கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். விபீஷணனுக்காக தான் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். அங்கு சோழ நாட்டை ஆண்டு வந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். சோழ மன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுது விட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார்.
பல ஆண்டுகளுக்குப்பின் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் என்ற அரசன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்த போது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான் அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. அப்போது அவனுக்கு ஏற்கனவே வந்த கனவு ஞாபகம் வந்தது அதன் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில் சுவரும் கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ பாண்டிய விஜயநகர மன்னர்கள் ஆழ்வார்கள் ஆச்சார்யார்களின் தொடர் பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது.
இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது. கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இரு பக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர் சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரிய பெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு தாமரை வடிவங்களில் சங்கநிதி பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் அவரது மனைவி மகன் மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து வண்ணம் தீட்டி வைக்கப்பட்டுள்ளது. மூலவர் உற்சவர் தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண் பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு (தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.
அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. விமானத்தில் மேல் ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும் உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.
ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். வாத்தியத்திற்கு பெரிய மேளம். பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.
மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது வைகுண்ட ஏகாதேசி என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன. இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம் பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியார்களுக்கு 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி 27 ஆகஸ்டு 2014 இல் நடைபெற்றது. இதே போன்று இக்கோயிலில் 1957ஆம் ஆண்டு துரைபிரதட்சணம் மண்டபத்தில் 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. 1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிசேகம் நடைபெறுகிறது. இக்கலசங்கள் 81 கலசங்கள் பிரம்ம பதம் என்றும் 520 கலசங்கள் தேவ பதம் என்றும் 400 கலசங்கள் மானூஸ் பதம் என்று அமைக்கப்பட்டிருக்கும். வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும் பாடவும் செய்வார்கள். ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் ஆடிப் பெருக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே நடத்துவாள்.
ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும் சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை வளையல் குங்குமம் வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள். கார்த்திகை கைசிக வளர்பிறை ஏகாதசியன்று இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த விழா நடக்கிறது. கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும் போர்வை அணிவிப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. ரங்கநாதருக்கு அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா பூபதி திருநாள் என்றே அழைக்கப்படுகிறது. இதை ராமனே நடத்துவார். கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள் அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில் வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருட பஞ்சமியன்று கருடாழ்வாருக்கு பருப்பு வெல்லம் கொழுக்கட்டை படைத்து மல்லிகைப்பூ மாலை மஞ்சள் வஸ்திரம் அணிவித்து இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். ரங்கநாதர் சன்னதி எதிரில் கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர் இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கப்படுகிறது. அவருக்கு அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன் அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.
திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது. டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள் இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் என்னும் ஊர் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நகரம் ஆகும். அந்த நகரத்தில் இக்கோயில் ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 631000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள் வணிக நிறுவனங்கள் தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. கோவில் கோபுரங்களில் மிகப் பெரிதான இராஜகோபுரம் 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன் தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும் 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம் அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும் 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டுவதற்கு 1.7 கோடி செங்கற்கள் 20000 டன் மணல் 1000 டன் கருங்கல் 12 ஆயிரம் டன் சிமெண்ட் 130 டன் இரும்பு கம்பிகள் 8000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டது.
வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர் இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் உள்ளது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. வைணவத்தின் மையத் தலைமைச் செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களமாக இருந்துள்ளது.
கோவிலில் எழு என்ற எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது அவை கோவிலின் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் ஆகும்
மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று பூலோகம் திரிவிக்ரம சோழன் சுற்று புவர்லோகம் அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று சுவர்லோகம் திருமங்கை மன்னன் சுற்று மஹர்லோகம் குலசேகரன் சுற்று ஜநோலோகம் ராஜ மகேந்திர சோழன் சுற்று தபோலோகம் தர்ம வர்ம சோழன் சுற்று சத்யலோகம்
பெரிய என்ற 7 சொற்கள் கொண்டவைகள்
பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் பெரிய கருடன் பெரிய வசரம் பெரிய திருமதில் பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
ஸ்ரீரங்கம் கோவிலில் திருவிழாக்களில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். அந்த 7 திருவிழாக்கள்
விருப்பன் திருநாள் வசந்த உத்சவம் விஜயதசமி வேடுபறி பூபதி திருநாள் பாரிவேட்டை ஆதி பிரம்மோத்சவம்.
நம்பெருமாள் நெல்லளவு காணும் மாதங்கள் 7
சித்திரை வைகாசி ஆடி புரட்டாசி தை மாசி பங்குனி
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். இந்த ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
கோடை உத்சவம் வசந்த உத்சவம் ஜேஷ்டாபிஷேகம் உத்சவம் திருப்பாவாடை உத்சவம் நவராத்ரி உத்சவம் ஊஞ்சல் உத்சவம் அத்யயநோத்சவம் பங்குனி உத்திரம்.
கீழ்கண்ட ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்
பூச்சாண்டி சேவை கற்பூர படியேற்ற சேவை மோகினி அலங்காரம் ரத்னங்கி சேவை வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம் உறையூர் ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை தாயார் திருவடி சேவை ஜாலி சாலி அலங்காரம்
பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.
நாழிகேட்டான் கோபுரம் ஆர்யபடால் கோபுரம் கார்த்திகை கோபுரம் ரெங்கா ரெங்கா கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் ஐஐ தெற்கு கட்டை கோபுரம் ராஜகோபுரம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு 7 உற்சவங்கள் நடைபெறும்.
இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள் ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றார்கள். கம்பர் அதை நரசிம்மரே சொல்லட்டும் எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர் கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு கம்பரின் கூற்று உண்மை என ஆமோதித்து தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர் தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது கரம் கிடையாது. சன்னதி எதிரில் கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.
ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் வெட்டப்பட்ட பெரிய அரைக்கோள வடிவிலான வைரம் ஒன்று திருவரங்கம் அரங்கநாதரின் கண்களாக இருந்ததாக அறியப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கர்நாடக போர்களில் இடம் பெற்ற ஒரு பிரான்சு வீரன் இந்துவாக மதம் மாறி திட்டமிட்டு கோயிலின் கருவறைக்குள் நுழைந்து இந்த வைரத்தை திருடி பின்னர் சென்னையில் ஒரு பிரிட்டிஷ் மாலுமிக்கு விற்றான். கிபி 1750 லிருந்து பல அயல் நாட்டு வணிகர்களின் கைமாறி ஆம்ஸ்டர்டமில் கிரிகோரி கிரிகொரிஏவிச் ஆர்லவ் எனும் ரஷியரால் 400000 டச்சு ஹுல்டென் கொடுத்து வாங்கப்பட்டு ரஷ்யா அரசி இரண்டாம் கத்ரினுக்கு பரிசளிக்கப்பட்டது. இதன் பின்னர் ரஷ்யாவின் ராஜாங்க கருவூலத்தில் காக்கப்பெற்று இன்றளவும் ரஷ்யாவின் மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பெற்றுள்ளது. இந்த வைரத்திற்கு ஒற்லோவ் வைரம் என்று பெயரிடப்பட்டது. சுமார் 190 காரட் (அதாவது 38 கிராம்) எடை உள்ள இந்த வைரம் தற்போது மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் உள்ளது.
சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. கோவில் வரலாறு 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்டது ஆகும். கோவில் வரலாறு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. 105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன் இரண்டாம் பராந்தகன் ராஜராஜன் ராஜேந்திரன் குலோத்துங்கன் விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும் ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர்.
கிபி 1311 லும் 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப்பட்டது. 1331 படையெடுப்பிற்கு முன் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கத்தின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின் உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப்பட்டது. இந்த நிகழ்வு 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள் நாயக்கர்கள் தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர். இஸ்லாமியப் படையெடுப்பால் கருடரின் நிலை அழிக்கப்பட்டதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. கி.பி.1415 மற்றும் 15 16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது கிபி 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.
திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து திருப்பணிகள் புரிய 1966 இல் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர் ஜார்ஜ்ரைட் ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும் அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ஆம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் எண்ணிக்கை
திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்திருக்கிறார். இத்தலத்தில் ஆண்டாள் திருப்பாணாழ்வார் துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
கேள்வி: பெரம்பலூர் அருகில் உள்ள பிரம்மரிஷி மலையில் 210 சித்தர்கள் வாழ்வதாக சொல்லப்படுவது பற்றி?
மலைகளில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? ஆலயத்தில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? பழனியில் போகர் இருக்கிறாரா? இல்லையா? கோரக்கர் பொய்கை நல்லூரில் இருக்கிறாரா? இல்லையா? இதுபோன்ற விவாதங்கள் காலகாலம் இருந்து கொண்டுதான் இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு சென்று வழிபடக்கூடிய மனித மனதில் பக்தி இருக்கவேண்டுமப்பா. பக்தியோடு ஒருவன் தன் இல்லத்திலிருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள். இதற்காக வனத்திற்கு (காட்டிற்கு) செல்ல வேண்டும் மலைக்கு செல்ல வேண்டும் என்பதல்ல. ஆனால் தேகம் நலமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு மூலிகைகளின் காற்று அவசியம். அதனால்தான் இது போன்ற மலை பிரயாணத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எனவே நீ கூறிய இடத்தில் மட்டுமல்ல சித்தர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மனிதன் மனதிலே களங்கமில்லாமல் தூய எண்ணத்தோடு பிராத்தனை செய்தால் சித்தர்களின் அருளாசி கட்டாயம் கிட்டும்.
கேள்வி: மாயன் காலண்டர்படி 2012 இல் அழிவு ஏற்படும் என்ற செய்தி பற்றி
எந்த பாதிப்பும் ஏற்படாதப்பா. இது போன்ற வானியல் நிகழ்வுகள் மனித கண்களுக்குப் புலப்படாமல் அன்றாடம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அண்ட பிரபஞ்சங்கள் இயங்கும் போது அந்த இயக்கத்தின் காரணமாக சில எதிர் விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதற்கும் அழிவற்கும் எந்த தொடர்பும் இல்லை.
கேள்வி: ஸ்ரீவித்யா உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் ஸ்ரீசக்ரமகா மேருவின் சிறப்பையும் விளக்குங்கள்
இறைவன் அருளால் இன்னவன் கூறிய பூஜைக்கு மட்டுமல்ல எல்லா வகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் போதும் ஒரு மனிதன் ஒழுக்கமாக நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா. பூஜை செய்கிறேன் என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ தன்னை இடர்படுத்திக் கொள்வதோ அல்ல. எனவே மனோரீதியாக ஒருவன் மனித நேயத்தை வளர்த்துக் கொண்டு மனதை செம்மைபடுத்த மனதை வைராக்யப்படுத்த மனதை வைரம் போல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அந்த பூஜையை செய்து அதனால் மனசோர்வு என்றால் அவன் அந்த பூஜையையே செய்யத் தேவையில்லை. எனவே சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.
இந்த ஸ்ரீசக்ர மந்திரங்களை முறையாக உபதேசமாக தக்க மனிதரிடம் பெற்று முறையாக ஒருவன் அந்த பூஜையை செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதை நாங்கள் ஒரு பொழுதும் மறுக்கவில்லை. ஆனால் அங்கே வெறும் பூஜை என்ற அளவில் மட்டும் மனித நேயம் புறக்கணிக்கப்பட்டால் அந்த பூஜையால் எந்த பலனும் இராது என்பதை கூறிக்கொள்கிறோம். இந்த பூஜைகள் (ஸ்ரீவித்யா மார்க்க பூஜைகள் – அன்னை ஸ்ரீலலிதாம்பிகையின் தச மகாவித்தை) ஒரு மனிதனின் பல்வேறு பிறவிகளின் பாவங்களைப் போக்கும். போக்குவதோடு குண்டலினி சக்தியையும் மேலே எழுப்பும். முறையாக ஸ்ரீசக்ர உபதேசம் பெற்று தன் வாழ்நாள் முழுவதும் நித்ய ஸ்ரீசக்ர பூஜையை ஒருவன் செய்தால் பரிபூரண தவத்திற்கு சமமப்பா.
கேள்வி: புறசடங்குகள் பற்றி
ஆத்மார்த்தமான பக்திதான் முக்கியம். இயன்ற தர்மங்கள் பிராத்தனைகள் தாம் முக்கியம். பரிகாரங்களை விட மனம் ஒன்றிய பிராத்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை.
ஒரு மனிதனை அவனுடைய மன எண்ணங்கள் தாறுமாறாக அழைத்துச் செல்கிறது. பஞ்ச புலன்களும் மனதிற்கு கட்டுப்படாமல் விருப்பம் போல் அலைகிறது. ஒரு மனிதன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கருதினால் முதலில் தன்னுடன்தான் யுத்தம் செய்ய வேண்டும். தன்னைத்தான் யுத்தம் செய்து எவன் வெல்கிறானோ அவனுக்குத்தான் பிறரை வெல்லக்கூடிய யோக்யதை வருகிறது. தன்னையே வெல்லமுடியாத ஒருவன் எப்படி பிறரை வெல்ல முடியும்? எனவே மனிதர்கள் செய்கின்ற போர் அல்லது யுத்தம் என்பதெல்லாம் எம் போன்ற ஞானிகளால் ஏற்கப்படக்கூடிய நிலையில் என்றுமே இல்லை. ஆனால் விதி அப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் அது நடந்துவிட்டுப் போகட்டும் என்று நாங்கள் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருப்போம். அதே சமயம் பகவான் கிருஷ்ண பரமாத்மா யுத்தம் என்று கூறும் பொழுது இந்த யுத்த தர்மத்தை அப்படி வகுத்ததன் காரணம் யுத்தமே செய்யக்கூடாது. செய்யக்கூடிய நிலை வந்தால் எதற்காக செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? அந்த யுத்தத்தில் யார் யார் என்ன விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்? என்றெல்லாம் அவர் போதித்தது உண்மை. ஆனால் யுத்தமே வேண்டாம் என்ற நிலையிலே இதுபோன்ற விதிமுறைகளே தேவையில்லை. அடுத்ததாக யுத்தமே வேண்டாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினாலும் ஆதியிலிருந்தே கூறி வந்திருக்கிறார். அதை யாரும் கேட்பதாக இல்லை. முதலில் பாண்டவர்களே கேட்பதாக இல்லை. எனவே விதி வழி மதி செல்கிறது. அதை இறைவனாலும் தடுக்க முடியாது என்பது போல அங்கே கிருஷ்ண பரமாத்மாவும் எம் போல் பார்வையாரகத்தான் இருந்திருக்கிறார்.
அடுத்ததாக தர்மத்திற்காக யுத்தம் செய்தால் யுத்தமே வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்குகின்ற மனிதரிடம் தேவையில்லாமல் யுத்தம் திணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அதை கர்மயோகமாக ஏற்று அவன் யுத்தம் செய்யும் பட்சத்தில் உடலை விட நேர்ந்தால் அவன் சொர்க்கம் செல்வான் என்பது வெறும் அந்த யுத்த நிகழ்வைப் பொறுத்ததல்ல. வாழ்க்கையின் அடிப்படையையும் சேர்த்துதான். வெறும் யுத்தத்தில் ஒருவன் வீரமரணம் அடைந்தால் வீர சொர்க்கம் அடைவான் என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது தெரியுமா? இல்லையென்றால் போர் என்றால் யாராவது துணிந்து வருவார்களா? தர்மம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்குமப்பா. உனக்கு பிணி வராது என்று கூறுகிறார்களே அதைப் போல் இந்த போரிலே கலந்து கொண்டால் இது நேர்மையான யுத்தம். நம் தேசத்தின் மீது எந்த தவறும் இல்லை. நீ நேர்மையாக யுத்தத்தில் ஈடுபடு. புறமுதுகிட்டு ஓடாதே. யார் வந்தாலும் எதிர்த்து நில். அதை மீறி உன் உயிர் போனால் உனக்கு மேலே சொர்க்கம் காத்திருக்கிறது என்று கூறி யுத்த பயத்தை நீக்குவதற்காக கூறப்பட்ட வாசகங்கள். இவை எங்களால் (சித்தர்களால்) ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாழ்க்கை முழுவதும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு யுத்தத்திலே ஒருவன் வீரமரணம் எய்தினால் அவன் தன் நாட்டிற்காக வீரமரணம் எய்தினாலும் அதற்காக அவனுக்கு இறைவன் சொர்க்கமெல்லாம் தரமாட்டார் இதை நன்றாக புரிந்துகொள்.
அப்படியென்றால் துரியோதனனுக்கு வீர் சொர்க்கம் கிடைத்தது என்பது பற்றி:
ஏற்கனவே கூறியிருக்கிறோம். அனைத்தும் நாடக கதாபாத்திரங்கள். அந்தக் கூத்தில் நடப்பதையெல்லாம் நிஜம் என்று எண்ணக்கூடாது.
கேள்வி: முன்னோர்கள் கடனை எப்படி கொடுப்பதென்று மீண்டும் எங்களுக்கு நினைவூட்ட வேண்டும்?
இறைவன் கருணையைக் கொண்டு சுருக்கமாக இத்தருணம் கூறுகிறோம். எத்தனையோ விதிமுறைகளும் விளக்கமான முறைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் எல்லாக் காலங்களிலும் பின்பற்றுவது மிக மிகக் கடினமப்பா. குறைந்தபட்சம் ஒரு தினம் ஒரு ஏழைக்காவது அன்னமிடுதல் வேறு தக்க உதவிகள் செய்தல் அன்றாடம் ஒரு ஆலயம் சென்று வழிபாடு குறிப்பாக பைரவர் வழிபாடு. அந்த நிலையிலே நிறைமதி (பெளர்ணமி) காலம் போன்றவற்றில் ஒரு சிறப்பான வழிபாடு இயன்றவரை தர்ம காரியங்கள் அதோடு மட்டுமல்லாமல் ஆ (பசு) கோட்டம் வைத்து நல்ல முறையிலே பராமரிக்கும் ஆலயங்களிலே ஆவினங்களுக்கு (பசுவினங்களுக்கு) இயன்ற உதவிகள் செய்தல் இங்கே ஆவினம் (பசு இனம்) என்று கூறுவது ஒரு குறிப்பாக. அதற்காக வேறு உயிர்களையெல்லாம் கவனிக்கக் கூடாது என்று பொருள் அல்ல. இறைவன் கருணையைக் கொண்டு இதோடு மட்டுமல்லாமல் வருடம் ஒரு முறையாவது தெய்வத்தீவு எனப்படும் இராமேஸ்வரம் சென்று வழிபாடும் இயன்ற வரையில் அங்கு தற்காலத்தில் 100 க்கு 100 புனிதமான முறையிலே திலயாகம் செய்யப்படாவிட்டாலும் அந்த மண்ணிலே பூஜை செய்வதால் சில நன்மைகள் வரும் என்பதால் யாங்கள் கூறுகிறோம். இயன்றவரை கூடுமானவரை அங்கு ஒரு தில யாகத்தை செய்து வருவதும் ஒரு முறை செய்துவிட்டால் போதும் மீண்டும் செய்ய வேண்டாம் என்ற கருத்தையெல்லாம் விட்டுவிட்டு வாய்ப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ அங்கு எல்லா வகையான யாகங்களோடும் தில யாகத்தை செய்வதும் அப்படியில்லாதவர்கள் அங்கு மூன்று தினங்கள் குறைந்தபட்சம் தங்கி இறை வழிபாடும் இயன்ற தர்ம காரியங்களை செய்வதும் ஏற்புடையதாகும். இவை எதுவுமே செய்ய இயலாதவர்கள் அன்றாடம் ஆலயம் சென்று பைரவரை வணங்குவதும் அதுவும் இயலாதவர்கள் இல்லத்திலே அமைதியாக அமர்ந்து 108 முறை பைரவர் காயத்ரி மந்திரத்தை உருவேற்றுவதும் அதுவும் இயலாதவர்கள் பைரவர் திருவடி போற்றி என்று கூறுவதும் இப்படி ஏதாவது ஒன்றை பின்பற்றினால் நல்ல பலன் உண்டு.
கேள்வி: ஜாகத்தின்படி ஒரு தோஷத்தைக் கொடுத்த இறைவன் அதில் ஏதாவது ஒரு நன்மையையும் வைத்திருப்பாரே? அது குறித்து?
இறைவன் அருளால் நன்றாய் கவனிக்க வேண்டும். இறைவன் யாருக்கும் தோஷத்தையும் பாவத்தையும் கொடுப்பதில்லை. மனிதனின் செயல்தான் அவனுக்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக மாம்பழத்தை உண்டால் வயிற்றுவலி வருவது போல ஒருவன் செய்கின்ற பாவங்கள்தான் தோஷமாக பாவமாக திசா புத்தி அந்தரமா ஏழரையாண்டு சனியாக வருகிறது. இறைவன் இதில் சாட்சியாகத்தான் இருக்கிறார். இருந்தாலும் இந்த கேள்வியின் மறைபொருளாக ஒவ்வொரு பாவ விளைவிற்குப் பின்னால் ஏதாவது ஒரு நன்மை இருக்குமே? என்று இன்னவன் கேட்கிறான் இருக்கிறது. சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். ஒருவனுக்கு ஏராளமான செல்வம் உயர்ந்த பதவி அழகான தோற்றம் நல்லதொரு உறவு சுகமான வாழ்வு நிலை இருந்தால் அப்படி இருக்கக்கூடிய எத்தனை மனிதர்கள் இறைவனை நோக்கி வருவார்கள்? நாடியை நோக்கி வருவார்கள். அதிகமாக தாகம் எடுப்பவர்கள் நீர்நிலையை நாடுகிறார்கள். அதிகமாக பசி உணர்வு வந்தால் உணவைத் தேடுகிற நிலை வந்து விடுகிறது. அதிகமாக துன்பப்படுகின்றவர்கள் கட்டாயம் ஏதாவது ஒரு நிலையிலே இறைவனை வெறுத்தாலும்கூட இறை வழிபாட்டை நோக்கி தள்ளப்படுகிறார்கள். எனவே துன்பங்களில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப்பெரிய பாக்கியம் இறை பக்தி வளர்வதுதான். ஒரு வகையில் மனிதனுக்கு வரக்கூடிய இன்பத்தைவிட துன்பம்தான் அவனை இறைவனை நோக்கி தள்ளுகிறது என்பதால் இறை பக்தி வளர்வதற்கு தர்மம் வளர்வதற்கு தன்முனைப்பு குறைவதற்கு கர்வம் குறைவதற்கு கட்டாயம் ஒரு மனிதனுக்கு அவன் ஜாதகத்தில் உள்ள தோஷம் மறைமுகமாக உதவி செய்கிறது.
கேள்வி : கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வெளிபிரகாரத்தில் தாங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது குறித்து:
இறைவன் அருளால் அங்கு மட்டும் என்று நாங்கள் இல்லையப்பா. எங்கெல்லாம் உள்ளன்போடு நினைக்கிறார்களோ அங்கெல்லாம் நாங்களும் ஏனைய மகான்களும் இருக்கிறோம்.
இதன்படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம். இறந்தவனுக்கு பிறப்பு நிச்சயம். இந்த நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது ஆகும் இதற்காக நீ வருந்துதல் தகாது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
மண்ணை வைத்து பானை செய்து உபயோகப்படுத்தலாம். பானை உடைந்தால் மீண்டும் அது மண்ணோடு மண் ஆகிறது. அந்த மண்ணில் மீண்டும் புதிய பானை செய்யலாம். அது போல் இறப்பு பிறப்பு என்பது எப்போதும் இருக்கும் ஒரு பொருளின் நிலை மாறுபாடே ஆகும். இந்த உலகத்தில் பிறந்தவைகள் அனைத்தும் இறப்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அதே போன்று இறந்தவைகள் அனைத்தும் மீண்டும் பிறப்பது உறுதி. இறப்பு பிறப்பு என்ற சுழற்சி தவிர்க்க முடியாதது இது இயற்கையாகும். ஆகவே அர்ஜூனா நீ வருத்தப்படாதே என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
கேள்வி: புற்று நோய் எதனால் வருகிறது? இதற்கு சித்த மருவத்தில் தீர்வு இருக்கிறதா?
இறைவன் அருளால் இது குறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம். பாவத்தின் தன்மை இதுதான். இதனால்தான் இந்த நோய் வருகிறது. இந்த துன்பம் வருகிறது என்று கூற இயலாது. ஒட்டு மொத்த பாவங்களின் விளைவுதான் கடுமையான நோய் கடுமையான பிணி. இருந்தாலும் பிறவி தோறும் புற்று மனிதன் மீது பற்று வைக்கிறது என்றால் அந்த அளவிற்கு அவன் பாவம் தொடர்கிறது என்பது பொருளாகும். புற்று மட்டுமல்ல எல்லா வகையான நோய்களுக்கும் மனித ரீதியான காரணங்கள் வேறு. மகான்கள் ரீதியான காரணங்கள் வேறு. வெளிப்படையாக ஒரு கிருமியால் அல்லது வெள்ளை அணுக்கள் அளவிற்கு அதிகமாக உற்பத்தியாவதால் இந்த நோய் வருவதாகக் கூறினாலும் கூட இந்த பல்வேறு பிறவிகள் பிறந்து பல்வேறு மனிதர்களின் குடும்பத்தை நிர்கதியாக்கி நிர்மலமாக்கி பல குடும்பங்களை வாழவிடாமல் அவர்களை மிகவும் இடர்படுத்தி பல மனிதர்களின் வயிற்றெரிச்சலை யார் ஒருவன் வாங்கிக் கொள்கிறானோ அவனுக்கு புற்று (நோய்) பிறவி தோறும் பற்று வைக்கும். இதற்கு மட்டுமல்ல எல்லா பிணிகளுக்கும் மருந்து இருக்கிறதப்பா கொல்லி மலையிலும் சதுரகிரி மலையிலும். ஆனால் புண்ணியமும் இறைவன் அருளும் இருப்பவனுக்கு மட்டும்தான் அந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்து கிடைத்தாலும் அவனுக்கு நல்லதொரு வேலையை செய்யும். இருந்தாலும்கூட பிராத்தனை எந்தளவிற்கு ஒரு மனிதன் மனம் நெகிழ்ந்து செய்கிறானோ அந்தளவிற்கு நலம் நடக்கும்.
கேள்வி: போக மகரிஷி அறிந்த ரகசியங்களில் ஒரு சிறிதேனும் அன்பர்கள் அறிந்து கொள்ள உபாயம் அருளுங்கள்
இறை அனுமதித்தால் தக்க காலத்தில் கூறுவோம். அதற்குள் அவரவர்கள் பிரச்சனைகளுக்கு அவரவர்களே அறிந்து கொள்ள பழனியம்பதிக்கு சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்கிவிட்டு அவரவர் இல்லத்திலே போகரின் உருவத்தை வைத்து முருகப் பெருமானின் உருவத்தை வைத்து அன்றாடம் பூஜித்து வணங்குவதும் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து அதிகாலையிலே போகனை நினைத்து நினைத்து நினைத்து துதி செய்தால் அவன் உள்ளிருந்து பலவற்றைக் காட்டித் தருவான். இன்னென்ன பிணிக்கு இன்னென்ன செய்தால் நன்மை உண்டு. உன் பிணிக்கு இதை செய்தால் போதும் என்று உள் உணர்வாகவே உணர்த்தி வழிகாட்டுவான்.
கேள்வி: எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் வேலைக்கு சென்று விட்டால் வீட்டுப் பணிகள் என்ன ஆவது?
இறைவன் அருளால் அப்படியெல்லாம் நீ கலக்கம் கொண்டிட வேண்டாமப்பா. ஏனென்றால் எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விடலாம் என்கிற நிலை வந்தாலும்கூட அப்பொழுதும் கலைமகள் (அன்னை சரஸ்வதிதேவி) அருள் கிட்டாமல் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு பணி வேண்டாமா? அவர்களெல்லாம் வீட்டுப் பணிகளை ஏற்க முன்வருவார்கள். இல்லப் பணிகளை என்னதான் பிறரை வைத்து செய்தாலும் கூட எத்தனைதான் வெளியில் சென்று பணியாற்றினாலும் கூட ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து செய்வதுதான் சிறப்பிலும் சிறப்பைத் தரும். நல்ல ஆக்கப்பூர்வமான அதிர்வெண்களைத் தரும்.