சுலோகம் -23

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #23

மிகவும் தீய புத்தியுடைய துரியோதனனின் நலனை விரும்பி எந்தெந்த அரசர்கள் இந்தப் படையில் போர் புரிய வந்திருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் துரியோதனனை ஏன் தீய புத்தியுடையவன் என்று கூறினான்?

ஆதிபர்வத்தில் அரக்கு மாளிகை கட்டி பாண்டவர்கள் அனைவரையும் குடும்பத்தோடு எரிக்க முயன்றது மற்றும் சூதாட்டத்திற்கு பின்பு திரெளபதியை சபையில் இருக்கும் அனைவருக்கும் முன்பாக துகிலுரிக்கச் செய்தது அதன் பிறகு செய்து கொண்ட உடன்படிக்கையின்படி பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஒரு வருட காலம் அஞ்ஞாத வாசமும் இருந்த பிறகும் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்க மறுத்தது மற்றும் தங்களுக்கு உதவி செய்ய வந்த மாமா சல்லியனையும் வஞ்சகமாக அவனது பக்கம் சேர்த்துக் கொண்டது இவை அனைத்தையும் செய்த துரியோதனனை அர்ஜூனன் தீய புத்தி உடையவன் என்று கூறினான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: துரியோதனனின் நலனை விரும்பி அவனுடன் யுத்தம் செய்ய வந்த அரசர்களை பார்க்கிறேன் என்று அர்ஜூனன் ஏன் கூறினான்?

தீய புத்தியுடைய துரியோதனனின் செயல்களை உலகத்திலுள்ள அனைவரும் அறிவார்கள். அவன் செய்யும் தீய செயல்களை அறிந்தும் அதை தடுக்கவோ அல்லது புத்தி சொல்லவோ இயலாமல் அவனுக்கு உதவி செய்ய பல அரசர்கள் வந்திருக்கிறார்கள். தீய செயல்களை செய்பவனுக்கு புத்தி சொல்லி திருத்துவதை விட்டு விட்டு இவர்களும் அவன் செய்யும் தவறுக்கு துணை போகிறார்கள். வந்திருப்பவர்கள் யார் யார் என்று தெரிந்து கொண்டு அதர்மத்திற்கு துணை போகின்றவர்களுக்கு அதன் விளைவை யுத்த களத்தில் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த அரசர்களை பார்க்க அர்ஜூனன் விரும்பினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 49

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு

இறையருளால் இயம்பிடுவோம் இத்தருணம் இறை வணங்கி அறம் தொடர எந்நாளிலும் நலமே. இடைவிடாத பிராத்தனைகள் மெய் தளராமல் மெய் உரைத்தல் என்றென்றும் மேன்மையாம். ஒரு மனிதனின் உடலை தாய் தந்தை உருவாக்கலாம். அது வெறும் மாமிசம் பிண்டங்கள்தாம். அதற்கு உள்ளே உயிர் அல்லது ஆத்மாவை எந்த கால கட்டத்தில் எந்த கிரக நிலை இருக்கும் போது நுழைக்க வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். அந்த ஆத்மாவின் பாவ புண்ய கணிதத்தை ஆராய்ந்து அது மறு பிறப்பில் எப்பேற்ப்பட்ட குடும்பத்தில் பிறக்க வேண்டும் எப்படிப்பட்ட தாய் தந்தை அரவணைப்பில் வாழ வேண்டும்? அல்லது பிறந்தவுடன் தாயை இழக்க வேண்டும் அல்லது தந்தையை இழக்க வேண்டும் அல்லது இருவரும் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது இருவராலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் இறுதிவரை தாய் தந்தையரால் கல்வி கொடுக்கப் பட வேண்டும் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகளை காண வேண்டும் இந்த வயதிலே இன்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டும் விபத்தை பொருளாதார நஷ்டம் காதல் தோல்வி அடைய வேண்டும் பெண்ணால் மோசம் அடைய வேண்டும் பெண்ணால் மேன்மை அடைய வேண்டும் என்று ஒரு கதையை எழுதித்தான் இறைவன் ஒவ்வொரு ஆத்மாவையும் பூமிக்கு அனுப்புகிறான். சரி இதில் மனிதனின் பங்கு எங்கே?

எல்லாம் விதிதான் என்று ஒரு மனிதன் ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து விட்டால் போதுமா? பிறகு எதற்கு ஆலயங்கள் வழிபாடுகள்? என்று கேட்க தோன்றும் ஆம் எல்லாம் விதிதான். விதியை மழை என்று எடுத்துக் கொள். மழையை தடுக்க உன்னால் முடியாது. ஆனால் மழையில் இருந்து உன்னை காத்துக் கொள்ள ஒரு குடையை எடுத்து செல்லலாம் அல்லவா? அந்த குடை தான் நாங்கள் காட்டும் வழிபாடுகள் வழிமுறைகள்.

பாம்பன் சுவாமிகள்

1923 வது வருடம் பாம்பன் சுவாமிகள் சென்னையில் நடந்து செல்லும் போது பாதையில் எதிர்பாராத விதமா ஒரு குதிரை வண்டி அவர் மேல் மோதியது. இதனால் அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர்கள் 73 வயது ஆகிவிட்டதால் இனி இவரது எலும்பு கூடுவது மிகவும் கடினம் மேலும் இவர் நீண்ட காலமாக உப்பு போடாத பச்சரிசி பச்சைப்பயறு பொங்கல் மட்டுமே சாப்பிட்டு வந்ததால் மிகவும் பலகீனமாக இருக்கிறார் என்று டாக்டர் சொல்லி விட்டார்கள். அப்போது முதல் தான் இயற்றிய சண்முக கவசத்தை தொடர்ந்து ஆறு நாட்கள் பாடிக் கொண்டே இருந்தார். ஆறாவது நாள் அவர் கனவில் சேவல் மயிலுடன் குழந்தை வேலன் காட்சியளித்தார். அடுத்த நாள் காலையில் எழுந்து தானாகவே நடக்க ஆரம்பித்தார் பாம்பன் சுவாமிகள். டாக்டர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே X RAY எடுத்து பார்த்தார்கள். டாக்டர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அவரோட எலும்புகள் கூடி இருந்தது.

இன்றும் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் இவருக்கு முதலில் எடுத்த X RAY ரிப்போர்டும் அவர் நடக்க ஆரம்பித்ததும் எடுக்கப்பட்ட எடுத்த X RAY ரிப்போர்டும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.

மாதேஷ்வரன் சிவலிங்கம்

தண்ணீரில் நீந்தி சென்று தான் இந்த சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். அர்ச்சகர் வாரத்தில் ஒருநாள் திங்கள்கிழமை மட்டும் நீருக்குள் நீந்தி சென்று பூஜை செய்கிறார். இக்கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 48

கேள்வி: மந்திரம் சொல்லும் போது

நா வறட்சி ஏற்படாமல் இருக்க ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்வதும் கனி வகைகள் ஆவியிலே வெந்த உணவு பொருட்கள் கீரை வகைகள் உட்கொள்வதும் உடல் சோர்வை அகற்றும். அதோடு சமைத்த உணவை விட கனி வகைகள் நல்ல பலனை தரும். மந்திரங்களை எந்த மொழியில் சொன்னாலும் ஒரே வகையான பலனைத்தான் தரும். ஆனால் அதை விட எந்த மனநிலையில் மந்திரங்களை ஜெபிக்கிறாய் என்பதுதான் முக்கியம். அதிகம் அதிகம் மந்திரங்களை நாங்கள் உரு ஏற்றச் சொல்லும் காரணமே அந்த நீண்ட கால அவகாசத்திலே இடையிலே ஒரு சில கண் இமைக்கும் நேரத்திலாவது மனிதன் மனம் ஒன்றி அதை சொல்ல மாட்டானா? என்பதற்காகத்தான் ஒரு லட்சம் மந்திரத்தைக் கூறு என்றால் ஒரு லட்சம் தரம் அவன் மனம் ஒன்றியா கூறப் போகிறான்? அதனால்தான் இப்படி கூறுகிறோம். சமஸ்கிருத மொழியில் சொல்ல முடியவில்லை என்றால் தமிழிலேயே

ஓம் சுக்ரன் திருவடிகள் போற்றி
ஓம் குபேரன் திருவடிகள் போற்றி
ஓம் அன்னை மகாலட்சுமி திருவடிகள் போற்றி
ஓம் ஐஸ்வர்யா ஈஸ்வரர் திருவடிகள் போற்றி என்றும் கூறலாம். தவறு ஏதுமில்லை.

கேள்வி: ஸ்தல விருட்சத்தின் பழம் சாப்பிட்டால் தோஷமா?

ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் இலைகளையோ வேர்களையோ காய் கனிகளையோ முறையற்று பயன்படுத்தினால் தோஷம் வரும் என்பது உண்மைதான். இது ஒரு புறம் இருக்கட்டும் அது எப்படியப்பா அம்மனுக்கு போட்ட நகையை களவாடும் போது வராத தோஷம் கனிகளை எடுக்கும் போது வந்து விடுமா?

கேள்வி: எருமை மாட்டிற்கு மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரை கொடுப்பதால் உயிர் பிரியும் தருணம் துன்பமாக இருக்காது என்று சொல்லப்படுவது பற்றி

இது போல் வாங்கிக் கொடுப்பது சிறப்பு. இதை மட்டும் செய்தால் பாவம் தீர்ந்து விடாது. என்ன செய்யும் வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாவம் செய்வது எளிது. ஆனால் ஒரு பாவத்தை கழிப்பது என்பது மிக மிகக் கடினம்.

சுலோகம் -21 # 22

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #21

அச்சுதா எனது தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் சென்று நிறுத்துங்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனன் கிருஷ்ணரைப் பார்த்து ஏன் அச்சுதா என்று கூப்பிட்டார்?

எவர் தன் சுயரூபத்திலிருந்து தன் சக்தியாலும் பெருமையினாலும் வழுவாமல் நிலையாக இருக்கிறாரோ மேலும் எந்த இடத்திலும் எந்த நிகழ்விலும் எந்த நேரத்திலும் எவருக்கு தோல்வி என்பது இல்லையோ அவரே அச்சுதன் என்று அழைக்கப்படுகிறார். அச்சுதா என்ற பெயரை சொல்லி அழைக்கும் அர்ஜூனன் கிருஷ்ணருடைய தன்மையையும் பெருமையையும் அறிந்திருக்கிறேன் என்பதை இந்த வார்த்தையால் உணர்த்துகிறார்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #22

இந்த போர் தொடக்கத்தில் போர் புரிய விருப்பம் கொண்டு அணிவகுத்து நிற்கும் எதிரிப்படை வீரர்களை எவ்வளவு நேரம் நான் பார்க்கிறேனோ அவ்வளவு நேரம் ரதத்தை இரு படைகளுக்கும் நடுவே நிறுத்தி வையுங்கள். இந்தப் போரில் என்னுடன் யுத்தம் புரியப்போவது யார் என்று நான் பார்க்க வேண்டும்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனன் பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வந்திருப்பவர்களை பார்க்க ஏன் எண்ணினான்?

பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வந்திருப்பவர்கள் அனைவரும் தன்னுடைய உறவினர்களும் நண்பர்களும் என்பதை அர்ஜூனன் நன்கு அறிவான். யுத்தத்தில் தனக்கு துணையாக கிருஷ்ணரும் தன் கொடியில் அனுமனும் இருப்பதினால் பாண்டவ அணியினர் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று அர்ஜூனன் நம்பினான். பாண்டவர்களின் வெற்றியில் யுத்தம் முடியும் போது எதிரிப் படை வீரர்கள் பல பேர் உயிருடன் இருக்க மாட்டார்கள். ஆகவே தன்னுடைய உறவினர்களையும் நண்பர்ளையும் இறுதியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்களை பார்க்க அர்ஜூனன் எண்ணினான்.

துறவியை மிஞ்சிய வேடன்.

ஆசைகள் நிறைந்த துறவி ஒருவர் காட்டில் இருந்தார். வாய்க்கு ருசியாக சாப்பிடுவதில் விருப்பம் உடையவர். அந்தக் காட்டில் வேடன் ஒருவன் இருந்தான் இந்தப் பிறவியில் எப்படியாவது இறைவனை அடைந்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான். வேடன் துறவியை சந்தித்து அடிபணிந்து சுவாமி நான் இறைவனிடம் செல்ல வேண்டும் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டான். துறவி அவனைப் பார்த்துச் சிரித்து உனக்கும் உபதேசத்திற்கும் வெகு தூரம். அதுபற்றி அப்புறம் யோசிப்போம். நீ காட்டில் கிடைக்கும் தேன் பல வகையான பழங்கள் கிழங்குகள் இவைகளைக் கொண்டு வந்து எனக்குக் கொடு என்றார். வேடனும் துறவி கேட்ட பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்து வந்தான். ஒரு நாள் வேடன் துறவியிடம் தினமும் நீங்கள் கேட்ட பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு உபதேசம் கொடுங்கள் என்றான். துறவி அப்போது மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும் மாங்கொட்டையை வேடன் கையில் தந்து இது தான் சிவலிங்கம். இறைவனின் உருவம் இதற்கு பூஜை செய் என்றார். துறவியின் வாக்கை அப்படியே நம்பிய வேடன். குருவே நீங்கள் கூறியபடியே செய்கிறேன் என்று துறவியை விழுந்து வணங்கி மாங்கொட்டையை தன் இருப்பிடத்திற்கு கொண்டு வந்தான்.

தன்னுடைய இருப்பிடத்தில் தனியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து அங்கு மாங்கொட்டையை வைத்து தண்ணீரால் அபிஷேகம் செய்து பால் பழம் தேன் தினை மாவு வைத்து இறைவனே சாப்பிடுங்கள் என்றான். வெகு நேரம் கேட்டும் அவை அப்படியே இருந்ததால் வேடன் தன் உயிரைப் போக்கிக் கொள்ள எண்ணிக் கத்தியை எடுத்தான். வேடனின் உண்மையான நம்பிக்கையையும் அன்பையும் கண்டு உணவுப் பொருள்களை மறைத்து அருளினார் இறைவன். தினமும் இப்படியே வேடனின் பூஜை நடந்து வந்தது. ஒரு நாள் குருவைக் காண ஆவல் கொண்டு வேடன் தான் வணங்கி வரும் மாங்கொட்டைச் சிவலிங்கத்தையும் குருவுக்கு பிடித்த பழங்களையும் எடுத்துச் சென்றான். குருவை வணங்கித் தான் பூஜை செய்யும் விபரங்களையும் சொன்னான். வேடன் சொன்னதை எல்லாம் நம்பாத குரு பால் பழம் இறைவன் உண்ணுகிறானா எங்கே என் முன் செய்து காட்டு என்றார். குரு முன் தன் பூஜையைச் செய்தான் வேடன். நிவேதனப் பொருள்கள் மறைந்தன. பூஜை முடிந்தது என்ற சீடன் மாங்கொட்டையை எடுக்கச் சென்றான். அப்போது மாங்கொட்டை ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது இதனைக் கண்ட வேடன் இறைவா என்னை விட்டு எங்கே செல்கிறீர்கள் என்று உள்ளம் உருகி மாங்கொட்டையை பிடித்துக் கொண்டான். அவனையும் தூக்கிக் கொண்டு மாங்கொட்டை மேலே உயர்ந்தது. மாங்கொட்டையுடன் வேடன் சொர்கத்திற்கு செல்கிறான் என்பதை உணர்ந்த குரு தானும் சொர்க்கம் செல்ல எண்ணி வேடனின் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது மாங்கொட்டையில் இருந்து அசீரிரியாக இறைவன் பேச ஆரம்பித்தார். வேடன் காட்டிற்குள் இருந்து நிறைய பழங்கள் உனக்காகவும் அவனுக்காகவும் கொண்டு வந்திருக்கிறான். அதில் உள்ளவற்றில் உனக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். அதற்கு சாப்பிடுவதில் விருப்பம் கொண்ட துறவி இரண்டு கைகளையும் பெரிதாக விரித்து இவ்வளவு வேண்டும் என்று காண்பித்தார். வேடனின் கால்களில் இருந்து விடுபட்ட துறவி பூமியில் விழுந்து மண்ணைக் கவ்வினார்.இறைவனிடம் செல்ல வேண்டும் என்று விரும்பிய வேடன் சொர்க்க லோகம் சென்றான்.

சுலோகம் -20

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #20

அனுமன் கொடியை கொண்ட தேரில் நின்றிருந்த அர்ஜூனன் திருதராஷ்டிரரின் சேனைகள் அணிவகுத்து நிற்பதையும் அவர்கள் ஆயுதங்கள் கொண்டு தாக்க தயாராக இருப்பதையும் கண்டான். உடனே தனது காண்டீபம் என்ற வில்லை கையில் எடுத்து கிருஷ்ணரிடம் பேசத் துவங்கினான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அனுமன் கொடியில் இருக்கிறார் என்று சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் குறிப்பிட்டு ஏன் சொல்கிறார்?

பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்த போது பீமனுக்கு அனுமன் வரம் ஒன்று கொடுத்தார். அதன்படி அனுமன் யுத்தத்தில் பாண்டவர்களுக்கு துணையாக அர்ஜூனனின் கொடியில் அமர்ந்திருப்பேன் என்றும் பீமன் யுத்தம் செய்யும் போது கர்ஜனை செய்யும் போதெல்லாம் தன்னுடைய கர்ஜனை சத்தமும் சேர்ந்து கொள்ளும் இதனால் பாண்டவர்களின் சேனையில் பலம் அதிகரித்து கௌரவர்கள் சேனையில் குழப்பமும் உண்டாகும். நீ ஜெயம் கொள்வாய் என அனுமான் ஆசி அளித்தார். பாண்டவர்களின் பக்கம் அனுமன் இருப்பதினால் அவர்களுக்கு வெற்றி உறுதி என்று சஞ்சயன் மறைமுகமாக திருதராஷ்டிரரிடம் குறிப்பிடுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அர்ஜூனன் வைத்திருக்கும் காண்டிபம் வில் யாருடையது அது அவனுக்கு எப்படி கிடைத்தது?

கண்வ ரிஷியின் கடும் தவத்தால் அவர் தவம் செய்த இடம் புற்று சூழ்ந்தது. அந்த புற்றிலிருந்து கந்தி எனும் ஒரு மூங்கில் மரம் வளர்ந்தது. அது தவத்தின் மகிமையால் வளந்த மரம் ஆகையால் அதித சக்தி பெற்றது. எனவே இதை வீணடிக்க விரும்பாத பிரம்மதேவர் அதனை கொண்டு தீயவர்களை அழிக்க காண்டீவ வில்லை உருவாக்கினார். அவர் அதனை 1000 ஆண்டுகள் வைத்திருந்தார். பின் சிவன் 1000 ஆண்டுகளும் பிரஜாபதி 503 ஆண்டுகளும் பின்பு தேவேந்திரன் 580 ஆண்டுகளும் சந்திரன் 500 ஆண்டுகளும் அவருக்கு பின் நீர் கடவுளான வருணன் 100 ஆண்டுகளும் வைத்திருந்தார். காந்தவ காட்டை அழிப்பதற்காக அக்னி தேவனின் வேண்டுகோளின் படி வருணன் இக்காண்டீபத்தை அர்ஜூனனுக்கு வழங்கினார். பிரகாசமாக இருக்கும் இந்த திவ்யமான வில் இடியின் முழக்கத்தை உண்டாக்கும். இந்த வில் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் வீரர்களையும் (தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் உள்ளிட்ட) போரிட்டு அழிக்கும் திறன் கொண்டது. அனைவராலும் வணங்கப்பட்ட இந்த வில் நூற்றி எட்டு நாண்களை கொண்டது. 108 நாண்களையும் ஒன்றினைத்தால் மட்டுமே அவ்வில்லை பயன்படுத்த இயலும். இதன் கடைசி நாணை எவராலும் அறுக்க இயலாது.

காண்டீப வில்லை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 47

கேள்வி: சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட அதை ஏழைகளுக்கு கொடுப்பதைப் பற்றி?

ஒருவனின் மனம் புத்தி அறிவு ஞானம் இவற்றை நல்கக்கூடிய கிரக அமைப்பு இதை பொறுத்துத்தான் இந்த வாதத்தை எடுத்துக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற ஒரு மனிதரிடம் நீ தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் என்று நாங்கள் கூறினாலும் அதில் சிறிதளவே அவன் செய்கிறான். ஆனால் பாவங்கள் குறையவில்லை. இவன் எவ்வாறு பாவங்களை குறைப்பது? சரி இவனுக்கு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் தான் திருப்தி என்றால் அப்படியே செய்யட்டும். அபிஷேகத்திற்காக பொருள்கள் வாங்குகிறான் அந்த வியாபாரம் செழித்து வளரட்டும். அது அந்தந்த மனிதர்களுக்கு போய் சேருகிறது அல்லவா? அந்த அடிப்படையிலும் இவன் அபிஷேகத்திற்காக முயற்சி செய்கின்ற காலமும் அதனால் பயன் அடையக்கூடிய மனிதர்களையும் பார்க்க வேண்டும். அப்படியாவது சிறிது கர்மா இவனுக்குக் குறையட்டும் என்றுதான் கூறுகிறோம்.

அதே சமயம் ஒரு உயர்ந்த பொருளை ஏன் ஒரு கல்லின் மீது ஊற்ற வேண்டும்? அதை ஏழைகளுக்குத் தந்தால் ஆகாதா? என்று ஒரு வாதத்தை வைக்கும் பொழுது ஒருவனுக்குப் பிரியமான தந்தை தாய் மனைவி மக்கள் போன்றோர்களின் பிம்பங்களை களங்கப்படுத்து அதன் மீது எச்சில் உமிழ் என்றால் உமிழ்வானா?. எனவே அந்த பிம்பங்களை அவன் தன் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற குணம் இன்றளவும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது சிலை என்று கருதக்கூடிய மனிதனுக்கு அது வெறும் சிலை. ஆனால் அது உள்ளே தெய்வம்தான் என்று ஆணித்தரமாக நம்புகின்ற மனிதனுக்கு நாம் தெய்வத்திற்கே அபிஷேகம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் அதன் மூலம் மன அமைதியும் வரும். எடுத்த எடுப்பிலேயே நீ அப்படியெல்லாம் அபிஷேகம் செய்து பொருளை வீண் செய்யாதே. உன்னை சுற்றியுள்ள ஏழைகளுக்கு கொடு என்று சொன்னால் அவன் மனம் ஏற்காது. ஓரளவு நல்ல ஆத்மா காலப்போக்கில் திருந்துவான் என்றால் அவனை அவன் போக்கில் சென்றுதான் நாங்கள் திருத்துவோம். எனவே இதில் யார் செய்வதும் குற்றமல்ல பாதிப்பும் அல்ல இரண்டு வழிகளுமே சிறப்புதான்.

சுலோகம் -19

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #19

இந்த பெரு முழக்கத்திலிருந்து வந்த ஒலி ஆகாயத்தையும் பூமியையும் எதிரோலிக்கச் செய்து திருதராஷ்டிர கூட்டத்தின் இதயங்களை பிளக்கச் செய்தது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: பாண்டவ படைகளுக்கு உற்சாகத்தை கொடுத்து பயத்தை போக்கிய சங்கின் முழக்கம் ஏன் கௌரவ படைகளின் இதயத்தை பிளந்தது?

கௌரவர்களின் சங்கு முழக்கத்தின் சத்தத்தை விட பாண்டவர்களின் சங்கு முழக்கத்தின் சத்தம் மிகவும் அதிகமாக ஆகாயத்திலும் பூமியிலும் எதிரோலித்தது. இதனால் பாண்டவர்கள் தங்களை விட மிகவும் உற்சாகமாகவும் வலிமையாகவும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கௌரவர்களுக்கு ஒரு விதமான பயத்தை உண்டு பண்ணி அவர்களின் இதயத்தை பிளந்தது.