மாசாணி அம்மன்

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு அருகில் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. ஆழியார் ஆறு மற்றும் உப்பர் ஓடை சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. கோயில்களில் அம்மன் அமர்ந்த கோலத்திலோ அல்லது நின்ற கோலத்திலோ அருள்பாலிப்பார்கள். இக்கோயிலில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் படுத்த நிலையில் அருள்பாலிக்கிறார். இவளது காலடியில் ஒரு அரக்கன் இருக்கிறான். அம்மனுக்கு மயான அம்மன் என்ற வேறு பெயரும் உள்ளது. நான்கு கைகளில் ஒரு கையில் பாம்பு ஒரு கையில் நெருப்புக் கிண்ணம் ஒரு கையில் குங்குமம் அடங்கிய கிண்ணம் மற்றும் திரிசூலம் ஆகியவற்றைப் பிடித்திருக்கிறாள். பலரால் குடும்ப குல தெய்வமாக வணங்கப்படுகிறாள். மாசாணி அம்மன் ஆதி பராசக்தியின் அவதாரமாக கருதப்படுகிறாள். நீதி கல் மற்றும் மகாமுனியப்பன் ஆகிய இரண்டு தெய்வங்கள் சன்னதி கோயிலுக்கு உள்ளேயே உள்ளது. இத்தலத்திற்கு மூன்று வகையான புராண வரலாறுகள் சொல்லப்படுகிறது.

அம்மனை தொழுபவர்களுக்கு பில்லி சூனியம் மாதவிடாய்க் கோளாறு பேய் பிசாசு முதலிய பிடித்திருப்பவர்கள் ஒருமுறை மாசாணியம்மன் கோயில் சென்று வணங்கிவிட்டு வந்தால் அத்தனை பீடைகளும் நோய்களும் துன்பங்களும் நீங்கும் என்றும் மாசாணி அம்மன் வரலாறு கூறுகிறது. மேலும் பொன் பொருள் நகை போன்றவற்றை திருடிச் சென்றோ இல்லை பணம் வாங்கிக்கொண்டு இல்லை என்று கூறுபவர்களுக்கோ உள்ள ஆட்டுக் கல்லில் மிளகாயை அரைத்து வைத்து மூன்று மாதம் வரை காத்திருந்தால் எடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள். துரோகம் செய்தவர்கள் வந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள். அவ்வாறு கேட்கவில்லை என்றால் அவர்கள் உடல்  மிளகாய் தேய்த்தது போல்  எரியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே அவர்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு மீண்டும் பாலபிஷேகம் இளநீர் போன்றவற்றை அபிஷேகம் செய்து அம்மனை குளிர்ச்சி செய்து வழிபடுகிறார்கள்.

முதல் வரலாறு

ராமாயண காலத்தில் கௌசிக மன்னராக இருந்து ரிஷியாக மாறிய விசுவாமித்திரர் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர்.  தன் உடலையே  திரியாக்கி எரித்து காயத்ரி மந்திரத்தை போதித்தவர். இத்தகைய தவசீலர் ராஜரிஷி என்ற பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்ற பெயருடன் விளங்கினார். இவர் ஒரு முறை கனக மலையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது தாடகை என்ற இராட்சசி அவரது தவத்திற்கு இடையூறு செய்தாள். தாடகை விரதம் இருந்து பல வரங்களையும் படை பலத்தையும் பெற்றவள். மேலும் ராவணனிடம் இருந்தும் பல சக்திகளைப் பெற்றவள். தாடகையை அழிக்க வேண்டும் என்று தசரதனின் மகன்கள் ராமர் லட்சுமணனை அழைத்துக் கொண்டு வந்தார் விசுவாமித்திரர். இவள் ஒரு பெண் இவளை எப்படி அழிப்பது என்று ராமர் யோசித்தார். இதனை அறிந்த விசுவாமித்திரர் இவள் பெண்ணே அல்ல. இவள் ஒரு ராட்சசி என்று கூறி அவளை வதம் செய்யுமாறு கூறினார். அவ்வாறு வதம் செய்வதற்கு முன்பு ராமர் ஈஸ்வரியை நோக்கி தவம் செய்தார். ஈஸ்வரியும் ராமருக்கு முன் தோன்றி தாடகையை எவ்வாறு வதம் செய்ய வேண்டும் என்ற சூட்சுமங்களை கூறினார். அதன்படி மண்ணால் ஈஸ்வரி ரூபத்தை உருவாக்கி வழிபட்டு பின் மண்ணினால் செய்யப்பட்ட விக்கிரகத்தை அழித்து விட்டு பிறகு தாடகையை வதம் செய்யுமாறு கூறினார். அதேபோல் ராமரும் ஈஸ்வரியை மண்ணால் உருவாக்கி பூஜை செய்து தாடகையை வதம் செய்யச் சென்றார். அந்த நேரத்தில் மண்ணால் செய்த ஈஸ்வரியை அழிக்க மறந்தார். தாடகையை வதம் செய்தபின் ஞாபகம் வந்து அதை அழிக்க முற்படும் போது ஈஸ்வரி தோன்றி அதை அழிக்க வேண்டாம் அது அங்கேயே இருக்கட்டும் என்று கூறினார். ராமரின் கைகளால் உருவானவர் மாசாணி அம்மன்.

இரண்டாவது வரலாறு

ஆனை மலைக்கு அருகில் உள்ள அழகிய ஒரு கிராமத்தில் மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். அவ்வாறு வாழ்ந்து வந்த நேரத்தில் மனைவி கருவுற்றாள். கணவனும் மனைவியும் அன்பாக இருந்த காரணத்தால் மனைவி தாய் வீடு கூட செல்லாமல் பிரசவத்தை தன் கணவன் முன்னிலையே நடத்திக் கொள்ள விரும்பினாள். பிரசவ காலத்தில் பிரசவ வலி அதிகமானது. மனைவி படும் துயரத்தை தாங்க முடியாத கணவன் வலி மிகுந்த நேரத்தில் அவளை சற்று ஆசுவாச படுத்தி விட்டு மருத்துவச்சியை அழைத்து  வரக் கிளம்பினான். அதே சமயம் மனைவியை தனியாக விட்டு செல்வதற்கும் அவனுக்கு பயம். இவன் தனியாக சென்று மருத்துவச்சியை அழைத்து வருவது என்றால் மனைவியை தனியாக விட முடியாது. அடர்ந்த காடு வனவிலங்குகள் அதிகம். அருகில் மனிதர்கள் யாரும் இல்லையே என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான். அதை புரிந்துகொண்ட அவன் மனைவி இரண்டு கல் தொலைவில் உள்ள என் தாயார் வீட்டிற்கு நாம் செல்வோம். அங்கு ஒரு மருத்துவச்சி இருக்கிறார். அவர் முக்காலமும் உணர்ந்தவர். தெய்வ சிந்தனையும் நற்பண்புகளும் ஞானத்தால் நடப்பதை அறியும் திறனும் பெற்றவர். நன்கு மருத்துவம் செய்வார். அவரிடம் செல்வோம். கஷ்டப்பட்டு நான் தங்களுடன் நடந்து வருகிறேன் என்று கூறினாள். பிரசவ வேதனையும் வலியும் தாங்க முடியாத நிலையை எட்டியதால் வேறு வழி இன்றி  தாய் வீடு நோக்கி பயணமானார்கள்.

மெதுவாக நடந்து நடந்து ஒரு மைல் தூரம் வந்து சேர்ந்து விட்டார்கள். அதற்கு மேல் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. சற்று தூரத்தில் பார்த்தால் விளக்கு ஒளி தெரிந்தது. அச்சமயம் கணவனிடம் என்னால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. தாங்கள் சென்று அந்த விளக்கு வெளிச்சத்தில் மருத்துவச்சி இருப்பார்கள். தயவு செய்து அழைத்து வாருங்கள். நான் எங்கும் போகமாட்டேன். இங்கேயே அமர்ந்து இருக்கிறேன் என்று உறுதிபட கூறினாள். கணவன் வேறு வழியின்றி அவளை அங்கு அமர வைத்து விட்டு  வெளியே விளக்கு வெளிச்சத்தை நோக்கி சென்றான். மிகுந்த மனவருத்தத்துடன் வேறு வழியின்றி வெளிச்சத்தை நோக்கி சென்று மருத்துவச்சியின் வீட்டுக் கதவை தட்டினான். அவரிடம் நிலைமையை  எடுத்துச் சொல்ல அவளும் மருத்துவ சாதனங்களையும் உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு மனைவி இருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்து பார்த்த பொழுது மனைவியை காணவில்லை. இது என்ன இறைவா சோதனை மனவேதனை என்று வருந்தி தேடினார்கள். தூரத்தில் மனைவியும் குழந்தையும் இறந்து கிடந்ததை கண்டார்கள். இதனை கண்ட மருத்துவச்சி நான் கண்ட கனவு பலித்துவிட்டது என் கனவு நிஜம் ஆகிவிட்டதே என்றாள். கதறி அழுத அவன் அந்த மருத்துவச்சியிடம் அம்மா தாங்கள் கண்ட கனவு பலித்து விட்டது என்று கூறுகிறீர்களே. தாங்கள் என்ன கனவு கண்டீர்கள். என்ன நடந்தது என்று சற்று விளக்கமாக கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

உடனே அவர் நீ மனைவியை விட்டு வந்தவுடன் ஒரு பெரிய கருத்த உருவம் ஒன்று இவளை நோக்கி கையை நீட்டிக் கொண்டு வந்தது. அது கண்டு அவள் பயந்து எழுந்து ஓட ஆரம்பித்தாள். ஆனால் ஒரு அளவுக்கு மேல் ஓட முடியாமல் என்னை விட்டு விடு விட்டு விடு என்று அந்த கரிய உருவத்திடம் கெஞ்சினாள். ஆனால் அந்த கோர உருவமும் விடாமல் அவளைத் துரத்தியது. அந்த நேரம் அவளுடைய போறாத காலம் அவள் அங்கிருந்து மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து உயிர் நீத்தாள். அதே நேரத்தில் அவள் உடலிலிருந்து உயிர் பிரிந்து வானளாவி ஒரு பயங்கர ஜோதி ரூபமாய் கோடி சூரிய பிரகாசமாகத் தோன்றி நீண்ட உருவாமாய் திறந்த வாயுடனும் கைகளில் வேலுடனும் ஆயுதங்களுடனும் அந்த கரிய  கொடிய உருவத்தை நோக்கி வந்து அவனுடைய மார்பைப் பிளந்து அந்த பெண்ணின் காலடியில் போட்டு விடுகிறது. இதுவே தான் கண்ட கனவு என்று அந்த மருத்துவ மூதாட்டி அவள் கணவனிடம் கூறினாள். மேலும் அவள் சாதாரண பெண்ணல்ல. வானில் தேவலோகத்திலிருந்து மண்ணில் உதித்த பெண் அவள். அவள் பக்தர்களை மனிதர்களை இரட்சிக்க வேண்டி உருவான தெய்வாம்சம் பொருந்திய பெண்ணவள் என்றும் மற்றும் காமதேனுவினால் இடப்பட்ட சாணத்தில் கால்வைத்து இறக்காமல் இருந்திருந்தால் வேறு ஒரு ரூபத்தில் அவள் இறந்திருப்பாள். இவள் மானிடப்பிறவி அல்ல தெய்வப்பிறவி. இந்த அரக்கனை அழிக்க வேண்டி உருவானவள் என்பதனாலும் இந்த தெய்வாம்சம் பொருந்திய இந்த அம்மனுக்கு ஒரு கோயில் கட்டி பூஜித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றார்கள். மாட்டு சாணத்தில் கால்வைத்து விழுந்ததால் மாசாணி என்றும் இன்று முதல் அவளுக்கு பெயர் வந்தது.

3 ஆவது வரலாறு

ஆனை மலையை நன்னன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். ஒரு நாள் ஒரு முனிவர் மிகவும் சக்தி வாய்ந்த சுவையுடைய ஒரு மாங்கனியை கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து தாங்கள் இக்கனியை உண்ண வேண்டும். இது மிகவும் சக்தியும் சுவையும் வாய்ந்தது. அதை உண்டுவிட்டு அதனுடைய கொட்டையை தாங்கள் ஆற்றில் எறிந்து விட வேண்டும் என்று கூறினார். மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அவன் அந்த மாங்கனியை உண்டு அதன் சுவையால் கவரப்பட்டு ஈர்க்கப்பட்டு முனிவர் கூறிய படி செய்யாமல் அந்தக் கொட்டையை தன்னுடைய அரண்மனையில் நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்தான். அதை மிகவும் கவனமாக போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்தான் நாளடைவில் அது வளர்ந்து விருட்சமாகி ஆகியது. அவ்வாறு வளர்ந்து பெரிய மரமாக ஆன அந்த மரத்தில் ஒரு பிஞ்சோ கனியோ ஒன்று கூட விடவில்லை. நாளடைவில் அதிலிருந்து பூக்கள் மட்டும் தோன்றி  உதிர்ந்தன.

மன்னன் காத்திருந்து பின் இறுதியாக கனி கொடுத்த  அந்த முனிவரை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்தான். அவரைத் தேடி அழைத்து வந்த உடன் முனிவரும் மன்னா நான் தங்களுக்கு கொடுத்த கனி மரத்திலிருந்து பறிக்கப்பட்ட கனியல்ல. பலவருடம் தவம் செய்து என்னுடைய குருநாதர் எனக்கு விரும்பி கொடுத்த கனி. அதை நான் உண்பதைக் காட்டிலும் நாடாளும் மன்னன் ஆகிய நீ சுவைப்பது தான் சாலச்சிறந்தது என்றுதான் நான் உன்னிடம் கொடுத்தேன். நான் கூறியதற்கு மாறாக நீ கொட்டையை ஆற்றில் வீசாமல் நட்டு வைத்ததால்  வீண் வம்பை விலைக்கு வாங்கி கொண்டாய். மேலும் அந்த கனி ஒரு முறை தான் காய்க்கும். ஒரு பழம்தான் காய்க்கும். மீண்டும் அது காய்க்காது. அதுமட்டுமல்லாது ஒரு நாட்டில் விளைந்த கனியை மற்றொரு நாட்டில் உள்ளவர்கள் தான் உண்ண வேண்டுமே ஒழிய அந்த நாட்டில் உள்ளவர்கள் அந்தக் கனியை உண்ணக் கூடாது இதுவே இதனுடைய தாற்பரியம் என்று கூறினார்.

இந்த மரத்தில் விளையும் அந்த ஒரு கனியை யார் உண்ண வருவார்கள் என்று துறவியிடம் மன்னர் கேட்டார். அதற்கு துறவி வேறு நாட்டிலிருந்து வரும் ஒரு கன்னிப்பெண் தான் இந்த கனியை உண்பாள். அவள் மானிடப் பிறவி அல்ல. அவள் ஒரு தெய்வப்பிறவி. அவள் அஷ்டமாசித்திகளை உடையவள். சகல சக்திகளும் வாய்ந்தவள். ஆதலால் நீ இந்த மரத்தினுடைய கனி தனக்கு கிடைக்கவில்லையே என்று மரத்தை அறுத்து விடாதே வெட்டி விடாதே சகல சக்தியும் வாய்ந்த ஒரு அம்மன் கன்னிப் பெண்ணாக வந்து இந்த மரத்தின் கனியை உண்பாள். அதுவரை காத்திரு என்று கூறி அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இம்முறையும் மன்னன் முனிவரின் பேச்சைக் கேட்க மறுத்து விட்டான். அவர் சென்ற உடன் இந்த கனியை தானே சுவைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டான். மேலும் அது விளையப்போகும் ஒரே ஒரு கனி. அதை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு அதிகமான காவல் வைத்தான். சதாசர்வகாலமும் 24 மணி நேரமும் காவலை நீட்டித்து கொண்டே இருந்தான்.

கரிமேசுவரன் என்ற ஒரு யானை வியாபாரி இருந்தார். அவருடைய குலத்தொழில் யானை வியாபாரம்தான். காட்டு யானைகளை பிடித்து அதனை போருக்கு பழக்கி நாடு நாடாக யானை வியாபாரம் செய்து வருவார். அவ்வாறு நாடு கடந்து வரும்போது அவனும் அவன் மகள் தாரணியும் ஆனைமலை பகுதிக்கு வந்து ஒரு வீட்டில் குடியிருந்தார்கள். தாரணி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் உடன் சென்று ஒருநாள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் தாரணி எங்கு குளித்துக் கொண்டிருந்தாளோ அந்த ஆற்றின் கரையில் தான் அந்த மாமரம் இருந்தது. இவள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் மாமரத்தில் இருந்த கனி தானாக விழுந்து இவளை நோக்கி வந்தது. இவள் பொன்னிறமாக ஈர்க்கப்பட்ட அந்த கனியின் அழகில் மயங்கி அதை எடுத்து சுவைத்து விட்டாள். உடனே செய்தி அரசனுக்கு எட்டியது. அரசன் உடனே தாரணியையும் அவள் தந்தையும் அழைத்து வரச் செய்தான்.

தாரணியோ உடனே மன்னனிடம்  இருகரம் நீட்டி உயிர்ப்பிச்சை வேண்டினாள். மன்னா நாங்கள் வேறு நாட்டில் இருந்து வருகிறோம். தாங்கள் முரசு அறிவித்தது தண்டோரா போட்டது எதுவும் எங்களுக்கு தெரியாது. ஒரு மாங்கனிக்காக அந்த நாட்டில் கொலை செய்வார்கள் என்றும் எனக்குத் தோன்றவில்லை. ஆகையால் எங்களுக்கு விடுதலை தந்தருள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். ஆனால் அவள் கோரிக்கையை செவிமடுக்காத மன்னன் அவளை கொலைக் களத்திற்கு அனுப்பினான். கொலைக் களத்திற்கு கொண்டு சென்று அவளைக் கொலை செய்தார்கள். அந்த நேரத்தில் அவள் மன்னா நான் மரித்தாலும் மீண்டும் வருவேன். மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குவேன். ஆனால் என்னைக் கொலை செய்த காரணத்தால் உன்னுடைய நாடும் மக்களும் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டு அவள் உயிர் நீத்தாள்.

அந்த பெண்ணின் உடலை அவள் தந்தை பெற்றுக் கொண்டார். இந்த பெண்ணின் சாபப்படி நாடு அழிந்தால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது தங்களை காத்தருள வேண்டும் என்று அந்த பெண்ணிற்கு மண்ணால் ஊரில் உள்ளவர்களும் சேர்ந்து ஒரு உருவம் செய்தார்கள். அது நாளடைவில் மாங்கனிக்காக உயிர் விட்ட காரணத்தினால் மாங்கனி அம்மன் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மாசாணியம்மன் என்று மருவியது. மாசாணி என்றால் தமிழில் மாங்கனி என்ற பொருளும் உள்ளது. அது சிறிய மயான அம்மனாக இருந்து நாளடைவில் வளர்ந்து பெரிய கோயில் ஆகி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக ஆகிவிட்டது. அவளின் சாபப்படி நன்னனை எதிரி நாட்டுப் படைகள் சூழ்ந்து அவனது வம்சத்தையே பூண்டோடு அழித்து ஒழித்தார்கள். இவளை சரணடைந்து வழிபட்டவர் அனைவரையும் இவள் காப்பாற்றினாள்.

சசிவேகாலு விநாயகர்

கர்நாடகாவில் உள்ள ஹேமகுடா மலையின் வழியில் உள்ள ஹம்பியில் மிகப் பெரிய உருவத்தில் விநாயகர் சிலை உள்ளது. இவருக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர். கன்னடத்தில் சசிவ் காலு என்றால் கடுகு விதை என்று பொருள். இது கடுகு விற்பவரால் செதுக்கப்பட்டதால் அந்த சிலைக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர் வந்தது.

தாரா லிங்கம்

முக லிங்கங்களைப் போன்றே தனிச் சிறப்பு வாய்ந்தவை தாரா லிங்கங்கள். லிங்கத்தின் பாணப்பகுதியில் முகங்களுக்கு பதிலாக அழகிய பட்டைகள் அமைந்தவை தாரா லிங்கங்கள். பல்லவ அரசர்கள் வெகு சிறப்பாக தாரா லிங்கங்கள் அமைத்தனர் என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த வகை லிங்கங்களின் பாணப் பகுதியில் 4, 8, 16, 32, 64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகைகளாக பட்டைகள் அமைந்திருக்கும். இந்தப் பட்டைகள் தாரா எனப்படும்.

நான்கு பட்டைகள் கொண்டது வேத லிங்கம். பாடல் பெற்ற திருத்தலமான சக்ரப்பள்ளியில் வேத லிங்கத்தைக் காணலாம்.

எட்டு பட்டைகள் கொண்டது அஷ்ட தாரா லிங்கம். பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் இந்த லிங்கம் உள்ளன. காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயம் மற்றும் திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயத்தில் இந்த லிங்கம் உள்ளது.

பதினாறு பட்டை கொண்டது ஷோடச தாரா லிங்கம். சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு பட்டை களாகக் கொண்டது. ஆகையால் சந்திர கலா லிங்கம் என்றும் இதற்கு பெயர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்தில் இந்த லிங்கம் உள்ளது. மற்றும் காஞ்சி கயிலாயநாதர் ஆலயத்தின் சுற்றாலயத்தில் இந்த லிங்கம் உள்ளது.

முப்பத்திரண்டு பட்டை கொண்டது தர்மதாரா லிங்கம். தர்மத்தின் 32 வகையைக் குறிப்பிடுவதால் தர்ம லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்பிகை 32 அறங்களை வளர்த்த காஞ்சிபுரத்தில் வயல் வெளியில் 32 பட்டைகளைக் கொண்ட கலை நயமிக்க இந்த லிங்கம் உள்ளது.

அறுபத்து நான்கு பட்டை கொண்டது சதுஷ்சஷ்டி லிங்கம். சிவபெருமானின் 64 லீலா விநோதங் களை விளக்கும் வகையில் 64 பட்டைகள் கொண்டது. இது சிவலீலா சமர்த்த லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் 64 பட்டைகள் 64 யோகினி சக்திகளைக் குறிக்கும்.

கௌரி

அன்னை பார்வதி கௌரி என்ற பெயரில் ஒற்றைக் காலில் தவம் செய்யும் சிற்பம். இடம்: கௌரி குண்டம் உத்தராகண்ட் மாநிலம்.

தலையில் குட்டிக் கொள்தல்

விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து காவிரிநதி பெருக்கெடுத்து ஓடுமாறு செய்தார். பின் காக்கை வடிவம் நீங்கி சிறுவனாய் மாறி அவரது முன்னே நின்றார். சிறுவனது தலையில் குட்டுவதற்காக அவனைத் துரத்திச் சென்றார் அகஸ்தியர். அகத்தியர் அருகில் வந்ததும் விநாயகர் தமது உண்மை வடிவில் காட்சியளித்தார். குட்டுவதற்கு ஓங்கிய கையால் தம் நெற்றியில் குட்டிக் கொண்டு வினாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் அகஸ்தியர். உங்களது முன்னர் நெற்றியில் குட்டிக் கொண்டு வழிபடும் மெய்யன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று அகஸ்தியர் வேண்டினார். விநாயகப் பெருமானும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அதன்படி கோயிலில் வினாயகர் முன்பு தனது தலையில் குட்டிக் கொண்டு வினாயகரின் அருளை பக்தர்கள் பெறுகிறார்கள்.

தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில் முன் தலையின் இரு புறங்களிலும் டெம்போரல் லோப் உள்ளது. இது தலையின் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. டெம்போரல் லோப் என்பது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள ஒரு ஜோடி பகுதி. காதுகளுக்கு அருகில் உங்கள் மண்டை ஓட்டின் உள்ளே இருக்கும் இந்த பகுதிகள் உணர்ச்சிகளை நிர்வகித்தல், புலன்களில் இருந்து தகவல்களை செயலாக்குதல், நினைவுகளை சேமித்து மீட்டெடுப்பது மற்றும் மொழியை புரிந்து கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த இடத்தில் தான் ஞாபக சக்தியைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் குட்டிக் கொள்வதால் இந்த நாடிகள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. இதனை மனதில் கொண்டு முன் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டணை கொடுத்தார்கள்.

இந்த வினாயகர் இருக்கும் இடம் குன்றக்குடி குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

கஜலட்சுமி

கஜலட்சுமி தேவியின் வித்தியாசமான சிற்பம். தாமரை பீடத்தில் இரு பக்கங்களிலும் பணிப் பெண்கள் இருக்கிறார்கள். இரு யானைகள் கலச நீரை அபிஷேகம் செய்ய பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார் கஜலட்சுமி. இடம் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அரியலூர்.

விதுரர் நீதி

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாக இருந்தவர் விதுரர். திருதராட்டிரன் பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவியில் இல்லாமல் இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். ஒரு முறை திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும் முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர் 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார். திருதராஷ்டிரர் அந்த வாள்கள் என்ன என்று கேட்டார். விதுரர் சொல்ல ஆரம்பித்தார்.

  1. அதிக கர்வம் கொள்ளுதல்

நானே கெட்டிக்காரன் எனக்கே அனைத்தும் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் செல்வந்தன் நான் கொடையாளி நான் நல்லவன் பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவன் தானாகவே அழித்து போவார்கள். கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் தன் விஷயத்தில் முதலில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் நல்ல குணங்களைப் பார்க்க வேண்டும்.

  1. அதிகம் பேசுதல்

கடுமையில்லாததும் உண்மையானதும் அன்பானதும் நன்மையைக் கொடுக்கின்ற வார்த்தை எதுவோ அது வாக்கினால் செய்யப்படும் தவம். உண்மையில்லாத அன்பில்லாத நன்மையை கொடுக்காத எந்த வார்த்தைகளாக இருந்தாலும் அந்த வார்த்தையை பேசும் சுழ்நிலை அமைந்தால் பேசாமல் இருக்க வேண்டும்.

  1. தியாக மனப்பான்மை இல்லாமை

சுகமானவைகள் அனைத்தையும் நான் மட்டும்தான் அனுபவிக்க வேண்டும். எனது குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல. பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.

  1. கோபம்

கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் வெற்றியாளன். அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன் தர்மம் எது அதர்மம் எது என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும் யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். 

  1. சுய நலம்

சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலத்தோடு இருப்பவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.

  1. நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது

தாயை அடுத்து நண்பனுக்கு என்று வரும் போது உயிரைக் கொடுப்பது நட்பு மட்டுமே. உலகில் அதுபோல் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த 6 கருத்துகளையும் சரியாக யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக நூறாண்டை நிறைவு செய்வான் என்று விதுரர் சொல்லி முடித்தார்.

மேலும் விதுரர் சொன்ன சில நீதிக் கருத்து

இந்த 3 சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1.பசி வயிற்றை கிள்ளும் போது.
2.தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3.போதையில் இருக்கும் போது.

இந்த 3 சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2.மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3.மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த 3 விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1.நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2.நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3.நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள். 

இந்த 3 பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1.ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2.நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3.நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது. ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

முருகன் தெய்வானையுடன்

முருகனும் தெய்வானையும் சுகாசனத்தில் உள்ளனர். இறைவனின் சிதைந்த நிலையில் வலக்கால் உள்ளது. கைகளில் தோள் வளைகளும் பட்டை வளைகளும் உள்ளன. உயரமான சடை மகுடம் சடைப் புரிகள் இருபுறமும் தோள்களில் தவழ்கின்றன.

முருகனின் இடப்புறம் அவரைப் போலவே வலக்காலைக் கீழிறக்கி இடக்காலைக் இருத்தி சுகாசனத்தில் தெய்வானை அமர்ந்திருக்கிறார். இவரது கால்களும் சிதைந்த நிலையில் உள்ளது. சிதைந்துள்ள இடக்கை தொடை மீதும் வலக்கையில் மலர் உள்ளது. செவிகளில் மகர குண்டலங்கள் கழுத்தைச் சரபளியும் பதக்க மாலையும் உள்ளன. தலையில் அணிந்துள்ள சிறிய அளவிலான கரண்ட மகுடத்தை மீறிய சடைப்புரிகள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. இறைவனுக்காக தலையைச் சாய்த்தவாறு தேவியின் முகம் குனிந்திருக்கிறது. இடம் கந்தன் குடைவரை கோவில் (லாடன் கோயில்) ஆணைமலை மதுரை.

சங்கராச்சாரியார் கோயில்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக் கரையில் உள்ள சங்கராச்சாரியார் மலையில் 1000 அடி உயரத்தில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. வட்ட வடிவ அறையில் பெரிய சிவலிங்கம் உள்ளது. அதனை சுற்றி ஒரு பாம்பு இருக்கிறது. இக்கோயிலுக்கு ஜோதிஷ்வரர் கோயில் என்றும் பெயர். பௌத்தர்கள் பாஸ் பாஹர் என்றும் அழைப்பார்கள். தற்போது உள்ள இக்கோயில் கிபி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது எப்போது என்ற உண்மையான தேதி குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. 1924 ஆம் ஆண்டு வாழ்ந்த பண்டிதர் ஆனந்த கௌலின் என்பவர் இக்கோயில் காஷ்மீரை ஆண்ட மன்னர் சண்டிமன் என்பவரால் கிமு 2629 – 2564 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்பிடுகிறார். கிமு 371 ஆம் ஆண்டு அந்நாட்டை ஆட்சி செய்த மன்னன் இக்கோயிலை கட்டினார் என்று எழுத்தாளர் கல்ஹனா குறிப்பிடுகிறார்.

காஷ்மீர் மன்னர்கள் கோபாதித்தியன் கிமு 426 – 365 மற்றும் லலிதாத்தியன் கிமு 697 – 734 காலத்தில் இக்கோயில்லுக்கு திருப்பணி செய்துள்ளார்கள். நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயிலின் கூரைகளை ஜெனுலாபீத்தீன் என்பவர் சீரமைத்தார். சீக்கியப் பேரரசின் காஷ்மீர் ஆளுநர் குலாம் மொய்னூதீன் உத்தீன் (1841 – 46) இக்கோயில் கோபுரத்தை செப்பனிட்டுள்ளனர். டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங் 1846 – 1857 காலத்தில் ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 1925 ஆம் ஆண்டில் மைசூர் மகாராஜா கோயிலுக்குச் சென்று மின் தேடுதல் விளக்குகளை நிறுவி அதற்கான மின்சாரக் கட்டணச் செலவுக்கு நிதியை கொடுத்திருக்கிறார். 1961 ஆம் ஆண்டு துவாரகாபீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் இக்கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் சிலையை நிறுவினார். பாண்டிச்சேரியின் ஸ்ரீ அரவிந்தர் 1903 ஆம் ஆண்டு கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். பிரபல இந்திய தத்துவஞானி வினோபாபா 1959 கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

இமயமலையில் உள்ள புனித தலங்களுக்கு ஆதிசங்கரர் சுற்றுப்பயணம் சென்ற போது ஸ்ரீநகரில் உள்ள இக்கோயிலுக்கும் சென்று சிவலிங்கத்தை தரிசித்துள்ளார். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுத வேண்டி அதற்கான மூலச் சுவடிகளை தேடி காஷ்மீரின் சாரதா பீடத்திற்குச் சென்றார். பின்னர் கோபாத்திரி மலையில் உள்ள சிவபெருமானை தரிசித்து சௌந்தர்ய லகரி எனும் அம்பாள் தோத்திரப் பாடலை இக்கோயிலில் பாடினார். எனவே இக்கோயில் சங்கராச்சாரியார் கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் இத்தலத்தை பௌத்தர்களும் புனித தலமாக கருதுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தை புதுப்பித்துள்ளார்கள்.

நாகபைரவர்

தெலுங்கானா மாநிலம் யதாத்ரி மாவட்டத்தில் உள்ள போங்கிர் கோட்டைக்கு செல்லும் படிகளுக்கு அருகில் இச்சிலை உள்ளது. பச்சை நிற பாசால்ட் சிற்பம் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலையடிவாரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணியின் போது தோண்டி எடுக்கப்பட்டு தற்போது போங்கிர் கோட்டையின் அடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ளது. 850 ஆண்டுகள் பழமையான சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்த இந்த சிற்பம் புவனேஸ்வரி கோயிலின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. நாக பைரவர் அஷ்ட பைரவர்களில் ஒருவராவார். சிவனின் எட்டு உக்கிரமான பைரவ அவதாரங்கள் எட்டு திசைகளையும் பாதுகாத்து கட்டுப்படுத்துகிறார்கள். நாக பைரவா தெற்கு திசையின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.