இதுபோல் ஒரு மனிதன் தர்மம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். தர்மம் செய்யாதே என்று ஒரு மகான் வாயிலிருந்து வாக்கு வராது. ஆனால் அதே தருணம் ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தகுதியை மீறி அதுபோல் சில ஜாதகத்தின் சூட்சும பலன் காரணமாக ருணம் (கடன்) பெற்று தர்மம் செய் என்று கூறுகிறோம். பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப தர்ம காரியங்களை செய்தால் போதும். அதுபோல் மனிதர்கள் முதலில் தான் தன் மனைவி தன் குழந்தைகள் தன் குடும்பம் என்று கவனித்து விட்டு அதன் பிறகு தர்ம காரியத்தில் கவனம் செலுத்தினால் போதும். இன்னொன்று தனத்தை வைத்து செய்வதுதான் தர்மம் என்று எப்பொழுதும் எண்ணிவிடக் கூடாது. அது ஒரு சில ஜாதகர்களுக்கு பொருந்தலாம். மற்றபடி தன வசதி இல்லாத மனிதர்கள் உடல் உழைப்பால் தொண்டுகள் செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளலாம். இதமான வார்த்தைகளை பயன்படுத்தி பிறர் மனம் புண்படாமல் எப்பொழுதுமே பணிவாக பேசுவதும் ஒரு உயர்ந்த தர்மமே புண்ணியமே. எனவே ஒரு மனிதன் சினத்தை அடக்குவது என்பது கூட தவறுதான். சினமே இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் சினத்தை விலக்க தவறினால் எத்தனை ஆலயங்கள் சென்றாலும் எத்தனை தர்ம காரியங்கள் செய்தாலும் முழுமையான இறைவன் அருளை பெற இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சிவபெருமான் தனது 20 கைகளில் பல ஆயுதங்கள் ஏந்தியபடி தாமரை பீடத்தில் நடனமாடும் தோரணையில் இந்த வெண்கலச் சிற்பம் உள்ளது. சிவபெருமானின் இரண்டு பக்கமும் பரிவார தேவதைகள் உள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.
கேள்வி: எல்லாவற்றையும் வெளிப்படையாக தாங்கள் ஏன் கூறுவதில்லை?
எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறினால் என்ன நடக்கும்? எதிர் மறையான எண்ணங்களையும் கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படி கூறிக் கூறி அந்த விதியை ஏன் எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்று தான் பரிகாரங்களை கூறிக் கொண்டிருக்கிறோம். நாடி வருகின்ற மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதி அம்சம் இல்லை என்பதை புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்படியாக பிடித்துக் கொண்டு சென்றால் எதிர்காலம் அனைவருக்கும் சுபிட்சமாக இருக்கும்.
எம்மை நாடி வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து இறைவனின் கட்டளையையும் அனுசரித்துத்தான் நாங்கள் வாக்கை கூறுகிறோம். இதழில் ஓதுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை. நம்பக் கூடியதாக இல்லை என்று கூறுவது கூட ஒரு மனிதனின் தனி சுதந்திரம். இதுபோல் நிலையிலேயே மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் அறம் சத்தியம் பரிபூரண சரணாகதிதத்துவம் இவற்றை கடைபிடித்தால் கடுமையான விதியும் மெல்ல மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால் மாற்றம் வராது. ஏமாற்றம் தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறைவழியில் அறவழியில் சத்திய வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.
பிரம்மாவுக்கும் திருமாலிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது. வேதமும் பிரணவமும் சிவனே இருவரிலும் உயர்வானவர் என்று கூறிய பின்னும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது. இதை தேவர்கள் மூலம் அறிந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி தந்தார். அதனைக் கண்ட திருமால் தன்னைவிட சிவப்பரம்பொருளே பெரியவர் என்று அமைதியானார். ஆனால் பிரம்மா அதை ஏற்காமல் இன்னும் செருக்குடன் இருந்தார். சிவனுக்கு ஐந்து முகங்கள் இருப்பது போலவே தமக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் நானே பெரியவன் என்ற அகந்தை உண்டானது. (பிரம்மாவுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தது) பிரம்மனது அகந்தையை போக்க எண்ணிய சிவபெருமான் பைரவராக மாறி அவருடைய தலைகளில் ஒன்றினை கொய்தார். இதனால் பிரம்மா நான்கு முகத்துடன் நான்முகன் என்று பெயர் பெற்றார். பிரம்மாவின் செறுக்கும் அழிந்தது. செருக்கு மிகுந்த பிரம்மாவின் தலைகளில் ஒன்றினை கொய்த சிவபெருமானின் திருவுருவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் ஆகும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப் படுகின்றார்.
சிவபெருமானின் இந்த பேராற்றலை திருஞானசம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் தேவாரங்களில் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்கள். திருஞானசம்பந்தர் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களில் இதுவும் ஒன்று என்று பாடியதோடு இவ்வீர செயலை பற்றி தேவாரங்களில் 29 இடங்களில் சிறப்பாக பாடியுள்ளார். அப்பர் 35 இடங்களிலும் சுந்தரர் 5 இடங்களிலும் மாணிக்கவாசகர் 6 இடங்களிலும் சிறப்பித்து பாடி உள்ளார்கள். ஸ்ரீ தத்துவநிதி சில்பரத்தினம் என்ற சிற்ப நூல்கள் இவர் வெண்ணிறத்தவர் என்றும் நான்கு கரங்களை உடையவர் என்றும் வலக்கரத்தில் வஜ்ஜிரமும் கைக்கோடாரியும் வைத்திருப்பார் என்றும் இக்கரங்களில் பிரம்மனின் கபாலமும் சூலமும் வைத்திருப்பார் என்றும் சுருண்ட தலைமுடியை உடையவர் என்றும் புலித்தோலை அணிந்திருப்பார் என்றும் கூறுகின்றன. இவ் வடிவத்தை கொண்ட இவரது அழகிய சிற்பம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ளது. இதில் நான்கு தலைகளுடன் பயத்துடன் பிரம்மன் காட்சியளிக்கிறார்.
சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்று திருமால் தனது வாகனமான கருடன் மீதேறி சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலைச் சென்றார். அங்கே நந்தி தேவனின் அனுமதியுடன் சிவபெருமானை காண சென்றார். கருடன் வெளியே காத்திருந்தார். திருமால் சிவபெருமானை தரிசிக்க சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராததால் கருடன் உள்ளே செல்ல முயன்றது. அதற்கு நந்திதேவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட கருடன் நந்திதேவரை தாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட நந்திதேவர் விட்ட மூச்சுக் காற்று கருடனை தாக்கியது. அந்த காற்றறின் வேகமானது கருடனை மிக தூரத்திற்கு தூக்கிச் சென்று போட்டது. நந்தி தேவர் மீண்டும் மூச்சை இழுத்ததும் காற்றின் வேகத்தில் உறிஞ்சப்பட்ட கருடன் மீண்டும் தான் இருந்த இடத்திலேயே வந்து விழுந்தது. அக்காற்றில் அகப்பட்ட கருடன் நிலைத் தடுமாறியது. மீண்டும் மீண்டும் நந்தி தேவரின் மூச்சுக் காற்றில் அகப்பட்டு அங்கும் இங்குமாக விழுந்து கொண்டிருந்தது கருடன். இதிலிருந்து திருமால் தான் தன்னைக் காக்க வேண்டும் என்று எண்ணி அவரை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது. கருடனின் பிரார்த்தனை திருமாலின் காதில் விழ அவர் சிவபெருமானிடம் வேண்டினார். கருடனை மன்னித்த சிவபெருமான் நந்திதேவரை அழைத்து கருடனை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப கருடனை விடுவித்தார் நந்தி. கருடன் தன் கர்வம் அடங்கி பின் பழையபடி திருமாலுடன் பாற்கடல் சென்றது. நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்கு உதவியதால் சிவபெருமானுக்கு கருடன் அருகிருந்த மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வரலாற்றை பதினோராவது திருமுறை சிறப்பாக கூறுகிறது.
எல்லா கலசங்களில் உள்ளே இருப்பதும் ஒரே கங்கை நீர்தான். அப்படித்தான் மனிதர்கள் தேகம் என்னும் கலசத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பாகுபாடுகளை பார்த்து உன்னை எனக்கு பிடிக்கும். உன்னை எனக்கு பிடிக்காது. நீ நல்லவன். நீ நல்லவன் அல்ல. நீ எனக்கு நல்லதை செய்கிறாய். அதனால் நீ எனக்கு பிரியமானவன். நீ எப்போதும் என்னை தூற்றிக் கொண்டிருக்கிறாய். அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் நமக்குள் அபிப்பிராய பேதங்களை வளர்த்துக் கொண்டு அதை பகையாகவே மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால் மகான்கள் எப்படி பார்ப்பார்கள்? உள்ளே இருக்கும் நீரான ஆத்மாவைதான் பார்ப்பார்கள். எல்லாம் ஒரே நதியில் இருந்து எடுக்கப்பட்ட நீர் என்பது போல எல்லாம் ஒரே பரம்பொருளின் அந்த அம்சத்தில் இருந்து தான் பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து மாயையில் ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து பிறவி தோறும் அறியாமையில் வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து பாவ சேற்றிலே சிக்கி தன்னை அறியாமல் உழன்று கொண்டே இருக்கும் தேகம் எனும் கலசத்திற்குள் அடைபட்ட ஆத்மா எனும் கங்கை நீர். இவற்றையெல்லாம் விடுவித்து புனிதமான கங்கையோடு சேர்ந்து விட்டால் மீண்டும் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல் தெரியும். இப்படி சேர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு எத்தனையோ பிறவிகள் காலங்கள் ஆகும். எனவே இதனை உணர்ந்து எம்மை நாடி வருகின்ற சேய்கள் தமக்குள் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல் தமக்குள் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் பாவங்களை குறைத்துக் கொள்ள வழிமுறைகளை மட்டும் பின்பற்றி பிறருடன் இதமாக வாக்கை உரைத்து எப்பொழுதும் புண்ணிய காரியங்களை செய்து கொண்டே இருந்தால் இறைவனருள் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் கட்டாயம் கிட்டுமப்பா.
இறையே பெரியது அன்புக்கு கட்டுப்படும் பொழுது இறையே சிறியது. ஒருவன் தனக்குத்தானே வீசிக் கொள்ளும் வலைதான் கவலை. சினம் எப்படி ஒருவனை அழித்து விடுமோ அதுபோல் கவலையும் ஒருவனை அழித்து விடும்.
பக்குவமற்ற மனிதர்கள் பண்பாடு இல்லாமல் பேசுவதும் தாறுமாறான விமர்சனங்களை செய்வதும் சினம் வருவது போல நடந்து கொள்வதும் இயல்பு. அவன் அப்படி நடந்து கொள்வதே சினத்தை வரவழைக்கத்தான். ஆனால் அவன் தோற்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதன் என்ன செய்ய வேண்டும் சினம் இல்லாமல் நாகரீகமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவன் வெற்றி பெற தானே ஒரு காரணமாகி விடக்கூடிய ஒரு சூழல் வந்துவிடும். எனவே பண்பாடு இல்லாத மனிதர்களோடு நெருங்கி பழகாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் இருக்க நேரிட்டால் அமைதியான முறையிலே கூடுமானவரை மௌனத்தை கடைப்பிடிப்பதும் அதுபோல் வாத பிரதிவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதுமே எம் வழிவரும் சேய்களுக்கு ஏற்றதாகும். இதை மனதில் தெள்ளத் தெளிவாக பதிய வைத்து தொடர்ந்து சினமில்லாமல் பதட்டம் இல்லாமல் கவலை இல்லாமல் வேதனை இல்லாமல் வெட்கமில்லாமல் நாங்கள் கூறுகின்ற அனைத்து நல்ல காரியங்களும் செய்ய எண்ணி செய்து கொண்டு வர வேண்டும். இதுபோல் நலமாய் ஒவ்வொரு ஆத்மாவும் தன்னைத்தானே உணர்ந்து ஆணவத்தை விட்டொழித்து தன்முனைப்பை அணுவளவும் வளர்த்துக் கொள்ளாமல் பவ்யமாக அவையடக்கமாக தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி இறைபக்தியில் ஆழ்ந்து பரிபூரண சரணாகதியிலே என்றென்றும் இருந்து இயன்ற அளவு தர்மத்தை தொடர்ந்து வாழ்ந்து வந்தாலே அவனவன் தலைவிதி கடுமையாக இருந்தாலும் அதை இனிமையாக இறைவன் மாற்றுவார். இதைத்தான் நாங்கள் பல விதமான வார்த்தைகளில் இயம்பிக் கொண்டிருக்கிறோம்.
தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்து இருந்தார்கள். தங்களின் வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைய வேண்டும். அதனைக் கடைவதற்கு கூட தங்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தார்கள். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும் வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திர மலையின் அடியை தாங்கினார். பாற்கடலை கடைய கடைய பல பொருட்கள் வந்தது. அப்பொருட்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டார்கள். நடுவில் ஆலகால விஷம் வந்தது. அந்த விஷமானது உலகத்தை அழித்து விடும் என்பதால் அனைவரும் பின்வாங்கி பயந்து ஓடினார்கள். அனைவரும் சிவனை பிரார்த்தனை செய்ய சிவபெருமான் உலகத்தை காக்க ஆலகால விஷத்தை அருந்தினார். இதனைக் கண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்து அவரது கழுத்திற்கு கீழே விஷம் இறங்காதவாறு கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் கழுத்தில் நின்ற விஷமானது சிவபெருமானின் கழுத்தை நீல நிறமாக்கியது. கண்டம் என்றால் கழுத்து என்று பொருள். உலகத்தை காக்க ஆலகால விஷத்தை அருந்தி நீலநிற கழுத்தை பெற்றதால் சிவபெருமான் நீலகண்டர் என்ற பெயரைப் பெற்றார். தொடர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பெற்றவர்கள் திருமாலின் மோகினி அவதாரத்தால் தேவர்கள் மட்டும் அருந்தி வலிமை பெற்று அசுரர்களை தோற்கடித்து தங்களுக்கு உண்டான பதவியை மீண்டும் பெற்றார்கள்.
சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை அருந்தி அனைவரையும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி (நீலகண்டர்) என்ற பெயர் ஏற்பட்டது. வாமன புராணம் பிரம்மாண்ட புராணம் பாகவதம் ஆகிய நூல்கள் சிவபெருமான் நஞ்சுண்ட வரலாற்றை சிறப்பாக கூறுகின்றன. சங்க இலக்கியங்களிலும் இந்த வரலாறு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வடிவினை பற்றி பெரியாழ்வார் திருமழிசையாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள். கம்பர் தனது காவியமான இராமாயணத்தில் நீலகண்ட திருமேனி என்று குறிப்பிட்டுள்ளார்.
நீலகண்டர் மூன்று கண்களுடன் சடாமகுடம் தரித்து இருப்பார். கரங்களில் மானும் மழுவும் இருக்கும். ஒரு கரத்தில் ஆலகால விஷமுள்ள கிண்ணமும் மறுகரத்தில் அருளால் குறியீடும் இருக்கும். உடலெங்கும் அழகான அணிகலன்களை அணிந்திருப்பார். நீலகண்டரின் இடப்புறத்தில் உமையம்மையார் அவரின் கழுத்தில் நஞ்சு இறங்காதவாறு பிடித்திருப்பார். நீலகண்டரின் இன்னொரு தோற்றம் பற்றியும் சில நூல்கள் கூறுகின்றன. இத்திருவடிவத்தில் இடப வாகனத்தில் சிவபெருமான் மிக்க கோபம் கொண்டவராகவும் கோரைப்பற்கள் உடையவராகும் அழகிய ஆபரணங்களையும் அணிந்தவராகவும் காணப்படுகிறார். வலது கையில் சூலமும் ஆலகால விஷம் இருக்கும். இடது புறத்தில் உள்ள கையில் கபாலம் இருக்கும். அவரின் அருகில் பார்வதிதேவி விற்றிருப்பாள்.
சென்னை ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப் பள்ளி கோயிலில் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்ட கோலத்தில் படுத்திருக்கிறார். அவரை சுற்றி தேவர்கள் அனைவரும் நிற்பதை காணலாம். திருநீலகண்டரது சிற்பங்களையும் ஓவியங்களையும் தமிழ்நாட்டில் உள்ள பல சிவாலயங்களில் காணலாம். சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் நீலகண்டரின் பஞ்சலோகத் திருமேனி உள்ளது. கழுகுமலை வெட்டியான் கோவில் விமானத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தூணிலும் திருவுருவம் உள்ளது.
திருக்கைலையில் சிவபெருமான் சிங்காசனத்தில் எழுந்தருளியுள்ளார். அப்போது பார்வதிதேவி அருகில் வந்து இறைவா தாங்கள் உருவமற்றவர் என்றும் பல உருவங்களை கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. எங்கும் நிறைந்துள்ள உங்களுடைய உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் யாம் பிரம்மமாக இருக்கும் போது எனக்கு உருவம் இல்லை. உலகில் உள்ள உயிர்களுக்கு அருள் புரிவதற்காக நான் பலவகையான உருவங்களை எடுக்கிறேன். இவை அனைத்தும் அருள் வடிவங்கள் ஆகும். இந்த உலகத்தில் உருவம் அருவம் அருஉருவத்துடன் இருப்போம். நானே உன்னிலும் அனைவரிடத்திலும் இயக்க சக்தியாக இருக்கிறோம். நானில்லையெனில் அனைவரும் இயக்க சக்தியில்லாமல் சதைப்பிண்டம் என்றார். இதனைக் கேட்ட பார்வதிதேவி இயக்க சக்தியாக இருப்பது நான்தானே என்று சிரித்துக் கொண்டே கூறினார். இதனைக் கேட்ட சிவபெருமான் எனது சக்தி என்று பெருமையாக சொல்கிறாயா? என்று பிரம்மாவிடம் இருந்தும் திருமாலிடம் இருந்தும் தமது சக்தியை நிறுத்தினார். இதனால் பிரம்மாவாலும் திருமாலாலும் தனது தொழிலை செய்ய முடியவில்லை. உலகம் செயலிழந்தது. உலகம் செயலிழந்ததை கண்ட பார்வதிதேவி நான் விளையாட்டாக சொன்னேன். நீங்கள் அதை உண்மையாக எடுத்துக் கொண்டீர்கள் என்னை மன்னியுங்கள். உலகம் முன்பு போல இயங்கச் செய்யுங்கள் என்றார். அதற்கு சிவபெருமான் நானே இயக்க சக்தி என்ற எண்ணம் உனக்குள் தோன்றியதால் அதற்கு தண்டனையாக உலகத்தில் பிறப்பெடுத்து அங்கே தவம் செய்வாயாக என்றார்.
சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப பார்வதி தேவியார் பூமியில் குழந்தையாக யமுனை நதிக்கரையோரத்தில் அவதரித்தார். தட்சன் அவருளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு தன் மகளாகக் கருதி வளர்த்தார். தாட்சாயிணிக்கு வயது ஐந்தானதும் சிவனைக் குறித்து தவமியற்றினார். இவ்வாறு பணிரெண்டாண்டு காலம் கடுமையான தவம் மேற்கொண்டார். அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேதியராக வேடமிட்டு தவமிருந்த பார்வதி தேவியை மணக்க விரும்புவதாக சொன்னார். பார்வதிதேவியும் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். பின்னர் சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி பார்வதி தேவியின் மாயையை விலக்கினார். மாயை விலகிய பார்வதிதேவி சிவபெருமானின் உண்மையை அறிந்து கொண்டாள். உடனே சிவபெருமான் தன்னை மறைத்துக் கொண்டார். பார்வதிதேவி எப்போதும் போல் தவச்சாலையில் தவம் செய்து காலம் கழித்தார். அவருடைய தவமானது முற்றுப் பெற்றதும் சிவபெருமான் இடபாருடராக வந்து தாட்சாயிணியை திருக்கயிலை அழைத்துச் சென்றார். இவ்வாறு திருமணம் செய்த பார்வதிதேவியை விட்டு மறைந்து பின் மீண்டும் வந்து கயிலைக்கு அழைத்தச் சென்ற மூர்த்தயே கௌரி லீலா சமன்விதமூர்த்தி ஆவார்.