சிவ வடிவம் – 42. வீரபத்திரமூர்த்தி

நானே பெரியவன் என்ற அகங்காரத்தின் மிகுதியால் இறைவனையே எதிர்ப்பவர்களையும் சிவபெருமானை சரணடைந்தவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துபவர்களை அழிக்கவும் சிவபெருமான் எடுக்கும் வடிவமே வீரபத்திரர் வடிவம் ஆகும்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்பொழுதுமே இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும். ஒரு போரில் தேவர்கள் அசுரர்களை போரில் தோற்கடித்து அவர்களை வெற்றி கொண்டார்கள். அசுரர்கள் தேவர்களை வெற்றி கொள்ள முடியாமல் தவித்தனர். அசுரர்கள் தங்கள் குருவான சுக்கிரச்சாரியாரை ஆலோசித்தார்கள். அவரும் அசுரர்களுக்கு ஆலோசனைக் கூறி ஆறுதல் சொல்லி அசுரர்களில் ஒருவனான வீரமார்த்தண்டன் என்பவனை அழைத்து பிரம்மாவை நோக்கி தவமியற்றச் சொன்னார். அதன்படியே வீரமார்த்தண்டன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் பலனால் பிரம்மா காட்சிக் கொடுத்தார். தவத்தினால் எலும்பும் தோலுமான வீரமார்த்தண்டனை பழையபடி ஆக்கி என்ன வேண்டுமெனக் கேட்டார். வீரமார்த்தண்டன் மூன்று உலகங்களையும் எனை வெல்ல யாருமில்லாதபடி நான் அரசாள வேண்டுமென்ற வரத்தை வாங்கினான். தேவர்களை வெற்றி கொண்டு அவர்களை துன்புறுத்தினான். தேவர்களுக்கு செய்த கொடுமை உச்ச கட்டம் அடையவே பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர்.

சிவபெருமான் அவர்களுக்கு ஆறுதல் கூறி வீரபத்திரர் வடிவமெடுத்து வீரமார்த்தண்டனை எதிர்க்க முடிவு செய்தார். முதலில் வீரமார்த்தண்டனின் படைகளைக் கொன்றார். பின்னர் வீரமார்த்தண்டர் உடன் போரிட்டார். வீரமார்த்தண்டனும் பல விதமான மாயைகளைச் செய்து தப்பிக்கப் பார்த்தான். ஆனால் கடைசியில் ஒன்றும் ஆகவில்லை. வீரபத்திரர் வீரமார்த்தண்டனைக் கொன்றார். தேவர்களின் துயரினைத் துடைத்து தேவர்களை அவரவர்களுக்கு உண்டான பதவியில் அமர்த்தி உலக உயிர்கள் அனைத்திற்கும் சுகவாழ்வளித்தார். வீரமார்த்தண்டனைக் கொன்று தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் கொண்ட கோலமே வீரபத்திர மூர்த்தியாகும்.

தமிழ் நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணை தெய்வமாக வைக்கப்பட்டு கோயில்களில் வழிபடப் படுகிறார். தமிழ் நாட்டில் சென்னையிலுள்ள மயிலாப்பூர் மற்றும் அனுமந்தபுரம் திருவண்ணாமலை திருக்கழுக்குன்றம் கும்பகோணம் தாராசுரம் அரியலூர் திருக்கடவூர் போன்ற இடங்களிலும் காரைக்கால் அருகே பெருந்துறையிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பேதாதம்பட்டி அருகே ஆத்தனூர் இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய் கல்வியங்காடு வியாபாரிமூலை ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

சிவ வடிவம் – 41. சேத்திரபாலமூர்த்தி

ஆரம்பம் என்பதும் முடிவு என்பதும் இல்லாத சிவபெருமானே பலகோடி உயிரினங்களைப் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனாகவும் அழிக்கின்ற தொழிலை செய்யும் உருத்திரனாகவும் மறைத்தல் தொழிலை செய்யும் மகேஸ்வரராகவும் காக்கும் தொழிலை செய்கின்ற திருமாலாகவும் அருளும் தொழிலை செய்கின்ற சதாசிவமூர்த்தியாகவும் இருக்கிறார். ஈரேழு பதினான்கு உலகத்தையும் பல அண்டங்களையும் அவரே படைத்தார். அவரே அனைத்து மாகா சமுத்திரங்களையும் உருவாக்கினார். அண்டங்களையும் உலகங்களையும் அனைத்து உயிரினங்களையும் அவரது சக்தியே இயங்குகின்றது. பிரளய காலத்தில் அனைத்தையும் அழிப்பவர் அவரே. இந்த அண்டங்கள் உலகங்கள் அனைத்தும் அழியும்படி பெரும் வெள்ளம் தோன்றியது. அந்த வெள்ளத்தில் உலகத்தில் உள்ள தேவர்கள் முதற்கொண்டு நவகிரகங்கள் சூரியன் சந்திரன் எட்டு திசை காவலர்கள் உலகத்தில் உள்ள பறப்பன ஊர்வன தாவரங்கள் மனிதர்கள் என அனைவரும் மூழ்கினார்கள். இறைவன் ஓம் என்னும் பிரணவத்தில் அனைவரையும் ஒடுக்கி காப்பாற்றி அருளினார். நீண்ட நாட்கள் ஓம் என்னும் பிரணவத்திலேயே அனைவரும் ஒடுங்கிய நிலையிலேயே இருந்தார்கள்.

மான் மழு ஏந்தி பாம்பு புலித்தோலாடை அணிந்து கொன்றை மலர் சூடி நீலகண்டமும் பார்வதியுடன் தம்பதி சமேதராக தன்னுடைய ஓம் என்னும் பிரணவத்தில் ஒன்றிய அனைவரையும் எழுப்பி அவரவர் பணியில் அமர்த்தி அனைத்து உயிரினங்களையும் ஈரேழு உலகத்தையும் மீண்டும் சிருஷ்டி செய்தார். அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களை காத்ததால் அவருக்கு சேத்திரபால மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. கரூரில் உள்ள பசுபதீசுவரர் கோயிலில் சேத்திரபாலர் அருள்பாலிக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 604

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறை காத்திருக்கிறது. ஆனால் இறையிடமிருந்து அருளைப் பெரும் பக்குவம்தான் மனிதனுக்கு இல்லை. முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் அது இன்பமோ துன்பமோ ஒரு மாயவலை தான். இதனைத் தாண்டி இறைவனிடம் போகும் போது எனக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீ தான் வேண்டும் என்று உளமாற ஒரு மனிதன் வேண்டத் தொடங்கி விட்டாலே அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஓடத் துவங்கும். பிறகு அவனுக்கு தேவைகள் என்று எதுவும் இருக்காது. தேவைகளுக்காக இறைவனை அணுகினால் கடைசி வரை ஒரு தேவை போக இன்னொரு தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். தேவைகளுக்கு வழிபாடு என்பதை விட ஒரு மனிதன் இறை மறுப்புக் கொள்கையிலேயே இருந்து விடலாம்.

சிவ வடிவம்- 40. வடுகமூர்த்தி

சிவ பூஜை செய்து பலனடைந்த துந்தூபி என்ற அரக்கனின் மகன் முண்டாசுரன். இவன் இளமையிலேயே சிவபெருமானை நோக்கி உணவு உறக்கமின்றி வெயில் மழை குளிர் என்று பார்க்காமல் ஐம்புலனையும் அடக்கி சிவபெருமானை மட்டுமே சிந்தையில் வைத்துக் கொண்டு தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தும்புருநாதர் இசைபாட பார்வதியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். இறைவனை தம்பதி சமேதராய்க் கண்ட முண்டாசுரன் மகிழ்ந்து தங்களைத் தவிர தேவர்களாளோ மனிதர்களாளோ யாராலும் அழிக்க முடியாத வரம் கேட்டான். அவனின் தவப்பலனால் அவன் கேட்டபடி வரம் கொடுத்து மறைந்தார் சிவபெருமான். அவ்வரத்தினால் குபேரனின் சொத்துக்கள் அத்தனையையும் கொண்டு சென்றான். தேவர்கள் அவனுடன் போர் புரிந்து தோற்றனர். தேவர்கள் அனைவரையும் சிறை வைத்து துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பிரம்மாவை சரணடைந்தனர். பிரம்மா முண்டாசுரனை அழிக்கப் புறப்பட்டார். இருவருக்கும் கடும் போர் நடைபெற்றது. பிரம்மாவால் முண்டாசுரனை வெற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் பிரம்மா சிவபெருமானை வணங்கி முண்டாசுரனை அழித்து தேவர்கள் துயர் தீர்க்க உதவ வேண்டும் என்று சிவபெருமானை பிரார்த்தனை செய்தார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் தன்னிடமிருந்து தோற்றுவிக்கப்பட்ட வடுக மூர்த்தியை அனுப்பி முண்டாசுரனை அழிக்க உத்தரவிட்டார்.

வடுகமூர்த்தியும் அவ்விடம் சென்று முண்டாசுரனை ஒரு நொடியில் வதம் செய்தார். இதனைக் கண்ட பிரம்மா மனம் மகிழ்ந்தார். தேவர்கள் பூமாரிப் பொழிந்து வடுகமூர்த்தியை வாழ்த்தினார். பின்னர் வடுகமூர்த்தி தேவர்களை விடுவித்து அவரவர் இடத்தில் அமர்த்தி விட்டு சிவபெருமானிடம் சென்று ஐக்கியமானார். பிரம்மாவின் வேண்டுகோளிற்கேற்ப சிவபெருமான் முண்டாசுரனை அழிக்க எடுத்த ரூபமே வடுக மூர்த்தியாகும்.

பாண்டிச்சேரியில் வடுகூர் என்ற ஊரில் திருவாண்டார் கோயிலில் வடுகநாதர் அருள்பாலிக்கிறார். இவருக்கு வடுகீஸ்வரர் வடுகூர்நாதர் என்ற பெயரும் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 603

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

எம்மை நம்பி வந்து இந்த ஜீவ அருள் நாடியில் உரைப்பது சித்தர்கள்தான் என்று நம்புபவர்களுக்கு மட்டும் இந்த உபதேசம் பொருந்தும். சித்தர்களுக்கு என்ன? உரைத்துவிட்டுப் போவார்கள். நேரடியான வாழ்க்கையை எதிர் கொண்டால் அவர்களுக்கு தெரியும். பிள்ளைகள் படிப்பு தாரத்தின் உடல்நிலை சொந்த இல்லம் போன்ற எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தை எல்லாம் தர்மத்திற்கு செலவழித்து விட்டால் நாளை பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் வறட்டு வாதம் செய்தால் நல்ல பலனை இழக்கப்போவது மனிதன்தான்.

அன்றாடம் அல்பொழுதிலே (இரவிலே) துயில் கொள்ளும் பொழுது யோசிக்க வேண்டும். இன்று நாம் எத்தனை பேருக்கு நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தையால் ஆறுதல் சொன்னோம்? எத்தனை பேருக்கு உடலால் நன்மை செய்தோம்? எத்தனை பேருக்கு நம் கைப் பொருள் கொண்டு உதவி செய்தோம்? எத்தனை ஆத்மாக்களை குளிர வைத்தோம்? இன்னும் எத்தனை பேருக்கு செய்ய வேண்டி இருக்கிறது? என்றெல்லாம் பட்டியலிட்டு பிறகு தம்மை தாமே செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டுமே. உறவுக்கும் தாரத்திற்கும் பிள்ளைகளுக்கும் நெருங்கிய நட்புக்கும் செய்வது தர்மத்தில் வராதப்பா. அது கடமையில் வருமப்பா. இரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கு செய்யும் தர்மம் இவனுக்கு செய்தால் நமக்கு பிரதிபலனாக என்ன செய்வான்? என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதே தர்மம் ஆகும். எனவே அறத்தின் தன்மையை சூட்சுமத்தை ஒரு மனிதன் உணர்ந்து கொண்டால் அவனுக்கு துன்பம் இல்லை துயரம் இல்லை சிக்கல் இல்லை. மற்றவர்கள் இப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டுப் போகட்டும் ஆன்மீகவாதிகள் எப்படி வேண்டுமானாலும் வழி காட்டட்டும்.

மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசிப்பதின் காரணம் என்ன? இந்த கலி காலத்திலே கடுமையான தவம் கோட்பாடுகள் வனாந்திரத்திலேயே செய்யும் பூஜைகள் இவைகளை எல்லாம் பின்பற்ற இயலாது. எத்தனையோ இடர்பாடுகளில் ஒரு மனிதன் கலியுகத்தில் வாழ வேண்டியிருக்கிறது. இந்த இடர்களின் வழியே அவன் இறைவழி செல்ல வேண்டும். கர்மங்களை குறைக்க வேண்டும் என்றால் நியாயமான நேர்மையான நீதியான வழியிலே தர்மத்தை துவங்கி விட வேண்டும். காலநேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சரி தர்மம் செய்கிறேன் அதை வாங்கிக் கொண்டு ஒருவன் நியாயமற்ற முறையிலே செலவு செய்தால் என்னவாகும் என்றெல்லாம் ஆய்ந்து கொண்டிருக்கக் கூடாது. ஒருவனுக்கு கஷ்டம் என்று அறிந்த உடனே தர்மம் செய்து விட வேண்டும். அவன் வாய்விட்டு வினவும் வரை காத்திருக்கக் கூடாது. தர்மத்தை நேரடியாக செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் நேர்மையாக தர்மம் செய்யும் அமைப்புகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சேனைகளின் தலைவன் முருகன்

தற்போது இருக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதிகள் அக்காலத்தில் காந்தாரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கோலத்தில் உள்ள முருகனின் சிலை. காலம் 2 ஆம் நூற்றாண்டு. தற்போது கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ளது.

பீமனின் மானசீக பூஜை

அர்ஜூனன் இறைவனுக்கு பூஜைகளை தவறாமல் செய்பவன். தினமும் பூஜை செய்து முடியும் வரையில் சிறிது உணவையும் உண்ண மாட்டான். இதனால் உலகத்தில் தன்னை விடச் சிறந்த பக்தர் யாரும் இல்லை என்று அகந்தை கொண்டிருந்தான். பீமனைப் பார்க்கும் போதேல்லாம் இவன் பூஜைகள் எதுவும் செய்வதில்லை. எந்நேரமும் தூங்குவதிலும் உணவு உண்பதிலும் ஆர்வம் காட்டுகிறான் என்று எண்ணி நகைப்பான் அர்ஜூனன். இதனை அறிந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இந்த அகந்தை போக்க எண்ணி சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். பாரதப் போரில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அர்ஜுனன் அதற்கு வழி காட்டுமாறு கிருஷ்ணனை கேட்டுக் கொண்டான். சிவபெருமானை சந்தித்து அவரின் ஆசி பெற்று வரலாம் வா என்று அர்ஜூனனை கயிலை மலைக்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப் பகுதியில் புல் பூண்டு கூட முளைப்பது இல்லை. ஆனால் அந்த வழியெங்கும் மலர்கள் குவிந்த வண்ணமே இருந்தன.

சிவ கணங்கள் குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்து கொண்டிருந்தது. மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் சிவகணங்கள். இக்காட்சியைக் கண்ட அர்ஜுனன் கிருஷ்ணரிடம் பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால் மலர்கள் மலை போல் இங்கு குவிந்து கொண்டே இருக்கின்றன. மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?இக்காட்சி வியப்பாக உள்ளது. இது எப்படி என்று கேள்வி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இம்மலர்கள் இங்கு பூப்பவை அல்ல. பக்தன் ஒருவன் பூக்களை வைத்து இறைவனுக்கு பூஜிக்கிறான். அங்கு சமர்ப்பிக்கும் பூக்கள் அனைத்தும் இங்கு மலை போல் குவிக்கின்றன என்றார். அதற்கு அர்ஜூனன் ஒரு மனிதன் சில நிமிடங்களில் மலை போல் குவியும் இவ்வளவு பூக்களை எப்படி இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபட இயலும். நானும் தினமும் பூஜை செய்கிறேன். யாராலும் இவ்வளவு பூக்களை வைத்து பூஜை செய்வது என்பது இயலாத காரியம் எப்படி இது சாத்தியம். யார் அந்த பக்தன் என்று மீண்டும் கேள்வி கேட்டான்.

பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்த மலர்கள் தான் இவை அனைத்தும். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய செய்ய இங்கு மலர்கள் குவிக்கின்றன என்றார் கிருஷ்ணர். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறானா? அவனுக்கு அர்ச்சனை செய்ய நேரம் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லை. அப்படியிருக்கும் போது அவன் எப்போது அர்ச்சனை செய்தான்? அப்படியே அர்ச்சனை செய்தாலும் அதை ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை யாருமே பார்த்தது இல்லை. இப்படியிருக்க நீ கூறுவதை எப்படி நம்புவது? என்றான் அர்ஜூனன்.

அர்ஜுனா பீமன் அர்ச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவன் உன்னைப் போல் மற்றவர்களைப் போல இறைவனின் உருவத்தை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஓதி மலர்கள் தூவி அர்ச்சனை செய்வதில்லை. அவன் செய்யும் பூஜைகள் அர்ச்சனைகள் அனைத்தும் மானசீகமானது. அவன் மனதிற்குள்ளேயே செய்கிறான். அவன் எங்காவது சென்று கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும் என்று மனத்தால் நினைப்பான். உடனே அந்த மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலை மலையாகக் குவிந்து விடும். மற்றவர்கள் நினைப்பது போல் பீமன் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். ஆஞ்சனேயர் அம்சம். ஆஞ்சனேயரின் ராம பக்தி உலகறிந்தது. பக்தியில் பீமனோடு உன்னை ஒப்பிடும் போது நீ பக்தனே அல்ல. சிறந்த பக்தனான பீமனை நீ அடிக்கடி ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டு விடு. நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. இறை பக்திக்குப் பெரும் தடையாக இருப்பது உன்னுடைய அகந்தை. உன்னுடைய அகந்தையை விட்டுவிடு என்றார். கிருஷ்ணரின் உபதேசத்தால் அர்ஜுனனிடம் இருந்த அகந்தை என்ற அரக்கன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அர்ஜூனன் அன்று முதல் பீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான்.

சிவ வடிவம் – 39. ஆபத்தோத்தாரணமூர்த்தி

இந்த உலகத்தில் எந்த ஓர் உயிர் என்றாலும் தனக்கு ஆபத்து வந்தால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களை கூறி சிவபெருமானை சரணடைந்து வணங்கினால் அவர்கள் விரும்பும் வண்ணம் அவர்களின் துன்பங்களை நீக்கி இன்பம் அளிப்பதற்காக இவ்வாறு என்று வார்த்தகளால் சொல்ல முடியாதபடி அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி மானுடர்கள் போல உருமாறி சட்டை அணிந்து இரண்டு திருக்கைகளோடும் வந்து அவர்களது துன்பங்களை போக்கி அருள் அளிக்கும் திருத்தோற்றமே ஆபத்தோத்தாரணமூர்த்தி ஆகும். ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி என்று பொருளாகும்.

கர்ம வினைகளினால் ஆட்பட்டவர்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் போது அடியவர்களுக்கு ஏற்றவாறு பல்வேறுபட்ட திருவுருவங்களை எடுத்து வந்து துன்பங்களை களைவார். அவரையின்றி வேறொருவர் நமக்குத் துணை கிடையாது. அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் சப்தரிஷிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் தேவகணங்கள் பூதகணங்கள் முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் அசுரர் கிம்புருடர் கின்னரர் நாகர் என இறைவனை உணர்ந்த பலரும் அவரைச் சுற்றிலும் நின்றபடி இருப்பார்கள்.

அவரது அற்புதங்களும் அவதாரங்களும் மூர்த்தங்களும் இன்னக் இன்னக் காரணங்களுக்கென மனித அறிவினால் கூற இயலாது. துன்பம் அடைந்தோரையும் ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தியாகும்.