நாகங்களின் தெய்வமான நாகதேவதையின் சிற்பம். தாமரை பீடத்தில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ள இவரது பெயர் மானசாதேவி. இடது கையில் பாம்பை ஏந்தியவாறு கீழே உள்ள பீடத்தில் செதுக்கப்பட்ட கலசத்தின் மீது அவளது பதக்கமான வலது பாதம் நிற்கிறது. ஒரு ஏழு தலை நாகம் எழுந்து அவளுக்கு மேலே தன் பேட்டை விரிக்கிறது. மானசாவின் கணவரான ஜரத்காரு முனிவர் ஒரு மெலிந்த சந்நியாசியாக சித்தரிக்கப்படுகிறார். அவரது மகன் அஸ்திகா இருவரும் அவரது சிம்மாசனத்தின் இருபுறமும் உள்ள இரண்டு சிறிய பீடங்களில் அமர்ந்துள்ளனர். தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 – 12 ஆம் நூற்றாண்டு.
கேள்வி: நவக்கிரகம் என்று நாம் வழிபடுவது மொத்தமும் கிரகங்கள் தானே? அதனால் நமக்கு எப்படி நன்மையோ தீமையோ வர முடியும் அறிவியல் படி பார்த்தால்? அப்படியே ஜாதகம் என்பது ஒரு வகையான அறிவியல் கணிப்பு இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரகத்தால் தோஷம் இருக்கு அல்லது கெட்டது நடக்கும் என்று சொன்னாலோ ஒரு எள் தீபம் ஏற்றுவதனாலோ அல்லது ஒரு விளக்கு ஏற்றுவதனாலோ அது எப்படி மாறும்? சரி நவக்கிரக கோயிலுக்கு போறோம் அப்படி என்றால் அந்த இடத்தில் அந்த கிரகத்தின் கதிர் வீச்சு ஜாஸ்தியா இருக்கு சரி அந்த மனிதருக்கு அந்த கிரகத்தால் இருக்கின்ற தோஷம் விலகும் அப்படி என்றாலும் ஏதோ ஒரு கோயிலில் நவகிரகத்தில் போய் ஒரு எள் தீபம் ஏற்றுவதனாலோ ஒரு ஆடை சாத்துவதாலோ ஒரு பூ போடுவதாலோ எப்படி அந்த கிரகத்தால் வருகின்ற கெடுதல் மூழ்கும்?
இறைவனின் கருணையைக் கொண்டு இது போன்ற வினாக்கள் எல்லாம் கால காலம் மனிதனால் எழுப்பப்பட்டு வருகின்ற வினாக்கள் தான். வினாக்கள் எழுப்பி எழுப்பி தன்னை மேம்படுத்திக் கொள்வது தவறு அல்ல. ஆயினும் கூட சிலருக்கு விடையை ஏற்கனவே புரிந்து கொண்ட மனிதன் இந்த வினாவை பார்த்தால் ஒரு பாமரத் தனமான வினா என்று தான் எண்ணுவான். இருந்தாலும் இந்த குழந்தை வினவிய வினாவிற்கு நாங்கள் கூறுவது இந்த குழந்தைக்கு மட்டும் அல்ல வளர்ந்த குழந்தையும் புரிந்து கொள்ளத்தான். இது போலவே நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். விண்ணுலகிலே சஞ்சரிக்கும் கிரகங்கள் ஜடப் பொருள் போலும் அந்த கிரகங்கள் மண் பொன் இரும்பு பொன்ற உலோகக் கலவையால் ஆன ஒரு நிலையிலும் அந்த கிரகங்கள் எதற்காக அல்லது எப்படி மனிதனைத் தாக்குகின்றன என்பது போலவும் மனிதனுக்கு தோன்றுகிறது குழப்பம் ஏற்படுகின்றது.
இங்கே நன்றாக கவனிக்க வேண்டும். ஒரு அரசாங்கம் இருப்பதாக கொள்வோம். அந்த அரசாங்கத்திற்கு முன்பெல்லாம் மன்னர்கள் இருந்தால் மன்னர்களுக்கு என்று ஒரு இலச்சினை (குறியீடு / அடையாளம்) இருக்கும். சோழனுக்கு புலி என்றும் சேரனுக்கு வில் என்றும் அது போலவே பாண்டியனுக்கு மீன் என்றும் இப்படி பல்லவனுக்கு சிம்மம் (சிங்கம்) என்றெல்லாம் வைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ஒன்று எங்கும் மனிதனை மனிதன் இலச்சினையாக (குறியீடாக / அடையாளமாக) வைத்தது இல்லை. அவனுக்கே தெரியும் தன்னை விட விலங்குகள் தான் மேல் என்று. இது போன்) நிலையிலே நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது கூட ஒவ்வொரு அரசாங்கமும் இது இந்த தேசத்தின் அரசாங்கம் என்பதை உணர்த்துவதற்காக ஒரு குறியீட்டை (அடையாளத்தை) பயன்படுத்துகிறார்கள். அந்த குறியீடே (அடையாளமே) அரசாங்கம் எனலாமா (என்று சொல்லலாமா)? அல்லது அந்த குறியீடே (அடையாளமே) தேசம் என்று கூறலாமா? அந்த குறியீடு (அடையாளம்) எப்படி அந்த அரசாங்கத்தை புரிந்து கொள்ள உதவுகிறதோ அப்படித்தான் மேலே இருக்கின்ற மனிதன் பார்க்கின்ற கிரகங்கள். அந்த கிரகங்களே அந்த கிரகங்களுக்கு உரிய அந்த தேவர்கள் என்று எண்ணுதல் (நினைப்பது) கூடாது.
சூரிய பகவான் என்று பார்க்கும் பொழுது சூரிய பகவான் என்கிற நிலையில் இருக்கக் கூடிய தேவன் தனித்து ஒரு இடத்தில் இருந்து தவம் செய்து கொண்டு இருப்பான். அவனுடைய இலச்சினை (குறியீடு / அடையாளம்) தான் மனிதன் பார்க்கின்ற சூரியன். அங்கே சோமன் எனப்படும் சந்திர பகவான் ஒரிடத்தில் இருந்து தனித்து தவத்தில் இருக்கின்றான். அந்த சந்திரனின் இலச்சினை (குறியீடு / அடையாளம்) தான் வானிலே உலா வரும் நிலவு ஆகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மனிதன் செய்கின்ற பாவ புண்ணியத்தின் அடிப்படையிலே அவன் வாழ்க்கையில் இவை இவை நடக்க வேண்டும், இப்படியெல்லாம் சம்பவம் நிகழ வேண்டும் என்பதை இறைவன் தீர்மானித்து அதற்கு ஏற்ற ஒரு சூழலில் அந்த ஆத்மாவை மறு பிறவியில் பிறக்க வைக்கின்றான். அப்போது எந்தெந்த கிரகங்கள் எப்படியெப்படி இருந்தால் அந்த வாழ்க்கையில் அந்த மனிதன் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அந்த நிலைகள் ஏற்படும் என்பதற்கு இணங்க அந்த கிரக நிலையிலே அங்கு அந்த குழந்தை பிறக்கிறது. அடுத்ததாக விதி விதித்தது விதித்ததுதான் அதிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது (முடியாது) என்பது நிரந்தரமான உண்மை. ஆனால் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் தானே? எனவே இறைவனே அந்த விதிக்குள் விதியை வைத்து ஓரளவு தன்னை உணர்ந்து இனி நல்லதை எண்ணுவேன் நல்லதை செய்வேன் என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வேன் என்று சாத்வீகமாக (சாந்தமாக / அமைதியாக) வாழக்கூடிய மனிதர்களுக்கு சில சலுகைகளை காட்டுகின்றான்.
எப்படி என்றால் இந்த பூவுலகிலே (பூமியிலே) தவறு செய்பவர்களை தண்டிக்க சிறைக்கூடம் இருக்கிறது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு ஒருவன் ஒரு தவறு செய்து விடுகிறான் அவனுக்கு சிறைச் சாலையிலே சில ஆண்டுகள் இருக்கும் படியான தண்டனை கிடைக்கிறது. ஆனால் அங்கு சென்று அவன் மனம் வருந்தி இனி ஒழுங்காக வாழ வேண்டும் என்று திருந்தி அவன் அங்கு இட்ட பணிகளை நேர்மையாக செய்கிறான். அமைதியாக வாழ்கிறான் என்றால் அவனின் நன்னடத்தை காரணமாக அவனுக்கு விதிக்கப்பட்ட அந்த அத்தனை ஆண்டு காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப் படுகிறான் அல்லவா? வெறும் சுய நலம் அதிகம் உள்ள மனிதனே இவ்வாறெல்லாம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் பொழுது இறைவன் எப்படி நடந்து கொள்வார்? எனவே தான் அறிந்தோ அறியாமலோ சேர்த்த பாவத்தை நீக்கிக் கொள்ள சில வாய்ப்புகளை மனிதனுக்கு தருகிறான். அந்த வாய்ப்புகளின் அடிப்படை தான் தர்மம் அடுத்ததாக பக்தி. ஒரு மனிதனைப் பார்த்து நீ முடியாத ஏழைக்கு உதவி செய் என்றால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனம் பலருக்கு இருக்காது. ஆனால் இறைவனுக்கு அபிஷேகம் செய் என்றால் அவன் சந்தோஷமாக செய்வான். இறைவனுக்கு தீபம் ஏற்று என்றால் செய்வான். ஏனென்றால் அவன் வளர்ந்த விதம் வளர்ந்த சூழல் அவன் வாசித்த புத்தகங்கள் அவ்வாறு அவனுக்கு போதிக்கப் (சொல்லிக் கொடுக்கப்) பட்டு இருக்கிறது. இல்லை என்றால் அவன் விதி அவ்வாறு இருக்கின்றது. அவன் எண்ணுகிறான் இறைவனுக்கு நேரடியாக நம் பிரார்த்தனை செல்கிறது நம் கஷ்டம் நீங்கும் என்று. எனவே உற்சாகமாக தீபம் ஏற்றுகிறான். எப்படியாவது ஒரு மனிதனை பண்படுத்த (பக்குவப் படுத்த) வேண்டும் என்பதற்காகத் தான் பல்வேறு விதமான வழிபாடுகள் ஆரம்ப நிலையில் மகான்களால் கூறப்படுகின்றன. உண்மையில் பக்குவப்பட்டு விட்டால் புற (வெளியில் செய்கிற) சடங்குகள் எதுவும் அவசியம் இல்லை. ஆனால் பக்குவப்படும் வரை எல்லா சடங்குகளும் தேவை.
ஆரம்ப நிலை குழந்தைக்கு விரல் விட்டு தான் கணிதம் (கணக்கு) சொல்லித் தர வேண்டும். வளர்ந்த பிறகு அது மனக் கணக்காக கூட போடலாம். எடுத்த எடுப்பிலேயே மனக் கணக்கை போதிக்க (சொல்லித் தர) இயலாது. எனவே நீ தீபம் ஏற்று. நீ அபிஷேகம் செய் என்றெல்லாம் போதி (சொல்லிக் கொடுத்து) ஒருத்தன் செய்து செய்து மெல்ல மெல்ல அவனுக்குள் சில மன முதிர்ச்சியை ஏற்படுத்தி பிறகு தான் தத்துவ ரீதியான (சார்ந்த) ஆன்மீக விஷயங்களை போதிக்க (சொல்லிக் கொடுக்க) வேண்டும். எனவே இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருக்கிறது. இவை எல்லாம் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. கூடுமான வரை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் குழப்பங்கள் அகன்று (நீங்கி) விடும். ஒரு தீபம் ஏற்ற ஒரு மனிதன் எண்ணுகிறான். அப்பொழுது அவன் என்னென்ன செய்ய வேண்டும்? தீபத்திற்கு உண்டான மண் அகல் விளக்கை வாங்க வேண்டும். அதன் மூலம் அந்த விளக்கை தயாரிக்கின்ற குடும்பம் பிழைக்கிறது. பிறகு அதில் எண்ணையோ நெய்யோ வாங்க வேண்டும். அதன் மூலம் ஒரு குடும்பம் பிழைக்கிறது. பிறகு அதிலே திரி பிறகு அதிலே அனலை (நெருப்பை) உற்பத்தி செய்யும் செவ்வகம் (தீப்பெட்டி) இது தொடர்பான தொழில்கள் எல்லாம் நன்றாக வளர்கிறது. ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறையோடு தான் எல்லா சமுதாய இணைப்புகளும் மறைமுகமாக முற்காலத்தில் பிணைக்கப் பட்டு இருக்கின்றன.
நன்றாக கவனிக்க வேண்டும் அனல் (வெப்பம்) தகிக்கும் கோடை (வெயில்) காலத்தில் தான் இங்கே தென் பகுதியில் குறிப்பாக தமிழகத்திலே நிறைய திருவிழாக்கள் எல்லாம் நடக்கும். ஏனென்றால் விவசாயம் இராது (இருக்காது). அக்காலத்திலே மனிதர்கள் இல்லத்திலே (வீட்டிலேயே) முடங்கி கிடப்பார்கள். எனவே அவர்களை அந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு அழைப்பதற்கு இருக்கின்ற ஒரே வழி இறை இறை தொடர்பான விஷயங்கள் தான். எனவே தான் அது போன்ற விழாக்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. இதிலே இடை செருகல்களும் (பின்னால் சேர்க்கப் பட்ட மூட நம்பிக்கைகளும்) மனிதனின் சுய நலமும் மரணங்களும் புகுந்து விட்டன என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதற்காக ஏற்படுத்தப்பட்ட முறையே தவறு என்று எண்ணி விடக் கூடாது. எனவே எதை செய்தாலும் அதை அர்த்தமுள்ள சடங்காக பார்க்க கற்றுக் கொண்டு விட்டால் கட்டாயம் அதன் மூலம் நல்ல பலன் உண்டு. எடுத்த எடுப்பிலேயே பத்மாசனம் இட்டு (போட்டு) அமர் (உட்கார்). புருவ மத்தியை (நடுவை) கவனி. மூலாதாரத்தில் முடங்கி கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பு என்றால் அது எத்தனை பேருக்கு சாத்தியம் (கை வரும்)? எனவே மிக எளிய வழி இறை நாமத்தை ஜெபிப்பது. ஆலயம் (கோவில்) தோறும் செல்வது. தான் பாடுபட்டு நேர்மையாக சேர்த்த செல்வத்தை தனக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பயன்படும் வண்ணம் (முறையில்) நற் செயலை ஆற்றுவது (நல்ல செயல்களை செய்வது) இதன் மூலம் ஒரு மனிதனின் பாவ கர்மாக்கள் படிப்படியாக குறைகிறது. பாவம் குறைய குறைய முதலில் மனிதனை விட்டு ஐயம் (சந்தேகம்) அகலும் (நீங்கும்). எல்லாம் ஒன்று தான் என்கிற நிலை வரும். இறைவன் என்பது என்ன எப்படி அதைப் புரிந்து கொள்ளக் கூடிய சூழல் என்ன எப்படி என்பது எல்லாம் விளங்கும். அதன் மூலம் இறைவனை அறிந்து கொண்டு அவனை அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆகவே இதையெல்லாம் செய்வது நம்மை நல் வழிப் படுத்தி இறைவனிடம் சென்று சேர்க்கும்.
மல்லிகைப்பூ வச்சு முல்லைப்பூ செவ்வந்திப்பூ கொன்றை அப்புறம் தாழம்பூ பட்டை என்று பல பூக்களால் சிவனுக்கு சிகை அலங்காராம் இருக்கும் இங்கு நாகத்தை ஜடையா வைத்து சிகை அலங்காரம் பின்னப்பட்டிருக்கிறது. இடம்: விழுப்புரம் மாவட்டம்
கேள்வி: தக்க குருவை அடைவதற்கான வழியை தெரிவிக்க வேண்டும்?
இறைவன் அருளால் தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து கேட்பார்கள் என் குரு யார்? எங்கிருக்கிறார்? எந்த குருவை நான் பின்பற்ற வேண்டும்? என்றெல்லாம் கூட கேட்பதுண்டு. நாங்கள் கூறுவது என்னவென்றால் ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கின்ற எல்லோருமே குருமார்களே. ஒவ்வொரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ள உதவினால் அதுவும் குருதான். எனவே நாங்கள் போதுவாகக் கூறுவது என்னவென்றால் குருவைத் தேடி நல்ல சீடர்கள் அலையக்கூடாது. சீடனை தேடித்தான் குரு வரவேண்டு்ம். அந்த அளவிற்கு அந்த சிஷ்யன் நடந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஆழ்வார்களின் கதையை நினைவூட்டிக் கொண்டால் நன்றாகவே புரியும். அந்த புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் கொண்டால் மற்றவை தானாக விளங்கும்.
தேவேந்திரன் ஆட்சி செய்யும் தேவலோகத்தில் இருக்கும் சிறப்புமிக்க மலர்களில் ஒன்று பாரிஜாதம். இதனை பவளமல்லி என்றும் அழைப்பார்கள். இந்த மரத்தில் இருந்து கிடைத்த ஒரு மலரை நாரதர் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்கு வந்தார். அங்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணரிடம் தான் கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கொடுத்தார் நாரதர். அதனை பெற்றுக் கொண்ட கிருஷ்ணர் அந்த மலரை தன்னுடைய மனைவியரில் ஒருவரான சத்தியபாமா கேட்டுக் கொண்டதினால் அவரிடம் அளித்தார். இதைக் கண்ட நாரதர் உடனடியாக அரண்மனையின் மற்றொரு பாகத்தில் இருந்த ருக்மணியிடம் சென்று சத்தியபாமாவிற்கு தேவலோக மலரான பாரிஜாதத்தை கிருஷ்ணர் கொடுத்த விவரத்தை சொன்னார். இதனால் கோபம் கொண்ட ருக்மணி அரண்மனை காவலர்கள் மூலமாக தன்னை வந்து சந்திக்கும்படி கிருஷ்ணருக்கு தகவல் அனுப்பினார். ருக்மணி இருக்கும் இடத்திற்கு வந்த கிருஷ்ணரிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் ருக்மணி.
நாரதர் கொண்டு வந்த பாரிஜாத மலரால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி வருந்தினார். கிருஷ்ணர். அவர் எவ்வளவு சமாதானம் செய்தும் ருக்மணி கோபம் குறைய வில்லை. சத்தியபாமாவிற்கு பாரிஜாத மலரைக் கொடுத்தீர்கள். எனக்கு அந்த மரமே வேண்டும் என்று கேட்டாள். இதையடுத்து பாரிஜாத மரத்தை கிருஷ்ணர் இந்திரனிடம் கேட்டார். ஆனால் இந்திரன் தரவில்லை. இதனால் போர் புரிந்து பாரிஜாத மரத்தை துவாரகைக்கு கொண்டு வந்தார் கிருஷ்ணர். பின்னர் அந்த மரத்தை ருக்மணியின் இல்லத்தின் நட்டுவைத்தார். ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் அருகில் இருந்த சத்தியபாமாவின் வீட்டிற்குள்தான் உதிர்ந்து விழுந்தன. இதனைக் கண்ட ருக்மணி கிருஷ்ணரிடம் பூ ஏன் இங்கு விழவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு கிருஷ்ணர் நீ கேட்டது பாரிஜாத மரத்தைத்தான். பூக்களை அல்ல. சத்தியபாமா கேட்டது பூ மட்டும் தான். பூ கேட்ட அவளுக்கு பூவும் மரம் கேட்ட உனக்கு மரமும் கிடைத்தது என்றார்.
பாரிஜாத மரத்தின் கீழ் கிருஷ்ணரும் சத்தியபாமாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வு சிற்பம் தாய்லாந்தில் உள்ள சத்திய சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மூலவர் போர்மன்ன லிங்கேஸ்வரர். இங்கு மூலவரே உற்சவராகவும் கருவறையில் 21 அடி உயரத்தில் தேரின் மீது நின்று இறைவன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். போர் மன்னலிங்கேஸ்வரர் போத்துராஜா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். போர்மன்னலிங்கேஸ்வரர் ஊரின் பெயரைப் போலவே மங்கலத்துடனும் பெயரைப் போலவே போர் உக்கிரத்துடனும் காட்சி தருகிறார். ஊர் போத்துராஜ மங்கலம். போர்மன்னலிங்கேஸ்வரர் ஆண்டு முழுவதும் கருவரையில் தேரில் அமர்ந்திருக்கிறார்.
துவாபரயுகத்தில் பரமேஸ்வரனும் பார்வதியும் பூலோகத்தை சுற்றி வந்தனர். வன்னி மரங்கள் நிறைந்த பகுதியில் பார்வதி தேவியார் மணலால் கோட்டையையும் கொத்தளங்களையும் விளையாட்டுப் போக்கில் வடிவமைத்தார். அதன் அழகில் ரசித்த ஈஸ்வரன் அந்த மணல் கோட்டையை மையமாக்கி சிவானந்தபுரி என்ற அழகிய நகரத்தை உருவாக்கினார். பார்வதி தேவியார் உருவாக்கிய மணல் கோட்டையை பாதுகாக்க யாக குண்டத்தில் இருந்து ஈஸ்வரனால் உருவானவர் ஸ்ரீபோர்மன்னன். வீரசாட்டை மல்லரி கொந்தம் கொடிசிலை போன்ற ஆயுதங்களுடன் காவல் பணிபுரிகிறவராக நாட்டை காக்க இறைப் பணியாற்றினார் போர்மன்னன்.
மகாபாரத யுத்தத்தின் சமயம் பாண்டவப் படைக்கு அதிகமான ஆயுதங்கள் தேவைப்பட்டது. போர்மன்னரிடம் வித்தியாசமான ஆயுதங்கள் நிறைய இருந்தது. இந்த ஆயுதங்களை பெற்றுக் கொள்ளவும் பார்வையாலேயே எதிரிகளை வீழ்த்தும் வல்லமை படைத்த போர்மன்னனை போரில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணர் முடிவு செய்தார். எனவே போர்மன்னனை சந்திக்க கிருஷ்ணன் அர்ஜூனன் பீமன் மூவரும் சிவநந்தாபுரி என்ற ஊருக்கு வந்தனர். போத்துலிங்க மன்னரை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாது. அதிலும் பெண்ணாக இருந்தால் அதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர் இது வரை எந்த பெண்ணையும் ஏரெடுத்துப் பார்ப்பதில்லை.
கிருஷ்ண லீலை தொடங்கியது. கிருஷ்ணன் தாதிக்கிழவியாகவும் அர்ஜூனன் அழகிய பெண்ணாகவும் பீமன் விறகு வெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர். பீமன் விறகுக்கட்டு ஒன்றை அரண்மனை மதில் சுவற்றில் வைக்க அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பீமன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுவிக்க வேண்டி மன்னரைச் சந்திக்க காவலாளியிடம் அனுமதி கேட்டனர் கிருஷ்ணனும் அர்ஜூனனும். மன்னரின் அனுமதி கிடைக்கவே அரசவைக்குள் அழைத்து வரப்பட்டனர். அர்ஜூனனைக் கண்டதும் மன்னருக்கு சிலிர்ப்பு. முதல் முறையாக பெண்ணை பார்ப்பதாலா இல்லை அர்ஜூனனின் வேஷத்தினாலா ஒன்றும் புரியவில்லை. ஆனால் மன்னர் அர்ஜூனனிடம் மயங்கி விட்டார் என்பது மட்டும் தெளிவாய்த் தெரிந்தது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு நீங்கள் யார்? உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேட்டார். மன்னா நாங்கள் ஊருக்கு புதிதாய் வந்திருக்கிறோம். எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். என் மகனைத்தான் காவலாளிகள் சிறையில் அடைத்துள்ளனர். அவன் மிகவும் அப்பாவி தெரியாமல் தவறு செய்து விட்டான். அவனை மன்னித்து விடுவியுங்கள் என்றாள் தாதிக்கிழவி வேடத்தில் இருந்த கிருஷ்ணன். சரி அவனை விடுவிக்கிறேன். அதற்கு பலனாக உன் மகளை எனக்கு மணமுடித்து தர வேண்டும் என்று கேட்டான் அரசன். அதற்கு தாதிக்கிழவி எனக்கு தங்களிடம் ஒரு உதவியாக உங்களிடமுள்ள ஆயுதங்கள் வேண்டும் அதனை தர தாங்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொடுக்கிறேன் என்றாள். அர்ஜூனன் மீதுள்ள மோகத்தால் யோசிக்காமல் ஒப்புக் கொண்டு ஆயுதங்களை அளித்தான் அரசன்.
திருமண ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன் நாங்கள் வெளியில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்து அங்கிருந்து கிளம்பினார்கள். விஷயம் மன்னருக்கு தெரிந்து கடும் கோபம் கொண்டார். அவர்களைப் பிடித்துக் கொல்ல உத்தரவிட்டார். மன்னரின் கோபத்தை கேள்விப்பட்ட கிருஷ்ணன் உண்மையை விளக்கி பாரதப் போரிலும் அவரை பங்கேற்க வைத்தான் கிருஷ்ணன். மகாபாரதப்போர் வெற்றியில் பங்கேற்ற பெருமையுடன் வந்த போத்துலிங்க மன்னருக்கு கோயில் எழுப்பப்பட்ட இடமே போத்துராஜா மங்கலம். இந்த ஊரில் இருந்து 2 கிமீயில் உள்ள பசு மலையில் மன்னரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீபாஞ்சாலி மகாமித்யம் என்ற நுாலில் இந்த வரலாறு உள்ளது.
கேள்வி: ஒரு கோவிலில் உள்ள சுந்தர மகாலட்சுமி தாயாருக்கு ஆறு விரல்கள் இருப்பதன் காரணம்:
இறைவன் அருளாலே முன்பே கூறியது போல இதுபோல் விஷயத்திலே ஒரு மனிதன் தன்னுடைய மன கற்பனைக்கு ஏற்ப அல்லது அப்போது அவனுக்கு உரைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு ஏற்ப செயல்பட்டதால் வந்த விளைவுதான் என்று யாங்கள் கூறுகிறோம். இப்படி இருப்பதால் தோஷம் குறை என்று எண்ணவேண்டாம். இதனால் நன்மைதான் என்று எடுத்துக் கொண்டு இதுபோல் அந்த விசித்திரமான மாற்றத்தைக் கூட இறைவனின் கருணை என்றும் லீலை என்றும் எடுத்துக் கொண்டால் கட்டாயம் நன்மையே நடக்கும்.
மேலும் இக்கோயிலைப் பற்றி அறிந்த கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
அரசர் கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது. கோயில் முகப்பை தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம். அடுத்து கருடாழ்வார் மண்டபம். அதற்கு நேரே பெருமாள். வலது புறம் தாயார் தனிக் கோயில் கொண்டருள்கிறாள். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறாள் லட்சுமி. மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க கீழிரு கரங்கள் அபய வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது. வரலட்சுமி விரதத்தன்றும் அட்சய திருதியையன்றும் இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. மண்டபத்தின் முன் ஒரு இசை மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணும் விரலால் சுண்ட ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால் அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.
இந்த மண்டபத்திற்கு வெளியே வலதுபுறம் அட்சய கணபதி வைணவ தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் காட்டுகிறார். அனுமன் ஒரு முறை விநாயகரிடம் இந்த அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டார். அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாள். எனவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம். சுந்தரமகாலட்சுமியின் சன்னிதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் ஒருவரின் சிற்பம் உள்ளது. இந்த சுந்தரமகாலட்சுமி தேவிக்கு அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்குப் படைப்பார். இன்றும் அபிஷேக சமயங்களில் அன்னையைப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்மமூர்த்தி குபேரன் காளிங்கநர்த்தன கண்ணன் பரமபதநாதர் திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக அருள்புரிகின்றனர். இந்த மூர்த்திகள் திருப்பணி செய்ய பூமியை தோண்டியபோது கிடைத்தவை.
பெருமாள் சன்னிதியில் ஸ்ரீதேவி பூதேவியோடு கமல வரதராஜராக நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர். விஷ்வக்சேனர் மணவாள மாமுனிகள் தேசிகர் ஆகியோரும் உள்ளார்கள். ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் ஒன்றாக இருந்தபடியால் இத்தலம் அரசர்கோயில் என்று பெயர் ஏற்பட்டது.
நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்ட போது மண்ணாளும் வேந்தனும் விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். உடனே பூலோகத்திற்குச் செல்லுங்கள் என்றனர் முனிவர்கள். அதன்படி மண்ணுலகம் வந்தார் நான்முகன். நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று விஷ்ணு ஏற்கெனவே தீர்மானித்து இந்த அரசர் கோயில் இருக்கும் இடத்தில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுவதும் சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார். விஷ்ணு எழுந்தருளிய தகவலைக் கேள்விப்பட்டு அவர் பெருமாளை தரிசிக்க சென்றார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நான்முகன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி விஷ்ணுவின் ஆசியைப் பெற்றார். ஜனக மன்னனையும் பெருமாளையும் ஒன்றாக தரிசித்து சாப விமோசனம் பெற்றார். அந்த மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். தினமும் வந்து பெருமாளை தரிசித்து பூஜிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஜனகர் வராததால் பெருமாள் ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே புறப்பட்டு வந்தார். அந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை தாமே செய்து கொண்டார். பிறகு ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன என காவலாளிகளிடம் சொல்லிவிட்டு பெருமாள் புறப்பட்டார்.
அரசு பணியாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் கேட்டார். நடந்ததை அறிந்து சிலிர்த்தார். தன் நித்ய கர்மாவிலிருந்து தான் தவறி விட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார். பெருமாளோ தேவலோக விஸ்வகர்மாவினால் மட்டுமே இங்கு ஆலயம் எழுப்ப முடியும் என்று கூறி தேவலோக விஸ்வகர்மாவை வரவழைத்தார். ஆலயம் எழுப்ப தேவலோக விஸ்மகர்மாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி எழுப்பப்பட்ட ஆலயம்தான் இந்த அரசர்கோயில்.
நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால் பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள். பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம். பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள் லட்சுமி. இதனைக் கண்ட விஷ்ணு இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன். இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’ என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து அவளை மகிழ்வித்தார். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி தாமரையில் வசிக்கும் தன் சார்பாக எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக் கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே பெருமாளும் தன் கரத்தில் தாமரை மொக்கை ஏந்தி கமலவரதராஜப் பெருமானாக கோயில் கொண்டார்.