விநாயகர்

நமது மூளை வலப்பகுதி இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது. மூளையின் இடது வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனை இன்றைய விஞ்ஞானம் ஆமோதிக்கின்றது. இதையே நம் சாஸ்திரம் பிங்கலை இடங்கலை நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. வலது பக்க மூளை இயங்கும் பொழுது இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும் இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் பெயர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. வலது நாசிக் காற்று (சூரிய கலை) உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்றது. வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். உடல் சுறுசுறுப்படையும் சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும். இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும் வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை) உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும். இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து உடல் குளிர்ச்சியடையும். பரபரப்புத் தன்மை குறைந்து மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து நிதானமான மனநிலை நிலவும். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் அவரை முதலில் வணங்க வேண்டும்.

கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனித்து விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் வலது நாசியிலும் இடம்புரி விநாயகராக இருந்தால் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் அளிக்கும் செய்தி இது. விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய ரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளலாம். விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

ஞானப்பழம்

இறைத்தேடலில் ஞானத்தை தேடி இருந்த இடத்திலேயே பிரம்மச்சரியம் கடைபிடித்து யோக வழியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது பிள்ளையார் வழி.

இறைத்தேடலில் ஞானத்தை தேடி உலகத்தை சுற்றி பலரிடம் கிடைக்கும் என்று அலைந்து அலைந்து யாரிடமும் கிடைக்காமல் கோபத்தில் நானே தேடிக்கொள்கிறேன் என்று இறுதியில் தனக்குள்ளேயே இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து தனியாக அமர்ந்து இறுதியில் இறைவன் என்கின்ற ஞானப்பழத்தை அடைவது முருகர் வழி.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -31

அதிகாலை விடிந்ததும் பரத்வாஜ முனிவரின் குடிலை நோக்கி சென்றான் பரதன். தனது நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த பரத்வாஜ முனிவரை பார்த்து வணங்கினான் பரதன். இரவு அளித்த விருந்து உபசாரங்கள் திருப்தியாக இருந்தனவா என்று கேட்டார் பரத்வாஜ முனிவர். படை பரிவாரங்கள முதல் மந்திரிகள் வரை அனைவரும் தாங்கள் அளித்த விருந்தை சாப்பிட்டு சுகமாக தங்கினோம். அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவலோக நந்தவனத்தில் தங்கியது போன்று உணர்ந்தோம். ராமரின் இருப்பிடம் செல்ல வழியும் நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதியும் கேட்டு வந்திருக்கின்றேன் என்று வணங்கினான் பரதன்.

பரத்வாஜ முனிவர் பரதனுடன் வந்திருந்த மூன்று பெண்களை தனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். சுமத்திரை கைகேயி என மூவரையும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்து வைத்து ஆசிபெறச்செய்தான். முதலில் கௌசலையை வரச்செய்து துக்கப்பட்டு பட்டினியால் வாடிய முகத்துடன் நிற்பவர் பட்டத்து ராணி பெயர் கௌசலை இவரே ராமரை பெற்றெடுத்த புண்யவதி என்று அறிமுகம் செய்தான். கௌசலையின் வலது புறத்தில் இருப்பவர் சுமத்திரை இரண்டாவது பட்டத்து ராணி லட்சுமணன் சத்ருக்கணனை பெற்றடுத்த பாக்கியவதி. இடது புறத்தில் நிற்பவர் அரசி வடிவத்தில் இருக்கும் அரக்கி. எங்களுடைய துக்கங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவள் என்று கைகேயியை அறிமுகம் செய்தான். மூவரும் பரத்வாஜ முனிவரை சுற்றி வந்து வணங்கி நின்றனர். கைகேயி கவலையுடன் முகத்தை மறைத்துக்கொண்டு வணங்கி நின்றாள். பரத்வாஜ முனிவர் பரதனிடம் உலகத்தின் நன்மைக்காகவே அனைத்தும் நடந்தது உனது தாயை அப்படி சொல்லாதே என்று கேட்டுக் கொண்டு ராமர் இருக்கும் இடத்திற்கு செல்ல வழியை கூற தொடங்கினார். இங்கிருந்து இரண்டரை யோசனை தூரத்தில் மந்தாகினி நதி ஓடுகின்றது. நதியை தாண்டினால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காடு இருக்கின்றது. அதன் தெற்கு பகுதியில் சித்ரகூட மலை இருக்கின்றது. மலை அடிவாரத்தில் ஒரு குடில் அமைத்து மூவரும் வசித்து வருகின்றார்கள் என்று செல்வதற்கான வழிமுறைகளை பரதனிடம் சொல்லி வாழ்த்துக்களை கூறி விடை கொடுத்தார்.

பரதன் தன் படை பரிவாரங்களுடன் பரத்வாஜ முனிவர் காட்டிய பாதையில் சென்றான். தூரத்தில் சித்ரகூட மலையும் மலை அடிவாரத்தில் லேசான புகையும் தெரிந்தது. ராமர் இருக்கும் இடம் அது தான் என்று அனைவரும் உற்சாகமடைந்து விரைவாக செல்ல ஆரம்பித்தனர்.

சித்ரகூட மலையின் கம்பீரமும் வனத்தின் அழகும் பறவைகளின் சத்தமும் விலங்குகளின் விளையாட்டும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஊரையும் உறவினர்களையும் பிரிந்த துக்கம் ஏதும் இல்லாமல் ராமர் சீதை லட்சுமணன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தார்கள். பெரும் தூசி புகை கிளம்பியதையும் கண்டார் ராமர். லட்சுமணனிடம் தம்பி ஏதோ தூரத்தில் ஏதோ பெரும் சத்தம் தூசி படலத்துடன் கிளம்புகின்றது. விலங்குகள் அனைத்தும் நாலாபக்கமும் ஒடுகின்றது. அரச குலத்தவர்கள் யாரேனும் வேட்டையாட வந்திர்க்கின்றார்களா பார் என்றார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -30

பரத்வாஜ முனிவர் சிரித்தார். பரதா உன் உள்ளம் எனக்கு தெரியும். ரகு வம்சத்தில் பிறந்த உன்னை நான் அறிவேன். ராமரிடத்தில் நீ வைத்துள்ள பக்தி அன்பு இன்று போல் என்றும் உறுதியாக உன் உள்ளத்தில் இருந்து உன் புகழ் வளர்ந்து ஓங்குவதற்காகவும் உன்னுடைய குணத்தை உலகிற்கு காட்டி உன் பெருமையை உலகம் அறிந்து கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டேன் வருத்தப்பட வேண்டாம். ராமர் சித்திரக்கூட மலையில் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செல்வதற்கான வழியை சொல்கின்றேன். இன்று இரவு இங்கு தங்கியிருந்து உன் களைப்பை தீர்த்துக்கொள். நாளை காலை இங்கிருந்து கிளம்பி ராமரை சந்திக்க செல் என்றார். அதற்கு பரதன் முனிவரே தாங்கள் எனக்கு இப்போது அளித்த வரவேற்பு விருந்தில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிட்டேன். மேலும் தங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை ஆகவே கிளம்புகின்றேன் என்றார்.

பரதா உன் பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரம் செய்ய கடமைபட்டிருக்கின்றேன். நீ இன்று இரவு இங்கேயே தங்க வேண்டும். நீ இன்று தங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். உன்னுடைய படை பரிவாரங்கள் ஏன் தூரத்திலேயே இருக்கின்றது. அவர்களை ஏன் உள்ளே அழைத்துவரவில்லை என்று கேட்டார். படைபரிவாரங்கள் ரிஷிகளின் ஆசிரமத்திற்கு அருகில் செல்லக்கூடாது என்ற நியமப்படி இங்கே அழைத்து வரவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இங்கு அழைத்து வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன் என்றான். அதற்கு பரத்வாஜ முனிவர் அனைவரையும் இங்கே அழைத்துவா என்று கேட்டுக்கொண்டார். பரதனும் அவ்வாறே உத்தரவிட்டான். அனைத்து படைகளும் ஆசிரமத்திற்குள் நுழைந்தது. பரத்வாஜ முனிவர் மந்திரங்களை சொல்லி மயன் வருணன் குபேரன் அக்னி முதலிய தேவர்களை வரவழைத்து பரதனின் படைகளுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வீர்களாக என்று கேட்டுக்கொண்டார்.

காட்டிற்குள் உடனடியாக அற்புதங்கள் நிகழ்ந்தது. எண்ணிலடங்காத செல்வத்தை வைத்திருக்கும் ஒரு மன்னன் மற்றோரு மன்னருக்கு விருந்தளிப்பது போல் காட்டிற்குள் ஒரு கணத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின. சந்தனம் புஷ்பம் வாசனை திரவியங்களுடன் அவரவர்களுக்கு தகுந்தார் போல் வீடுகள் அமைந்தது. அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் வந்தது. தெய்விக ரீதியில் சங்கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படை பரிவாரங்கள் தங்களை மறந்து அனைத்தையும் அனுபவித்தார்கள். இதற்கு மேல் நாம் காட்டிற்குள் செல்ல வேண்டாம். அயோத்திக்கும் செல்ல வேண்டாம். இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணினார்கள். தேவலோக நந்தவனத்தில் இருப்பதைப்பொன்று உணர்ந்தார்கள். எல்லைமீறி அனுபவித்தும் மெய்மறந்தும் தூங்கிவிட்டார்கள். காலை விடிந்ததும் இரவில் நடந்தது கனவு போல் அங்கிருந்த அனைத்தும் மறைந்து விட்டது.

மகான் சூர்தாஸர்

தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர். ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை. ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான். காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது. கிருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. கிருஷ்ண நாமத்தின் பெருமை அறியாமல் சொன்னபோதும் நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.

ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்ததும் விழுந்து வணங்கினர். யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால் கிருஷ்ணா என்றார். சுவாமி எங்களைக் காப்பாத்துங்க என்றனர். என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாற்றுவது என்று கேட்டார். சுவாமி நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில்‌ இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை. நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. இன்று காலை அந்தக் குதிரை காணாமல் போய்விட்டது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு அரசர் உத்தரவு போட்டிருக்கார். நாங்களும் காலையில் இருந்து தேடிக்கொண்டிருக்கின்றோம். குதிரையைக் கண்டுபிடிக்க‌முடியவில்லை. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னால் எங்கள் உயிர் தப்பிக்கும் நீங்கதான் எங்களை காப்பாத்தனும் என்றனர்.

சுவாமி சிரித்தார். எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு நான் எங்க போவேன் என்றார். இருவரும் விடுவதாய் இல்லை. நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாவது சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரிகிறது என்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று முடிவு செய்தார். இங்கேயிருந்து நேரா கிழக்குப்பக்கம் போங்க அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அங்கிருந்து திரும்பி வடக்கே போனால் ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா உங்க குதிரை கிடைக்கும்‌ என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார். அவர்களும் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.

அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது. மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள். குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன். எப்படிக் கிடைத்தது குதிரை என்று கேட்டார் அரசர். ஒருவரை ஒருவர் பார்த்தனர் காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள். அரசனுக்கு மிகவும் ஆச்சரியம். நம்‌ எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும். நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன். மறுநாள் காலை வீரர்களோடு அரசரும் பெரிய பரிவாரத்துடனும் வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்து நின்றனர். அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று. அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.

கூனிக் குறுகிப்போனார் கண் தெரியாதவர். வாயில் வந்ததையெல்லாம்‌ சொன்னதே பலித்துவிட்டது இத்தகைய வாக்குசித்தி நமக்கு எப்படி வந்தது வயிற்றுப் பிழைப்பிற்காகவும் பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா? நிஜமாக உணர்ந்து சொன்னால்?அழுதார் கண் தெரியாதவர். சிலநாட்கள் அரண்மனையில் இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி கிருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு கிருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்தார். அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு உத்சவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார். கண் தெரியாத அந்த மகான் சூர்தாஸர் ஆவார். அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -29

குகன் கேள்வி கேட்ட பாவனையில் இருந்து அவன் ராமரின் மேல் வைத்திருக்கும் அன்பை உணர்ந்தான் பரதன். கைகேயி செய்த சூழ்ச்சியால் ராமருக்கு தான் விரோதி போல் அனைவராலும் பார்க்கப்படுவதை தெரிந்து கொண்டான். பரதனுடைய உடம்பெல்லாம் வியர்த்தது. தந்தை இறந்த துக்கத்துடனும் ராமர் பிரிந்த துக்கத்துடனும் இருந்த பரதன் குகனின் வார்த்தையால் மேலும் வேதனைப்பட்டு உடலெல்லாம் எரிவதை போன்று உணர்ந்தான். குகனே நீங்கள் சந்தேகப்படவேண்டாம். தந்தையை இழந்த எனக்கு மூத்தவரான ராமர் தந்தையாவார். அவரை எப்படியாவது அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றேன். தெய்வத்தின் மீது ஆணையாக சொல்கிறேன். என் உள்ளத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லை என்றான். ராமர் மேலிருந்த அன்பும் ராமரை பிரிந்த துக்கமும் பரதனின் முகத்திலும் பேச்சிலும் கண்ட குகன் உள்ளம் பூரித்தான். தானாக வந்த ராஜ்யத்தை வேண்டாம் என்று துறந்த தங்களை போன்ற மகானை பார்ப்பதில் பெருமை கொள்கிறேன். உங்களை சிரமம் இல்லாமல் அழைத்துச் செல்கிறேன் என்று கங்கை கரையை பரதனின் பெரும் படைகள் கடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான் குகன்.

கங்கை கரையை பெரும் படைகள் கடந்தது பெரிய படகுத் திருவிழாவைப் போல் இருந்தது. கரையை கடக்கும் போது ராமர் எங்கு சாப்பிட்டார். எங்கு தங்கினார் என்ன சொன்னார் என்று குகனிடம் கேட்டுக்கொண்டே பரதன் பயணித்தான். குகனும் ராமர் அமர்ந்த இடம் உணவருந்திய இடம். இரவு களைப்பாறிய இடம் என்று அனைத்தையும் காட்டிக்கொண்டே சென்றான். லட்சுமணனை பற்றி கேட்டான் பரதன். இரவு முழுவதும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலிருந்து லட்சுமணனும் தானும் பேசிக்கொண்டிருந்ததை விவரித்தான் குகன்.

காட்டின் நடுவே ரம்யமான சோலையும் மத்தியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் இருந்ததை கண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் என்பதை உறுதி செய்து கொண்டு தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு பரதன் வசிஷ்டர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்றனர். பரத்வாஜ முனிவரை பரதன் வணங்கினான். வந்தவர்கள் யார் என்பதை அறிந்த பரத்வாஜ முனிவர் வசிஷ்டருக்கும் பரதனுக்கும் செய்ய வேண்டிய வரவேற்பு உபசாரத்தை முறைப்படி செய்து முடித்து அவர்கள் ராமரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டார்.

பரத்வாஜ முனிவர் பரதனிடம் உன் பொறுப்பு அயோத்தியில் இருக்கின்றது அதை விட்டுவிட்டு நீ ஏன் இங்கு வந்திருக்கின்றாய். உனது தாயின் வரத்தின் படி தசரதர் ராமரை காட்டிற்கு அனுப்பிவிட்டார். அவருடன் சீதையும் லட்சுமணனும் இப்போது காட்டில் வசித்து வருகின்றார்கள். ராமரால் உன்னுடைய ராஜ்யத்திற்கு மேலும் ஏதாவது இடையூறு இருக்கின்றதா அதனை தீர்த்துக் கொள்ள அவரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றாயா என்று கேட்டார். இதனைக் கேட்ட பரதன் தாங்களும் என்னை சந்தேகப்பட்டு விட்டீர்களா? என்னைப் பெற்றவள் நான் இல்லாத போது என் சம்மதம் இல்லாமல் இக்காரியத்தை செய்துவிட்டாள். எப்படியாவது ராமரை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவரை அரசராக்கி என் ஆயுளுக்கும் அவருக்கு அடிமையாக இருந்து என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கிக் கொள்ளவே தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன் என் மீது குற்றம் சொல்லாதீர்கள் என்று கதறி அழுதான் பரதன்.

ஏகாதசி விரதம்

சூரிய வம்சத்து அரசர் ருக்மாங்கதன் நீதி நெறி முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தார். அவர் பெருமாள் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால் ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார். அத்துடன் தன் நாட்டு மக்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதன் காரணமாக அனைத்து மக்களும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்ததால் அந்நாட்டில் இறந்த அனைவரும் சொர்க்கத்தையே அடைந்தனர். எமலோகத்திற்கு ஒருவர் கூட செல்லவில்லை. எமதர்மன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டான். அவர் மோகினி எனும் ஒரு அழகிய பெண்ணை சிருஷ்டித்து நீ போய் ருக்மாங்கதனின் ஏகாதசி விரதத்தை சோதித்துவா என அனுப்பினார்.

மோகினியின் மோக வலையில் அகப்பட்ட அரசர் தன்னை மணம் செய்து கொள்ள வேண்டினார். மோகினியோ நான் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடக்க வேண்டும். மறுக்கக் கூடாது என நிபந்தனை விதித்தாள். மன்னர் ஒப்புக் கொள்ள திருமணம் நடந்தது. மோகினியுடன் மன்னர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும் வழக்கம் போல் அரசனும் அந்நாட்டு மக்களும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஏகாதசி விரதத்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தாள் மோகினி. ஒருநாள் மன்னர் மோகினியுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது ஏகாதசி விரதம் பற்றிய அறிவிப்புக்கான முரசொலி கேட்டது. அதைக் கேட்டதும் மன்னர் உடனே எழுந்து ஆலயத்திற்கு புறப்பட தயாரானார். மோகினி அவரைத் தடுத்து மன்னா என்னை மணம் செய்து கொள்ளும் போது என் விருப்பப்படி நடப்பேன் என்று சொன்னீர்கள். கொடுத்த வாக்கின்படி இப்போது நீங்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க கூடாது என்றாள். மோகினி ஏகாதசி விரதத்தின் பேரில் எனக்குள்ள விருப்பத்தை நீ அறிவாய். ஆகையால் அதை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார். அப்படியானால் உங்கள் மகனின் தலையை வெட்டிக் கொடுங்கள் எனக் கேட்டாள் மோகினி. அதைக்கேட்ட மன்னர் மனம் கலங்கி அவளிடம் வேறு எதையாவது கேள் என மன்றாடிப் பார்த்தார். மோகினி ஒப்புக் கொள்ளவில்லை. கொடுத்த வாக்கின்படி இரண்டில் ஏதேனும் ஒன்றை கொடுத்தே ஆகவேண்டும் என்று உறுதியாக நின்றாள்.

மன்னரின் மகன் நடந்தவற்றை அறிந்து தந்தையே பூமியில் ஜனனம் எடுத்து விட்டாலே மரணம் நிச்சயம் என்றோ போகக் கூடிய என் உயிர் என் தந்தையின் கொள்கைக்காக போகிறதென்றால் எனக்கு சந்தோஷமே வெட்டுங்கள் என் தலையை. என்னுடைய ஏகாதேசி விரதத்தின் பலனாக நான் இறந்தவுடன் நிச்சயமாக சொர்க்கம் செல்வேன் என்றான். வேறு வழியின்றி மன்னர் தன் மகனை வெட்ட துணிந்த போது நாராயணன் ருக்மாங்கதனுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். இளவரசன் உயிர் பிழைத்தான். தன் எண்ணம் பலிக்காததால் மோகினி அங்கிருந்து விலகி பிரம்ம தேவனிடம் சென்றடைந்தாள். ஏகாதசி விரதத்தின் மீது ருக்மாங்கதன் கொண்ட நம்பிக்கையே அவனுக்கு வந்த இடர்களை தவிடு பொடியாக்கி அவனை காத்தது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -28

பரதன் தன்னுடன் வந்த கூட்டத்துடன் முதலில் கங்கை கரையை அடைந்தான். சுமந்திரன் பரதனிடம் இங்கு தான் ராமர் ரதத்தில் இருந்து இறங்கி என்னை அயோத்தி திரும்பி செல்லுமாறு உத்தரவிட்டார். கரைக்கு அப்பால் இருக்கும் பிரதேசத்தின் தலைவராக குகன் என்பவர் இருக்கின்றார். அவரிடம் கேட்டால் ராமர் செல்லும் பாதையை காட்டுவார் என்று கூறினான்.

கங்கை கரைக்கு எதிர்புறம் இருந்த குகன் அக்கரையில் பெரும்படை தங்கியிருப்பதை பார்த்தான். தன் அருகில் இருப்பவர்களிடம் பெரும் படை ஒன்று அக்கரையில் இருக்கிறது அவர்கள் இக்கரைக்கு வர முயற்சி செய்வது போல் தெரிகிறது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நம்முடன் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று உத்தரவிட்டான். குகனின் கண்களுக்கு அந்த கூட்டத்தின் கொடி தென்பட்டது. அக்கொடி அயோத்தி நாட்டின் கொடி என்பதை அறிந்த குகன் ராமருக்கு சொந்தமான ராஜ்யத்தை அடைந்தது மட்டுமல்லாமல் ராமரை கொல்லவும் பெரும் படையுடன் வந்திருக்கின்றான் பரதன் என்று அவன் மீது சந்தேகம் அடைந்தான் குகன். தன்னுடன் இருந்தவர்களிடம் நம்முடைய அனைத்து வீரர்களையும் ஆயுதங்களுடன் போருக்கு தாயார் நிலையில் இருக்க சொல்லுங்கள். நல்ல எண்ணத்துடன் இவர்கள் ராமரை தேடி வந்தால் கங்கை கரையை கடக்க இவர்களுக்கு உதவி செய்வோம். ராமரை கொல்லும் எண்ணத்துடன் வந்திருந்தால் இவர்கள் கங்கையை கடக்க விடக்கூடாது. இங்கேயே தடுத்துவிட வேண்டும் என்று தனது சகாக்களுக்கு உத்தரவிட்டான் குகன். பரதனின் மன நிலையை அறிந்து கொள்ள சிறிய படகில் குகன் பரிசுப்பொருட்களுடன் பரதனை சந்திக்க சென்றான்.

குகன் படகில் வருவதை பார்த்த சுமந்திரன் பரதனிடம் வருபவர் இப்பிரதேசத்தின் தலைவர். இவரது பெயர் குகன். ராமரிடம் நிறைய அன்பு வைத்திருப்பவர். நம்மை வரவேற்க வருகின்றார். இவருடைய குலத்தவர்களுக்கு அக்காட்டின் அனைத்து இடங்களும் மிகவும் நன்றாக தெரியும். ராமர் சென்ற இடத்தை இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவரின் ஆலோசனைப்படி சென்றால் விரைவாக நாம் ராமர் இருக்கும் இடம் சென்று அடையலாம் என்றான். நதியை தாண்டிய குகன் பரதனுக்கு வணக்கம் செலுத்தினான். எனது பொருள்கள் எல்லாம் உங்களுடையதாக பாவித்து என்ன வேண்டும் என்று கேளுங்கள். தங்களது தேவையை என்னால் இயன்ற வரை நிறைவேற்றுகின்றேன். ராமரின் தம்பியான தங்களுக்கு பணி செய்வது எனது பாக்கியம் என்றான் குகன். அதற்கு பரதன் ராமரை தேடி வந்திருக்கின்றோம். அவர் இருக்கும் இடத்திற்கு நாங்கள் அனைவரும் செல்ல வேண்டும். எங்களுக்கு கரையை கடக்க உதவி செய்து ராமர் தற்போது இருக்கும் இருப்பிடம் எங்கே இருக்கிறது. எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும் என்றான் குகனிடம்.

கங்கை கரையை கடக்க தங்களுக்கு உதவி செய்து ராமர் சென்ற பாதையை காட்டுகின்றோம். ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கின்றது. இவ்வளவு பெரிய படையுடன் ராமரை தேடி வந்திருக்கின்றீர்கள். எதற்காக இவ்வுளவு பெரிய படை என்ற சந்தேகத்தை தாங்கள் தீர்த்து வைத்தால் காலதாமதமின்றி இப்போதே தங்களுக்கு தேவையானதே செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.

முக்தி

நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவரைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால் அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் கயிலாயம் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் இறைவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று கேட்டு நீங்கள் தெரிந்து கொண்டு எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் கயிலாயம் செல்கிறேன் என்றார். அப்படியானால் இறைவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று கேட்டு நீங்கள் தெரிந்து கொண்டு எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார். சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார்.

உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன் நாரதரே என்னைப் பற்றி இறைவனிடம் கேட்டீர்களா என்றான். ஆம் என்றார். நாரதர். இறைவன் என்ன சொன்னார் என்று ஆர்வத்துடன் கேட்டார். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று இறைவன் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டார். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். என்னைப் பற்றி இறைவனிடம் கேட்டீர்களா என்றான். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் இறைவன் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே நீ இறைவன் மேல் வைத்த நம்பிக்கையின் பயனாக இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது.

என்றாவது ஒரு நாள் நிச்சயம் முக்தி அடைவோம் என்ற நம்பிக்கையுடன் தினமும் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் இறைவனிடம் சரண்டைந்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -27

வசிஷ்டரும் மந்திரிகளும் அரச சபையை முறைப்படி கூட்டினார்கள். பரதனுக்கு தூது அனுப்பி பரதனை அரசவைக்கு வரவழைத்தார்கள். நாதம் சங்குகள் முழங்க பரதனை வரவேற்றார்கள். நிறுத்துங்கள் அனைத்தையும் என்று பரதன் கத்தினான். சத்ருக்கனனை பார்த்து ராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு என்னை ஏன் இவ்விதம் துன்புறுத்துகிறார்கள். தாய் செய்த சூழ்ச்சியால் இந்த நாடு நல்ல அரசரை இழந்து தவிக்கிறது இதில் எனக்கு இந்த வரவேற்பு தேவையா என்று சொல்லி துக்கப்பட்டான். வசிஷ்டர் பரதனிடம் நாடு அரசன் இல்லாமல் இருக்ககூடாது நாட்டிற்கு அது நல்லது இல்லை. ராமரும் லட்சுமணனும் தற்போது இல்லை. ஆகவே தாங்கள் அரச பட்டத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் அரசராக முடிசூட்டிக்கொள்ளுங்கள் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் தங்கள் தந்தை இருக்கும் போதே ராமருக்காக செய்து வைத்திருந்தார். இப்போது அந்த ஏற்பாட்டின் படி நீங்கள் பதவி ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை காப்பாற்றுங்கள் என்று கூறினார். சபையோர்கள் இதனை ஆமோதித்தார்கள். அனைத்தையும் கேட்ட பரதன் பட்டாபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாக குண்டம் மற்றும் யாக பொருட்களை வலம் வந்து அனைவரையும் வணங்கினான்.

சபையில் கூடியிருந்த அனைவருக்கும் ஒரு செய்தி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். நான் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன். இக்ஷ்வாகு வம்சத்தின் குலத்தின் பண்பாட்டை அறிந்து கொண்டவன். இந்த இக்ஷ்வாகு குல வழக்கப்படி மூத்தவரே அரசனாக மூடிசூடிக் கொள்ளவேண்டும். மூத்த குமாரனுக்கு உரிமையான ராஜ்யத்தை என்னை எற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துகின்றீர்கள். குல வழக்கத்திற்கு மாறாக நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உரிமையற்ற பதவியை நான் ஏற்க மாட்டேன். இந்த ராஜ்யத்தை ஏற்க தகுதியானவர் ராமர் ஒருவரே. இக்ஷ்வாகு குல மூதாதையர்களான தீலிபன் நகுஷன் போன்ற பலருக்கு சமமானவர் இவர். இக்ஷ்வாகு குலத்தின் மூத்தவரான ராமர் மற்றும் சீதை லட்சுமணன் இப்போது வனத்தில் இருக்கிறார்கள். இங்கிருந்தே வனத்திலிருக்கும் ராமரை வணங்குகின்றேன். ராமருக்கு வனத்திலேயே முடிசூட்டி அயோத்திக்கு அரசனாக்கி அரண்மனைக்குள் அழைத்துவரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். இதற்கு வேண்டிய பரிவாரங்களை திரட்டி வனத்திற்குள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள். இது உங்களுடைய கடமை. இதுவே என்னுடைய முடிவு என்று தீர்மானமாக சொன்னான். பரதன் கூறியதை கேட்ட அனைவரும் தங்களையும் அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

சுமந்திரனை பார்த்த பரதன் ராமர் சென்ற வனத்திற்கு செல்லும் ஏற்பாட்டை உடனே செய்வாயாக என்று கட்டளையிட்டான். பரதனுடைய யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை விரைவாக செய்ய ஆரம்பித்தார்கள். வனப்பிரதேசத்தை நன்கு அறிந்தவர்கள். காட்டு வழியில் மிருகங்களை தாண்டி செல்ல பயிற்சி பெற்றவர்கள். கரையை கடக்க படகு செய்யத்தெரிந்தவர்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக யாகம் செய்ய அந்தணர்கள். அனைத்து பொருட்களையும் சுமந்து செல்ல பணியாளர்கள் என்று பெரும் கூட்டத்துடன் பரதன் தலைமையில் புறப்பட்டார்கள். மக்கள் அனைவரும் ராமரை பரதன் எப்படியாவது அழைத்து வந்துவிடுவார் என்று நம்பினார்கள். ராமன் இப்போதே அயோத்திக்கு வந்துவிட்டதை போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.