இறைவன் தரிசனம்

கடவுள் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். மன்னனும் எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ அதே போல ராணியாருக்கும் மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும் நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தர வேண்டும் என்று ஆவலான வரத்தை கேட்டான். இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டு விட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.

அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக் கொண்டு வா காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார். மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும் இறைவனை காண வாருங்கள் என்று மக்களுடனும் மலையை நோக்கி புறப்பட்டான். அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர். சிறிது உயரம் சென்றவுடன் அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன. உடனே மக்களில் நிறைய பேர் செம்பை மடியில் கட்டிக் கொண்டு சிலர் செம்பு பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர். மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான். அதற்கு மன்னா இப்பொழுது இது தான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது என்று ஒட்டு மொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக் கொண்டு மலையேற துவங்கினான் மன்னன்.

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும் வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன. அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டை கட்ட ஆரம்பித்தனர். மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான். விலை மதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான். மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர். உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன் மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிது தொலைவில் தென்பட்டது தங்கமலை. ராஜகு டும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்று விட மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும் தளபதியும் மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே சரி வாருங்கள். செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக் கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன் அங்கே தென்பட்டது வைரமலை அதைப் பார்த்த ராணி முதற் கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன். கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி எங்கே உன் மக்கள் என்றார் மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன். அதற்கு கடவுள் நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும். உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக் கொண்டவர்கள் சிலருக்கு உடல் செல்வம் சொத்து என்ற செம்பு வெள்ளி தங்கம் வைரம் போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர் என்று சொல்லி மன்னனுக்கு அருளை வழங்கி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 93 திருவிடைமருதூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 93 வது தேவாரத்தலம் திருவிடைமருதூர் புராணபெயர் இடைமருதூர் மத்தியார்ச்சுனம். மூலவர் மகாலிங்கம் மகாலிங்கேஸ்வரர் இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெருமுலையாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை. தலவிருட்சம் மருதமரம். தீர்த்தம் காருண்யமிர்தம் காவேரி. கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்திலும் மூகாம்பிகை இருக்கிறாள். இந்தியாவிலேயே கொல்லூரிலும் திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயில் கோபுர அமைப்பில் உள்ளது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலின் தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலுள் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும் கீழவீதியில் விசுவநாதர் கோயிலும் மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும் தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும் வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை பஞ்ச லிங்கத்தலம் என அழைக்கப்படுகிறது. இத்தல விநாயகர் ஆண்டகணபதி எனப்படுகிறார். கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் கொண்டு வந்து கொடுக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக வினாயகர் இறைவனை வழிபடுகிறார். மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில் தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவர் ஆண்ட விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருவிடைமருதூருக்கு அகத்தியர் முனிவர்களோடு வந்து உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவ தவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு மனமிறங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார். காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர் அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுகிறார்கள் என்று தலவரலாறு கூறுகிறது.

திருவிடைமருதூர் தலத்தின் அருகில் உள்ள காட்டிற்கு வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசன் வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும் வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

திருவிடைமருதூர் கோவிலுக்குள் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன. இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்கள். பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பார்கள் என்று தலவரலாறு சொல்கிறது. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வருகிறது.

பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பத்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். ஒரு நாள் அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். செல்லும் வழியில் இருந்த ஒரு விநாயகர் கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை விநாயகருக்குக் காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றார்கள். அந்த மாணிக்கமாலை விநாயகரின் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். வீரர்களின் பார்வையில் கோயிலில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்க மாலையையும் பார்த்து இவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்து அழைத்துச் சென்றார்கள். பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தமக்கு தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி பிரார்த்தித்தார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார் அவரே பத்திரகிரியார் எனப் பெயர் பெற்றார். குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார் பத்திரகிரியார்.

திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் இருந்துகொண்டு தினமும் பிச்சை ஏற்று குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் அப்படித் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்குச் சிறிது உணவு கொடுத்தார். அதுமுதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. ஒருநாள் பட்டினத்தாரின் இறைவன் ஓர் ஏழை வடிவம் கொண்டு பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேலைக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் ஒருவன் இருக்கிறான். அங்கே செல்வாய் என்று கூறி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது. கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு அன்னம் கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை இங்கே அனுப்பினார் என்று கூறினார். உடனே பதறிப்போன பத்திரகிரியார் ஐயோ இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பத்திரகிரியாரின் தொடர்பு காரணமாக அந்த நாய் அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்ற போது அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவ முனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்றார். பத்திரகிரியாரைக் கண்டு வணங்கிய அரசகுமாரி தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுரத்துக்கு வந்து தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் எங்களுக்கு முக்திநிலை கிடையாதா? என்று கேட்டார். உடனே பட்டினத்தார் எல்லாம் மகாலிங்க சிவன் செயல் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று இறைவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் செல்ல அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் அரசகுமாரியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முதலில் முக்தி அளிக்காமல் தன்னுடைய சீடருக்கு முதலில் முக்தி கொடுத்துவிட்டாய் தனக்கு எப்போது என்று இறைவனை வேண்டினார். அப்போது இறைவனை நம்புகிறவனை விட இறைவனை நம்பும் குருவை நம்பும் சீடர் மிகச்சிறந்தவர் என்பதை எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி என்று அசிரிரியாய் இறைவன் கூறினார். அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மட வீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம்.

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்து
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
என்பது போன்ற எண்ணற்றப் பாடல்களைப் பத்திரகிரியார் பாடி இருக்கிறார்.

வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்) இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது. அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள். இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம் காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும் சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று புராண வரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும். இக்கோயிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரத் தேரோட்டம் 23 ஜனவரி 2016 இல் நடைபெற்றது. விநாயகர் வள்ளி தெய்வானையுடன் முருகன் மகாலிங்கசுவாமி தேவி சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர். இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம் ஸ்காந்தம் லிங்கப்புராணம் பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. மருதவனப் புராணம் திருவிடைமருதூர் உலா திருவிடைமருதூர் கலம்பகம் திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி திருவிடைமருதூர் நொண்டி நாடகம் ஆகிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சோழர் பாண்டியர் நாயக்கர் மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர். சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன. உமாதேவியார் விநாயகர் சுப்பிரமணியர் கோடி உருத்திரர் விஷ்ணு சந்திரன் பிரமாதி தேவர்கள் லட்சுமி சரஸ்வதி மூன்று கோடி முனிவர்கள் சந்திரன் சனிபகவான் ஆகியோர் இறைவனை பூசித்து பேறு பெற்றுள்ளனர். காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். பட்டினத்தார், பத்திரகிரியார் வரகுணபாண்டியன் அருணகிரிநாதர் கருவூர்தேவர் ஆகியோர் வழிபட்டு பெரும்பேறு பெற்றிருக்கிறார்கள். பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். கருவூர்தேவர் காளமேகப் புலவர் பாடல்கள் பாடியுள்ளனர்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -13

திரௌபதியைப் பார்த்து கர்ணன் ஐந்து அடிமைகளின் மனைவியே என் நண்பன் துரியோதனனுக்கு அடிமையாவதில் உனக்கு அவ்வளவு அவசரமா? இந்த ஆட்டத்தில் உன் கைவளை குலுங்கும் ஓசையைக் கேட்க நான் ஆவலாய் இருக்கிறேன். கண்களில் கோபத்துடன் திரௌபதி கர்ணனை முகத்துக்கு நேரே பார்த்து அங்க நாட்டு முதல் அடிமையே ஐவருக்கு நான் அடிமையா இல்லை அவர்களுடன் நானும் அடிமையா என சூதாடித் தீர்மானிக்கப்படவில்லை. திரியோதனனின் மனைவி பானுமதியுடன் சூதாடி கைவளையோசை கேட்டு அடிமையான உன் புத்தி அப்படித்தான் பேசும் என்றாள். தன்னை அடிமை என்று அவள் கூறியதே கேட்டு துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டானே? உண்மையில் தான் துரியோதனனின் அடிமையா? தான் எந்த மூதாதையர் விட்டுச் சென்ற இராஜ்யத்தையும் ஆளவில்லை. எந்த மன்னனுடன் போர் புரிந்து வென்ற தேசத்தையும் ஆளவில்லை. துரியோதனன் கொடுத்த அரசு அங்க தேசத்து அரசன் என்ற அடிமைப் பட்டயம். திரௌபதி பார்வையில் நான் அடிமைதான். அவள் பார்வை தவறா? மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’ கர்ணன் சுய சிந்தனையில் ஆழ்ந்தான்.

திரௌபதி இங்கு அமர்ந்து சூதாட மாட்டாள். கைகளாலும் பகடை உருட்டமாட்டாள். கால்களால் தான் உருட்டுவாள். நான் கைகளால் பகடையை தொடுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன் என்றாள். துரியோதனன் நீ காலால் ஆடினால் என்ன? கையினால் ஆடினால் என்ன? மாமா என் சார்பில் ஆடுவார். அதிகம் பேசாதே. ஆட்டத்தைத் துவக்கு என்றான் துரியோதனன். தன் கைவளை ஓசை ஏதும் எழக்கூடாது என்று கிருஷ்ணனால் வளர்ந்த வஸ்திரத்தினால் உடலோடு கைகளையும் சேர்த்து மூடிய நிலையில் நடந்து வருகிறாள். சட்டென தனது வலது காலை தூக்கி சூதாட்ட மேடையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்களை வேகமாய் தட்டி விடுகிறாள். அது மன்னர் திருதராஷ்டிரர் வீற்றிருந்த சிம்மாசனத்தின் முதல் படியில் வேகமாய் மோதி கீழே விழுகிறது. திரௌபதியின் இச்செயல் பலரையும் துணுக்குறச் செய்கிறது. கர்ணன் இதை ஆட்சேபிக்கிறான். அடிமை மன்னரே சற்று அமருங்கள். இது எனக்கும் மாமா சகுனிக்கும் இடைப்பட்டது. நான் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் கூறட்டும். பிறகு அரசர் நீதி வழங்கட்டும். நான் செய்தது சரியென்றால் ஆமாம் அல்லது தவறென்றால் இல்லை என்று இரண்டில் ஒன்றாய் சகுனி அவர்கள் பதில் கூறட்டும். என் கேள்வி நான் ஒரு சிறுவண்டுக்கு மோட்சத்திற்க்கான பாதை காட்டினேன். இது உண்மைதானா? இல்லையா? பதில் கூறும் சகுனி அவர்களே என்றாள்.

சகுனி மிகவும் கலங்கிவிட்டான். ஆமாம் அல்லது இல்லை என்று கூற வேண்டிய கட்டாயம். ஒரு சிறுவண்டை அகஜ்ஜுவாலா என்னும் மரத்தில் செய்த பகடைக்காயில் வைத்திருப்பதை தெரிந்தே சொல்கிறாளா? தான் துரியோதனனுக்கும் கூட சொல்லாத இந்த ரகசியத்தை இவள் எப்படி அறிந்தாள்? இவள் பகடையை உதைத்த வேகத்தில் காயில் இருந்த சிறுவண்டு நிச்சம் இறந்து போயிருக்கும். அதைத்தான் இவள் மோட்சத்திற்கு வழி என்கிறாள். ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இல்லை என்று சொன்னால் பகடைக்காயை உடைத்து சிறுவண்டை இந்த சபையில் காட்டுவாள். தான் சங்கேதமாய் எண்களை சொல்லும் போது சங்கேத சொல்லுக்கு ஏற்ப அந்த வண்டு குதித்து விழும். அதனை கணக்கிட்டு தான் சொல்லும் எண்ணிக்கையை விழும்படி இதுவரை தான் செய்தது எல்லோருக்கும் தெரிந்துவிடும். இதில் தோற்றுவிட்டோம். இனி என்ன செய்வது? நொடியில் தீர்மானித்து சகுனி எழுந்து நின்று ஆமாம் என்று தலை கவிழ்ந்து குற்றவாளி போல் நின்றான்.

தொடரும்……………..

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -12

கர்ணன் துச்சாதனனிடம் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் கர்ணன் மேல் கோபம் கொண்டு தக்க நேரம் வருகின்ற பொழுது உன்னை கொள்வேன் என்று விரதம் எடுக்கின்றேன் என்றான். அதேசமயத்தில் சகாதேவன் சகுனியை கொள்வேன் என்று விரதம் கொள்கிறேன் என்றான். யுதிஷ்டிரன் அர்ஜுனனையும் சகாதேவனையும் சமாதானப்படுத்தினான். கௌரவர்கள் போட்டிருந்த கேடு நிறைந்த திட்டங்களில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று திரௌபதி திருதராஷ்டிரனிடம் வேண்டினாள். துரோணரும் விதுரரும் மற்றும் சிலரும் அவருடைய பரிதாபகரமான வேண்டுதலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இதைக் கேட்ட திருதராஷ்டிரர் மகளை என்று திரௌபதி பார்த்து அழைத்து தன்னுடைய புதல்வர்களாகிய துரியோதனனும் துச்சாதனனும் வரம்பு மீறி நடந்து கொண்டதை குறித்து நான் ஆட்சேபம் தெரிவிக்கின்றேன் என்று கூறினார்.

அதைக்கேட்ட திரௌபதி தன் தம்பி மகன்களையே இந்த அவையில் அடிமைகளாய் நிற்கச் செய்துவிட்டு அவர்கள் மனைவியை மட்டும் மகளே என அழைப்பது முரணாய் இல்லையா தங்களுக்கு? கணவரின் பெரியப்பாவை நான் மன்னிக்கலாம். ஆனால் பெண்மையை அவமதித்த இந்த அவையின் மன்னவரை பெண்மையின் சார்பில் நான் மன்னிக்க முடியுமா? இந்த அஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு பெண்ணும் மன்னித்தாலும் இந்த பரந்த பூமியில் இருக்கும் மற்ற பெண்கள் அவர்களால் உருவாக்கப்படும் சந்ததிகளும் மன்னிக்குமா? என்று கேட்டாள். மன்னர் திருதராஷ்டிரும் மற்றவர்களும் வாய்மூடி மௌனமாய் இருந்தார்கள். முதலில் யுதிஷ்டிரர் மனைவியை இழந்து ஆதன் பிறகு தன்னை இழந்தாரா? இல்லை. ஆகவே என்மீது அவருக்கு என்ன உரிமை இருக்க முடியும்? ஆக நான் சுதந்திரமானவள் என்பதை அரசர் அறிவிக்கட்டும் என்றாள்.

திரௌபதி சுதந்திரமானவள் என்று திருதராஷ்டிரன் அறிவித்தார். அதற்கு திரௌபதி பாண்டவர்கள் ஐவர் அன்புக்கு மட்டுமே நான் அடிமை. மற்றபடி நான் சுதந்திரமானவள் என்பதை இந்த சபையில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்றாள். பிறகு மன்னரே நான் அடிமை அல்ல. என்னை அடிமைப்படுத்த நினைக்கும் கௌரவர்களுடன் ஒரு முறையல்ல இரு முறை பணயம் வைத்தாட அனுமதி தாருங்கள் என்றாள். அதற்கு திருதராஷ்டிரரின் மனைவி காந்தாரி மகளே நீயும் தவறு செய்யப் போகிறாயா? சூதை சூதால் வெல்ல முடியுமா? அரசவையை சூதாட்ட களமாக்க பெண்ணான நீயும் ஆக்க முடியலாமா? உன்னைத் தடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. ஆனால் இதை தவிர்க்கலாமே என்று எண்ணுகிறேன். கொஞ்சம் யோசி மகளே என்றாள். அதற்கு திரௌபதி சூதை இந்த மாதால் வெல்ல முடியும் என்று அனைவருக்கும் நிச்சயம் உணர்த்துவேன் என்றாள்.

திருதராஷ்டிரர் திரௌபதிக்கு அனுமதி கொடுத்தார். கர்ணன் துரியோதனனிடம் நண்பா மாமா பக்கத்தில் இருக்க ஜெயம் நமக்குத்தான். அடிமை இல்லை என இவள் வாக்கு சாதுரியத்தால் மன்னரை சொல்ல வைத்துவிட்டாள். நாமும் ஒருமுறைக்கு இரு முறை ஆடி இவள் அடிமை என்று ஊரறியச் செய்யலாம் என்றான். சகுனி துரியோதனன் துச்சாதனன் எல்லோரும் கோஷமாய் ஆட்டத்திற்கு நாங்கள் தயார் என்று கூறினார்கள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -11

சபையில் இருந்த அமைதியான சூழ்நிலையில் ஒருவன் அடிமைகளுக்கு அரச ரீதியில் உடையணிந்து இருப்பதற்கு உரிமை இல்லை என்றான். ஆகையால் அவர்கள் அணிந்திருந்த ராஜ உடைகள் அனைத்தும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அப்படி பறிமுதல் செய்த பொழுது பாண்டவர்கள் தாங்களே தங்கள் அணிந்திருந்த அரச உடைகளை கழற்றி கொடுத்து விட்டனர். அடிமைகளான பாண்டவர்கள் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு நின்றனர். இக்காட்சியை கண்ட துரியோதனனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூய யாக்ஞத்தில் யுதிஷ்டிரனின் ஆடம்பரத்தை பார்த்த பொழுது அவனுடைய உள்ளம் பொறாமையால் வெந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது பாராளும் வேந்தனை இப்போது அடிமை நிலைக்கு இறக்கி வைத்து விட்டோம் என்று துரியோதனன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பாஞ்சாலத்தில் நிகழ்ந்த திரௌபதிக்கான சுயம்வரத்தில் வெல்ல துரியோதனனுக்கு இயலவில்லையே என்ற வருத்தம் அவருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.

இப்பொழுது சபை நடுவே வைத்து அவளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவள் அணிந்திருந்த ஆடையை எடுக்கும் படி தன் தம்பி துச்சாதனனை ஏவினான். துச்சாதனனும் அடாத செயலில் ஈடுபட மகிழ்வுடன் திரௌபதி அருகில் வந்தான். இதற்கு தடை சொல்ல கணவன்மார்களுக்கு உரிமை இல்லை. மற்றவர்களோ வெறுமனே அமைதியாக இருந்து விட்டார்கள். திரௌபதி கிருஷ்ணனிடம் தனக்கு கிருபை புரிய வேண்டும் என்று வேண்டி அவனிடம் அடைக்கலமானாள். கிருஷ்ணனிடம் அடைக்கலம் வருகின்றவர்களுக்கு ஆபத்பாந்தவன் எப்பொழுதும் துணை நிற்பான். இப்பொழுது அதிசய செயல் ஒன்று நிகழ்ந்தது. துச்சாதனன் திரௌபதியின் புடவை ஒன்றன் பின் ஒன்றாக உருவிக்கொண்டே இருந்தான். புதிய புடைவைகள் அவளிடம் ஒன்றன் பின் ஒன்றாக வடிவெடுத்து வந்து கொண்டே இருந்தன. துச்சாதனன் உருவிய புடவைகள் திரௌபதியின் உயரத்திற்கு ஒரு பெரிய குவியல் ஆகிவிட்டது.

திரௌபதி புதிய ஆடைகளுடன் மிளிர்ந்து கொண்டே இருந்தாள். ஆடைகளை வுருவி சலித்துப்போன பொல்லாத முர்கன் பெருமூச்சு வாங்கி உட்கார்ந்துவிட்டான். துச்சாதனன் இச்செயலில் திரௌபதியிடம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டான். ஆனாலும் அவன் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அடுத்தபடியாக துரியோதனன் வேண்டுமென்றே திரௌபதியை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணி தன்னுடைய இடது தொடையை காட்டினான். இதை கண்ட பீமன் மிகவும் கோபம் கொண்டு நீ காட்டுகின்ற உனது தொடையை யுத்தத்திலே நான் உடைத்து உன்னை கொல்வேன். இல்லாவிட்டால் பராக்கிரமே வடிவெடுத்து இருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். பின்பு அவன் துச்சாதனனை பார்த்து யுத்தத்திலே உன்னுடைய நெஞ்சைப் பிளந்து அதில் பீறிக்கொண்டு வருகின்ற ரத்தத்தை குடிப்பேன். இல்லாவிட்டால் பராக்கிரமமே வடிவேடுத்திருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நான் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். அப்பொழுது கர்ணன் திரௌபதியை அந்தப்புரத்திற்கு இழுத்துச் சென்று அடிமைப் பெண் ஒருத்திக்கு பொருத்தமான உடைகளை கொடுத்து பணிவிடை பண்ண அவளை நியமிப்பாயாக என்று துச்சாதனை தூண்டினான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -10

ஒரு நாட்டின் மன்னனை சூதாட்டத்திற்கு அழைத்து சூதாடி ராஜ்ஜியம் ஒன்றை அபகரிப்பது ராஜ தர்மம் ஆகாது. எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு அரசனை எதிர்த்து மற்றொரு அரசன் போர் புரிந்து ராஜ்யத்தை வெல்லலாம். சூதாட்டத்தில் இழந்த ராஜ்யத்தை நாங்கள் போர் புரிந்து வெல்லப் போகிறோம். எங்களுடன் யுத்தத்திற்கு வாருங்கள் என்று யுதிஷ்டிரன் கூறி இருக்கலாம். ஆனால் சூதாட்டம் ஆடியதன் விளைவாக அவன் விவேகத்தை முழுவதுமாக இழந்து விட்டான்.

கபடமே வடிவெடுத்த சகுனியை துரியோதனன் ஆர்வத்துடன் கட்டித் தழுவினான். மாமா என்னுடைய வாழ்நாளில் இன்று தான் பெரும் மகிழ்வை காண்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த படியாக தன் தம்பி துச்சாதனனிடம் அந்த அடிமைப் பெண்ணாக திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி உத்தரவிட்டான். துரோபதியின் நீண்ட கூந்தலை தன் கையில் சுருட்டி பிடித்துக் கொண்டு அவளை இழுத்து வந்தான் துச்சாதனன். அவனுடைய முகத்தில் அப்போது மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருந்தது. அப்படி இழுத்து வரப்பட்ட திரௌபதி மன உறுதியுடன் அந்த சபையில் பேசினாள். பெண் ஒருத்தி மீது கை வைத்து அவளை அவமானப் படுத்துவதை மாண்புமிக்க இந்த சபை ஆமோதிக்கிறதா என்று கேட்டாள். ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை. ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற குரு வம்சம் இன்றைக்கு கொடூர தன்மையில் மூழ்கிக் கிடந்தது.

என் கணவர் முதலில் சூதாட்டத்தில் தன்னை இழந்து விட்டு பிறகு என்னையும் பணயம் வைத்து தோற்று விட்டார் என்று கேள்விப்பட்டேன். தன்னை இழந்த பிறகு என்னை பணயம் வைக்க அவருக்கு உரிமை எது என்று கேட்டாள். அனைவரும் வாய்பொத்தி இருந்தனர். அங்கியிருந்த யுதிஷ்டிரனை பார்த்து நீங்கள் செய்த ராஜசூய யக்ஞத்துக்கு நிகரான செயலா இது? இச்செயல் போற்றத்தக்க செயலா என்று கேட்டாள். அவ்வேளையில் யுதிஷ்டிரனால் பேச இயலவில்லை. மௌனத்துடன் இருந்தான். பின்பு சபையில் இருந்தவர்களைப் பார்த்து பெரியப்பாவாகிய திருதராஷ்டிரன் சொல்லும் சொல்லுக்கு தன் கணவர் எப்போதும் அடிபணிந்து நடந்து கொள்கிறார். ஆனால் திருதராஷ்டிரரோ தன் தம்பியின் மைந்தர்களை அன்புடன் வரவேற்று சூதாட தூண்டினார். விளையாட்டில் அவருக்கு அனுபவம் போதாது. ஆனால் அதை ஆடுவதில் அவருக்கு விருப்பம் உண்டு. அவரிடம் இருந்த குறையை நீங்கள் பயன்படுத்தி உங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டீர்கள். இந்த சபையானது என் கணவரை ஏமாற்றி அவரிடம் இருக்கும் செல்வம் அனைத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டது. கொள்ளைக்காரர்கள் தர்மத்திலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிசகுபவர்கள் ஆவார்கள். எனவே இங்கு குழுமி இருப்பவர்கள் தரத்தில் மிகவும் மட்டமானவர்கள். தான் அடிமையான பிறகு என்னை பணயம் வைக்க என் கணவனுக்கு உரிமை உண்டா?இச்சபையில் உள்ளவர்கள் யாராவது இந்த கேள்விக்கு விடை தருவீர்களா என்று கேட்டாள். சிறிது நேரம் சபையில் மௌனம் நிலவியது. பிறகு பீஷ்மர் பேசினார். இத்தகைய சூழ்நிலையில் தர்மத்தை விளக்குவது மிகக் கடினம். ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. கணவன் ஒருவன் சுதந்திரமாக இருந்தாலும் அடிமையாக இருந்தாலும் மனைவி அவனுக்கு உரியவள் ஆகிறாள் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -9

விதுரர் திருதராஷ்டிரனிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்ட துரியோதனன் விதுரரிடம் சென்று நீங்கள் எப்போதும் பாண்டவர்களுக்கு உரியவர் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு உணவளிக்கும் என்னிடத்தில் உங்களுக்கு நன்றி இல்லை. எப்பொழுதும் என்னை இகழ்ந்து பேசுவதே உங்களுக்குரிய தொழிலாக உள்ளது. கௌரவர்களாகிய எங்களை நீங்கள் வெறுக்கின்றீர்கள். ஆனாலும் நாங்கள் நன்றாக இருக்கின்றோம். உங்களுடைய ஆதரவு பாண்டவர்களுக்கு இருந்தும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் ஒன்றும் இல்லாத ஆண்டிகளாகப் போவார்கள். எதிர்காலத்தில் எங்களுக்கு வரும் அழிவை இப்பொழுதே நீங்கள் குறி சொல்கிறீர்கள். ஆனால் நீங்களும் பாண்டவர்கள் உட்பட அனைவரும் அழிவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கிடையில் இந்த மண்ணுலக வாழ்வை நன்கு பயன்படுத்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். தயவு செய்து எங்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று துரியோதனன் சூதாட்ட மேடைக்கு சென்றான்.

கபடம் நிறைந்த சகுனியால் பாண்டவர்களுடைய சொத்து முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. தோல்வி அடைந்த யுதிஷ்டிரனை கேலி செய்யும் பாங்கில் இன்னும் உன்னிடத்தில் பணயம் வைக்க ஏதேனும் உண்டா என்று சகுனி கேட்டான். அதன் பிறகு யுதிஷ்டிரன் ஆசையை மேலும் தூண்ட துரியோதனன் தாராளமான சலுகை ஒன்றை காட்டினான். இத்தனை நேரம் நீ பணயம் வைத்து இழந்த பொருள்கள் அனைத்தையும் நான் பணயமாக வைக்கிறேன் இதற்கு இணையாக நீ எதையும் வைக்க வேண்டியதில்லை. இப்பொழுது பகடையில் வெற்றி பெற்றால் இவையாவும் உனக்குச் சொந்தம் ஆகும் என்றான். மீண்டும் அவர்கள் விளையாடினார்கள். யுதிஷ்டிரன் மீண்டும் தோற்றுப் போனான்.

கௌரவர்கள் கொள்ளையடிக்க விரும்பிய பொருள்கள் அனைத்தும் சூதாட்டத்தின் மூலம் பெற்றுவிட்டார்கள். துரியோதனன் கூறிய ஆசை வார்த்தையால் மதியிழந்த யுதிஷ்டிரன் தன்னிடத்தில் இன்னும் ஏதோ பணயம் வைக்க பொருள் இருப்பதாக அவனுடைய உள்ளத்தில் தோன்றியது. தம்பிமார்கள் நால்வரும் அவனுக்குச் சொந்தம். ஆகவே சூதாட்ட வெறியினால் தூண்டப் பெற்று தம்பிமார்களையும் பணயம் வைத்தான். அதி விரைவில் அந்த நால்வரையும் சூதாட்டத்தில் இழந்தான். சூதாட்ட வெறியில் சுய அறிவை இழந்த யுதிஷ்டிரன் பிறகு தன்னையே பணயம் வைத்து அதிலும் தோற்றுப் போய் தன்னையும் கௌரவர்களிடம் இழந்தான். மானுடர்களை பணயம் வைப்பது யாராலும் கையாளப்படாத ஒரு நூதனமான முறையாக இருந்தது. கௌரவர்களே இதை எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது யுதிஷ்டிரனை பார்த்து சகுனி திரௌபதியை ஏன் பணயம் வைக்கலாகாது என்று பரிகாசம் பண்ணினான். மூடத்தனமாக திரௌபதியையும் அவன் பணயம் வைத்து இழந்தான். இப்போது பாண்டவர்கள் அறவே கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது சுதந்திரத்தையும் இழந்து அவர்கள் கௌரவர்களுக்கு அடிமைகள் ஆகி விட்டார்கள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -8

யுதிஷ்டிரன் கூறிய அனைத்தையும் கேட்ட சகுனி உன்னிடத்தில் நாடு மற்றும் செல்வத்தில் பற்று அதிகரித்து உள்ளது. க்ஷத்திரியனுக்கு உண்டான தைரியம் இல்லாமல் துரியோதனின் அறைகூவலுக்கு அஞ்சி ஓடுகின்றாய் என்றான். அதைக்கேட்ட யுதிஷ்டிரனுக்கு கோபம் உருவெடுத்தது. பொருளில் நீ வைத்திருக்கின்ற பற்றுதல் என்னிடத்தில் இல்லை. உன்னுடைய அறைகூவுதலுக்கு நான் இணங்குகின்றேன். யாரோடு நான் விளையாட வேண்டும் எதை பணயமாக வைக்க வேண்டும் என்று சகுனியிடம் கேட்டான். அதற்கு துரியோதனன் பணயமாக நீ எதை வைக்கின்றாயோ அதற்கு சரிசமமானதை நானும் பணயமாக வைக்கின்றேன். எனக்காக என் மாமா சகுனி பகடையை ஆடுவார் என்றான். பொருளை பணயம் வைப்பது ஒருவன் அவனுடைய பிரதிநிதியாக மற்றொருவன் விளையாடுவது பகடை விளையாட்டின் சட்டதிட்டம் ஆகாது. இந்த சட்டத்திற்கு மாறாக நீ விளையாட தீர்மானித்து இருக்கின்றாய். ஆனாலும் உன்னுடைய விருப்பப்படி விளையாட்டை துவங்குவோம் என்று யுதிஷ்டிரன் சூதாட அமர்ந்தான். யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியது கௌரவர்களுக்கு பிரதகூலமாக அமைந்தது.

சூதாடும் மண்டபத்திற்குள் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். பீஷ்மர், விதுரர். கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார், போன்ற பெரு மக்களும் அங்கு இருந்தனர். திருதராஷ்டிரனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு இந்த விளையாட்டில் ஊக்கம் மிக இருந்தது. பகடை விளையாட்டு துவங்கியது. யுதிஷ்டிரன் தன்னிடம் இருந்த நகைகள் ரத்தினங்கள் தங்கம் ஆகியவைகளை பணயமாக வைத்து பகடையை உருட்டினான். ஆனால் பகடை அவனுக்கு பலிதமாகவில்லை. அடுத்தபடியாக சகுனி பகடையை உருட்டினான். பகடையை உருட்ட உருட்ட இதோ வெற்றி இதோ வெற்றி என்று அவன் கூறிக்கொண்டே இருந்தான். அதற்குப் பிறகு வைத்த பணத்தை எல்லாம் யுதிஷ்டிரன் இழந்து கொண்டே வந்தான். ஒவ்வொரு தடவையும் சகுனி வென்று கொண்டே இருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெரிய செல்வங்கள் எல்லாம் துண்டு துண்டாக கௌரவர்கள் வசம் கவர்ந்து எடுக்கப்பட்டன. இந்நிலைமையை பார்த்து யுதிஷ்டிரனுக்கு விவேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் சூதாட்ட வெறியில் விவேகத்தை இழக்கலானான். மந்திர சக்தி வாய்ந்த மாந்திரீகனாக மாறி சகுனி செயல்பட்டான். யுதிஷ்டிரன் பணயம் வைக்கும் பொம்மையாக மயங்கிப் போனான்.

இந்த அக்கிரமத்தை மேலும் பார்த்துக்கொண்டு சகித்துக் கொள்ள முடியாமல் விதுரர் திருதராஷ்டிர மன்னனை அணுகி பாண்டவர்கள் உங்களுடைய தம்பியின் புதல்வர்கள். துரியோதனன் அவர்களை சூதாடும் பாங்கில் கொள்ளையடிக்க நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள். பேராசையின் வேகத்தால் நீங்களும் உங்களுடைய மகனும் அறிவை இழந்து விட்டீர்கள். இந்த சூதாட்டத்தின் விளைவாக குரு வம்சம் அழிந்து பட்டுப்போகும். நீங்கள் மரணமடைவதற்கு முன்பே உங்களுடைய மக்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்கு கேட்கும் தௌர்பாக்கிய நிலை உங்களுக்கு உண்டாகும் என்றார். ஆனால் இந்த எச்சரிக்கையை பேராசை பிடித்த திருதராஷ்டிர மன்னன் கண்டு கொள்ளவில்லை.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 89 கும்பகோணம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 89 வது தேவாரத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆகும். மூலவர் சிவலிங்க வடிவில் ஆதிகும்பேசுவரர் அமுதேசுவரர் குழகர் கற்பகநாதேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். இங்கு மூலவருக்கு அபிசேகம் கிடையாது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. உலகம் பிரளய காலத்தில் அழிந்த போது உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான் பிரம்மா மூலம் படைப்புக் கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். அந்த கும்பமானது பிரளய காலம் முடிந்ததும் உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்திருந்த போது கும்பமானது இத்தலத்தில் ஒதுங்கியதால் இந்த ஊருக்கு கும்பகோணம் என்று பெயர் ஏற்பட்டது. இறைவன் கும்பேஸ்வரர் என்று பெயர் பெற்றார். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர்.

இறைவியின் பெயர் மங்களாம்பிகை ஆகும். மந்திரபீட நலத்தாள் என்ற பெயரும் உள்ளது. தேவி விஷ்ணுவைப் போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களத்தை பொழிகிறாள். மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு மங்களத்தை அருளுகின்றாள் ஆகையால் மங்களநாயகி என்றும் சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும் தம் திருவடிகளை சரணடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர் பெற்றாள். திருஞானசம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால் மொத்தம் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள். மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். அம்பாளின் வலது கையில் சாத்திய தாலிக் கயிறுகளை பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. சக்தி பீடத்தில் 12 ஆவது கோயில் மங்களாம்பிகை கோயிலாகும். இக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மந்திரிணி சக்தி பீடமாகும். அம்பாளின் உடற்பாகம் 51 சக்தி வடிவ பாகங்களாக 51 தலங்களில் காட்சியளிக்கின்றன. இதில 50 தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள் 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். கோயில் விமானம் மங்கள விமானம். இறைவி மங்களாம்பிகை. வினாயகர் மங்கள விநாயகர். தீர்த்தம் மங்கள தீர்த்தம். புராணபெயர் திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆகவே இத்தலம் பஞ்ச மங்கள சேத்ரம் எனப்படுகிறது.

ஊர் கும்பகோணம். புராண பெயர் திருக்குடமூக்கு திருமங்களக்குடி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் மகாமகம் குளம் பொற்றாமரை தீர்த்தம் வருண தீர்த்தம் காஸ்யப தீர்த்தம் சக்கர தீர்த்தம் மாதங்க தீர்த்தம் மற்றும் பகவத் தீர்த்தம் (காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்நானத் தலங்கள்) என கோயிலுக்கு வெளியே ஏழு தீர்த்தங்கள் உள்ளது. மங்கள குள தீர்த்தம் நாக தீர்த்தம் குர தீர்த்தம் ஆகிய மூன்று கிணறுகள் மற்றும் சந்திர தீர்த்தம் சூரிய தீர்த்தம் கௌதம தீர்த்தம் மற்றும் வராக தீர்த்தம் ஆகிய நான்கு குளங்களும் கோயிலுக்குள் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் சாரங்கபாணி கோவிலுக்கும் நடுவில் உள்ளது.

கும்பகோணம் ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. இத்திருவிழாவின் போது கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுகின்றனர். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச் சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத் திருவிழாவும் சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கிமீ தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம் ஆனியில் திருமஞ்சனம் ஆடியில் பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பூரம் பங்குனித் திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கோயில் தெய்வங்களை ஏற்றிச் செல்வதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட ஐந்து தேர்கள் கோயிலில் உள்ளன.

இராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால் பலி பீடம் கொடி மரம் தொடர்ந்து நந்தி தேவர் உள்ளார். முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சப்த மாதர்கள் காமதேனு பவலிங்கம் சர்வ லிங்கம் ஈசான லிங்கம் பசுபதி லிங்கம் ருத்ர லிங்கம் உக்ர லிங்கம் பீம லிங்கம் மகாலிங்கம் தட்சிணாமூர்த்தி சற்று தள்ளி வலஞ்சுழி விநாயகர் பிட்சாடனர் முருகன் அட்சயலிங்கம் சகஸ்ரலிங்கம் அன்னபூரணி கஜலட்சுமி மகாலட்சுமி கோஷ்டத்திலுள்ள பிரம்மா சரஸ்வதி அஷ்ட புஜ துர்கை நவநீத விநாயகர் கிராத மூர்த்தி பைரவர் கால பைரவர் ஜுரகேஸ்வரர் சாஸ்தா மகான் கோவிந்த தீட்சிதர் நாகாம்பாள் ஆகியோர் உள்ளனர். நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகத்துடன் ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.

கோயிலில் வேடமூர்த்திக்கு சன்னதி உள்ளது. சிவபெருமான் வேடர் வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இந்த சன்னதி உள்ளது. முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது பிரம்மா தனது படைப்புத் தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் இந்த இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே கும்பேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாஇலை தர்ப்பை உறி வில்வம் தேங்காய் பூணூல் முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக் கோயில்களாக விளங்குகின்றன. மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய கோயில் அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்களின் விஜயநகர ஆட்சியாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட பதினாறு தூண்கள் கொண்ட மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்தக் கோயில் பற்றிய புராண கதைச் செய்திகளை காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். இந்திரன் அஷ்டதிக்கு பாலகர்கள் காமதேனு கார்த்தவீரியன் சுவர்ணரோமன் காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்று பாடுகிறார். ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த நாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. புரந்தர தாசர் தனது சந்திரசூடா சிவசங்கர பார்வதி ரமணா பாடலில் கும்பேஸ்வரரைப் போற்றி ஒரு பாடலை இயற்றினார். அப்பாடலில் கும்பபுர வசனு நீனே என்று குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 85 திருச்சத்தி முற்றம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 85 வது தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். புராண பெயர் திருச்சத்திமுத்தம். மூலவர் சிவக்கொழுந்தீசர் தழுவக்குழைந்த நாதர் சக்திவனேஸ்வரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் உள்ளது. அம்பாள் பெரியநாயகி. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. தீர்த்தம் சூல தீர்த்தம். அம்மாள் சிவனுக்கு பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் திருச்சத்திமுத்தம் என பெயர் பெற்றது. இங்கு அம்மாளுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு அருகில் சிவலிங்கத்தை அம்மாள் கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலம் உள்ளது. காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக தலவரலாறு உள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிராகாரங்களைக் கொண்ட கிழக்கு நோக்கிய பெரிய கோவில். வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாவது கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும் மறுபுறம் சத்திமுத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம் கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன. சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி சிவனுக்கு முத்தமளிக்கும் தல மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. நடராஜர் சரபேஸ்வரர் கஜலட்சுமி அகஸ்தியர் காசி விஸ்வநாதர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சூரியன் சந்திரன் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளது. நாகர் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ளது. சனீஸ்வரர் பிரதான மண்டபத்தில் உள்ளர். இக்கோயிலில் நவக்கிரகம் இல்லை.

சிவனும் சக்தியும் பக்தியே முக்திக்கு வித்து என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினர். இதற்காக சக்தி காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே இத்தலம் உள்ள இடத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டார். சக்தியின் மன உறுதியை அனைவரும் அறிந்து கொள்ள சிவன் வராமல் காலம் தாழ்த்தினார். சக்தி தனது உறுதி கலையாமல் தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான் காவிரி ஆற்றில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தினார். பார்வதி தேவி உருவாக்கிய சிவலிங்கம் வெள்ளத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்தது. உடனே அதைத் தழுவி நீரிலிருந்து பாதுகாத்தபடியே தவத்தை தொடர்ந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும் அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த சக்தி அந்த நெருப்பை கட்டித் தழுவினாள். சிவன் குளிர்ந்து அம்மாளை தன்னோடு ஏற்றுக் கொண்டார். தற்போதும் பிரதான லிங்கத்தில் அக்னியின் தடயங்கள் உள்ளன.

திருநாவுக்கரசர் தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப் பாடினார். இறைவன் திருநல்லூருக்கு வருமாறு கூறி அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். திருஞானசம்பந்தருக்கு இத்தலத்திலிருந்து இறைவன் முத்துப்பந்தல் அருளினார். அதன் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார். செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன. அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும் விளக்கேற்ற காசும் ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்தை பார்வதி அகத்தியர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சேக்கிழார் பெரிய புராணத்தில் மருவாரும் குழல்மலையாள் வழிபாடு செய்ய அருள் தருவார்தம் திருச்சத்திமுற்றம் என்று பாடியுள்ளார். இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.